திங்கள், 25 மே, 2026

சிவதீக்கை

 சிவதீக்கை


சமய தீட்சை பெற்றோர் அனுதினமும் அனுஸ்டானம் முடித்து சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்ய சிவ தீட்சை என்ற விசேட தீட்சை பெற வேண்டும். சமய தீட்சை பெற்ற குருமார்களிடமே சிவ தீட்சையும் பெற வேண்டும் அதுதான் முறையும் எளிதும் கூட

சிவதீக்கை;

நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.


தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!


அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 19 மே, 2026

பிறவித் துயர் தீர

 பிறவித் துயர் தீர

பிறவித் துயர் தீர்வதற்கு,,,......

பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்.

திருச்சிற்றம்பலம்

 

சனி, 16 மே, 2026

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்


சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை 

அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!


வியாழன், 14 மே, 2026

வாழ்க்கையின் தத்துவம்

 வாழ்க்கையின் தத்துவம்



உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்….

ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

தனித்தனி பிறவிகள்

தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா…?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!….

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்._அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்… அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 8 மே, 2026

குரு இல்லாமல் அருள் இல்லை

 குரு இல்லாமல் அருள் இல்லை


ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.

குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.


சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.


குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.

எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.


குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.

உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.


குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீட்சை தரும் குருவைஸ் சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.


மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.

– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து

ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்

 அறியாமையாகிய ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்



ஒருவனுடைய உடம்பில் பாம்பு கடித்து ஏறிய நஞ்சு அப்பாம்புக்கு பகையாகிய கீரியே நேரே வந்து,பாம்பு கடித்தவனுடைய உடம்பின்மேல் விழுந்து புரண்டாலும் நீங்காது, ஆனால் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகன் தன்னை கீரியாக பாவித்து அந்த மந்திரவடிவமாகவே நின்று பார்க்கும் பார்வையினால் அந்த கொடி நஞ்சு நீங்கும்.

   உயிரில் உள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்குவதும் இந்த முறைமையில் ஆகும். இறைவனே உயிர்குயிராய் உடன் நின்ற போதிலும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை, அவ்விறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தால் மட்டுமே அது நீங்குவதாகும்.

   நூல்களில் கருட பாவனை என ஒன்று சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை் எளிதாக விளங்கும்.உலகிலுள்ள நாம் காணும்  பெளதிக பொருள் ஆன்மீக பொருளான மந்திரத்தை துணையாகக் கொண்டு பெளதிகப்பொருட்களின் மேல் பயன் படுத்தும் போது தைவிகப்பொருளான அதிதெய்வம் தோன்றும்,இதனையே கருட மந்திரத்தில் நாம் காணும் போது அதி தெய்வம் ஆகிய அதிதைவிக கருடன் தோன்றும் அதுவே சிவனது சக்தியாகும். அந்தசத்தியே மந்திரவடிவமாய் நின்று அந்த மந்திரத்தை கணிக்கும் மாந்திரிகனுக்கு தருகிறது. மாந்திரிகன் அந்த சக்தியை தியானிக்கிறான். அந்த சக்தியையே தானாக பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையினால் அம்மாந்திரிகனது ஆன்மா அந்த சத்தி மயமாய் ஆகிறது. அவன் கருடனாகவே நிற்கிறான். அவன் உடம்பு கருடனாகவில்லை. அவன் மந்திரக்கருடனை நாள்தோறும் தியானித்து பழகிய பயிற்சியினால் அவனுடைய ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடிபட்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் அவ்விடம் நீங்கும். சிவசக்தியே மந்திர வடிவாய்நின்று விடத்தை நீக்கிறது.

  இக்கருட பாவனை போல மாந்திரிகன் மந்திரத்தை தன்னை கீரியாக பாவிக்கிற பாவனை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாம்பின் விடம் ஏறியவனின் உடலில் கீரி விழுந்து புரண்டாலும் விடம் தீராது, அதுபோல சிவம் உயிரில் பொருந்ததி இருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காததற்கு உவமையாகும். மந்திர வடிவாய்நிற்கும் பாவகன் அருள்  மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். அப்பாவகன் பார்வையால் விடம் நீங்குதல், குருவின் அருள் நோக்கால் மலம்நீங்குவதற்கு உவமையாகும். இதனை விளக்கும் திருவருட் பயன் பாடல் எண். 47

  விடம் நகுலம் மேவினும் ெமய்ப் பாவகனின் மீளும்

  கடனில் இருள் போவது இவன்கண்.  பாடல் 47

திருச்சிற்றம்பலம்


புதன், 29 ஏப்ரல், 2026

தாடலை போல் ஆன்மாவும் சிவமும்

 

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்