செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

குருலிங்க சங்கம வழிபாடு


 குருலிங்க சங்கம வழிபாடு

குரு வழிபாடு : மன, மொழி, மெய்களால் வணங்குதற்குரிய சிவசொரூபமாக இருப்பதோடு குருவானவர் வாழ்வில் பின்பற்றுதற்குரிய சிறந்த இலட்சியமாகவும், ஆன்மிகத்துறையில் சந்தேகங்களைப் போக்கி நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றார். குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும்போது அடக்கத்துடனும், பக்தியுடனும் இருந்து, கவனம் முழுவதையும் சொல்லப்படும் விடயத்திற் செலுத்திக் கேட்க வேண்டும். குருவுக்குச் செய்யும் சேவை மிகச்சிறந்த திருத்தொண்டாகும். குருவின் உபதேசப்படி ஒழுகுதல் அவர்க்குச் செய்யும் வழிபாடுகளுளெல்லாம் முதன்மையானது. அவரவருடைய குருவை உள்ளன்போடு வழிபடுவதுடன், சமய குரவர், சந்தானகுரவர் ஆகியோருக்கும் குருபூசை செய்து வருவது அவசியம். நாயன்மார்களுள் திருமூலார், மங்கையற்கரசியார், குலச்சிறையார், அப்பூதியடிகள் ஆகியோர் குருவழிபாட்டால் வீடுபேறடைந்தோருட் சிலராவர். சந்தானகுரவர் முதலானோர் குருவழிபாட்டினாலேயே உயர்பதம் எய்தியவர்கள். தங்கள் குருவின்பால் தாங்கள் கொண்டிருந்த பக்தியையும் பெருமதிப்பையும் தங்கள் நூல்களிலும் அவர்கள் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

இலிங்க வழிபாடு: சிவலிங்கம் சிவபெருமானின் அருவுருவத் திருமேனி. அது ஞானசோதி வடிவானது. பீடம் சக்தியையும், இலிங்கம் சிவத்தையும் குறிப்பது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்திலுள்ளவர்களும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளை அவரவர் பக்குவத்திற்கேற்ற முறையில் வழிபடுதற்குரியவர். சரியையாளர் இறைவனது உருவத் திருமேனிகளைச் சிவனெனக் கொண்டு வழிபடுவர் கிரியையாளர், அருவமாகிய பரம்பொருளே இலிங்கம் முதலிய திருவுருக் கொண்டருளினார் என்று தெளிந்து மத்திரத்தினால் சிவலிங்கத்தில் சிவபெருமானைப் பதித்து வழிபடுவர். யோகிகள் தமது உள்ளத்தில் நிலைத் இருக்கும் இறைவனே சிவலிங்கத் திருமேனியிலிருந்து பூசை கொண்டருள்வன் எனத் தெளிந்து வழிபடுவர். ஞானிகள் அன்பினால் வழிபடுவர். இவர்களுள் சரியையாளருக்கு வெளிப்படாது நின்றும், கிரியையாளருக்கும் யோகிகளுக்கும் அவர்கள் விரும்பிய வடிவாய்த் தோன்றி நின்றும், ஞானிகளுக்கு அவர்களது அன்பே தாமாக எப்போதும் வெளிப்பட்டு நின்றும் சிவபெருமான் அருள்செய்வார். நாயன்மாருள் சேரமான் பெருமான், சாக்கியநாயனார், கலிக்காமர், பூசலார் முதலானோர் இலிங்க வழிபாடு செய்து வீடு பேறடைந்தவர்.

சங்கம வழிபாடு: சிவனடியார் திருக்கூட்டம் சங்கமம் எனப்படும். சிவபெருமானிடம் மெய்யன்பு பூண்டொழுகுவோர் சிவனடியார் ஆவர். அவர்கள் சிவபெருமானை நினைத்தாலும், அவரைப்பற்றிக் கேட்டாலும், அவரது தெய்வத் திருமேனிகளைக் கண்டாலும் தம்வசமிழப்பர்; சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தும், அவரது புகழ் பாடியும், திருவைந்கெழுத்தை ஓதியும் இன்புறுவர் சிவபெருமானை நினைக்கச் செய்யும் சிவசின்னங்களணிந்த திருமேனியுடையவராக இருப்பர்; அடியார்க்குரிய பாவனை, செயல், வேடம் இவற்றையுடைய எவரும் சிவமாகக் கருதி வழிபடுதற்குரியவரேயாவர். சிவனடியார்களைக் காணச் செல்லுங்கால் கையில் யாதேனும் கொண்டு செல்லுதலும், அதனை அவர்முன் வைத்து. வணங்கலும், அவர் அனுமதியுடன் இருந்து அவர் கூறும் நல்லுரைகளைக் கேட்டலும் முறையாகும்; நமது இல்லத்துக்கு வரும் அடியாரை எதிர்கொண்டு வரவேற்று, இன்சொல் கூறி, ஆசனத் இருத்து உபசரித்து வணங்கி, அவர் செல்லுங்கால் வழியனுப்பி வருதல் வேண்டும். நாயன்மாருள் திருநீலகண்டர், இயற்பகையார், திறுத்தொண்டர், இளையான்குடிமாறனார் முதலியோர் சிவனடியார்களை வழிபட்டு வீடுபேறு எய்தியவர்களாவர்.

சங்கம வழிபாட்டின் சிறப்பு

“ஆடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்” என்று வேண்டுகின்றார் மணிவாசகப்பெருமான் “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே” என்கிறார் அப்பர்பெருமான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகையில் ஒவ்வொரு நாயன்மாரையும் விதந்தோதி, அவர்களுக்குத் தாம் அடியாரெனக் கூறியதோடு, அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கெல்லாம் தம்மை அடியாரெனளவும் கூறிக்கொள்கிறார். சிவபிரானிடம் உள்ள அன்பு, அவரது அடியாரிடமும் பரவுவதால், அவர்மேலுள்ள அன்பு மேலும் வளர்ந்து உறுதிப்படுத்துகின்றது.

சிவனடியார் சங்கமம் எமது உள்ளத்திலுள்ள கீழ்த்தர எண்ணங்களையகற்றி, உயர்தர எண்ணங்களை உண்டாக்குகின்றது. உலகப் பற்றை நீக்கத் தெய்வப்பற்றை வளர்க்கின்றது. சிவனடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டும், வழிபாடும் உள்ளத்தை விரைவில் தூய்மைப்படுத்திப் பத்தியையும் வைராக்கெயெத்தையும் வளர்க்க உதவுகின்றன.

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 23 டிசம்பர், 2025

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே


பரம்பொருள் ஒன்றே

மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.


பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.


இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.


ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.


மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால் தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப் படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.

              சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய சமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.


செவ்வாய், 18 நவம்பர், 2025

"அஞ்சேல் "என்று அருளுவான்


 "அஞ்சேல் "என்று அருளுவான்

 நாம் மானிடப்பிறப்பு எடுத்ததின் பலனே நம் வினைப்பயனை நீக்கி இறைவன் தாள் அடைவதுதான், அதன் பொருட்டே நாம் வினைகள் தீரும் வரை இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டே தான் இருக்கும். நல்வினையால் புண்ணியமும், இன்பமும், தீவினையால் பாவமும், துன்பமும் நம் வாழும் போது அனுபவிக்கிறோம், இந்நிலையில் நாம் வாழும் வாழ்வில் முதுமையில் படும் அவஸ்தை கொடிது கொடிது, அந்நிலையில் அதைத் தாங்கும் சக்தியும் நம்மிடம் இருக்காது, நம் பொருட்டு உதவும் ஜீவனும் இருக்காது, உற்றாரும் உறவினர்களும் இருக்கமாட்டார்கள். அதனால் தான் பட்டிணத்துஅடிகள் நம்முடன் கூட வருவது நாம் சேர்த்த செல்வமோ, உறவோ வருவதில்ைல நாம் செய்த புண்ணிய பாவங்கள் தான் நம்முடன் வரும் என்றார். எனவே தான் தனக்கு இன்னும் ஒர் கருப்பை ஊர் வராது ஆக்கு என்று வேண்டுவார். 

  நம் வினையின் பயனால் நாம் முதுமையில் படும் துயரத்தை அருளாளர்கள் யாவரும் எனக்கு மரண அவஸ்தை இன்றி உன் திருவடியை தா என்று வேண்டினார்கள், அத்துடன் அந்நிலையில் எனக்கு அஞ்சேல் என்று அருள் தர வேண்டிய தேவாரப்பாடல்கள் ஏராளம் உள்ளன, இதனை உணர்ந்து தன் இளம்பருவத்திலேயே ஞானசம்பந்த பெருமான் திருவையாற்று பதிகத்தில் ஒரு பாடலில்

புலனைந்தும்பொறிகலங்கி நெறி மயங்கி

அறிவழிந்திட்டு ஐம்ேமல்உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று 

அருள்ெசய்வான் அமரும் கோயில் 

என்று இந்த ஊன் உடம்பில் உள்ள பொறிகள் எல்லாம் செயல் இழந்த நிலையில் எனக்கு அஞ்ேசல் என்று அருள் தர வேண்டும் பாடலாக அமைந்துள்ளது.


  மேலும் மரண அவஸ்தை பற்றி ஐயடிகள் காடவர்கோன்

குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி

நாெந்து இருமி ஏங்கி நுரைதேறி வந்து உந்தி

ஐயாறு வாயாறு பாயா முன் ெநஞ்சே 

ஐயாறு வாயால் அழை     என்கிறார்

     ஐயாறப்பரை நீ அழைத்தால் உனக்கு அஞ்சேல் என்ற அருள் கிடைக்கும் என்கிறார்.

  மரண அவஸ்தையை உணர்த்த வள்ளல் பெருமான் அவர்கள்  

  "படமுடியாது அரசே இனித்துயரம் படமுடியாது அரசே 

    பட்டதெல்லாமம் போதும் ,,,,,,,,,, 

  என் உடல் பொருள் ஆவி எல்லாம் 

  நீ எடுத்துக்கொண்டு உன் உடல் ஆவியை 

   உவந்து எனக்கு அருள்"  என்று வேண்டுவார்.


  3ம் திருமுறை தேவாரப்பாடலில் சம்பந்த பெருமானார்

  .....பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்ெசய்யும்  அந்தனார்  உறைவிடம் 

      என்று மழப்பாடி இறைவன் பெருமையை அருள் செய்யும் கோயிலாக காட்டுகிறார்.

  

 மாணிக்க வாசக பெருமான் அருள் செய்வாய் என்பது குறித்து ஒரு பதிகமே பாடியுள்ளார்.

   மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்றும் 

  அவரது அச்சோப் பதிகத்தில்  

" சித்தமலம் அறிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

  அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே " என்கிறார் 

 திரு வேசறவு பதிகத்தில்

    தானே வந்து எனது உள்ளம் பகுந்து அடியேற்கு அருள் செய்தான் " என்கிறார்

 அருள் பத்து பதிகத்தில்

 ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்று அருளாயே " என்கிறார்

 தேவாரம் தந்த அப்பர் அடிகள் தனது திருவையாற்று பதிகத்தில்

    இரப்பவருக்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்

   ----------

   அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயனையாறனாறே "  என்று  யார் யாருக்கு ஈசன் அருள் செய்தார் என்கிறார்

 எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகர் அருள் பத்து என்று ஒரு பதிகம் பாடியுள்ளார், இறைவனது அருளை வேண்டும் பத்துப் பாடல்களின் தொகுதி அருட்பத்து. இதன் எட்டாம் திருப்பாடலில், `பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுப்பவன் இறைவன்`  இப்பதிக பாடல்களில் அருள் புரிய வேண்டி----,

    "அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.

என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` 

தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.

அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!. என்று தனது பத்துப்பாடல்களிலும் இறைவனின் பேருமையை கூறி  இதன் பொருட்டு எனக்கு அருளாமல் இருந்துவிடுவாயே  அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல்    விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.என்று கூறி தன்பொருட்டு அடியார்களுக்கும் அருள் செய்வேண்டி பாடியுள்ளார்

     மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 2 நவம்பர், 2025

அன்னாபிஷேகம்

 

கோடி லிங்க தரிசனத்தை தரும் அன்னாபிஷேகம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலமும் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு மிகவும் சிறப்பு மிகுந்த விசேஷம் இருக்கிறது. அன்றைய தினம் தான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் என்பது நடைபெறும்.
அன்னாபிஷேகம் பூஜை வழிபாடு யார் ஒருவர் கோடி லிங்க தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி அற்ற நிலை உண்டாகும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அனைவராலும் சுலபத்தில் கோடி லிங்க தரிசனத்தை காண இயலாது அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்தை யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் கோடி லிங்க தரிசனத்தை செய்த பலனை பெறுவார்கள். ஒவ்வொரு அரிசியும் சிவலிங்கமாக பாவிக்கப்பட்டு அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதால் தான் கோடி லிங்க தரிசனத்தை நம்மால் அன்றைய தினம் செய்ய இயல்கிறது
ஐப்பசி மாத பௌர்ணமி திதி என்பது நவம்பர் மாதம் நான்காம் தேதி இரவு 9:42 மணிக்கு தொடங்கி நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை 7:27 வரை இருக்கிறது. அதனால் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 மணிக்குள்ளோ அல்லது காலை 11:45 மணியிலிருந்து 12:45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியிலிருந்து இரவு 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். வீட்டில் சிவபெருமானின் படம், சிலை, லிங்க ஸ்வரூபம் என்று எது இருந்தாலும் அன்னாபிஷேக நாளில் கண்டிப்பான முறையில் பூஜை செய்ய வேண்டும்.
எந்த வடிவத்தில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்கத்தை முதலில் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பசும்பாலால் அபிஷேகம் செய்து பிறகு பச்சரிசி சாதத்தை வடித்து ஆறவைத்து அதை வைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து பச்சரிசி சாதத்தை அதில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்து முடித்த பிறகு சிவபெருமானுக்கு முன்பாக 5 விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பிறகு “ஓம் லிங்கேஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்து 2 மணி நேரம் கழித்த பிறகு தான் சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பொழுது லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுக்காமல் ஆவுடையின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி கலந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது காக்கை குருவிகள் போன்றவற்றிற்கோ தானமாக தர வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அன்னாபிஷேக நாளில் அனைவரும் சிவ ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கும் இந்த முறையில் வழிபாடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 31 அக்டோபர், 2025

திருமுறைகள் ஓதாய்………..

 திருமுறைகள் ஓதாய்...........


ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்.

                      ஸ்ரீ குருஞானசம்பந்தர்

இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்பது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது.

நோயும் மருந்தும்:

பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது.

எனவே "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பிறவிநோய் எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல் வேண்டும்.

ஆசை பாசம் சினம் அகல:

"அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும் வித்து", என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது என்பதை உணர்கிறோம்.


ஆசை எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும்.

ஆணவத்தை அகந்தைக் கிழங்கு என்கிறார் குமரகுருபரர், "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்பது அவர்தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத் தொண்டர் உள்ளத்தே இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும்.

ஆணவமாகிய பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச் சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து உருவேற்ற வேண்டும்.

இந்நிலை எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக் குற்றங்களும் அகலவேண்டும்.அப்போது தான் குருநாதரை அணுகி ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும்.

சினம் முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள் ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு துணையாய் உள்ளன.

அத்திருமுறைகளைப் பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால் தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார்.

ஒரு மனிதன் பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச் சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப் பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும், சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு அஞ்செழுத்தை உபதேசிப்பார், அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும் உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும்.

அச்சிவபூசையைப் பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து வந்தால் பாசம் அகலும். பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு கிட்டும். `அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ'

இதனையே ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் "அற்றவர்க் கற்ற சிவன்' என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக் கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து


..

வியாழன், 30 அக்டோபர், 2025

துன்பங்களும் துயரங்களும்

 

துன்பங்களும் துயரங்களும்


துன்பங்களும் துயரங்களும் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதிகள். அவை மன வருத்தம், இழப்பு போன்ற உணர்வுகளால் ஏற்படுகின்றன, ஆனால் அவற்றை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறுவதே வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும். துயரம் என்பது ஈடு செய்ய முடியாத இழப்பால் ஏற்படும் வலியைக் குறிக்கும், சோகம் என்பது ஈடு செய்யக்கூடிய இழப்பால் வருவது

நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல.


ஓரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லாத் துன்பங்களையும், சோதனைகளையும் பிரச்னைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றி காண்பதில் தான் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை (ஹெலன் கெல்லர்).


ஓரு கப்பலானது கடல் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும் வீசியடிக்கும் காற்றையும் எதிர்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஓருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் கூட அந்தக் கப்பலை கரை சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் விபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை.அதன் இலக்காகிய கரையை சென்றடைய வழி கண்டுபிடிக்கப்படுகிறது, கரையை சென்றடையவும் செய்கிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலைச் செய்யத் துவங்கும்போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகிறோம். அந்தச் செயலைச் செய்வதனால் பிறரால் நமக்கு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதவர்களாய் தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டு்ம்?


இன்னல்கள் வரும் போது இறக்க நினைத்தால் நாம் பிறந்ததில் அர்த்தம் இல்லை. இன்னல்கள் (துன்பம்) என்றதும் வேலையை பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. பிரச்சனை என்ற ஓன்று இருப்பின் தீர்வு என்ற ஓன்று நிச்சயம் இருக்கும். சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மனிதனின் அழகு.


துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.


வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.


உன் வாழ்க்கையின் எந்த ஓரு நாளில் நீ ஏந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல், நீ முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.

ஆம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?

சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

வருஷம் முழுவதும் பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப்பட்டதால் மனம் வெறுத்துப்போன விவசாயி கடவுளிடம் கேட்டான், ஏன் கடவுளே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? மழையை அளவா பெய்யவச்சாத்தான் என்ன? ஏன் இப்படி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களை எல்லாம் அழிக்கின்றாய்? அதே மாதிரி காற்று வீசினா பத்தாதா? புயலாத்தான் வீசணுமா? வெயில் அடிச்சா பரவாயில்ல… இப்படி ஓரேயடியா வறட்சியை வரவைக்கணுமா? பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு உனக்கு தெரியல்ல. எங்கிட்ட அந்த சக்தியை கொடு. உற்பத்தியை பெருக்கி நாட்டில் எப்படி வளர்ச்சியை உருவாக்குறேன்னு பாரு அப்டீன்று சவால் விட்டான். கடவுளும் சரி, இனி உன் இஷ்டம். இயற்கை உன் சொல்படி நடக்கும் அப்டீனு சொல் இயற்கையை கட்டுப்படுத்துற சக்தியை அந்த விவசாயிடம் கொடுத்தார். அன்றிருந்து விவசாயி போட்ட கட்டளைக்கு மழை, வெயில், ஆகாயம், வெப்பம், காற்று என இயற்கை அவனுக்கு கட்டுப்பட்டது. மழை அளவா பொழிஞ்சது. காற்று மிதமா வீசிச்சு, வெப்பம் போதுமான அளவோட இருந்தது. பயிர்கள் ஆமோகமாக விளைந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை அடக்க முடியாதவனாய் கடவுளைக் கூப்பிட்டு, பாத்தீங்களா கடவுளே! நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேனு, பெருமிதத்தை அடக்க முடியாதவனாய் கடவுளிடம் கூறினான். கடவுளும் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டே, சரி…

அறுவடைச் செய், என்றுக் கூறிவிட்டு அவன் அவன் அறுவடைச் செய்வதை வேடிக்கைப் பார்த்தார். விவசாயியும் ஆறுவடைச் செய்துவிட்டு முற்றிய நெற்கதிர்களை உதிர்த்துப்பார்த்தான். நெல் சிதறியது. ஆனால், அதில் அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தது. அவன் திகைத்துப்போய் கடவுளை ஏறிட்டுப்பார்த்தான். கடவுள் அவனிடம் மகனே, இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயல் வீசச் செய்யும் போது பயிர் தனது வேர்களை பலப்படுத்தும், மழையை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நீரிருந்து அழுகாமல் பாதுக்காக்கும், தன் வேர்க்கால்களை வலுவாக்கிக்கொள்ளும், வறட்சியை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நன்கு பரவவிட்டு வளரும். இப்படி அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கும் ஏற்றப்படி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும். இனால் நீ வளர்த்தப் பயிரைப் பார்த்தாயா? எல்லா வசதிகளும், தேவைப்பட்ட காலங்களில் கிடைத்தப்போதும் அவை சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.

ஆம், இது ஓர் கற்பனை கதையாக இருந்தாலும் சோதனைகளும், துன்பங்களும் நம் வாழ்வை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது இல்லயா?.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

சுநதரரின் தோழமை நெறி

 சுநதரரின் தோழமை நெறி 


சுந்தரரின்  வாழ்வில் இவருடன் தோழமை கொண்டோர் பற்றிய நாயன்மார்கள்

1, தம்பிரான் தோழராதல்:

 திருவாரூர்ப் பெருமான் `தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்` என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார். இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.

``தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.😎

``என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் 

துரிசுகளுக்கு உடனாகி`` (தி.7 ப.51 பா.1)

``என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)

 சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயிலமர்ந்த பெரு மானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே ``நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக` என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். தியாகேசர் திருமுன் சென்று வலம்செய்து வணங்கினார். 

 2,ஏயர்கோன் நட்பு:

நம்பியாரூரர் பெருமானைச் சிறிதும் மனம் நடுங்காது ஒரு பெண்ணிடத்து இரவில் தூதனுப்பி ஏவல் கொண்டார் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வாழும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் இச்செய்தி கேட்டு உளம் வருந்தினார். `இறைவனை அடியவர் ஏவல் கொள்வது தொண்டர்க்கு முறையன்று` என்று கருதியது அவர் உள்ளம். `இச்செய்தி கேட்டும் என்னுயிர் செல்லவில்லையே` என்றிரங்கினார். `அடியவரிடத்துள்ள கருணையால் இறைவன் இசைந்தாலும் அப்பெருமானை ஏவுதல் என்ன முறை? அரிவையரிடத்து வைத்த ஆசைக்கு இறைவனைத் தூது கொண்ட வன்றொண்டரைக் காணின் என்ன நேரும்` என்று சுந்தரர் மேல் சினம் கொண்டிருந்தார்.

ஏயர்கோன் தம்பால் சினங் கொண்டிருத்தலையறிந்த நம்பி யாரூரர் தாம் செய்தது பிழையென வுணர்ந்தார். கலிக்காமர் செற்றத்தைக் தணித்தற் பொருட்டு இறைவனைப் பலமுறை இறைஞ் சினார். இவ்விருவரையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட இறைவன் ஏயர் கோன் கலிக்காம நாயனார்க்குச் சூலை நோயை ஏவி னார். சூலை நோயால் தளர்ச்சியுற்று வாடிய கலிக்காமர் சிவபிரான் திரு வடிகளைச் சிந்தித்துப் போற்றினார். இறைவன் அவர் முன்னே தோன்றி `இச்சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது` என்று கூறினார். கலிக்காமர், `இறைவனே! வழிவழியாக நும்மையே வழிபடும் தொண்டனுக்குற்ற நோயைப் புதியவனாகிய வன்றொண்டனோ தீர்த்தற்குரியன்; இந்நோய் தீர்க்கப்படுதல் வேண்டா` எனக் கூறினார். இறைவன் மறைந்தான். இருப்பினும் சுந்தரர் அவர் இல்லம் சென்று அவரை சந்தித்தார் அப்போது கலிக்காமர் தன் வாளால் தன் வயிற்றை கிழித்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை அறிந்த சுந்தரர் அவரும் அதே வாளால் தன்னை வெட்டிக்கொள்ள ஓங்கினார் உடனே இறைவர் அவரகள் முன் தோன்றி இருவரையும் தடுத்தாட்கொண்டார் இவர்களின் நட்பின் பெருமை கண்டு வியந்தனர்

3.சேரமான் நட்பு:

இவருடைய நட்பை அறிமுகம் செய்தவர் இறைவரே ஆவரர்.தினமும் இறைவழிபாடு செய்து முடிக்கும் போது இறைவனின் கால் சிலம்பு காதில் கேட்டால்தான் வழிபாட்டை முடிப்பார். ஒரு நாள் இச் சிலம்போலி கேட்க தாமதம் ஆனபடியால் அதற்கு இறைவர நான் சுந்தரரின் இசையில் மெய்மறந்தபடியால் இங்கு வர தாமதம் ஆகிவிட்டது என சேரமான் பெருமானாரிடம் இறைவர் கூற அவ்வளவு அன்பும் இசை ஈர்ப்பு கொண்ட சுந்தரரை நான் காண வேண்டுமென்று கூறி சேரமண்டலத்தையாண்ட சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரது பெருமையினைத் தில்லைக் கூத்தனுணர்த்தக்கேட்டு சுந்தரரைக் காண வேண்டு மென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம்பலவரைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார்.நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார்.

 ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்திறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து `அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்` என்னும் குறிப்புடன் `தலைக்குத் தலைமாலை` என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர். பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. இவ்வாறு இருவரும் திருக்கயிலை வந்தடைந்தனர் இவ்வாறு இருவரும் நட்பின் பெருமைக்கு இலக்கணம் கண்டவர்கள்

4,கோட்புலியார்

சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் `இவர்கள் என் குழந்தைகள்` என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளினார்

5, பெரும் மழலை குறும்ப நாயினார்

  குறும்ப நாயினார் சைவ ஆகம வேள்விகள் செய்து வாழ்வாதாரம் செய்து வந்தவர் சுந்தரரின் பெருமை யறிந்து அவரை தனது மானசீக குருவாகக் கொண்டு அவரை அனுதினமும் தன் நினைவில் நிறுத்தி அவர்தம் பெருமைகளையும் பரப்பு அவர் மேல் தீராத அன்பு கொண்டிருந்தார். இவர் தன் தவப்பயனாலும் ஞான சக்தியாலும் எதிர்கொள்ளும் வாழ்வை கணிப்பவர். இதனால் சுந்தரர் திருக்கயிலை செல்வதை ஞான ஒளியால் கண்டு தன் பிராணத்தை ஒடுக்கி அவருக்கு முன்பாகவே தானும் கைலாயம் அடைந்தார்.

6 சோமாசி நாயனார்

  மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனடியார் வழிபாடும் திருவைந்தெழுத் துபாசனையும் சுந்தரமூர்த்திநாயனார் பால் நண்புறவுங் கைவரப் பெற்றிருந்த சோமாசிமாறநாயனாரே, தாம் "ஈசன் மலர்க்கழல் பேணுதற்குச்" சிவவேள்வியே செவ்விய நெறியாகக் கொண்டிருந்ததார்.

  சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

7.விறன்மிண்ட நாயினார்

"தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. வழக்கம் போல் சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும்! இறைவனை வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும், அன்பும் இருத்தல் வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம் பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன் தான் என்று கடுமையாகச் சொன்னார்.திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம்

 இறைவனையே புறகு என்றதால் இறைவர் சுந்தரரை திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துக் கொடுத்து சுந்தரர் பாடி அடியார்களுக்கு பெருமை சேர்த்தார்.

 இவ்வாறு சுந்தரரின் வாழ்வில் இறைவருடன் இந்த ஏழு அடியார்கள் / நாயன்மார்கள் நட்புடன் வாழ்நது வந்து நட்பின் பெருமையை உலகறியச் செய்தனர்

திருச்சிற்றம்பலம்