வியாழன், 23 ஜூலை, 2026

திருவாசகம்

 அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே


திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும் நிலையையும் அனுபவத்தையும் அருளவல்ல அருள் நூல் திருவாசகம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து ஓதுவார்தம் உள்ளத்தைச் சிக்கெனப் பிடித்துத் தம்பால் ஆழ்த்தும் உயர்நூல் திருவாசகம். ஆசை அற வேண்டும், பிறவி விழ வேண்டும். வீடு பெற வேண்டும் என நினைப்போரை முத்திக் கரையில் கொண்டு சேர்க்கும் தெப்பம் திருவாசகம். உயிர்க்கு ஊதியம் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை விளக்குவதும், தில்லைக்கூத்தன் தம் கைப்பட எழுதிய பெருமையை உடையதுமான தேன்சுவையைப் பயப்பதும் திருவாசகமே. நிலையில்லா உலகியல் இன்பத்தையும் நிலைபெற்ற சிவாநுபவத்தையும் இணைத்துப் பாடும் இயற்றமிழ்ப் பனுவலான இத்திருவாசகத்தை எல்லோருக்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் தமிழ்ப்பரிதி டாக்டர் ப. சரவணன்.

திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

 திருவாசகத்தின் பெருமை மற்றும் சிறப்பு

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி

திருவாசகத்தின் பெருமை என்பது மாணிக்கவாசகர் இயற்றிய பக்தி இலக்கியம், சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை, அதன் உருக வைக்கும் தன்மை மற்றும் பக்தியைப் பெருக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது இது சிவனின் மேல் உள்ள பக்தி மற்றும் அனுபவ முறைகளை தெளிவாக விளக்கிறது.எனவே  இது ஒரு பக்தி இலக்கியம் 

இது சைவத் திருமுறைகளில் எட்டாவதாக இடம்பெற்றுள்ளது.

உருக வைக்கும் தன்மை: அதன் பாடல்கள் பக்தர்களின் உள்ளத்தை உருக்கி, சிவானுபவத்தில் திளைக்கச் செய்யும் தன்மை கொண்டவை. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்" என்ற பழமொழி இதைத் தெளிவுபடுத்துகிறது.

இது முற்பிறவி மற்றும் தற்போதைய வினைகளை நீக்குவதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் ஜி.யு. போப் போன்ற அறிஞர்கள் திருவாசகத்தின் மகத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர்.

** செல்வாக்கு:** தாயுமானவர் மற்றும் இராமலிங்க அடிகளார் போன்ற பல பக்தி இலக்கியப் புலவர்களின் பாடல்கள் திருவாசகத்தின் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன, இது அதன் செல்வாக்கைக் காட்டுகிறது. 

இதன் பெரும் சிறப்பு °

மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர்.

மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.

தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது.

மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.

"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - என்கிறா் திருமுருக கிருபானந்த வாரியார்

இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது இது ஒரு அன்பு மறையையும் போற்றும் அன்பு மற்றும் அற நுால் இது திருவாசகத்தேன் என்று போற்றப்படுகிறது. தேன் மனித உடலில் உள்ள நோய்களுக்கு மருந்தாகுவது போல் இது மானிடரின் உடற்பிணிக்கு மருந்தாக ஆணவ மலத்தை போக்கும் அருமருந்தாகவும் அமைந்துள்ளது எனவே இதனை உயிர் பிணிக்கும் மருந்து என்கின்றனர் பெரியோர். 

 தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறத்து ஆனந்தமாக்கியதே எல்லை 

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசம் என்னும் தேன்    


     இந்நூல் படிக்கும் தோறும் கேட்கும் தோறும் உள்ளத்தை உருகவைத்து மனத்தை அன்பு கசிய வைக்கும் தன்மை கொண்டதால் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதாகும்.

  இதன் கருத்தினைக் கொண்டே சிவபிரகாச சுவாமிகள் தன் மாணிக்க வாசகரின் நான்மணி மாலையில்

  " வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

    நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர்க் காண்கிலேம்

 திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்

 கருங்கல் மனமும் கரைந்து உக கண்கள்

 தொடுமணற் கேணியில் சுரந்து நீர்பாய

மெய்ம் மயிர் பொடிப்ப விதிரவிதிர்ப்பு எய்தி

 அன்பர் ஆகுநர் அன்றி

 மன்பதை உலகின் மற்றையர் இலரே   என்கிறார்

    இத்திருவாசகததை மாணிக்க வாசகர் தன் அறிவு கொண்டே புலமை கொண்டே பாடாமல் இறைவனுடைய அருளையே துணையாகக் கொண்டு தாம் ஒரு கருவியாக மட்டும் நின்று அவர் பாடிய திருவாசகப்பாடல் இறையனுவத்தின் பிழீவாகவே விளங்குகின்றன.

   திருவாசகத்தின் சிறப்பினை திருகளிற்றுப்படியார் என்ற நூலு் பின்வருமாறு கூறுகிறது.  "இறைவன் தமக்கு நல்கிய பரமானந்தப் பயனை அடிகளார்தமது திருவாயில் மலர்ந்த சொற்களால் வெளியிட்டார் அதனை ஓதிய அன்பரெல்லாம் கருவாதையிலிருந்து விடுபட்டார், திருப்பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கி புனிதன் மொழிந்த வாசகமே திருவாசகம் என்று பாராட்ப்படுகிறது.

 

திருச்சிற்றம்பலம்

  


செவ்வாய், 2 ஜூன், 2026

தர்மம்

 தர்மம்


தர்மம் என்றால் நல்லொழுக்கம் நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுபாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்திபெற்றார். கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார். 


நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. தர்மம் தான் உலகை நிலைநிறுத்துகின்றது. ஆங்கிலத்தில் தர்மம் எனும் சொல்லைச் சரியாகக் குறிப்பதற்கு ஒரு சொல் இல்லை.

தர்மம் எனும் சொல்லை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் “முறையான வாழ்வுமுறை” என்று சொல்லலாம். ‘ர்தம்’ கோட்பாட்டின் அடிப்படையில் விளங்கும் நடத்தைகள் தர்மம் எனப்படும். அத்தகைய செயற்பாங்குகளே, இந்த பிரபஞ்சமும் அதன் உறுப்பினர்களும் முறையாகச் செயல்பட உறுதுணையாகின்றது. ‘ர்தம்’ என்றால் இயற்கை செயல்முறை விதியாகும். அதுவே இந்த பிரபஞ்சத்தையும் அதற்குள் இருக்கும் அனைத்தையும் முறையே செயல்பட இயக்குகின்றது. ஆங்கிலத்தில் விளக்கினால்

தர்மத்திற்கு எதிர்ச்சொல் அதர்மம். பிரபஞ்ச நியதிக்கு எதிராக இருக்கும் செயல்கள் அதர்மம் என்று சொல்லப்படும். இந்த பிரபஞ்சத்தினுள் இருக்கும் அனைத்திற்கும் தர்மங்கள் உண்டு. உயிருள்ள உயிரற்ற எல்லாப் பொருள்களுக்கும் தர்மங்கள் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தர்மங்களையே முறையே செய்து வருகின்றனர். மனிதர்கள் மட்டும் அதில் சற்று வேறுபட்டு, தங்கள் தர்மங்களை மறந்து அதர்மங்களைச் செய்கின்றனர். இது உலகின் மாயைகளின் காரணத்தால் அவர்கள் செய்வதே. இதுவே அவர்களின் அறியாமை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு தர்மங்களை மறந்து செயல்படுவதே பிரபஞ்சம் முறையே செயல்படாது அங்கும் இங்கும் அழிவுகள் நேர காரணமாக அமைகின்றது. மனிதர்களே தங்கள் அழிவுக்கு வித்திட்டு, பின்னர் இறைவன் கோபப்பட்டு அழிக்கிறார் என்று அவர்மீது பழியைப் போடுகிறார்கள். மனிதர்கள் ‘ர்தம்’ கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டு தங்களின் தர்மங்களை செய்தால், இந்த பிரபஞ்சத்தில் எதும் குறைகள் வருமோ?

மனிதர்களின் தர்மங்கள் :-

1) தனக்கு தானே ஆற்றவேண்டிய தர்மம்

எப்போதும் தன்னை தானே நேசித்துக் கொள்ளவேண்டும். முறையான உணவுப் பழக்கம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தை சிதைக்கும் உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நன்கு கல்வி கற்கவேண்டும். மெய்ப் பொருளை உணர்தல் வேண்டும். எப்போதும் தெளிவான ஞானத்தோடு இருத்தல் வேண்டும்.

2) இறைவனுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

இறைவன் மீது பக்தியும் பாசமும் கொண்டிருக்க வேண்டும். மலர், நீர், இலை, பழம் வைத்து இறைவனை வழிபடுதல் சிறப்பு. இறைவன் எங்கும், எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். எல்லா உயிர்களையும் நேசிப்பதும் இறைவனை நேசிப்பதற்கு ஒப்பாகும்.

3) பித்ருக்களுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

பித்ருக்கள் என்றால் ‘தென்புலத்தார்’. அதாவது மறைந்த நம் முன்னோர்களே பித்ருக்கள். அவர்கள் செய்த நன்மைகள் நாம் என்று மறவாது, அவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நினைவாக அவர்களின் நினைவு நாட்களில் அவர்களுக்கு ஆகம முறைபடி மரியாதை செய்யவேண்டும். அவர்களின் மோக்ஷத்திற்காக எப்போதும் பிரார்த்தனை செய்யவேண்டும்.

4) பிள்ளைகளுக்குச் ஆற்றவேண்டிய தர்மம்

நமது பிள்ளைகளை நன்றாக, பாசமும் நேசமும் ஊட்டி வளர்க்க வேண்டும். அவர்கள் தேவையானவற்றை செய்து கொடுத்தல் வேண்டும். முறையான கல்வியும் ஒழுக்கமும் கற்றுத்தர வேண்டும். அவர்கள் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் செய்ய கற்றுத்தர வேண்டும். அறிஞர்கள் மத்தியில் நாம் பெற்ற செல்வங்கள் முந்தியிருக்க செய்யவேண்டும். அவர்களின் கல்வி யாற்றல் இவ்வுலகிற்கு நன்மைப் பயக்கவேண்டியதாக இருக்கவேண்டும்

5) சக மனிதர்களுக்குச் செய்யவேண்டிய தர்மம்

சக மனிதர்களுக்குத் தானம் செய்வதே சிறந்தது. நம்மால் முடிந்தவரை உணவு தானம், துணிகள் தானம், புத்தகங்கள் தானம் செய்யலாம். சிலவேளைகளில் சக மனிதர்களுக்கு நல்ல ஞானத்தை அருள்வதும் தானமாக தான் போற்றப் படும். எப்போதும் மனிதர்களை நேசிக்க வேண்டும். உயர்வு தாழ்வு பாராமல் எல்லோருடனும் சகஜமாகப் பழகவேண்டும். ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதற்கு ஒப்ப, நாம் மக்களுக்கு நல்ல தர்மங்களைப் புகட்டுவதை சேவையாக செய்யவேண்டும். யாரைப் பார்த்தாலும் கையெடுத்து நெஞ்சத்திற்கு நேராக வைத்து கும்பிட்டு வணக்கம் / நமஸ்காரம் என்று சொல்லவேண்டும். இதன் பொருள் “உங்களுக்குள்ளும் உறையும் இறைவனை நான் மனதார வணங்குகிறேன்” என்பதாகும்

துன்பம் நீங்கி இன்பம் பெற

 துன்பம் நீங்கி இன்பம் பெற


உலகிலே பிறந்த உயிர்கள் அனைத்தும் பலப்பல எண்ணங்களுடன் வாழ்கின்றன. ஒரு தாய்தந்தைக்கு இரு மக்கள் பிறந்தன, ஒன்று தாய் தந்தையருக்கு அடங்கி வாழ்கிறது. மற்றொன்று தாய்தந்தையரை அடக்கி வாழ்கின்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் மாறுபட்ட குணங்கள் , உருவ அமைப்புக்கள், மாறுபட்ட முக பாவனைகள் மாறுபட்ட திறம் போன்ற வேறுபாடுகளுடன் இருக்கின்றன.

உதாரணமாக இலங்கை மன்னன் இராவணன் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வேறுபட்ட குணங்களை கொண்ட வரலாற்றை நாம் காணலாம். இராவணன் மூர்க்கன் ,சிவ பக்தன், கும்பகர்ணன் நல்லவன், ஆனால் முரடன், விபீசனன் பரம சாது, சூர்ப்பணகை மிகவும் பாெல்லாதவள் இவ்வாறு ஒரு வயிற்றில் பிறந்தவர்கள் வேறுபட்ட குணங்களுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆதலால் உலக மக்களில் ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் அமையாது. ஆன்மாக்கள் வெவ்வேறு இயல்புகளுடன் இருக்கின்றன. ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது ஒன்றில் மட்டும் யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாத ஒன்று அது , ” துன்பம் இன்றி இன்பத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணுவது தான்

எந்த சமயத்தாவரானும், எந்த அரசியல் வாதியானாலும், ஆணோ அல்லது பெண்ணோ முதியவரோ அல்லது இளையவரோ முன்னால் இருந்து வாழ்ந்தவரோ அல்லது தற்போது வாழ்பவரோ இனி வாழப்போவாரோ யாராக இருந்தாலும் இதைத்தான் எண்ணுகிறார்கள் துன்பம் இன்றி இன்பத்துடன்வாழ வேண்டுமென்று இதில் எந்த வித மாற்றமும் இல்லை.

எள் வேண்டும் என்று கொள் விதைப்பது போலும், செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்து விட்டு செல்லாத வாகனத்தில் ஏறுவது போல் இன்பம் வேண்டும் என்று எண்ணுகிற நாம் துன்ப விதை தூவுகிறோம் துன்ப விதை தூவினால்எப்படி இன்பம்விளையும்?

” கடவுளே நான் எப்போதும் உன்னையே நினைக்கிறேன் எனக்கு மட்டும்இத்தனை துன்பமா? உனக்கு கும்பாபிசேகம் செய்தேன் உன்பொருட்டு விரதம் இருந்து நடை பயணம் வந்து உன்னை வணங்கினேன். என் குழந்தைக்கு இப்படி தீராத நோயினை கொடுத்திருக்கிறாயே என்று இறைவன் மீது சலித்து கொள்கின்றனர். இது பேதமை தானே. ஒரு தாய் 4 பிள்ளைகளை பெற்றேடுத்து வளர்க்கும் போது ஒவ்வாெருவருக்கும் அவர்களின் உடல் வாகுக்கு தகுந்தவாறு உணவளிப்பதில்லையா? அவர்களுக்கு பருவத்திற்கேற்ப பணிவிடை செய்வதில்லையா? இது அந்த தாயின் கருணை அல்லவா?

பள்ளியில் ஆசிரியர் அங்கு பயிலும் மாணவரகள் எல்லாரும் ஒரே பாடம் எடுத்து படித்தாலும் அவர்கள் எழுதும் தேர்வில் பதில் அளிக்கும் மாணவனுக்கு ஏற்ப மதிப்பெண் கொடுப்பதி்ல்லையா? அவனவனுக்கு ஏற்ப தானே பயன்கள் கிடைக்கிறது.

இதுபோல ஆன்மாக்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப சுக துக்கங்களை இறைவன் தருகின்றான். ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவரகள் இறைவனை நோவலாமா? இறைவன் நடுநிலை வழுவாதவன். நாம் நுகர்கின்ற இன்ப துன்பத்ததிற்கு இறைவன் காரணம் அல்லன். நாம் முற்பிறவியில் செய்த வினைப்பயனே காரணமாகும். நாம் அனுபவிக்கின்ற துன்பத்திற்கு காரணம் நாம் செய்த தீவினையே காரணம் . நாம் செய்த பாவப்பலன்களை இப்போது நுகர்கிறோம் என்று கருதி சமாதானமாகி வினைப்பயனை அனுபவிக்க வேண்டும்.

ஒருவர் நமக்கு துன்பஞ் செய்பவராயின் அவர்கள் மீது சீற்றம் அடைதல் கூடாது. நாம் செய்த வினை பயனாக வருகிறது என்று எண்ணி மனம் சாந்தி அடைய வேண்டும்.

இதற்கு உதாரணமாக இராமாயண வரலாற்்றில் சீதை அனுமனிடம் கூறும் போது நான் அனுபவித்த துன்பத்திற்கு காரணம் அரக்கர்கள் அல்லர்,. என் வினைதான் காரணம் , தவ நெறியில் நின்ற என் கணவரை மான் பிடித்து வர அனுப்பினேன். என் அருகில் காவலானாக இருந்த இலக்குவனை நிந்தனை செய்து போகச் செய்தேன். என் பொருட்டு உணவு உறக்கம் இன்றி சுகத்தை மறந்து என்னை காத்து நின்ற பரம பக்தனாகிய இலக்குவனை நான் கொடுஞ் சொற்களால் மனத்தை நோக வைத்து அனுப்பினேன். அந்த வினைப்பயனால் இடர் வந்தது. செய்வான்/ செய்வினை/ வினைப்பயன்/ சேர்ப்பான் என்ற நான்கு தன்மைகளை உணர்த்துவதே உத்தம ஞானம். அரக்கியர்கள் இராவணனின் பணியாளர்கள் அவர்கள் அவர்களின் பணியினைத்தான் செய்தார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பில்லை. என் வினைப்பயன்தான் அவர்களை செய்ய வைத்தது. என்று விதியின் பயனை நொந்து அனுமனிடம்கூறியதை காணலாம்

ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவர்கள் கடவுளையோ மற்றவர்களையோ நோவக்கூடாது. இக்கருத்தில் தான் சம்பந்த பெருமான் மதுரை வந்திருந்த போது சமணர்களால் தானும் அடியார்களும் தங்கியிிருந்த மடம்தீ வைத்த போது சமணர்களை துன்புறுத்தா வண்ணம் அதற்கு காரணமாக இருந்த மன்னனுக்குதான் சூட்டு வலியை வரவழைத்தார். சமணர்கள் ஒருவனால் ஏவப்பட்டவர்கள் மூலகாரணம் அவர்கள் அல்லர்.

ஆதலால் நாம் துன்பமின்றி இன்பமாக வாழ வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு மனம் மொழி மெய்களால் துன்பம் செய்யக் கூடாது. நன்மையே செய்ய ேவண்டும். இதுதான் பண்பாடு,துன்பம் வினையினால் விளைகின்றது. விதையில்லாமல் செடி கொடி மரம் இல்லை. வேரின்றி மரம் இல்லை. பால் இன்றி நெய் இல்லை. வினையில்லையேல் துன்பம் இல்லை. துன்பங்களுக்கு காரணம் வினைதான் என்பதை தெளிவாக உணர வேண்டும்.

வினை மூன்று வகைப்படும். ஒன்று முன்செய்தவினை தொல் வினை என்ற சஞ்சித வினை, இதில் இப்பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் வினைப் பகுதி பிராப்த வினை அல்லது நுகர் வினை, இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களில் உண்டாகும் வினை ஆகாமிய வினை என்பதாகும். இந்த உடம்பு நுகர முடிந்து விடும் வினை பிராப்த வினையாகும். நாம் செய்யும் புண்ணிய செயல்களால் இவ்வினை குறையும். தொல்வினை என்பது ஞானத்தீயால் எரிந்து விடும். நம் குருநாதரின் அருளால் இவ்வினை நம்மிடம் இருந்து குறையும். இதனால் பிறப்பற்ற நிலை முத்தி கிடைக்கும். நாம் இறவாமல் இரு்க்க வேண்டும் என்றால் ஒரு வழி உண்டு. பிறவாமல் இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் நம் நிழல் நம் பின்னால் தொடரும் நம் நிழலை நிறுத்த நாம் இன்னாெரு நிழலுக்கு செல்ல வேண்டும். அப்பாேது நம்மை தொடர்ந்த நிழல் மறைந்து விடுகின்றதல்லவா? அதுபோல வினை யில்லையெனில் துன்பமே இருக்காது.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்கிறார் அப்பர்அடிகள். தொல்வினை என்ற சஞ்சித வினை இறைவனிடம்பக்தி செய்வதாலும், ஜபம் தவம் பாராயணம் முதலிய வழிபாட்டாலும் தொலையும் வினை அகன்றால் பிறவி கழியும் துன்பம்அகலும்.

மார்கழியில் கடும் பனி கொட்டுகிறது. அதனை விலக்க சருகுகளை குவித்து தீ மூட்டினால் பனி விலகுவது போல் பக்தி செய்வோர்க்கு இறையருள் வெளிபட்டால் வினை விலகும். ஆதலால் அன்பர்கள் துன்பந் தொலைந்து இன்பம் ஓங்க வேண்டும் என்று கருதுவீர்ளானால் வினை புரியாது, தினையளவேனும் இறைவனை மறவாது, அன்பு நெறி நின்று அருள் மயமாகி சிவசிந்தையுடன் வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம்.

திருசிற்றம்பலம்

நன்றி ; திருக்கோயில் மாத இதழ்

வெள்ளி, 29 மே, 2026

சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு

 சைவ சித்தாந்தம் பற்றிய சிறு தெளிவு


  சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்த்தை விளக்குவதே சைவ சித்தாந்தம்.

சைவம் என்றால் அன்பு , அன்பு என்றால் சிவம், சிவம் என்றால் மங்கலமானது,மங்கலமானது என்றால் பாசமலம் நீங்கப்பெற்றது, இதனால்தான் திருமூலர் அன்பே சிவம் என்கிறார். எனவே சைவம் சிவ சம்பந்தமுடையது என்பது தெளிவு.

 சித்தாந்தம் என்றால் முடிந்த முடிவு முடிந்த முடிவு என்றால் அதாவது மாற்றமில்லாத இறுதியான உறுதியான உண்மையான முடிந்த முடிவு என்று பொருள்படும்.

  இந்த முடிந்த முடிவு எதைப்பற்றிய முடிந்த முடிவ? என்ற கேள்வி எழும்.

     சைவத்தின் சிறப்பு நூலான சிவாகம் கூறும் சாரமான உண்மையை பிழிந்து, எடுத்து கூறுவதே - சித்தாந்தம்,

  இதில் கூறப்படும் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்கையும், அதாவது உள் பொருள்கள் அதாவது உண்மை பொருள்கள் என நிலை நாட்டி அவற்றின் இயல்புகளை "முடிந்த முடிவாக " விளக்குவதே இந்த முடிந்த முடிவு அதுவே சித்தாந்தம்.

   சித்தாந்தம் என்பது எல்லா சமயங்களிலும் கூறினாலும், இது சைவ சமய சித்தாந்தத்தையே குறிக்கும். அது எதுபோல எனில் மலர் என்றால் தாமரையை குறிப்து போலாகும்.

 சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கி, சிவன் சீவனுக்கு உபகரிக்கும் வகைகளையும், அவற்றை அடைய சீவன் மேற்காெள்ள வேண்டிய நடைமுறை களையும்,விரிவாகவும் தெளிவாகவும், விளக்குவதே இந்த சைவ சிந்தாந்தம். இந்த மானிட பிறப்பு நமக்கு கிடைத்ததே சிவனை சீவன் உய்யும் பொருட்டே,

   உய்வார்கள் உய்யும் வகை:


“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.


இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?


சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.


இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.


இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.

“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து,


        இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின்


        பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன்


        அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.”        - யசுர் வேதம்.


     இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.

கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.


        தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்


        விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்


        பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்


        மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.


உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.


இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளை சைவ சித்தாந்த நூல்கள் 14 வாய்லாக நாம் தெளிந்து ஆன்மா பெற வேண்டிய முத்தி பேற்றை பெற்று உய்வோம். உயிர் தன்னையும்உணர்ந்து, உலக இன்பங்களையும்நுகர்ந்து, இறைவனை அறிகிறது. இதனால் உயிர் இறைவன்பால் பற்று கொண்டு அவனை அடைய வழிதேடுகிறது. இந்த தேடலுக்கு உதவுவதே சைவ சித்தாந்தம், இதன் வாயிலாக இறைவனை அடையும் மார்க்கங்களான சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும்நெறிகளால் உயிர் சிவ முத்தி அடைய செய்கிறது.

 திருச்சிற்றம்பலம்

அடியார் பெருமை

 


அடியார் பெருமை

இறைவனின் திருவடிகளையே தஞ்சமாக அடைந்து, தூய அன்புடன் வாழும் சிவனடியார்களின் சிறப்பு அடியார் பெருமை எனப்படும். அடியார்களின் மகிமையை அளவிட முடியாது. அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூய்மையானவர்கள்ஆன்மீக நூல்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் அடியார்களின் பெருமைகள் பின்வருமாறு போற்றப்படுகின்றன:அன்பின் வடிவம்: இறைவனை விட அடியார்களின் பெருமை உயர்ந்தது என்று பெரியபுராணம், திருவாசகம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அடியார்கள் மீது அன்புகொள்வது என்பது இறைவனையே அடைவதற்கு இணையானதாகும்

நாயன்மார்கள்: சிவனடியார்களின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவே சுந்தரமூர்த்தி நாயனார் 'திருத்தொண்டத் தொகை' எனும் நூலைப் பாடினார். இதன் அடிப்படையில் 63 நாயன்மார்களின் வரலாறுகள் பெரியபுராணமாக சேக்கிழாரால் தொகுக்கப்பட்டது

அடையாளம்: திருநீறு, உருத்திராட்சம் ஆகியவற்றை அணிந்து, எப்போதும் இறை சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்கள். அவர்கள் வாழும் இடமே புண்ணிய பூமியாகும்.

அடியார் தொண்டு: "மானிடப் பிறவி எடுத்ததன் பயன் இறைவனின் அடியார்களுக்குத் தொண்டு செய்வதே" (சிவதொண்டு) என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது

திருசசிற்றம்பலம்

திங்கள், 25 மே, 2026

சிவதீக்கை

 சிவதீக்கை


சமய தீட்சை பெற்றோர் அனுதினமும் அனுஸ்டானம் முடித்து சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்ய சிவ தீட்சை என்ற விசேட தீட்சை பெற வேண்டும். சமய தீட்சை பெற்ற குருமார்களிடமே சிவ தீட்சையும் பெற வேண்டும் அதுதான் முறையும் எளிதும் கூட

சிவதீக்கை;

நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.


தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!


அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்

ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

திருச்சிற்றம்பலம்