சனி, 16 மே, 2026

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்


சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை 

அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!


வியாழன், 14 மே, 2026

வாழ்க்கையின் தத்துவம்

 வாழ்க்கையின் தத்துவம்



உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்….

ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

தனித்தனி பிறவிகள்

தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா…?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!….

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்._அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்… அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 8 மே, 2026

குரு இல்லாமல் அருள் இல்லை

 குரு இல்லாமல் அருள் இல்லை


ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.

குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.


சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.


குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.

குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.

எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.


குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.

உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.


குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீட்சை தரும் குருவைஸ் சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.


மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.

– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து

ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்

 அறியாமையாகிய ஆணவ மலம் நீங்குவது குருவின் திருநோக்கால்



ஒருவனுடைய உடம்பில் பாம்பு கடித்து ஏறிய நஞ்சு அப்பாம்புக்கு பகையாகிய கீரியே நேரே வந்து,பாம்பு கடித்தவனுடைய உடம்பின்மேல் விழுந்து புரண்டாலும் நீங்காது, ஆனால் மந்திரத்தால் தன்னைக் கீரியாகப் பாவிக்கவல்ல உண்மையான மாந்திரிகன் தன்னை கீரியாக பாவித்து அந்த மந்திரவடிவமாகவே நின்று பார்க்கும் பார்வையினால் அந்த கொடி நஞ்சு நீங்கும்.

   உயிரில் உள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்குவதும் இந்த முறைமையில் ஆகும். இறைவனே உயிர்குயிராய் உடன் நின்ற போதிலும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்குவதில்லை, அவ்விறைவனாய் நிற்கும் ஞான குருவின் திருநோக்கத்தால் மட்டுமே அது நீங்குவதாகும்.

   நூல்களில் கருட பாவனை என ஒன்று சொல்லப்படுகிறது. அதனை அறிந்து கொண்டால் இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பாவகன் நிலை் எளிதாக விளங்கும்.உலகிலுள்ள நாம் காணும்  பெளதிக பொருள் ஆன்மீக பொருளான மந்திரத்தை துணையாகக் கொண்டு பெளதிகப்பொருட்களின் மேல் பயன் படுத்தும் போது தைவிகப்பொருளான அதிதெய்வம் தோன்றும்,இதனையே கருட மந்திரத்தில் நாம் காணும் போது அதி தெய்வம் ஆகிய அதிதைவிக கருடன் தோன்றும் அதுவே சிவனது சக்தியாகும். அந்தசத்தியே மந்திரவடிவமாய் நின்று அந்த மந்திரத்தை கணிக்கும் மாந்திரிகனுக்கு தருகிறது. மாந்திரிகன் அந்த சக்தியை தியானிக்கிறான். அந்த சக்தியையே தானாக பாவிக்கிறான். ஆன்மா சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையினால் அம்மாந்திரிகனது ஆன்மா அந்த சத்தி மயமாய் ஆகிறது. அவன் கருடனாகவே நிற்கிறான். அவன் உடம்பு கருடனாகவில்லை. அவன் மந்திரக்கருடனை நாள்தோறும் தியானித்து பழகிய பயிற்சியினால் அவனுடைய ஆன்மா அக்கருடனே தானாய் நிற்கிறது. அவ்வாறு நின்று அவன் பாம்பினால் கடிபட்டவனைத் தன் மந்திரக் கண்கொண்டு பார்ப்பானாயின் அவ்விடம் நீங்கும். சிவசக்தியே மந்திர வடிவாய்நின்று விடத்தை நீக்கிறது.

  இக்கருட பாவனை போல மாந்திரிகன் மந்திரத்தை தன்னை கீரியாக பாவிக்கிற பாவனை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாம்பின் விடம் ஏறியவனின் உடலில் கீரி விழுந்து புரண்டாலும் விடம் தீராது, அதுபோல சிவம் உயிரில் பொருந்ததி இருந்தும் உயிரிலுள்ள ஆணவ மலம் நீங்காததற்கு உவமையாகும். மந்திர வடிவாய்நிற்கும் பாவகன் அருள்  மயமாய் நிற்கும் குருவிற்கு உவமையாவான். அப்பாவகன் பார்வையால் விடம் நீங்குதல், குருவின் அருள் நோக்கால் மலம்நீங்குவதற்கு உவமையாகும். இதனை விளக்கும் திருவருட் பயன் பாடல் எண். 47

  விடம் நகுலம் மேவினும் ெமய்ப் பாவகனின் மீளும்

  கடனில் இருள் போவது இவன்கண்.  பாடல் 47

திருச்சிற்றம்பலம்


புதன், 29 ஏப்ரல், 2026

தாடலை போல் ஆன்மாவும் சிவமும்

 

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


சைவ சித்தாந்த முத்தி

 சிவப்பிரகாசம் கூறும் சைவ சித்தாந்த முத்தி


சைவ சித்தாந்தத்தில் முத்தி (முக்தி) என்பது ஆன்மா ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று பாசங்களில் (மலங்களில்) இருந்து விடுபட்டு, இறைவனின் திருவடிகளைச் சார்ந்து, சிவானந்தப் பெருவாழ்வை அனுபவிப்பதாகும். இது 'சிவமாம் தன்மை' (சிவத்தோடு ஒன்றி நிற்றல்) எனப்படுகிறது.

சைவ சித்தாந்த முத்தியின் முக்கிய அம்சங்கள்:

பொருள்: பசுவாகிய உயிர், பதி (சிவன்) அருளால் பாச நீக்கம் பெற்று, பேரானந்தம் அடைவதே முத்தி.

மலம் நீங்குதல்: ஆன்மாவை மறைத்துக்கொண்டிருக்கும் ஆணவ மலம் (அறியாமை) முழுமையாக அழியும்.

சிவமாம் தன்மை: முத்தி நிலையில் ஆன்மா சிவனைப் போலவே அறிவும் ஆற்றலும் பெற்று, அதே சமயம் சிவனுடன் ஐக்கியமாகி (ஒன்றிணைந்து) சிவானந்தத்தை அனுபவிக்கும்.

சிவத் திருவடி சார்பு: ஆன்மா தன் தனித்தன்மையை இழந்து, சிவனுடைய திருவடியில் நிலைபெறும்.

சம்பந்தம்: இது பதி-பசு-பாசம் என்ற முப்பொருள்களின் அடிப்படையில் விளங்கும். 

முத்தி நிலைகள்:

சைவ சித்தாந்தம் முத்தியை 'சிவமாம் தன்மை' என்று கூறினாலும், அது சிவனுக்குச் சமமான நிலை அல்ல, சிவனுடன் ஒன்றிநிற்கும் நிலையாகும்

 இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்கள் இன்பத்திலும துன்பத்திலும் மாறிமாறி  உழன்று வருவதால் இவ்வுலக வாழ்வு குறை உடையது என்பதை எலலாச்சமயங்களும் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இவ்வுலக வாழ்வின் கட்டிலிருந்து விடுபட்டு நீங்கிப் பேரின்ப வாழ°வேனும் வீடுபேற்றை உயிர்கள் எய்த வேண்டும் என்னும் பொதுமைக் கொள்கையில் எல்லா சமயங்களும் ஒன்றுபடுகின்றன.

  ஒவ்வொரு சமயமும் அதன் கொள்கைகளை விளக்கி அவற்றை உள்ளவாறு உணர்தலே ஞானம் என்றும், அந்த ஞானத்தை அடைவிக்கும் செயல்களே தவம் என்றும் அத்தகைய தவத்தை மேற்கொண்டால் தான் வீடுபேறு அல்லது முத்தி அடைய முடியும் என்றும் கூறுகின்றன. அம்முத்திநிலை எத்தகைய தன்மையுடையது என்று விளக்குவதில தான் சமயங்கள் வேறுபடுகின்றன.

   இங்ஙனம் பல்வகையிலும் ேவறுபட்ட கொள்கைகளை உடைய சமயங்கள் கூறுகின்ற முத்தி நிலைகளை கூறி, அவற்றின் மேம்பட்ட சைவ சித்தாந்தத்தின் முத்தி நிலைக் கொள்கையே சிறந்தது என்று சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டுகிறது.

  மக்களிடத்துத் துய்க்கும் இன்பமே முத்தி என்பது உலகாயதர் கொள்கை, உருவம் முதலிய ஐந்து கந்தகங்களும் கெடுவதே முத்தி என்பது நான்கு வகை பெளத்தர்கள் கொள்கை. முக்குணங்களும் கெடுவதே முத்தி என்பது சமணரின் கொள்கை. வினைகள் கெடுவதே முத்தி என்பது பிராபகர சமத்தின் கொள்கை, ஆணவ மலம் முற்றும் அழிந்து போவதே முத்தி என்பது அகச்சமயமான பேதவாதம் கூறும். இவ்வுடல் முத்தி நிலையிலும் அழியாது நிலை பெற்றிருக்கும் என்பது சிவசமய வாதிகளின் கொள்கை, ஆன்மா என்ற ஒன்றே அழிந்து போவது முத்தியாகும் என்பது பாற்கரமியவாதத்தின் கொள்கை. உயிர் பசு கரணம் கொட்டுச் சிவ கரணம் பெறுவதே முத்தி என்பது அகச் சமயமான சிவ சங்கிராந்த வாதிகளின் கொள்கை, உயிர் ஒன்றையும் அறியாமல் கல்லைப்போல கிடக்கும் நிலையே முத்தி என்பது பாடாணவாதத்தின் கொள்கை. இவ்வாறு பத்து வகையாக சொல்லப்பட்ட முத்திகள் குற்றமுடையன.

   ஆணவம், கனமம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்தும் விடுதலை பெற்று உயிர் அருளோடு கூடி, சிவ பரம்பாெருளோடு பேரின்பத்தை எய்துவே சித்தாந்தத்தின் முத்தி கொள்கையாகும். இதுவே முத்தி பற்றிய சிறந்த கொள்கையாகும்.

   மும் மலங்களோடு அவற்றின் விளைவுகளாகக் கூறபட்ட ஏனைய காரியங்களோடு பொருந்துவதனால் ஆன்மா தனக்கென ஒரு செயல் இன்றி பாசத்தினால் ஈர்க்கப்பட்டு பாச மயமாய நிற்கும். ஆன்மா மேற்கொள்ளும் இடையறாத உண்மை ஞான யோகங்களின் முன் இம் மும் பமலங்களின் குண பேதங்கள் தீ முன்னர் பஞ்சத் துய்ப் போலும்ஆகும். இந்நிலையே திரி மலம் அகலும் நிலை ஆகும். இவ்வாறு திரி மலமும் அகன்ற நிலையில் ஆன்மா அருளோடுங் கூடின இடமே முத்தியாகும். அதாவது ஆன்மாக்கள் சிவனைப் பெறுமிடத்து சிவனுடைய அருட் சத்தியினடமாகச சென்று பெற வேண்டும். இது பற்றிய திருவாசகம் சிவபுராணம் அவனருளாலே அவன்தாள் வணங்கி என்று கூறும். 

  பிறவி பிணயை தருவதாகிய வினைப் போகங்கள் அறவே அழியுமாறு அவச் செயலை போக்கும் தவச் செயல்களை மேற்கொண்டு அருட் சத்தியைவழியிடமாகக் கொண்டு சிவமாம் பேற்றை சார்ந்து சிவபோகமாகிய முத்தி பேற்றை அடைவர் இதுவே அருள்சேர் முத்தி என்பதாகும்

 ஆன்மா பாசத்தில் அழுந்திருக்கும் நிலை கட்டு நிலை, பதியில் அழுந்திருக்கும் நிலை வீட்டு நிலை அல்லது முத்தி நிலை எனப்படும். கட்டு நிலையில் பாசமே தானாய் நின்ற ஆன்மா முத்திநிலையில் பாசத்திற்கு செல்லாது பதியே தானாய்  நிற்கும். அதாவது வீட்டு நிலையில் ஆன்மா திரிமலம் ஆகிய பாசத்தினின்று அகன்று திருவருள் பெற்று, அறிபவனாகிய தன்னையும், தனது அறிவையும் அறியாது சிவம் ஒன்றே அறிந்து அதனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையே சித்தாந்த முத்தி நிலையாகும். இம்முத்தி நிலையே இவ்வுலகத்திற்கு மீண்டும் வாராத நிலை என்றும் இன்பத்தில் இருக்கும் நிலை எல்லாப் பேறுகளிலும் மேலான பேறு பெற்ற நிலையாகும். 

சித்தாந்த முத்தயே நன் முத்தி ஏனைய முத்தி யெல்லாம் முத்தியல்ல என்பதனை சிவஞான சித்தியாரும் கூறுகிறது. சிவனது திருவருளே திருவடியாக சொல்லப் படுமாதலால் அடிசேர் முத்தி என்று சித்தியார் கூறுகிறது. 

  நண்ணரிய சிவாந்த ஞான வடிவமாகி

  அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்  என்று திருநாவுக்கரசர் சிவத்துவம் பெற்றதை சேக்கிழார் பெருமான் அருளிச் செய்வர். எனவே நம் சிவகாம தோத்திர சாஸ்திரங்கள் புராணங்கள் அனைத்தும் சைவ சித்தாந்த முத்திப்பேறே முத்தி பேறு என்பதை அறியலாம்,.

  இங்ங்னம் முப்பொருள்கான பதி, பசு பாசம் பற்றிய இருப்பையும், அவைகளின் இலக்கணங்களையும் சிவப்பிரகாசம் விரிவாக விளக்கி காட்டுகிறது. ஆன்மா அடையும் கேவல, சகல நிலைகளையும் பின் திரிமலம் அறுத்து ஞானம் பெற்று இறைவன் திருவடி அடையும் சுத்தநிலையையும் அவத்தைகள் மூலமாக எடுத்துரைக்கிறது, எனவே சைவ சித்தாந்த முத்தியே ஞான முத்தி சிவனருள் முத்தி

திருச்சிற்றம்பலம்

நன்றி உமாபதியாரின் சிவப்பிரகாசம்

வியாழன், 16 ஏப்ரல், 2026

சிவ ஞானத்தை அடைய

 சிவ ஞானத்தை அடைய


 இறைவனை அறிய முதலில் உன்னைஅறி

உன்னை அறிய குருவை தேடு

உலகில் ஈடுஇணை அற்றது  இறை நிலையே

இறைவனை பிடிக்க வேண்டின் குருவை பிடி குருவே துணை

அன்பில்லா இடத்தில் சிவத்தை அறிய / அடைய முடியாது

அன்பேயே கொடு அன்பையே பெறு

அன்பும் அமைதியும் சிவனின் இருப்பிடம்

உன்னில் நிறைந்த பொருள் சிவம் அதுவே ஜீவனுடன் கலந்துள்ளது

உடலை இயக்குவது உயிர் அந்த உயிரை இயக்குவது சிவமே

இறைவனை அடைய இறைவனாகிய குருவே உதவ முடியும்

இறைவனை அடைய இறைவன் நாமம் மட்டுமே உதவும்

இறைவனின் ஒர் நாமத்தை தேர்வு செய் அதில் லயப்்பட்டு கரைந்து விடு

மன விடுதலை இறைவனால மட்டும் தான் தரமுடியும்

சிந்தித்தால் மட்டுமே சிவம்

உன்னை ஜீவனாக பார்க்காதே சிவமாக பார் சிவனாகி போ

மன விடுதலை இறைவனால் மட்டுமே தரமுடியும்

சித்தத்தை சிவன்பால் வை. 

சிவனை அறிந்தபின் நாம் எவரையும் அறிய வேண்டோம்

சுத்த சிவம் எழுவது குருவுக்குள்ளே

உருகி உருகி அழைக்க சிவம் பெருகி பெருகி நிற்பான்

அன்பே சிவம் சிவமே அன்பு 

பக்தி மற்றும் சரணாகதி: சிவபெருமானை முழுமையாக நம்பி, அவரிடம் சரணடைவது முதல் படியாகும்.

தியானம் (Meditation): மனதை அடக்கி, சிவபெருமானின் வடிவம் அல்லது "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வது சிவஞானத்திற்கு வழிவகுக்கும்.

நிஷ்காமிய சேவை: தன்னலமற்ற செயல் (Selfless service) மூலம் அகங்காரம் நீங்கி, சிவனருள் கிடைக்கும்.

நூல் கல்வி மற்றும் அனுபவம்: சிவ புராணங்கள், சைவ சித்தாந்தம் போன்றவற்றைப் படித்து, அதன்பின் ஞானத்தை அனுபவபூர்வமாக உணர்வது.

யோகப் பயிற்சி: உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி, மூச்சுப் பயிற்சி (Pranayama) மற்றும் சக்கர தியானம் மூலம் சிவ சக்தியை உணரலாம்.

வாழ்க்கை முறை: பொய், வன்முறை தவிர்த்து, உண்மை, தூய்மை மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற தர்மங்களை கடைப்பிடிப்பது. 

 உண்மையான ஞானம் சற்குருவின் அருளாலும், தொடர்ச்சியான பயிற்சியாலும் மட்டுமே கிடைக்கும்

திருச்சிற்றம்பம்