சனி, 28 நவம்பர், 2015


காஞ்சி கருணைக்கடல் இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள் மதச்சின்னங்கள் மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது. இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம் விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி, கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும் அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு, பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன. தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம் நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது. 1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம் 2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும் 3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும். இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர், ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா். இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார். அவை ; 1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு 2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம் 3.அனுசூயை / பொறாமையற்ற குணம் 4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம் 5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு 6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம் 7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம் 8.அப்பிரஹா / ஆசையற்ற குணம் இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

புதன், 25 நவம்பர், 2015


திருமுறை 11 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திரத் திருவெண்பா (இவ்வெண்பாக்கள் யாவும், `யாக்கையின் நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறி வுறுத்துகின்றன). இவ்வெண்பா, `தில்லைத் திருச்சிற்றம்பலப் பெருமானைக் கண்டு வணங்குக` எனக் கூறுகின்றது. ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர். உடலின் வலிமை இழந்த பின் முப்பு வந்தபின் மனைவி,மக்கள் சுற்றத்தார் யாவரும் நம்மைவிட்டு விலகும் மனம் மாறிவிடுகின்றனர், மூப்பும் நம்மை தழுவிற்று, வரும் என்று அஞ்சப்பட்டவையாவும் வந்துவிட்டது. இனி சேரும் இடம் தில்லை சிற்றம்பலமே என்று உணர் குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி, நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. பொருள் ; தட்டுதடுமாறி நடந்து போகும் போது கையால் கோல் ஊன்றி ,உடல் வலியால் நொந்து இருமி இருமி ஏங்கி கோவழை. அது நுரைத்து, மேலே ஏறி, வெளி வந்து, ஓட்டெடுத்து வாய் ஆறு (வாய்வழியால்) பாயா முன்`இப்படி வாயால் வந்து நொந்தி திணரும் முன் என் ெநஞ்சமே ஐயாறு (சோழ நாட்டுத் தலம். தலப் பெயரைச் சொல்லு தலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லி இறைவரை வாயால் அழை என்கிறார் தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை. தொகுப்பு; வை. பூமாலை

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும். கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர். தொல்காப்பியர் கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும் ‘நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகி புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை‘ எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது. ‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள். இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர். ‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’ (சாறு- திருவிழா; கழி- கூட்டம்) karthikaideepam1இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர் ‘கார்த்திகைத் தீபவெண்பா‘ எனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார். ‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர். இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள், ‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில் வெண்பாப் பயிராய் விளையுமலை,’ எனக்கூறினார். திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார். கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா, கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு) உற்றதுணையாய் உறுதீபம்- சொற்றகதிக்(கு) ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும் பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43) அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல் என்கின்றது. கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம். எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்! சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும். முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது. கங்கையணிதீபம் கற்பூர தீபமலை மங்கையொருபங்கில் வளர்தீபம் – பங்கயன்மால் விண்பாரு நேடும்வண மேவியவண் ணாமலையிற் பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1) கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம். சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல் இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது. பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும் கூடலிலே வந்து வளையல் விற்ற மாதீபம்- கொது மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப் பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4) http://www.tamilhindu.com/wp-content/uploads/2015/11/karthikaideepam1.jpg கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்; அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார். நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந் தோடுகவர்ந்த தாண்ட வொருதீப – மாடுமயிற் கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப் பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7) இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம். உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங் கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்-வெள்ளமதி மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற் பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13) திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல் இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது. ‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்; நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்; வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்; புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார். போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்-சாற்றுமறை யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம் பன்னரிய கார்த்திகைத்தீ பம். (15) இடையே ஒரு திருவிளையாடல் கதை: பாணபத்திரர் மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்; அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம். பாணனுக்கோர் சத்துருவாம் பாடகனைக் கூடலிலே நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்-பேணி அயனுமரி யும்காணா அண்ணா மலையிற் பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23) ‘நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம் ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார். அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்-எஞ்ஞான்றுஞ் சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும் பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27) ‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’ சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங் கன்மவினை போக்குங் கனதீப-மன்பதனை அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம் பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31) இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி. எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்; தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம். கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர் தந்தனையுஞ் சேயாத் தருதீப-மெந்தமைக்க ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப் பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39) இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம். விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம். பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான் பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்-விண்ணுடனே சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப் பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43) அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம். தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை கூருகிரினா லுரித்துக் கொள்தீப-மேருமுக லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமரு ணாசலத்திற் பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52) இடையிடையே திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார். நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்; வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார். சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம். நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற் சென்றுரச வாதமது செய்தீபங்-கன்றுகளுக் கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப் பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53) ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம். செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ? பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ் சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்- செந்நெற் கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63) கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம். கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும் கார்த்திகைத்தீபம். கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ் சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்-கொல்லா விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற் பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85) அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்; பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள் ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம் பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார் தாம்பணியுந் தீபந் தனித்தீப- மாம்பல் விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற் பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91) தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம். மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம். பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ ராதார மாகி யருடீபம்-போதாருங் கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென் பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94) நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்; நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம். புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல் சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்-சத்திக் குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப் பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100) இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது. தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம். விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்) தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே! தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருச்சிற்றம்பலம்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை

Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர்....

Aanmigam: அகத்தியரை “நாடியில்” …

Aanmigam: அகத்தியரை “நாடியில்” …: அகத்தியரை “நாடியில்” … வணக்கம் அகத்தியர் அடியவர்களே! எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை “நாடியில்” நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் ...

குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,


குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம், ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில் கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு. எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார் அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :- இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம். இத்திருத்தலத்தில் உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார். வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத் தோஷங்கள் யாவும் நீங்கும். தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம் இது மட்டுமே. இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வழிபாட்டின் பயன்கள் :- திருமணத்தடை நீங்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும். பல ஜோதிடர்கள் பரிகார ஸ்தலமாக இவ்வாலய தரிசனத்தைப் பரிந்துரைப்பதால் பல அன்பர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து கிரக தோஷங்கள் நீங்கிப் பலன் பெற்று வருகின்றனர். இவ்வாலயத்தில் ராஜகோபுரம் எழுப்பும் திருப்பணி பல நல்ல உள்ளங்களின் உதவியினாலும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி அருளாலும் இனிதே நிறைவடைந்துள்ளது.ஏனைய திருப்பணிகளை விரைவாக நிறைவு செய்து கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், திருப்பராய்த்துறை துணைத்தலைவரும் திருநெல்வேலி சாரதா கல்லூரியின் தாளாளருமான ஸ்ரீ மத் சுவாமி சங்கரானந்தா அவர்களை புரவலராகக் கொண்டு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் (Regd) அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் கோபுரம்,சுற்றுச்சுவர் மற்றும் ஆலய நிர்மாணம் தொடர்பான எந்த சிறிய பெரிய திருப்பணி புரிபவர்களும் முன்னே அவற்றைச் செய்தவர்கள் பெற்ற புண்ணியத்தைப் போல் நான்கு மடங்கு அதிகமாக புண்ணியம் பெறுவார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன. இத்தனை சிறப்புகள் கொண்ட இவ்வாலயத் திருப்பணிக்கு தாங்கள் மனநிறைவோடு தாராளமாக நிதி வழங்கி அல்லது ஒரு பகுதி திருப்பணியை ஏற்று செய்து ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிபெருமானின் அருளால் எல்லா வளங்களையும் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்காணும் வங்கி கணக்கில் தங்களின் நன்கொடையை நேரடியாகவும் செலுத்தலாம். கனரா வங்கி,திருநெல்வேலி ஜங்ஷன் A/C NO:1119101044777 ஆலயத்திற்கு வரும் வழி :- ரயிலில் வருபவர்கள் :- திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது. பஸ்ஸில் வருபவர்கள் :- திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .

தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது


தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது திருக்கன்றாப்பூர் பதிகம் 61, பாடல் 2 சிவனாடியார் வேடம் தரித்தவர்கள் யாவரும் சிவனாகவே பாவித்து அவர்களை உபசரித்து வழிபாடும் அடியார்கள் நினைவை விட்டு நீங்கான் இறைவன் என்கிறார், அடியார்களையும், தம்மையும் வெவ்வேறாக காணக்கூடாது. இருவரும் ஒருவரே என்பதைக் கொளல் வேண்டும் என்கிறார். விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச் செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ் செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந் துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ் சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங் கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே . பொழிப்புரை: பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே .யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். `திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும். இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத் திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித் துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம் உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக் கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். விருத்தனே வேலைவிட முண்ட கண்டா விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள் பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும் புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக் கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப் பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப் பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார் வசியினா லகப்பட்டு வீழா முன்னம் வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக் கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும் ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங் கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. திருதிமையால் ஐவரையுங் காவ லேவித் திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச் சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக் கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப் பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங் கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங் கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந் தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந் தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும் முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங் கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. பொழிப்புரை : வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை.பூமாலை

வியாழன், 19 நவம்பர், 2015

திருமுறைகள் கூறும் அதிஅற்புத தெய்வீக ஆற்றல்


திருமுறைகள் கூறும் அதிஅற்புத தெய்வீக ஆற்றல் திருஞான சம்பந்தர் காட்டியது " .........திருஞானசம்பந்தர் சொல்மாலை தஞ்சமென நின்றசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்று வளர் வாரே" ...... தமிழ் திருமுறை 3. பதிகம் 81. பாடல் 11 பாடலின் கருத்து : திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே - தமிழ் வேதப் பாடல்களே தமக்கு பற்றுக்கோடு என்பதை மனதில் கொண்டு ஓதும் அடியார்கள் வஞ்சனை இல்லாதவர்களாக இருப்பர். நெறிதவறாமல் வாழ்ந்து அறியாமை எனும் இருள் நீங்கப் பெற்று இறையருள் நிறைவாகப் பெற்று மேன்மேலும் வளர்வர். "............ ஞானம்உணர் சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ் வெய்தி இமையோர் அந்தவுலகு எய்தி அரசாளும்அதுவே சரதம் ஆணைநமதே." ....... தமிழ் திருமுறை 3. பதிகம் 78. பாடல் 11 பாடலின் கருத்து: ஞானசம்பந்தன் பொருள் நிறைந்த செந்தமிழ் பாடல்கள்களைக் கொண்டு திருவேதிக்குடியில் எழுந்தருளியுள்ள முழுமுதற் பொருளான சிவபெருமானாரின் திருவடிகளைச் சிந்தித்து போற்றுபவர்கள் நல்லவர்களாக திகழ்வர் மறுமையி தேவலோகத்தை அடைந்து அரசாள்வர்என்பது நிச்சயம், இது நமது ஆணை (சத்தியம்) இவ்வாறு இவர் கூறுயுள்ளவைகள் யாவும் உண்மையாகவே நடக்கும் என்று மனிதர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். இதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் நடந்ததை இங்கே காணலாம் நல்லூர் பெருமணம் என்னும்தலத்தில் திருஞான சம்பந்த சுவாமிகள் அவர்களுக்கு திருமணம் நடந்தது. "நம்பியாண்டார் நம்பி" எனும் அடியவரின் புதல்வி "தோத்திர பூராணாம்பிகை" என்பவரை மணம் முடித்தார் சம்பந்தர் (திருமணம் தமக்கு வேண்டாம் என்று எவ்வளவோ கூறினார். பெற்றோர் விடவில்லை. பெற்றோர்சொல் தட்டக் கூடாது என்று எண்ணி திருமணம் முடித்தார் சம்பந்தர். நல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள சிவாலயம் சென்று தொழுதார் துணைவியாருடன் திருமணத்திற்கு வந்திருந்த அடியவர்கள் யாவரும்உடன் சென்று தொழுது வணங்கினார்கள். திருஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளியுள்ள் சிவபெருமானார் முன்பு கீழ்க்காணும் பாடலை முதலாகக் கொண்டஒரு பதிகம் பாடியருளினார். அப்பாடல் "கல்லூர் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய்யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர் நல்லூர்ப்பெருமண மேய நம்பானே." ...... திருமுறை 3 பதிகம் 125. பாடல் 1. பாடலின் அரிய கருத்து: அம்மி மிதித்து அருந்ததி காட்டும் திருமணம் வேண்டாம். கழுமலம் முதற்கொண்டு பல தலங்களில் நான் பாடிய பாடல்கள் மெய்யாக மாட்டா. நான் இதுவரை சொல்லிய பாடல்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்கவும் மாட்டார்கள். நல்லூர் பெருமணத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாரே. இவ்வோண்டுகோளை ஏற்று எனக்கு பெருமணத்தைக் கொடுத்தருள்க (முக்தி) என்பது இப்பாடல் கருத்தாகும் விளக்கம்: என்பாடல்களைப் பாடினால் (திருஞானசம்பந்தர் பாடலகள்) வினை நீங்கும், முக்தி பெறுவர், அரவாள்வர், சிவனுலகு அடைவர், என்றெல்லாம் பாடியுள்ளேன். எனக்கே தாங்கள் முக்தியை அளிக்காமல் இவ்வுல வாழ்வில் தள்ளி விட்டீர். என் பாடல்களை இவ்வுலக மக்கள் ஏற்கமாட்டார்கள். சீர்காழியில் தொடங்கிய பல தலங்களில் பாடிய பாடல்கள் மெய்யில்லாதவை என்றல்லவா தொண்டர்கள் எண்ணுவார்கள் எனக்கு முத்தியைத் தாருங்கள் என்று இறைவனிடம் முறையிட்டார். இவற்றை செவி மடுத்து (கேட்டருளிய) நல்லூர்பெருமணம் தலத்தில் எழுந்தருளியுள்ள் சிவலோக தியாகராசர், ஒரு சிவசோதியை தோன்றச்செய்து,வான்வழியே " ஞானசம்பந்தா ! நீயும் நின் மனைவியும் சிவசோதியுள் புகுந்து எம்மை வந்தடைவீராக, " என்றருளினார் திருஞானசம்பந்த சுவாமிகளும் " காதலாகி கசிந்து " எனத் தொங்கும் நமச்சிவாய திருப்பதிகத்தை பாடி, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் சிவசோதியில் புகச்செய்தார். முடிவில் தம் துணைவியாரோடு சிவசோதியில் சிவனுலகு அடைந்து புற்றார். இதிலிருந்து நாம் உணர் வேண்டியது முத்தி அளிக்கும் உரிமையுடையவர் சிவபெருமானாரே, என்பதும், திருமுறைப் பாடல்கள் யாவும் அதி அற்புதமான தெய்வீக சக்தி வாய்ந்தவை என்பதையும் ஆழமாக மனதில் கொள்ள வேண்டும் நாம். திருச்சிற்றம்பலம் நன்றி :தமிழ் வேதம்

Spirituality & Divinity: ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் சிவன்

Spirituality & Divinity: ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் சிவன்: சயனத்தில் பெருமாளைத் தரிசித்திருப்பீர்கள். அதிசயமாக, ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் இருக்கிறார்.           ...

தினமும் ஒரு திருவாசகம் / மாணிக்கவாசகர் அருளியது திருப்பள்ளி எழுச்சி பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. 129 பாடலின்பம் போற்றி என் வாழ்முதல்ஆகிய பொருளே, புலர்ந்தது, பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில்நகை கண்டுநின் திருவடி தொழுகோம், சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே, ஏற்றுஉயர் கொடிஉடையாய், எமைஉடையாய், எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே. * அருணன் இந்திரன் திசை அணுகினன், இருள்போய் அகன்றது, உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அம்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன, இவைஓர் திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே, அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே. பொருளின்பம் என் வாழ்வில் அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானே, உன்னைப் போற்றுகிறேன், பொழுது புலர்ந்துவிட்டது, உன்னுடைய பூப்போன்ற திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்குகிறோம், உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலரும் அழகிய புன்னகையைக் கண்டு உன்னுடைய திருவடியைத் தொழுகிறோம், சேற்றில் தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, இடபக்கொடியை உடையவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எம்பெருமானே, பள்ளிஎழுந்தருள்வாய்! * இந்திரனுக்கு உரிய கிழக்குத் திசையில் சூரியன் தோன்றினான், இருள் விலகியது, எம்பெருமானே, சூரியன் மேலே எழ எழ, உலகில் வெளிச்சம் பரவுகிறது, உனது மலர்த் திருமுகத்தில் தோன்றும் கருணையைப்போல, அது எங்களை வாழவைக்கிறது, ஒருபக்கம் உன்னுடைய கண்களைப் போன்ற மலர்கள் நறுமணத்துடன் மலர்கின்றன, இன்னொருபக்கம் உன்னுடைய கண்களைப்போன்ற வண்டுகள் கூட்டமாகத் திரண்டு வந்து ஓசையிடுகின்றன இத்தகைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அருள்நிதியைத் தருவதற்காக வரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளிஎழுந்தருள்வாய்!

தினம் ஒரு தேவாரம் / அப்பர் பிரான் பாடியது ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 1 பின்னணி சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் கட்டப்பட்டு, கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்ற திருப்பதிகத்தைப் பாடிய நிலையில் இருந்ததும், நமச்சிவாயப் பதிகம் என்று அழைக்கப்படும் இந்த பதிகத்தின் பாடல்களையும், சிந்தித்த வண்ணம், தினம் ஒரு தேவாரம் என்ற பகுதியை தொடங்கினோம். சிவபிரானின் அருளால், அவருடன் பிணைத்துக் கட்டப்பட்ட கருங்கல் கடலில் மூழ்காது தெப்பமாக மாற, கடலில் மிதந்து சென்ற அப்பர் பிரான், கடலூருக்கு அருகில் கரையேறவிட்ட குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்கின்றார். இப்போது இந்த இடத்தில் கடல் நெடுந்தூரம் பின்வாங்கி உள்ளது. கடலூர் நகரம் அந்நாளில் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கூறும் சேக்கிழார் பெருமானார், கருங்கல் சிவிகையாக (பல்லக்கு) மாறியது என்று குறிப்பிடுகின்றார். பாங்கர் என்றால் அருகில் என்று பொருள். வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கல்லே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்தருளிவித்தனன் பூந்திருப்பாதிரிப் புலியூர் பாங்கரில். கடலில் மிதந்து வந்த அப்பர் பிரானைக் கண்ட தொண்டர் கூட்டம், மிகுந்த ஆரவாரத்துடன் அர அர என்ற கோஷத்துடன் வரவேற்றது. தொண்டர்கள் மகிழ்ச்சியால் எழுப்பிய பேரொலி நடந்த அதிசயத்தை மற்றவர்களுக்கும் உணர்த்தியது. இந்த அதிசயம் அப்பர் பிரானின் வாழ்வில், அவரது உயிரினைப் காப்பாற்றுவதற்காக இறைவன் நிகழ்த்திய நான்காவது அதிசயமாகும். நீற்றறை குளிர்ச்சி அளித்தது, ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமாக மாறியது, தலையை இடற வந்த யானை, வலம் வந்து வணங்கியது ஆகிய மூன்று அதிசயங்களின் விவரங்களை, நாம் இந்த தொகுப்பினில் ஏற்கனவே அனுபவித்தோம். கடலில் மிதந்து வந்து கரையேறிய இந்த சம்பவம் இன்றும் ஒவ்வொரு வருடமும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. கரையேறிய அப்பர் பெருமான், சிவபெருமானின் கருணையை நினைந்து, தன்னை வரவேற்றத் தொண்டர்களுடன் அருகிலிருந்த திருக்கோயில் சென்று சிவபிரானை வணங்கி எழுந்தபோது அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொழுந்தகை = யாவராலும் தொழத்தக்க; கொழுந்து = இளைமையான தொழுந்தகை நாவினுக்கரசும் தொண்டர் முன் செழும் திருப்பாதிரிப் புலியூர் திங்கள் வெண் கொழுந்தணி சடையரைக் கும்பிட்டு அன்புற விழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் பாடல் 1 ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே விளக்கம் ஏன்றுதல் = தாங்கிக்கொள்ளுதல். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப்போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக்கொள்ளத் தெரியாமல் தவித்தபோது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துனையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயானாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் பெயர். திருவாரூர் தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தில் (5.07), தனக்குத் தமக்கையாரைத் தந்து அருளியவன் என்று சிவபிரானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாய் தந்தையரை இழந்து தவித்த சமயத்தில், தன்னக்கு இனிமேல் அம்மை யார் என்று கலங்கி நின்ற நிலையில் அம்மையாராகிய திலகவதியைத் தந்து அருளினார் என்று நயமாக கூறுகின்றார். இந்த பாடல் கொக்கரை குழல் வீணை என்று தொடங்கும் பதிகத்தில் காணப்படுகின்றது. ஒரு தாய் தனது குழந்தையைக் காப்பாற்றுவது போல், திலகவதியார் அப்பர் பெருமானை காப்பாற்றினார் என்று இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. எம்மையார் இல்லை யானும் உளேன் அலன் எம்மை யாரும் இது செய வல்லரே அம்மை யார் எனக்கு என்று அரற்றினேனுக்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள். அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே மணிவாசகப் பெருமானும் ஒரு திருவாசகப் பாடலில் (பிடித்த பத்து பதிகம் மூன்றாம் பாடல்) சிவபெருமானைத் தனக்கு அம்மை, அப்பன் என்று கூறுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே மூன்றாய் உலகம் படைத்து என்ற குறிப்பினுக்கு, கீழ்க்கண்டவாறும் விளக்கம் அளிப்பதுண்டு. பொதுவாக இந்த உலகத்தில் உள்ளவற்றை மூன்று வகைப் பொருட்களாக சைவ சித்தாந்தம் பிரிப்பதை உணர்த்தியதாக கூறுவார்கள். அவன் (இறைவன்), அவள் (அனைத்து உயிர்கள்) அது (உலகும் உலகத்தில் உள்ள பொருட்களும்). இவையே பதி, பசு, பாசம் என்றும் அழைக்கப்படும். உகந்தான் என்று சொல்லப் படுவதற்கு காரணம், உயிர்களை அவை செய்த வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தும் இறைவன், உயிர்கள் தங்களது மலத்தினை நீக்கிக்கொள்ளும் பொருட்டு பல கருவிகளை அளித்திருப்பதால், உயிர்கள் அந்த கருவிகளை பயன்படுத்தி மலநீக்கம் பெற்று தன்னை வந்து அடையும் என்ற ஆசை உள்ளவனாக இறைவன் இருக்கும் நிலைதான். இறைவன் உயிர்களை உடலுடன் பொருத்தியதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அனைத்து உயிர்களுக்கும் துணையாக உடனும் இருக்கின்றான் என்ற கருத்தினை உட்கொண்டு அடியோங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகின்றார்,. மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுவது போல், (ஓர்தல் = உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) தனது மனத்தில் இறைவன் இருப்பதை அப்பர் பிரான் உணர்ந்தமையால், மனத்துள் இருக்க என்று இங்கே குறிப்பிடுகின்றார். பொழிப்புரை எனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் எனக்குத் தோன்றும் துணையாக இந்த உலகத்தில் படைத்து உகந்தவரும், எனது மனத்துள் இருப்பவருமாகிய சிவபிரான் என்னைத் தனது அடிமையாக ஏற்றுத் தாங்குகின்றான். தேவர்களுக்கு மிகவும் இனிமையானவனாக இருக்கும் சிவபிரான் தனது அடியார்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குகின்றான். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

புதன், 18 நவம்பர், 2015

Sadhananda Swamigal: சும்மா 1 -- எஸ்.ஜெயபாரதி

Sadhananda Swamigal: சும்மா 1 -- எஸ்.ஜெயபாரதி: thank:  http://www.visvacomplex.com/summa_1.html சும்மா  #1 வித்யாலங்கார சாக்தஸ்ரீ கடாரத் தமிழ்ப் பேரரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி   ...

வியாழன், 12 நவம்பர், 2015

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து


ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த ‏இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக ‏இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பி‎ன்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவெ‎‎ன்று ஆகமங்கள் பறைசாற்றுகி‎ன்றன. சைவசித்தாந்த ஆகமங்களில், குறிப்பாக சந்திரஞானம், யோகஜம், வீராகமம், வித்தியாபுராணம், வாயுசங்கிதை முதலியனவும், சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகியனவும் திருவைந்தெழுத்து மந்திரத்தி‎‎ன் பெருமைகளை விரித்துக் கூறுகி‎ன்றன. ஏனைய ஆகமங்கள், குறிப்பாக மதங்க்பாரமேசுவரம், மிருகேந்திரம், காமிகம் முதலியன பிராஸாதமந்திரத்தைச் சிறப்பிக்கின்றன. அதிலும் மதங்கபாரமேசுவரம் வியோமவியாபி மந்திரத்தையே தீ¨க்ஷ முதலிய கிரியைகளில் சிறப்பித்துக் கூறுகின்றது. வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவின‎ன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் ‏இல்லை எ‎‎ன்றும் ஆகமங்கள் கூறுகி‎ன்ற‎ன. ஐந்தெழுத்து மந்திரந்தா‎ன் யாது ? அது ந‎கார‎ம், மகாரம், சிகாரம் வகாரம் யகாரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. ‏‏இது பெரும்பாலும் மேற்குறித்த ஆகமநூல்களில் காணப்படுவது; ஆ‏யினும் அகாரம், உகாரம் மகாரம் பிந்து நாதம் ஆகியன அடங்கிய ஐந்தெழுத்து மந்திரத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். ‏‏இதற்கு ஸூக்ஷம பஞ்சாக்ஷரமந்திரமெ‎‎ன்று பெயர். சிவஞா‎னபோதம் 9 ம் சூத்திரத்தில் “எண்ணும் அஞ்செழுத்தே” எ‎ன்னும் சொற்றொடரால் குறிக்கப்படும் ஐந்தெழுத்து நம சிவாய எ‎ன்னும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும் ஓம் எ‎னப்படும் பிரணவ பஞ்சாக்ஷரத்தையும் ஹௌம் எனப்படும் பிராஸாத பஞ்சாக்ஷரத்தையும் குறிக்கும் எ‎ன்று சிவாக்கிரயோகிகள் தம்முடைய வடமொழிச் சிவஞா‎னபோதத்தி‎ன் லகுடீகை எ‎‎ன்னும் சுருக்கமான உரையில் கூறுகி‎ன்றார். எனவே பஞ்சாக்ஷர மந்திரம் மூவகையெ‎‎ன்று தெளிகிறோம். பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள் ஓ முனிவரே ! மஹாதேவராகிய சிவபெருமானுக்கொப்பான கடவுள் மூவுலகிலும் இல்லை; பஞ்சாக்ஷரத்திற்கொப்பான மந்திரம் இல்லை, இல்லை. பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது. இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட அனைத்துப் பாவங்களும் விலகும்: வித்தியாபுராணம் என்னும் ஆகமம் கூறும் செய்திகள்: பஞ்சாக்ஷரமென்பது நகாரம் மகாரம் சிகாரம் வகாரம் யகாரம் என்னுன் ஐந்தெழுத்துக்களைக் கொண்ட மந்திரம்; இதனுடன் தொடக்கத்தில் ஓம் என்னும் பிரணவத்தைச் சேர்த்தால் ஓம் நம சிவாய என்னும் ஷடக்ஷரமந்திரம். இந்த ஐந்து எழுத்துக்களும் முறையே ஸத்யோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசானம் என்னும் பஞ்ச பிரஹ்மங்களைக் குறிக்கும்; ஐவகைப் பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியனவும் குறிக்கப்பெறும்; மேலும், இவ்வைந்தெழுத்துக்களுக்கும் முறையே பிரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன், ஸதாசிவன் ஆகியோர் அதிதேவர்கள். நகாரம் தங்கநிறமுடையது,; மகாரம் கருநிறமுடையது; சிகாரம் தீயையொத்த நிறமுடையது; வகாரம் கருநீலநிறத்தையும் யகாரம் ஸ்படிகநிறத்தையுமொத்தவை. நகாரம் ருக்வேதத்தையும் மகாரம் யஜுர்வேதத்தையும் சிகாரம் ஸாமவேதத்தையும் வகாரம் அதர்வணவேதத்தையும் யகாரம் இதிஹாஸங்களையும் குறிக்கின்றன. முடிவில் எவ்வளவு தடவை ஜபித்தால் மந்திரம் ஸித்தியாகுமோ அத்வரையிலும் எப்பொழுது ஸித்தியாகுமோ அதுவரையிலும் ஒருவன் இம்மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும் என்று இவ்வாகமம் கூறுகிறது. சிதம்பரரஹஸ்யமென்னும் நூல் ஆடல்வல்லானான நடராசப் பெருமானின் உடுக்கை (டமரு) உலகத்தின் சிருஷ்டியையும் பெருமானின் அபயஹஸ்தம் பிரபஞ்சம் நிலை பெற்றிருத்தலையும் பெருமான் தாங்கியிருக்கும் அக்னி அழிவையும் ஊன்றிய திருவடி திரோபாவத்தையும் தூக்கிய திருவடி அனுக்கிரஹத்தையும் குறிப்பன என்று மேற்கண்ட சுலோகம் கூறுகிறது. இக்கருத்தை அப்படியே நமக்கு வழங்குகிறார் மனவாசகம்கடந்தார் தம்முடைய உண்மைவிளக்கம் என்னும் நூலின் 36 ம் பாடலில். பாட்டு சைவப்பெருமக்கள் யாவருமறிந்ததே: தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்றுமலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. சிவதாண்டவமானது மக்களுக்கு எவ்வாறு முத்திப் பேறு அளிக்கிறதென்பதையும் இச்சிதம்பரரஹஸயம் கூறுகிறது: "மாயை, பாவம் புண்ணியம் முதலிய கருமவினைகள் ஞானத்தை மறைக்கும் ஆணவமலம் ஆகிய மும்மலங்களையும் அறவே நீக்கி தன்னுடைய அபயமென்னும் ஆனந்தக் கரத்தினால் எல்லையில்லா ஆனந்தக்கடலில் அமிழ்த்துவதே நடராசப் பெருமானின் ஆனந்ததாண்டவரஹஸ்யம்". என்பதூ இதன் பொருள். இதே கருத்தை நாம் உண்மை விளக்கத்தில் 37-ம் செய்யுளில் மீண்டும் காண்கிறோம்: மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம் சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் ஆனந்தவாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல் தான் எந்தையார் பரதம் தான் . 28 மூலாகமங்களுள் ஒன்றான வீராகமம் பஞ்சாக்ஷரபடலமென்னும் இரண்டாம் படலத்தில் பெரும்பான்மை வித்தியாபுராணக் கருத்துக்களையே கூறுகின்றது; மேலும், சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரமென்னும் மூவகைப்பட்ட நியாஸங்களையும் அங்கநியாஸத்தையும் இம்மந்திரத்தைக் கொண்டே செய்யும் முறையைக் கூறுகிறது. சைவாகமவசனஸங்கிரஹமென்னும் நூல் பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையைக் கூறுவதாவது: "கோடிக்கணக்கான பிறவிகளில் மனம் மெய் மொழி ஆகியவற்றால் செய்த பாவங்களனைத்தும் ஒருமுறை பஞ்சாக்ஷரமந்திரத்தை உச்சரிப்பதால் விலகும்; அவன் தூயவனாகிறான்" என்பது. மேலும் இம்மந்திரம் சண்டாளனுடைய அன்னத்தைப் புசிப்பதாலும் கள் முதலியவற்றை அருந்தியதாலும் திருட்டுவழியில் சம்பாதித்துப் புசிப்பதாலும் சிராத்தம் முதலியவற்றில் உணவு உட்கொள்ளுவதாலும் பிராஹ்மணனைக் கொன்றதால் விளையும் பிரஹ்மஹத்தி என்னும் மிகக் கொடியபாவத்தையும் முற்றும் அழிக்கவல்லது" . அடுத்து, "சிவ" என்னும் ஈரெழுத்துக்களின் பெருமையை மற்றொரு சுலோகம் கூறக்கேட்கலாம்: கற்கவேண்டியவற்றுள் வேதம் தலைசிறந்தது; அவற்றுள் [யஜுர்வேதத்திலமைந்துள்ள] ருத்ரைகாதசினீ என்னும் ஸ்ரீருத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது; அதனுள் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களும் அதனுள் சிவ என்னுமிரண்டெழுத்துக்களும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தனவென்று இச்சுலோகம் முழங்குகிறது. நம சிவாய என்னும் ஐந்தெழுத்துக்களை மாற்றியமைத்து யநவாசிம என்னும் மந்திரத்தால் உச்சாடனம் மாரணம் என்னும் கிரியைகளையும், மவாயநசி என்னும் மந்திரத்தால் வித்துவேஷணம் என்னும் கிரியையும், வாசிமயந என்பதால் மோஹனத்தையும், செய்யலாம் என்று சிவஞானவித்தியா என்னும் நூல் கூறுகிறது. எவனொருவன் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை இடையறாது பக்தியுடன் செய்கிறானோ அவனால் கற்கப் படவேண்டிய நூல்களனைத்தும் கற்றனவாகின்றன; எல்லா நற்செயல்களும் இயற்றப்பட்டதாகின்றன. எவனுடைய நாவில் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் விளங்குகின்றதோ அவனுடைய வாழ்வு நிறைவுற்றதாகிறது; மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவனோ பொருளற்றவனோ கல்வியறிவற்ற மூர்க்கனோ எல்லாக் கல்வியையும் கற்றவனோ எவனாகிலும் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை மன உறுதியுடன் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான் என்பதே அதன் பொருள். சிவபெருமானுடைய திருவாக்கில் தோன்றிய எல்லா மந்திரங்களும் பஞ்சாக்ஷரமந்திரத்தினுடைய 16 ல் ஒரு பங்கு மஹிமைக்குக் கூடச் சமமற்றவை என்றும் சிவஞானவித்தியா என்னும் நூல் கூறக்காண்கிறோம். பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையை விளக்க வந்த இந்நூலானது கூறும் மற்றொரு செய்தி: சிவபெருமான் தேவியாருக்குக் கூறுகிறார்: பிரளயம் ஏற்பட்ட போது எல்லாத் தாவரங்களும் உயிர்களும் தேவர்களும் அரக்கர்களும் அழிந்து பிரகிருதியில் ஒடுங்கின; அப்பிரகிருதி என்னிடத்தில் ஒடுங்கியது. என்னைத் தவிர வேறெவரும் இல்லை. நானோ பஞ்சாக்ஷர வடிவில் அவை யாவற்றையும் தாங்கியிருந்தேன். அதிலிருந்து மீண்டும் பிரபஞ்சத் தோற்றத்திற்காக என்னுடைய சக்தியே நாராயணன் என்னும் வடிவமாகவும் அதிலிருந்து பிரஹ்மாவும் தோன்றினர். உலகத்தைப் படைப்பதற்காக பிரஹ்மாவானவர் பஞ்சாக்ஷரமந்திரத்திலிருந்தே மீண்டும் யாவற்றையும் தோற்றுவித்தார். எனவே அம்மந்திரத்தின் மஹிமை பெருமைகள் கணக்கிலடங்கா. அவற்றைப் பேசவும் அரிது எனப் பெருமான் கூறுகிறார். சைவசாஸ்திரமென்னும் நூல் கூறுவதாவது: சிவபெருமானுக்கிணையான வேறொரு தெய்வம் மூவுலகிலுமில்லை; பஞ்சாக்ஷரமந்திரத்திற்கிணையாக மந்திரம் கடந்தகாலத்திலும் இனி வரும் காலத்திலுமில்லை. நடந்துகொண்டோ நின்றுகொண்டோ தனக்குத் தோன்றிய முறையில் செயல்களைச் செய்துகோண்டோ சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்துகொண்டோ ஜபம் செய்தாலும் இம்மந்திரம் பலனளிக்காமல் போகாது . எல்லாத்தெய்வங்களையும் நீக்கி ஐந்துமுகங்கொண்ட சிவபெருமானையே வழிபடு; எல்லா மந்திரங்களையும் நீக்கி பஞ்சாக்ஷரமந்திரத்தையே ஜபம் செய் என்பதாகும் அதன் பொருள். வில்வமரத்து நிழலில்பக்தியுடன் இம்மந்திரத்தை ஜபித்து, பின்னர் பூசைக் கேற்ற இலைகளையோ அல்லது புஷ்பங்களையோ ஹோமம் செய்தால் எல்லா நற்குணங்களும் பொருந்திய மகனைப் பெறுவான் என்பது திண்ணம். இது சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவது. சாரதாதிலகமென்னும் பழமையான மந்திரசாத்திரநூல் கூறுவதாவது: உத்தராயணம், தக்ஷ¢ணாயனம், சந்திர சூரியகிரஹணஙள் ஆகிய புண்ணிய காலங்களில் தொப்புள் அளவு நீரில் நின்றுகொண்டோ, அல்லது சிவபெருமான் சந்நிதியிலோ பத்து லக்ஷம் தடவை இம்மந்திரத்தை ஜபிக்க எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டு அவன் நிர்மலனாகிறான். முடிவில் சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவதாவது: ஸப்தகோடிமந்திரங்களினின்றும் மற்றுமுள மந்திரங்களினின்றும் பஞ்சாக்ஷரமந்திரமானது முற்றிலும் வேறுபட்டது; எவ்வாறெனில் சூத்திரமும் அதன் வியாக்கியானமும் போல. எனவே பஞ்சாக்ஷ¡ரமந்திரம் சூத்திரத்தைப் போன்று பலபொருள்களைத் தன்னுள்ளடக்கியது. அதன் விரிவே மற்றெல்லா மந்திரங்களும். ஸித்தவீரணசிவயோகியார் இயற்றிய அநாதிவீரசைவஸங்கிரஹ மென்னும் வீரசைவ நிபந்தநூலிலும் இப்பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள் விரித்துக் கூறப்படுகின்றன: பிரஹ்மோத்தரகண்டமென்னும் நூற்பகுதியில் என்று கூறப்படுகிறது. எவனுடைய இதயத்தில் எப்போதும் ஓம் நமசிவாய என்னும் மஹாமந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ அவனுக்கு மற்ற மந்திரங்களாலோ அல்லது மற்ற சாத்திரங்களலோ என்ன பயன் ? ஒன்றுமில்லை எனச் சிவபெருமானே அம்மந்திரத்தின் மஹிமையை விளக்குவதாகக் காண்கிறோம் . மேலும் அந்நூல் கூறுவதாவது: ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரம் கைவல்லியமென்னும் மோக்ஷத்தை அடைவதற்கான வழியாகும்; அவித்தியை என்னும் அஞ்ஞானக் கடலை அணைக்கும் படவா என்னும் பிரளயகால நெருப்பு; கொடிய பாவங்களாகிய காட்டை எரிக்கும் காட்டுத் தீ. இம்மந்திரம் ஒன்றே முத்திய அளிக்கவல்லது. ஆதலின் முத்தியை அடையும் பொருட்டு எல்லா முனிவர்களாலும் இம்மந்திரம் ஒன்றே எப்போதும் ஜபிக்கப்படுகின்றது. பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை விளக்கிக் கூறும் நிபந்தநூலொன்றில் கீழ்க்கண்டவாறு அதன்மஹிமைகள் விரித்துக் கூறப்படுவதைக் காண்கிறோம்: எப்படிப்பட்ட கொடிய பாவங்களையும் அழிக்கவல்லன மந்திரங்கள்; ஆனால் சிவபெருமானுடைய திருநாமங்கள் அழிக்கக் கூடிய அளவுக்குப் பாவங்களே இல்லாமையால் மனு முதலிய ஸ்மிருதிகளில் சிவநாமத்தைப் பிராயச்சித்தமாக ஜபிக்கும்படி கூறவில்லை. அப்பாவங்களைப் போக்க மற்ற மந்திரங்களுள்ளன என்பது இதன் உட்பொருள். ஸ்காந்தபுராணத்தின் ஒருபகுதியான சங்கரஸம்ஹிதையில் ஐந்து கொடிய பாவங்களையும் அழிக்கவல்ல பஞ்சாக்ஷரமந்திரத்தை ஜபிப்போர்க்கு அப்பாவங்களினின்றும் விடுதலை, பிறவியிலிருந்தும் விடுதலை. மேலும், அகஸ்தியர், இராமர் முதலிய புண்ணிய புருஷர்களால் இம்மந்திரம் ஓதப்படுவதாலும், வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுவதாலும் வேதத்தில் காணப்படுவதாலும் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும் மந்திரமாதலாலும் நமசிவாய என்னுமிம்மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பீராக என்று முனிவர்கள் வேண்டுகின்றனர். சிவபுராணத்தின் கடைசி பாகமான வாயுஸம்ஹிதையும் இம்மந்திரத்தின் மஹிமையை விளக்குகின்றது: எல்லா உபநிஷதங்களுடைய பொருள்களை ஒருங்கே கொண்ட பஞ்சாக்ஷரமந்திரத்தின் மூலம் முனிவர்கள் பரம் பொருளான சிவபெருமானை அடைந்தனர். எப்போதும் திருநீறும் ருத்திராக்ஷம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு பஞ்சாக்ஷரமந்திரத்தையும் எப்போதும் ஜபித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன் ஜீவன்முக்தன் எனப்படுவான்; அவனே முற்றும் உணர்ந்த ஞானி, வைராக்கியமுடையவன், அறிவிற் சிறந்தவன், மூவுலகிலும் போற்றப்படுபவன். சிவதருமோத்தரமென்னும் ஒப்பற்ற சைவநூல் உபாகமங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றப்படுகின்றது; இது சைவர்களுக்குச் சரியை, கிரியை ஆகியவற்றைத் தெள்ளெனவிளக்கிக் கூறும் நூல். மிகப் பழமையானது. 12 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் 16 ம் நூற்றாண்டில் தில்லையில் வாழ்ந்த மிகச் சிறந்த சைவ ஆசாரியரும் வடமொழியிலும் தமிழிலும் பல சைவ நூல்களை இயற்றி அக்காலத்தில் சைவத்திற்குப் புத்துணர்ச்சியூற்றி மக்களிடையே பரப்பியவருமான மறைஞானசம்பந்தரால் சொற்சுவையும் பொருட்சுவையும் ஒருங்கே அமைந்த பாக்களாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதை சைவர்கள் அறிவர். பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை அந்நூல் கூறுவதாவது: அகத்தியமுனிவர் கந்தப்பெருமானை வேண்டி உலகில் மக்கள் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கும் உபாயமொன்றைக் கூறும்படி கேட்க, அதற்குக் கந்தப்பெருமான் இந்த ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் கூறினார்: இது எல்லா ஞானத்திற்கும் விதை போன்றது; ஆலங்கனியில் மிகச் சிறிய விதையானது பின்னர் பெரிய மரமாக வளர்வதுபோல் எல்லாக் கலைகளுக்கும் ஞானத்திற்கும் மந்திரங்களுக்கும் இம்மந்திரம் விதை போன்றது; மிக சூக்குமமானது; அதே சமயம் பரந்த பொருள் விரிவையுடையது. இந்த சூக்குமமான மந்திரத்தினுள் ஸத்யோஜாத்ம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்னும் ஐந்து பிரஹ்மங்கலான ஸதாசிவப் பெருமான் அடங்கியுள்ளார்; இம்மந்திரம் ஸதாசிவப் பெருமானைக் குறிப்பது, பெருமான் அதன் மூலம் குறிக்கப்படும் பொருள். இந்தத் தொடர்பு அநாதிகாலம் தொட்டே நிலவிவருகிறது. இந்த கோரமான ஸம்ஸாரக்கடல் அநாதிகாலம் தொட்டே இருப்பதுபோல் சிவபெருமானும் அநாதிகாலமாக அக்கடலைக் கடக்கச் செய்பவர். நோய்களுக்கு எதிர்மறையாக மருந்து விளங்குவதுபோல் ஸம்ஸாரமென்னும் நோய்க்கு எதிர்மறையாக அதனை முற்றிலும் அழிக்கவல்லவர் சிவபெருமானே. இவ்வாறு பலதிறத்தானும் பல விளக்கங்களாலும் ஆகமங்களும் புராணங்களும் சிவபெருமானைக் குறிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மஹிமை பெருமைகளை ஒப்புயர்வற்றநிலையில் வைத்துப் போற்றுகின்றன. அந்நூல் கடலிலிருந்து சில துளிகளை ஸமுத்திரகலசநியாயமாக என் சிற்றறிவுக்கேற்ற வகையில் இச்சைவ சபையில் சைவ ஆன்றோர்கள் முன்னர் பகிர்ந்துகொண்டேன். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் தொகுப்பு ; வை.பூமாலை

புதன், 11 நவம்பர், 2015


தினம் ஒரு திருப்புகழ் அருணகிரியார் பாடிது (பொது) வாராய் பேதாய் கேளாய் நீதாய் மானார் மோகத் ...... துடனாசை மாசூ டாடா தூடே பாராய் மாறா ஞானச் ...... சுடர்தானின் றாரா யாதே யாராய் பேறாம் ஆனா வேதப் ...... பொருள்காணென் றாள்வாய் நீதா னாதா பார்மீ தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் தோரா வானோர் சேனா தாரா சூரா சாரற் ...... புனமாது தோள்தோய் தோளீ ராறா மாசூர் தூளாய் வீழச் ...... சிறுதாரைச் சீரா வாலே வாளா லேவே லாலே சேதித் ...... திடும்வீரா சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வாராய் பேதாய் கேளாய் ... ஏ பேதை மனமே, வருவாயாக, நான் சொல்லுவதைக் கேட்பாயாக. நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது ஊடே பாராய் ... நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக. மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய் ... மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக. பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய் ... பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை ஆள்வாயாக. நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம் ... நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்? தோரா வானோர் சேனை ஆதாரா ... தோல்வியே அறியாதவனும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே, சூரா சாரல் புனம் மாது தோள் தோய் தோள் ஈராறா ... சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின் தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே, மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா ... பெரிய சூரன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே, சேயே வேளே பூவே கோவே ... சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே, தேவே தேவப் பெருமாளே. ... தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை.பூமாலை

பாபநாசம் திருத்தலம்


பாபநாசம் திருத்தலம் பாபநாசம் திருத்தலம்
இறைவர் அருள்மிகு பாபநாசநாதர்: பாவங்கள் நீங்க பாபநாச ஈஸ்வரர் ,இத்தலத்தில் முன்னோர்களின் ஈமக் கரிகைகள் செய்ய இராமேஸ்வரம் போன்று மிக பிரசித்தி பெற்ற தலங்களில் இது மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும். திதிகள் ெசய்து பாவங்கள் கரைய புண்ணிய நதியாம் தாமிரபரணி நதியில் நம்மை தூய்மைப்படுத்தி புண்ணியம் தரும் ஸதலமாகும். நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. இறைவர் திருப்பெயர் : பாவநாசர், பாபவிநாசகர். இறைவியார் திருப்பெயர் : லோகநாயகி, உலகம்மை. தல மரம் : களா மரம். தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம். வழிபட்டோர் : அகத்தியர். வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1);அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8). தல வரலாறு[தொகு] பாபநாசம், பொதியின்மலை பாபநாசம் என்னும் இரண்டும் ஒன்றே. மக்கள் 'பாவநாசம்' என்றும் வழங்குகின்றனர். பொதிய மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் தலமே இவ் வைப்புத் தலம். சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது. அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும். விக்ரமசிங்கபுரத்தில் - "நமசிவாயக் கவிராயர்" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் - உலகம்மை மீது அளவிறந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இங்குள்ள அகஸ்தியர் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் சிறப்புடையது. சிறப்புகள்; இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். தமிழ் முனியான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் இதுதான். இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகுதான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும். நெல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம் திருத்தலம். இத்தலம் மாணிக்கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன. பெரிய கோயில், கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது. சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதியமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது. ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது. பெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும். தீர்த்தம் - தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன. சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம். சுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன. இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது. பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அகத்தியர் நீர்விழ்ச்சி இதன் அருகில் உள்ளது. நன்கு நீர் குளிக்க சிறந்த நீர்வீழ்சசி அமைவிடம் ;திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது திருச்சிற்றம்பலம் தொகுப்பு . வை.பூமாலை

Aanmigam: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு

Aanmigam: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந...

சனி, 7 நவம்பர், 2015


பதினென் சித்தர்கள் / நந்திதேவர் சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார் பதினென் சித்தர்களில் ஒருவரான - நந்தியம் பெருமான் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி ஆகிய பரம் பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர். அவர்களிளல் நந்திகள் நால்வர் என்று திருமூலர் தன் திருமந்திரத்திர பாடல் 109ல் குறிப்பிடுகிறார். அந்த நாலவர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்பர். இவர்கள் நால்வரும் சிவனாரிடம் முதன்முதலில் மிக உயர்ந்ததான மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்ல. திருக்கயிலையாய பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என்பது அவர் கைலையில் சிவனாருக்கு நிரந்தரமான வாயில் காப்பவனாகவும் , சிவனாரின் வாகனமாகவும் இருந்து வருவதிலிருந்து தெரியவருகிறது. நந்தியின் தோற்றம் : மிக பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரின் அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு மகப்பேறு இல்லை, இந்நிலையில் ஒருநாள் சப்தரிஷிகள் அவருடைய ஆஸரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை வரவேற்று தன் ஆஸ்ரமத்தில் உணவு உண்ணுமாறு வேண்டினார், ஆனால் அவர்கள் குழந்தைப் பேறு இல்லாத இடத்தில் நாங்கள் உணவு அருந்துவதில்லை என மறுத்து சென்று விட்டனர். இதனால் மனம்வருந்திய சிலாத முனிவர் திருவையாற்றில் உள்ள சூரியபுஸ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவமிருந்தார். அவரின் தவத்திற்கு மனம் இறங்கிய சிவனார், " சிலாதரே விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறக்காத திருமகன் கிடைப்பான் அவன் மரணமில்லா அத்திருமகன் எனக்கு சமமானவன் என்னை தரிசிப்பவர்கள் யாவரும்அவனையும் வழிபடுவார்கள் " என்று கூறி மறைந்தார். அவ்வாறு அந்த கூற்றிற்கிணங்க, ஒரு சமயம் சிலாதர் யாகம்செய்ய பூமியை தோண்டியபோது பூமிக்கு அடியில் பதிந்த தங்கப் பெட்டி இருப்பதைக் கண்டார், அப்பெட்டியில் மான்மழுவேந்தி மதி சூடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கொண்ட ஒரு ஆன் குழுந்தை இருப்பதைக் கண்டு எடுத்து , அந்த ஆண்மகவுக்கு நந்தி என்ற நாமம் இட்டு வளர்த்து வந்தார். நந்திக்குஏழு வயதான போது, சிலாதர ஆஸ்ரமத்திற்கு வருகை தந்த மித்ரர், வருணர் ஆகிய இரு வேதர்களும் சிலாதர முனிவரிடம் தங்கள் மகனுக்கு ஆயுட்காலம் எடடு ஆண்டுகள்தான் அது நிறைவடையும் தருணத்தில் உள்ளது. என்றனர், இதனால் மனம் வருந்திய சிலாத முனிவரிடம் நந்தி தேவர் தந்தையே கவலை கொள்ள வேண்டாம் நான் சர்வேஸ்வரன் திருவருளால் நீண்ட நாள் வாழ்வேன் அதற்கு அவன் அருள் பெற தவமிருக்க இருக்கிறேன் எனக்கு ஆசி வழங்கி அருள்மபுரியுங்கள் என்று வேண்டிக்கொண்டு, அதன்படி பூஸ்கரனியில் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டி கடும்தவம் புரிந்தார். இதன் மூலம் சர்வேஸ்வரனின் அருளால் அவருக்கு மரணமில்லா வாழ்வும், கயிலையில் சிவத்தொண்டு செய்யும் காவலனாகவும், சிவனாருக்கு வாகனமாகவும் இருக்கும் அருள் கிடைத்தது. எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் நந்தி தேவருக்கு சிவனாரே பூமிக்கு வந்து , திருமழலைப்பாடியில் தவவாழ்வு வாழ்ந்து வந்த வசிஸ்டரின் பேத்தியாகிய " சுயகையை " மணமுடித்து வைத்தார், அது முதல் இன்று வரை சிவ பக்தர்கள் அனைவரும் தன்னை வழிபட்டு தன் அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும்என்பதை விளக்கும் வண்ணமே நந்தியின் சன்னதி எல்லா சிவலாயங்களிலும் அமையப் பெற்றுள்ளது. இன்றளவும் சிவபத்தர்கள் சிவபெருமானின் அருள்பெற நந்திதேவர் திதி செய்யுமுறை திருவிளையாடல் புராண வாயிலாகவும்அறியலாம். " வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி பத்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையார்தாக்கி அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும் நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்போம்" திருவிளையாடல் புராணம் இதனை மனதில் சொல்ல வேண்டும். சதா சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நந்தி கேசுவரே ! அம்மையப்பரை கண்டு வணங்க விடை தந்தருள்க ! என்று மனதில் வேண்டி சிவனை வணங்க செல்லவேணடும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com தொகுப்பு: வை. பூமாலை

வெள்ளி, 6 நவம்பர், 2015


தினமும் ஒரு தேவாரம் அப்பர் பெருமான் பாடியது சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 4 மடமான் மறி பொற்கலையும் மழுப் பாம்பு ஒரு கையில் வீணை குடமால் வரைய திண்தோளும் குனிசிலைக் கூத்தின் பயில்வும் இடமால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும் நடமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை பொழிப்புரை இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும், ஒரு கையில் மழுப்படையும், மற்றொரு கையில் பாம்பினையும், மற்றொரு கையில் வீணையையும் ஏந்தி இருப்பவரும், மேற்குத் திசையில் காணப்படும் மலை போன்ற திண்மையான தோள்களை உடையவரும், வில் போன்று வளைந்து ஆடும் நடனம் பயில்பவரும் ஆகிய சிவபெருமான் தனது உடலின் இடது பாகத்தில் பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடினை உடைய திருமாலைக் கொண்டுள்ளார். குளிர்ந்த கெடில நதியைத் தீர்த்தமாக உடைய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

தினமு்ம் ஒரு திருவாசகம் மாணிக்கவாசக சுவாமிகள் பாடியது இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள். இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை. பாடலின்பம் வேதமொழியர், வெண்ணீற்றர், செம்மேனியர், நாதப்பறையினர் அன்னே என்னும், நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர் இந்நாதனார் அன்னே என்னும். * கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர், உள்நின்று உருக்குவர் அன்னே என்னும், உள்நின்று உருக்கி உலப்புஇலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். பொருளின்பம் என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவன் வேதத்தின் பொருளானவன், வெண்ணீறு பூசியவன், செம்மேனி கொண்டவன், நாத தத்துவப் பறையைக் கொண்டவன், பிரம்மன், திருமாலுக்கும் நாதன் அவன், எனக்கும் அவனே நாதன்’ என்கிறாள். * என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் கண்ணில் கருஞ்சாந்து பூசியவர், கருணைக் கடலானவர், உள்ளே நின்று உருக்குகிறவர், அதன்மூலம் அழிவில்லாத ஆனந்தக் கண்ணீரைத் தருகிறவர்’ என்கிறாள். சொல்லின்பம் அன்னே: அன்னையே , நாதர்: தலைவர் ,அஞ்சனம்: சாந்து உலப்பு: அழிவு , தருவரால்: தருவார் திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

தினமும் ஒரு திருப்புகழ் அருணகிரி நாதர் பாடியது வேல்விருத்தம், மூன்றாம் பாடலுடைய சொற்பொருளை எப்போதும்போல் முதலில் பார்த்துவிட்டு அடுத்ததாக அடியடியாகப் பொருள் கண்டு, திரண்ட கருத்தைக் காண்போம். வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் ... வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும், இரு தோளை வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்புஅது என்று ... இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும் என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும், கொண்டை மேகத்தை வென்றது என்றும் ... கூந்தல் (கரு நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும், எழில் மாதர் கோலத்தை விஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று குறியாதே ... அழகிய (விலை) மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள் கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலம் கழிக்காமல், கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்பு கூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ ... குற்றம் இல்லாத உன் திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ? ஞாலத்தை அன்று அளந்து வேலைக்கு(ள்)ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் ... பூமியை முன்பு ஓரடியால் (வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து உதவிய திருமாலும், நாடத் தடம் சிலம்பை மாவைப் பிளந்து அடர்ந்து நாகத் தலம் குலுங்க விடும் வேலா ... உனது உதவியை நாட, விசாலமான கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச் செலுத்திய வேலனே, ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கை பங்கர் ... ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப் பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய பார்வதிக்கு இடது பாகம் தந்தவர், நடமாடும் ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே. ... நடனம் ஆடுபவர் ஆகிய முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில் நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச வேண்டாம் என்று அருளும் பெருமாளே. திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

வேதங்களின்மெய்ப்பொருள்


வேதங்களின்மெய்ப்பொருள் ஆதி சங்கரர் கூறும் பரம ரகசியம் அனைத்து மக்களும் அவரவர் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற முறையான வழி முறைகளை தருவது வேதம். வேதம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற் பாகம் - கர்ம காண்டம், இரண்டாவது பாகம் - ஞான காண்டம் அல்லது வேதாந்தம் என்பது வேதாந்தம் பரமனைப் பற்றிய முழு அறிவைத் தருவது. ஆனால் அனைவரும் அந்த அறிவை அறிந்து கொள்ள தகுதிானவர்கள் அல்லர். எனவே அவர்களின் மனதை பண்படுத்ததி பக்குவமடைய செய்யும் பொருட்டு கர்ம காண்டம் பல்வேறு வழிபாட்டு சடங்குகளை முன்மொழிகிறது. வாழ்க்கை எனும் செயல்முறை கல்விச்சாலையில் நாம் நம் ஒவ்வொரு செயலிலிருந்தும் அறிவையும், மனப்பக்குவத்தையும் அடைகிறோமோ அப்போதுதான் பரமனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு ஏற்பட்டு தேவங்களை படிக்க முற்படுவோம். கர்ம காண்டம் நம் செயல்களை செய்ய வேண்டிய முறைகளையும், வேதாந்தம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பரமனை பற்றிய ஞானத்தையும் நமக்கு தருகின்றன. பரமனைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கர்மக காண்டத்தை பற்றிய அறிவு தேவையில்ல. முறையாக வேதத்தை பயலுவதைத் தவிர நாம் வேறு ஒரு செயலிலும் நாம் ஈடுபட வேண்டாம்.ஆனால் பரமனை தெரிந்து கொள்ள தேவையான மனோபக்குவத்தை பெற வேண்டியிருக்க்லாம். அனைத்து மனிதர்களின் குறிக்கோள் பரமனை அறிந்து குறைவில்லா இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது தான் என்றாலும் எல்லாரும் அந்த ஞானத்தை அடைய தகுதி வாய்ந்தவர்கள் அல்லர். பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களின் நோக்கமும் பள்ளியின் இறுதி தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அது போல தகுதியை ஆய்ந்து நமக்கேற்ற உபதேசத்தை செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீக அறிவில் தங்களுடைய நிலையை தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவே நாம் கூடிய விரைவில் ஒரு ஆன்மீக குருவை நாடுவது அவசியம். வேதங்களின் ஒரே குறிக்கோள் நமக்கு பரமனை அறிவிப்பது தான் . இந்த குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு படிகளில் வேதம் நம்மை அழைத்துச் செல்கிறது. முதல் படி கர்ம யோகம் பலனில் பற்றில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட வேைகைளை முறையாகவும், நமது முழு மனதின் ஈடுபாட்டுடன் செம்மையாக செய்து முடிப்பது கர்ம யோகம். பணம், பதவி, மற்றும் புகழ் அடைவதற்காக செய்யும் செயல்கள் கர்ம யோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும். என்ற நோக்கத்துடன் செய்யும் செயல்களே தர்ம யோகமாகும். " கர்ம யோகத்தின் பலன் மனப்பக்குவம் " என்பதாகும் இரண்டாம் படி கற்றல் வேதாந்தத்தினை முறையாக ஆசிரியரிடமிருந்து தொடர்ந்து நீண்ட நாட்க்ள் கற்க வேண்டும். வேதத்தில் சொல்வத இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும். புரியவில்லையெனில் வேறு ஆசிரியரைக் கொண்டாவது புரியும் வரை கற்க வேண்டும். மூன்றாம் படி - கசடற கற்றல் வேதம் சொல்வது என்ன வென்று சரியாக தெரிந்தவுடன் நாம் அடுத்த படியாக வேதம் சொல்வது சரியா? என்ற கேள்வியை கேட்க வேண்டும். யுத்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் வேதம் கூறிய முடிவை ஆராய்ந்து தெளிய வேண்டும். வேதத்தின் கருத்துக்கள் எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அடுத்த படிக்கு செல்லவேண்டும். நான்காம் படி - நிற்க அதற்கு தக வேதத்திலிருந்து நமக்கு கிடைத்த ஞானத்தில் நாம் நிலைத்து நிற்க ஒரு சில காலம் ஆகும் . இதனை நம் சுய முயற்சியால் மட்டுமே நாம் தியானம் எஎன்ற பயிற்சி மூலம் ஞானத்தில் நிலைத்து நிற்கும் நிலை பெற வேண்டும். உணவு உண்டபின் பசி குறைவது போல் நம் பயிற்சி மூலம் கிடைத்த ஞானத்தால் குறைவற்ற இன்பத்தை படிப்படியாக உணர முடியும். முடிவுரை பரமனை அறிந்து கொள்ள நாம் கடக்க வேண்டிய படிகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் கடந்து விட முடியாது. நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் வீண்போகாது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் முய்ற்சியால் தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து படிகளையும் கடந்து பரமனை தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் நாம் குருவின் துணையுடன் நம் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நமது ஆன்மீகப் பயணத்தை தொடரவேண்டும். வேதாந்தத்தை தகுந்த குருவின் துணை கொண்டு பயின்று, இப்பிறவியிலேயே பரமனை அறிந்து குறைவிலா இன்பத்தை அடையலாம் என்பது ஆதி சங்கரர் நமக்கு கூறும் பரம ரகசியம் திருசிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வியாழன், 5 நவம்பர், 2015


திருவைந்தெழுத்து https://ta.wikipedia.org/s/40f திருவைந்தெழுத்து சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சூட்சும பஞ்சாட்சரம் எனவும் இருவகைபடுகிறது.[1] நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம் எனவும் அறியப்படுகிறது. சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது. பொருளடக்கம் [காட்டு] விளக்கம்[தொகு] திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி. மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர். நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர். மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது. தமிழியல் விளக்கம்[தொகு] நமசிவாய சிவாயநம நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது. சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன். ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம் இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள். நமச்சிவாய நம் அச்சு இவ் ஆய[ம்] நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா? வடமொழி விளக்கம்[தொகு] திருவைந்தெழுத்து விளக்கம்[தொகு] திருவைந்தெழுத்து விளக்கம் திருவைந்தெழுத்தான நமசிவாய இலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவப் பொருளுடையவை. ந - திரோத மலத்தையும், ம - ஆணவ மலத்தையும், சி - சிவமயமாயிருப்பதையும், வா - திருவருள் சக்தியையும், ய - ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும். திருவைந்தெழுத்து ஓதுவதன் பயன்கள்[தொகு] ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும். திருவைந்தெழுத்தின் சிறப்புக் கூறும் இலக்கியங்கள்[தொகு] "சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார். "கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர் "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர் திருவைந்தெழுத்தை விளக்கும் நூல்களில் ஒன்று பஞ்சாக்கர தரிசனம் திருவைந்தெழுத்தை விளக்கும் நூல்களில் மற்றொன்று பஞ்சாக்கர மாலை திருவைந்தெழுத்தின் வேறு வடிவங்கள்[தொகு] தூல பஞ்சாட்சரம் - நமசிவய சூட்சும சாட்சரம் - சிவயநம ஆதி சாட்சரம்- சிவயசிவ காரண சாட்சரம் - சிவசிவ மகாகாரண சாட்சரம் - சி

புதன், 4 நவம்பர், 2015


சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாராம் இழந்த பொன் பொருள் வந்தடைய ஓத வேண்டிய பதிகம் பாடிய இடம் திருமுருகன் பூண்டி சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாணாயனாரோடும் அந்தக் கொடுங்கோளூரிலே சிலநாள் இருந்தார். ஒருநாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற வன்மீகநாதருடைய திருவடிகளை நினைந்து; "பொன்னு மெய்ப்பொருளும்" என்று திருப்பதிகம் எடுத்துத் திருப்பாட்டினிருதிதோறும் "ஆரூரானை மறக்கலுமாமே" என்று பாடி, திருவாரூருக்குச் செல்லும் பொருட்டு அடியார்களோடு எழுந்து வழிக்கொண்டு சென்றார். செல்லும் பொழுது, சேரமான் பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்த அவரைப் பின்றொடர்ந்து போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு மந்திரிகளை அழைத்து தம்முடைய நகரத்திலிருக்கின்ற களஞ்சியத்திலுள்ள பொன், இரத்தினம், ஆபரணம், வஸ்திரம் சுகந்த வர்க்கம் முதலிய திரவியங்களெல்லாம் பல ஆட்களின் மேலே சுமத்தி அனுப்பும்படி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அப்படியே செய்தார்கள். சேரமான் பெருமாணாயனார் அந்தச் சுமையாட்களைச் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பரிசனத்துக்கு முன் செல்லும்படி அனுப்பி அவரைவிழுந்து நமஸ்கரிக்க; அவர் அவரை தழுவி விடைக்கொடுத்து, மலைநாட்டை நீக்கிச் சுரங்களையும், கான்யாறுகளையும், வனங்களையும் கடந்து, திருமுருகன்பூண்டி வழியே செல்லுதற்குத் திருவுளங்கொண்டு போனார். அதற்கு அயலிலே போம்பொழுது, பரமசிவன் தம்முடைய பூதகணங்களை நோக்கி, "நீங்கள் வேடவடிவங்கொண்டு சென்று சுந்தரனுடைய பண்டாரங்களைக் கவருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவைகள் சுந்தரமூர்த்தி நாயனாருடைய சுமையாட்கள் வரும் வழியிலே வேடுவர்களாகிப்போய், வில்லை வளைத்து நாண் பூட்டி அம்புகளைத்தொடுத்து "நாங்கள் உங்களைக் கொன்று போடுவோம்; இத்திரவியங்களெல்லாவற்றையும் போட்டுவிட்டு போங்கள்" என்று சொல்லி, கோபத்தினாலே குத்தி, அந்தத் திரவியங்களெல்லாவற்றையுங் கவர்ந்துகொண்டன. அவர்கள் துன்பத்துடனே ஓடிப்போய், சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்திலே சேர்ந்தார்கள். அவ்வேடுவர்களோ சிவாஞ்ஞையினாலே சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்தில் செல்லாமல் நீங்கிவிட; சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியிலே சென்று திருக்கோயிலிலே பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்று திருப்பதிகமெடுத்துத் திருப்பாட்டினிறுதிதோறும் "எத்துக்கிங்கிருந்தீ ரெம்பிரானீரே" என்று பாடியருளினார். உடனே கடவுளுடைய திருவருளினால் அவ்வேடுவர்கள் தாங்கள் பறித்த திரவியங்களெல்லாவற்றையும் அந்தத்திருக்கோயில் வாயிலிலே கொண்டு போய்க் குவித்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் அது கண்டு, சுவாமியை வணங்கி அவைகளை எடுத்துக்கொண்டு முன்னே செல்லும்படி சுமையாட்களை ஏவி, அவ்விடத்தை நீங்கி, கொங்கதேசத்தைக் கடந்து போய், திருவாரூரை அடைந்து, அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியில் தான் பெற்ற செல்வங்களை வேடுவர்கள் திருடர்களாக வந்து சுந்தரரிடம் கொள்ளையடித்துச் சென்ற பொன், பொருள்க் திரும்ப பெற பாடிய பதிகம் " கொடுகு வென்சிறை " திருமுருகன்பூண்டி பாடல் எண் : 1 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் பாடல் எண் : 2 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்க மழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? பாடல் எண் : 3 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? பாடல் எண் : 4 பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் கட்டி வெட்டினராய்ச் சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் கூறை கொள்ளுமிடம் மோறை வேடுவர் கூடி வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? பாடல் எண் : 5 தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறியீர் முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் பாடல் எண் : 6 விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? திருமுருகன்பூண்டி பாடல் எண் : 1 கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : ` விரவல் ` என்னும் தொழிற்பெயர் , எதிர்மறை ஆகாரமும் , மகர ஐகாரமும் பெற்று நின்றது , ` அழுக்காறாமை ` ( திருக் குறள் . அதிகாரம் . 17.) என்றதுபோல . அஃது ஆகுபெயராய் , அதனையுடைய சொல்லைக் குறித்தது . ` திடுகு , மொட்டு ` என்பன , அச்சுறுத்தும் சில குறிப்புச் சொற்கள் . பிறவுங் கொள்வராயினும் , எல்லாவற்றையும் எஞ்சாது கொள்ளுதல் தோன்ற ஆறலைப்பாரை , ` கூறைகொள்வார் ` என்றல் வழக்கு என்பதை , ` ஆறுபோயினாரெல்லாங் கூறைகோட் பட்டார் ` என்றல் பற்றி அறிக . ` கூறைகொண்டு ஆறலைக்குமிடம் ` என்றதனை , ` ஆறலைத்துக் கூறைகொள்ளுமிடம் ` எனப் பின்முன்னாக மாற்றி யுரைக்க . இகழும் நகரை , ` மாநகர் ` என்றது , இகழ்ச்சிக் குறிப்பினால் . ` இம் முருகன் பூண்டி ` எனச் சுட்டு வருவிக்க . ` மாநகர்வாய் ` என ஒன்றாக ஓதினாரேனும் , ` மாநகர் ` எனவும் , ` இதன்வாய் ` எனவும் இரண்டாக்கி உரைத்தல் கருத்தென்க . ` எற்றுக்கு ` என்பது , ` எத்துக்கு ` என மருவிற்று . ` இங்கு ` என்றது , திருக்கோயிலை . ` அப்பாற் போகலாகாதோ ?` என்பது , ஆற்றலான் வந்து இயையும் . இத்திருப் பாடல்களில் , ஈற்றடிகள் நீண்டி சைத்தன . ` எம்பிரானிரே ` என்றோதுதல் பாடமாகாது . பாடல் எண் : 2 வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்க மழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : ` தாது ` என்றது , உதிர்ந்து கிடப்பனவற்றை . ` எல்லைக் காப்பு ` நான்காவதன் தொகை . அது , பகுதிப்பொருள் விகுதி . ` எல்லை காப்பது ` என்பது பாடமாயின் , ` இவ்வெல்லை தான் காக்கப்படுதல் சிறிதும் இல்லையாயின் ` என உரைக்க . பாடல் எண் : 3 பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : ` பசுக்கள் ` என்பது , விலங்கின் பொதுவை உணர்த் திற்று . ` அப்பாவிகள் ` எனச் சுட்டு வருவிக்க . ` உயிர் ` என்பதும் , ` இழுக்கு ` என்பதும் , எதுகை நோக்கித் திரிந்தன . ` பிச்சை ஏற்கின்ற நீர் , பிறர் பொருளைப் பறித்தலையே தொழிலாக உடையவர் வாழ்கின்ற இடத்தில் இருத்தல் எதற்கு ` என்றவாறு . இழுக்கு நீங்குதலாவது . ` இரப்பவர் ` என்று இகழப்படாது , ` பெரியோர் ` என நன்கு மதிக்கப்படுதல் . பாடல் எண் : 4 பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் கட்டி வெட்டினராய்ச் சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் கூறை கொள்ளுமிடம் மோறை வேடுவர் கூடி வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : ` வெட்டனராய் ` என்பது பாடம் அன்று . ` பங்கியர் ` என்றதனை , ` வில்லியர் ` முதலியன போலக் கொள்க . பாடல் எண் : 5 தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறியீர் முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : ` உடுத்த ` என்பது பாடம் அன்று . ` சங்கரனே ` என்றும் ` ஓதுபவனே ` என்றும் உரைத்தல் பொருந்தாமை அறிந்து கொள்க . ` அறியீரோ ` என்னும் ஓகாரம் தொகுத்தலாயிற்று ; அதனை , எடுத்த லோசையாற் கூறியுணர்க . பாடல் எண் : 6 விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ? குறிப்புரை : கொக்கரை முதலியன , வாச்சிய வகைகள் . ` மத்தளகம் ` எனப் பாடம் ஓதுதலுமாம் . இகரச் சுட்டினை , ` கொடு கொட்டி ` என்றதற்கு முன்னர் வைத்துரைக்க . ` ஆகில் ` என்றதனை , ` மகிழ்வீர் ` என்றதனோடுங் கூட்டுக . பாடல் எண் : 7 வேத மோதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓத மேவிய ஒற்றி யூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏது காரண மேது காவல்கொண் டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , நீர் , வேதத்தை ஓதிக்கொண்டு , வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு , வெள்ளிய கோவணத்தை உடுத்து , பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர் ; அங்குப் போகாமல் , வேடர்கள் , வருவோரைத் தாக்கி , அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , யாது காரணத்தால் , எதனைக் காத்துக் கொண்டு , எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர் ? பாடல் எண் : 8 படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங்கண் மடவ ரல்லுமை நங்கை தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் முடவ ரல்லீர் இடரி லீர்முருகன் பூண்டி மாநகர்வாய் இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம்பெருமானிரே , நீர் , தனிமையாக இல்லாது , படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும் , பருத்த தோள்களையும் , வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர் ; முடவரல்லீர் ; ஆகவே , பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர் ; அன்றியும் , நீர் , விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால் , இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , இங்கு , எதன்பொருட்டு இருக்கின்றீர் ? பாடல் எண் : 9 சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைகலனா வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் மோந்தை யோடு முழக்க றாமுரு கன்பூண்டி மாநகர்வாய் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. பொழிப்புரை : எம் பெருமானிரே , வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு , வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி , முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , நீர் , ` மொந்தை ` என்னும் வாச்சியத் தோடு , வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து , அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ? பாடல் எண் : 10 முந்தி வானவர் தாந்தொ ழும்முரு கன்பூண்டி மாநகர்வாய்ப் பந்த ணைவிரற் பாவை தன்னையொர் பாகம் வைத்தவனைச் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங்கொண் டெந்தம் மடிகளை ஏத்து வார்இட ரொன்றுந் தாமிலரே. பொழிப்புரை : தேவர் , ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற , திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற , பந்திற் பொருந்திய விரல்களையுடைய , பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை , அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள் , துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர் . நம்பியாரூரன் அன்பிற்கிணங்கி இழந்த பொருட்களை மீட்டித்தந்த ஈசன் நாமும் இப்பதிக பாடல்களை பாடி நல்ல வழியில் இழந்த பொருட்களை மீட்டு பயன் பெறுவோம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

திங்கள், 2 நவம்பர், 2015

நாட்டில் நீர்வளம் செழிக்க, நல் நட்புக் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்


நாட்டில் நீர்வளம் செழிக்க, நல் நட்புக் கிடைக்க ஓத வேண்டிய பதிகம் சுந்தரரர் பெருமானார் திருவையாற்றில் பாடியது முன் மொழிதல் ; ஆருர் நம்பியும், சேரமான் பெருமாள் நாயனாரும், இனிய நண்பர்களாகப் பழகினார்கள். அது ேபாது பல தலங்களுக்கு இருவரும் சென்று பதிகங்கள் பாடி வணங்கினர். திருக் கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு திருக்கோவில் ராசகோபுரம் எதிர்தோன்ற சேரமான் பெருமான், திருவையாறு கோவில் சென்று இறைவனை பணிய வேண்டு ெமன்று கூறுதலும் ஆற்றில் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரிப் பெருவெள்ளம் விலகி குளிர்ந்த மணலை பரப்பி வழிவிட, இருவரும் இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்து சென்று வழிபட்ட தலமாகும். அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனாய அருள்மிகு ஐயாறப்பர்( பஞ்சநதீஸ்வரர்) திருவடியை வணங்கி இப்பதிகத்தை ஓதினால் நீர் வளம் குறையாது, நல்ல நிலவளம் பெறவும் நல்ல நண்பர்கள் வாய்க்கப் பெற்று வளமான வாழ்வு பெறலாம், இருவரையும் சிவபெருமானார் அறிமுகம் செய்து வைத்து நல்ல உற்ற நண்பர்களாக்கினார். இதை உணர்த்தும் சேக்கிழார் பெரிய புராண பாடல் ; " செஞ்சொ்ற் றமிழ் நாவலர் கோனும் சேரர்பிரானும் தம்பெருமான் எஞ்ச லில்லா நிறையாற்றின் இடையே அளித்த மணல்வழியில் தஞ்சமுடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச் சென்று பஞ்சநதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்" ` நம்மைச் சொற்றமிழ் பாடுக ` என்றும் ( தி.12 தடுத். புரா.70.). ` இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு ` என்றும் ( தி.12 தடுத். புரா.76.). ` ஆரூரில் வருக நம்பால் ` என்றும் ( தி.12 தடுத். புரா. 108). ` மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ` என்றும் ( தி.12 ஏ. கோ. புரா.72.). ` கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான் ` என்றும் ( தி.12 ஏ. கோ. புரா. 102.) பலவாறு நீர் பாடுவிக்கவே ஆங்காங்கும் வந்து பாடினேன் என்பார், ` பரவும் பரிசொன்றறியேன் ` என்றும், ` என்னையே துணையாகப் பற்றிநிற்கும் சேரமான் பெருமாளை வேறோராற்றால் முன்பே உம்மை வழிபடு வியாது ஒழிந்தேன் ` என்பார் ` பண்டே உம்மைப் பயிலா தேன் ` என்றும், ` எய்த நினையமாட்டேன் ` என்றும் அருளிச் செய்தார். முன்பு தாம் தனித்துச் சென்று வழிபட்டாராகலின், ( தி.12 ஏ. கோ. புரா.71.) சேரமான் பெருமாளோடு மீளச் செல்லாமையை, ` பயிலாதேன் ` என்றார் என்க. ஓலமிடுவாரைத் தாங்குவார் கொடுக்கும் எதிர்மொழியும், ` ஓலம் ` என்பதேயாகலின் இத் திருப்பதிகத்தைக் கேட்டருளிய இறைவனும், ` ஓலம் ` என்றான் என்க இப்பதிக பாடல்கள் சில ; பாடல் எண் : 1 பண் : காந்தார பஞ்சமம் பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொருள் ; கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன் ; இரவும் பகலும் உம்மையே நினைவேன் ; என்றாலும், அழுந்த நினையமாட்டேன் ; ஓலம்! பாடல் எண் : 2 எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடைநா ளொக்கவே கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவும் தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : அடியேன் எங்கே செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் ! பாடல் எண் : 3 மருவிப் பிரிய மாட்டேன் நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக் குருவி யோப்பிக் கிளிகடிவார் குழல்மேல் மாலை கொண்டோட்டம் தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : நீர் , பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு , யானைகளைப் புரட்டி , புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும் , காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் , சிலர்போல , உறுவது சீர் தூக்கி , உற்ற வழிக்கூடி , உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் ! பாடல் எண் : 4 பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன் இகழா துமக்காட் பட்டோர்க்கு வேக படமொன் றரைச்சாத்திக் குழகா வாழைக் குலைதெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : வாழைக் குலைகளையும் , தென்னங் குலைகளை யும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் , உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே , நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்தஉடுத்து நிற்றலால் , உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்பவர் , அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம் ! பாடல் எண் : 5 பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக் கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட , மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி , மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து , வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள் , அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன் ; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின் , அது நீங்க அருள்செய் ; ஓலம் ! தாம் விரும்பியவாறே சென்று வணங்கல் இயலாத வாறு காவிரியில் நீர்ப்பெருக்கை இறைவர் நிகழ்வித்தார் என்று கருதி இவ்வாறு வேண்டினார் . பாடல் எண் : 9 கதிர்க்கொள் பசியே யொத்தேநான் கண்டே னும்மைக் காணாதேன் எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் தம்மானே விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : என் தந்தை தந்தைக்கும் பெருமானே , மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , நான் உம்மை , பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன் ; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனா யினேன் ; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன் ; ஓலம் ! பாடல் எண் : 10 கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலார் தேசம் எங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் ! முன்னைத் திருப்பாடல்காறும் இறைவர் யாதும் அருளாமையின் , இத் திருப்பாடலில் நம்பியாரூரர் அவரை இவ்வாறு நெருங்கி வேண்டினார் என்க திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை. பூமாலை