திங்கள், 28 நவம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருஆவடுதுறை

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருஆவடுதுறை

இறைவர் திருப்பெயர் : மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் (மூலவர்), 
  அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த 
  கோலமாக இருப்பவர்; (திருவிழாவின் முடிவில் கோமுத்தி 
  தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.), செம்பொன் தியாகர் 
  (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்).

இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குஜாம்பிகை. 

தல மரம்  : அரசு (இது படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.)
தீர்த்தம்  : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் 
வழிபட்டோர்  : அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், 
  போகர்

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - இடரினும் தளரினும்.

  2. அப்பர்   - 1. மாயிரு ஞால மெல்லாம், 
2. மஞ்சனே மணியுமானாய், 
3. நிறைக்க வாலியள், 
4. நம்பனை நால்வேதங்கரை, 
5. திருவேயென் செல்வமே. 

  3. சுந்தரர்  - 1. மறைய வனொரு மாணி, 
2. கங்கை வார்சடை யாய்.

  4. திருமூலர் - 1. திருமந்திரம் 

5. சேந்தனார்- 1. திருவிசைப்பா. ஸ்தல புராணம் -





தல வரலாறு

அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். 
எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு).

  ஒரு சமயம் சிவனும் பார்வதியும் சொக்கப்பான் விளையாடிக் கொண்டிருந்தார்கள், அப்போது எல்லா விளையாட்டிலும் சிவனே ஜெயித்துக் கொண்டதாகக் கூறிக்கொண்டதால் அவர்மீது பார்வதி கோபம் கொண்டாள், உடனே இறைவன் தேவியரை நீ பசுவாகப் பிறந்து தவமிருந்து என்னைச் சேர்வாயாக என சாபமிட்டார், அதன்படி உமா தேவியார் இங்கு வந்து பசுவாக  இருந்து தவமிருந்து இறைவனை வேண்டினாள் அதன்படி இங்கு ஈசுவரர் உமையாளுக்கு காட்சி அளிக்க உடனே உமாதேவியார் இறைவரை அனைத்துக் கொண்டார்,அணைத்தெழுந்தநாயகர் 
  (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்; (திருவிழாவின் முடிவில் கோமுத்தி   தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.) கோவாகிய பசுவிற்கு காட்சி தந்தமையால் இவர் கோமுத்தீஸ்வரானார்,


தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.

தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால், இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).

நந்தி தருமநந்திதேவராவார்.
முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்: ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)

திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகம சாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.

நந்தியம் பெருமானிடம் அருள் பெற்ற சிவயோகியார் சுந்தரநாதர் என்பவர், பொதியமலையை நோக்கிச் செல்லும்போது சாத்தனூர் (திருவாவடுதுறைக்கு மிக அருகில் உள்ள புராணச் சிறப்புடைய ஒரு ஊராகும்) என்னுமிடத்தில் பசுக்கள் மேய்ப்பன் ஒருவன் இறந்து கிடப்பதையும், அதனால் அப்பசுக்கள் உறும் துயரத்தையும் கண்டு, மூலன் என்னும் அம்மேய்ப்பனின் உடலில் தன் உயிரைச் செலுத்தி திருமூலர் என்னும் பெயர் கொண்டார்.

திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் சில காலம் தங்கியிருந்த புண்ணிய பூமி - சாத்தனூர் என்னும் ஊராகும்.
அவதாரத் தலம் : சாத்தனூர் (சுந்தரநாதராக இருந்து திருமூலராக மாறியத் தலம்).
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம்  : திருவாவடுதுறை.
குருபூசை நாள்  : ஐப்பசி - அசுவினி.
போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
சிறப்புகள்

சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்.
திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் பதி.

பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்

அ/மி. மாசிலாமணிசுவரர் திருக்கோயில், 
திருவாவடுதுறை - 609 803.

மேலாளர்   : 04364 - 232055 / +91-94439 00408.
மாநிலம் : தமிழ் நாடு 
இஃது, நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கே 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து பாதையில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. 

 இங்குதான் திருவாடுதுறை ஆதினம் உள்ளது, இவர்கள் நிர்வாகத்தில் பல திருத்தலங்கள் உள்ளன, சைவ சித்தாந்த பணிகளை செவ்வனே செய்துவருகிறது,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

திங்கள், 21 நவம்பர், 2016

தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் திருவாரூர் (திருஆரூர்) கோயில்

தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள்
திருவாரூர் (திருஆரூர்) கோயில்

இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும்.

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், திருமகள், இராமர், மன்மதன், முசுகுந்த சக்கரவர்த்தி.

தல வரலாறு[தொகு]
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.
இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.
எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

தல சிறப்புக்கள்[தொகு]
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.
தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.
எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.
நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டி எனப் பெயர். [1] தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.
ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.
மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.
பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.
தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.
1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.
தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர் உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார் விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள் தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே. 4 - 20 - 3
"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.
சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.
பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.
சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.

கோயில் அமைப்பு
33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

கோயில் வரலாறு
இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

அன்னை கமலாம்மாள் சந்நிதி
திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.
திருவாரூர் தேர்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.
அமைவிடம்
மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
திருத்தலப் பாடல்கள்

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருநாவுக்கரசர் பாடிய பதிகம் மொத்தம் 21 சில

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து
கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் மொத்தம்-5

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே.
துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே.

சுந்தரர் பாடிய பதிகம் மொத்தம்-8

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியும் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 18 நவம்பர், 2016

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் குடமூக்கு (கும்பகோணம்)

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள்
   குடமூக்கு (கும்பகோணம்)


இறைவர் திருப்பெயர் : கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களாம்பிகை.
தல மரம் : வன்னி.
தீர்த்தம்
வழிபட்டோர் : ஏமரிஷி
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - அரவிரி கோடனீட லணிகாவிரி. 
2. அப்பர்   - பூவ ணத்தவன் புண்ணியன்.
தல வரலாறு

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.

பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

view of the vimAnA
சிறப்புக்கள்

"கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.

மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.
மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன.

இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் தடாகங்கள் - 7, கிணறுகள் - 3, காவிரித்துறைகள் - 4 ஆகும்.

மகாமகக் குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீக்ஷ¤தர் ஆவார். இவர் தன் துலாபாரத் தங்கத்தைக் கொண்டே இத்திருப்பணிகளையெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது. இது மட்டுமல்லாது இம்மகான் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்திருக்கிறார். அநேகமாக சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான்.

இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது கும்பேசுவரர் கோயிலேயாம்.

மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின் 'திருவெழுக்கூற்றிருக்கை' தேர்வடிவில் வண்ணச் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் சந்நிதியையடுத்து, அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகின்றார்.

கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி; மணல் (பிருதிவி) லிங்கமாதலின் தங்கக் கவசம் சார்த்தப்பட்டுள்ளது. பாணத்தில் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது.

திருக்குடந்தைப் புராணம் - தலபுராணம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின்லயனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

புதன், 16 நவம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருப்பனந்தாள்

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருப்பனந்தாள்

திருப்பனந்தாள்

இறைவர் திருப்பெயர் : செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர், 
  அருணஜடேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி.
தல மரம் : பனை.
தீர்த்தம் : பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம் 
  முதலிய பல தீர்த்தங்கள்.
வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், 
  சூரியர், சந்திரன், ஆதிசேஷன், 
  நாககன்னிகை, தாடகை, குங்கிலியக்கலய நாயனார் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - கண்பொலி நெற்றியினான்.


தல வரலாறு

பனையின் தாளின் இறைவன் எழுந்தருளியிருத்தலாலும்; பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரபேறு வேண்டி இத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த சுவாமியின் திருமுடியைப் பின்னால் குங்குலிய நாயனார் மாற்றினார்.

இக்கோவிலில் உள்ள இறைவரை சூரிய பகவான் சித்திரை மாதத்தில் லிங்கத்தின் மீது தனது ஒளிக்கதிரை செலுத்தி வழிபடும் முறை இன்றும் நடைபெறுகிறது.

இங்கு 63 நாயன்மார்களுக்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது இது மிகவும் சிறப்பு பெற்றது,


தல விருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தையடுத்துள்ள கிணறு, நாககன்னிகை பிலம் எனப்படும். இதன் வழியாக நாககன்னியர் வந்து இறைவனை வழிபட்டதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.

சிறப்புகள்

இத்தலத்திற்கு தாலவனம் (தாலம் - பனை) என்றும் பெயருண்டு. பிராகாரத்தில் இரண்டு ஆண் பனைமரங்கள் உள்ளன.

மூலவர் சுயம்பு மூர்த்தி.
சுவாமி விமானம் பிரணவவடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது.

பதினாறுகால் மண்டபத்தில் தாடகைக்காகப் பெருமான் வளைந்து கொடுத்ததும், குங்குலியக்கலயனார் பெருமானின் வளைவை நிமிர்த்தியதுமாகிய சிற்பங்கள் உள்ளன.

இத்தலத்தில் தான் குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது.

திருப்பனந்தாளில் வாழ்ந்த நக்கன்தரணி என்பவனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டது.

இக்கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றும் இறைவன் பெயர் தாடகேச்சரத்து மகாதேவர் என்றும் குறிக்கப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுநதரபாண்டியம்

செவ்வாய், 15 நவம்பர், 2016

அகல் விளக்கின் அறிவியல் தத்துவம்
பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு மட்டும் ஒரு தனி மகத்துவம் உண்டு. தீயை மட்டும்தான் நம்மால் உருவாக்கவும் முடியும்; அணைக்கவும் முடியும். இதனாலேயே இந்துகளின் வழிபாட்டு முறையில் 'தீ' முக்கிய இடம் பெறுகிறது. 
ஹோமம், யாகம், தீபம், கற்பூரம், சொக்கப்பனை என்று கையெடுத்து வணங்கும் சக்தியாக நெருப்பு விளங்குகிறது. வரலாற்றின் தொடக்க காலத்தைப் பார்க்கும்போது 'தீ' கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், மனிதகுல வாழ்வு மாறிப் போனது என்பதை அறிய முடியும்.'தீ' வழிபாட்டில், தீபாவளியின் அகல் விளக்கு வழிபாடு, சிறப்பிடம் பெறுகிறது. அகல் விளக்கை சிவ தத்துவமாக சிலர் கூறுவதுண்டு. வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி கடவுளாக தீயை வழிபட்டார். அகல் விளக்கு வழிபாட்டிற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, தீ எதிரிகளை துவம்சம் செய்துவிட்டு எதிரிகளுக்கு நடுவே எரியும் சக்தி படைத்ததாக இருக்கிறது.
அறிவியல் அடிப்படை சிறிய அறிவியல் விளக்கம் : அகல் விளக்கினை ஏற்றி வைக்கும் போது அகல் விளக்கின் சுடரைச் சுற்றிலும் (எரிதலின் விளைவாக) கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய இரண்டு பொருட்களும் உருவாகின்றன. இவை இரண்டும் தீயை அணைக்கும் சக்தி படைத்தவை. இந்த இரண்டு பொருட்களும், தீச்சுடரைச்சுற்றி உருவானவுடன், வெளிக்காற்று தீச்சுடருக்கு வருவது தடுக்கப்படும். முக்கியமாக ஆக்ஸிஜன் வருவது தடுக்கப்படுகிறது.எரிதலுக்கு துணைபுரியும் ஆக்சிஜன் வருவது தடுக்கப்பட்டுவிட்டால், உடனடியாக தீ அணைந்துவிட வேண்டும் இல்லையா?. ஆனால் அப்படி நடப்பதில்லையே!. அகல் விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டுதானே இருக்கிறது.அப்படியென்றால் சூழ்ந்து நிற்கும் எதிரிக்காற்றினை துரத்திவிட்டுத்தானே தீச்சுடர் எரிகிறது.
முதல் தத்துவம் : அகல் விளக்கு எரியும்போது அந்த சுடரால் உருவாகும் கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி ஆகியவை அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பதில்லை. அதாவது தீச்சுடருக்கு பக்கத்திலேயே இருப்பதில்லை. வெப்பத்தால் சூடான அப்பொருள்களின் அழுத்தம் குறைந்து, எடையும் குறைகிறது. எனவே எடை குறைந்து, லேசான கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் இடப்பெயர்ச்சி அடைந்து மேலே சென்று விடுகின்றன. அந்த இடத்திற்கு ஆக்சிஜனுடன் கூடிய புதிய காற்று வந்து விடுகிறது. எனவே எரிதல் தொடர்ந்து நடைபெறுகிறது. அசுர சக்திகளை அப்புறப்படுத்திவிட்டு, தேவசக்தி தொடர்ந்து ஒளி வீச வேண்டும் என்பதே அகல்விளக்கின் முதல் தத்துவம்.
உயிர் வெப்பம் : இன்னொரு தத்துவமும் இருக்கிறது.எந்தவொரு வேதிவினை நிகழும் போதும் வெப்பம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது இக்கால விஞ்ஞானிகளின் கூற்று. உதாரணமாக டீசல், பெட்ரோல் இயந்திரங்கள், ஆகாய விமானம், ராக்கெட்டுகள், பேருந்து போன்றவை வெப்பத்தினால்தான் இயங்குகின்றன என்பது நமக்குத்தெரியும்.அதேபோல் நம் உயிரும் வெப்பத்தினால்தான் இயங்குகிறது. எங்கு வெப்பம் இருக்கின்றதோ அங்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒளி இருந்துதான் ஆக வேண்டும். வெப்பம் இல்லையென்றால் ஒளி இல்லை. ஒளியில்லை என்றால் வெப்பம் இல்லை. ஒன்றால்தான் இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று இணைபுரியாத சக்திகள். அதாவது, ஒரே சக்தியை விஞ்ஞானிகள் வெப்பமென்றும், ஆன்மிகவாதிகள் ஒளியென்றும் வருணிக்கிறார்கள்.
விஞ்ஞானம் : எப்படி வெப்பத்தினால் எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்களோ, அதுபோலவே, ஒளியாகிய ஜோதியே எல்லாம் செய்யவல்ல கடவுள் என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். ஆகவே விஞ்ஞானம் கூறும் வெப்பமே ஆன்மிகவாதிகள் கூறும் ஜோதிக்கடவுள். அந்த ஜோதியைத்தான் வள்ளலார் அருட்பெருஞ்சோதி ஆண்டவன் என்று பெயரிட்டு அழைத்தார்.அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஆழ்ந்த பொருள் கொண்டு விளங்கும் அகல் விளக்கினை, தீப ஒளித் திருநாள் அன்று ஏற்றி, வைத்து அனைவரும் வழிபடுவோம். அகல் விளக்கு ஏற்றும் இந்த நன்னாளில் நம் அக விளக்கையும் ஏற்றுவோம்.
-- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்எழுத்தாளர், மதுரை.98654 02603.
நன்றி

திங்கள், 14 நவம்பர், 2016

ஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு – ஒரு பார்வை

நமது பாரம்பரியத்தில் சாஸ்திரங்களுக்கு தவிர்க்க இயலாத உன்னதமான இடம் உள்ளது.
இந்த சாஸ்திரங்களைப் படைத்தவர்கள் முனிவர்கள் ஆவர். அவர்கள்கூட தாமே இதனை இயற்றியதாகவோ, எழுதியதாகவோ சொல்லவில்லை. மாறாக, அவர்கள் தம் தவத்தினால் கண்டறிந்ததை, உணர்ந்த சத்தியத்தையே சாஸ்திரங்களாகபடைத்தளித்தனர்.
இதனால் தான் அவர்களை ‘மந்த்ரத்ரஷ்டா’ என்று முன்னோர்கள் அழைத்தனர்.  உருவற்ற  அருவமாக இறைவனை உணர்வதற்கு ஞானிகளால் மட்டுமே இயலும்.  ஆனால், எளியவர்களான நமக்கு உருவவழிபாடே தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
 இந்த உருவவழிபாட்டைச் செய்வதற்குக்கூட, ஒரு விதிமுறை உள்ளது.  அவரவர் தத்தமது விருப்பிற்கேற்ப முறையற்ற வழிபாட்டைச் செய்வது இயலாது.
உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு அல்லது விக்கிரஹ ஆராதனை என்பது  தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவவழிபாடுசெய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளும் சமயிகள்கூட, புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,
ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டுசெல்லும் அம்சமாகவே இருக்கின்றது.  இதனை ஸ்ரீவைணவர்கள் ‘அர்ச்சாவதாரம்’ என்று  கொண்டாடுவர். இந்தஅர்ச்சாவதாரத்திற்காகவே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.      அவை பண்பாடு,கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம்வளர்க்கும் உன்னத நிலையங்களாகவும் விளங்கி வருகின்றன.
வெறும் கல்லுக்கு ஏன் இவ்வளவு உபசாரம் என்று பலரும் விதண்டாவாதம் பேசக் கேட்டிருக்கலாம். அறுபது இலட்சம் மூபாய் காசோலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு துண்டுக்காகிதம். அதில் என்ன பெறுமதிஇருக்கிறது? ஒரு சிறு காகிதம்தானே என்று கசக்கி எறியலாமா?  அந்த காகிதம்எப்படி பலலட்சங்களை வெளிப்படுத்துகின்றதோ, அதுபோலவே, கல்லில்சமைக்கப்பட்ட அந்தத் திருவுருவம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகக் காட்சிதருகின்றது.
ஆகமச்சிறப்பு:
 எப்படி, கட்டடக்கலைக்கு பொறியியற்துறை (B.E), மருத்துவத்திற்கு (M.B.B.S),கலைகளுக்கு(B.A,finearts) என்று ஒவ்வொரு சாஸ்திரம் இருக்கின்றதோ அதுபோலவே,
திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு சாஸ்திரம் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.
ஆகமம் என்பது ஒரு பெரிய பாதை என்றால், அதில் பல கிளைப்பாதைகள் உள்ளன.சைவாகமங்கள், பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற இரு வைணவ ஆகமபிரிவுகள், சாக்ததந்திரங்கள் என்று இக்கிளைகள் பல. பௌத்தர்களுக்கும், ஜைனர்கள் என்ற சமணர்களுக்கும் தனித்தனி ஆகம நூல்கள் உள.
 ஆயினும், ஆகமங்களால் வழிபடப்பெறும் இறைவனே ஆகமம்கூறும் மூலதத்துவம் ஆகும். இந்த ஆகமங்களுக்குள் ஒன்றோடொன்று குழம்பிக்கொள்ளாமல், ஒன்றில் சொல்லப்பட்டது மற்றொன்றிலும் சொல்லப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி, அவரவர் அவ்வவற்றை ஏற்றலே முறையாகும்.
 துவாபரயுக நிறைவில் தோன்றிய வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மக்கள் அறநெறி நின்று விலகாது வாழ்வதற்காக ஆகமங்களை இயற்றுமாறுமுனிவர்களுக்குக் கட்டளையிட்டார். சிவ, விஷ்ணு, தேவி வழிபாட்டுக்குரியதானஆகமங்கள் யாவும் உருவாக்கப்பட்டன. யாவற்றையும் ஸ்ரீ கிருஷ்ணனானகண்ணன் பார்வையிட்டு, பரிசீலித்து ஒப்புதல் அளித்த பிறகே அவை பிரச்சாரம்செய்யப்பட்டன என்று ஒரு கதை இருக்கின்றது.
இந்த கதையுடன் ஒட்டியதாக, ஆகமங்கள் குறித்து அனேகமாக, யாவரும்ஏற்றுக்கொள்ளும் ஒரு சுலோகம் உள்ளது. அது,
“ஆகதம் சிவவக்த்ரேப்யோ 
கதம்ச கிரிஜானனே
மதம்ச வாசுதேவஸ்ய
தஸ்மாதாகம முச்சயதே”
இந்த சம்ஸ்கிருதக் கவிதையின் நான்கு வரிகளில் முன்னெழுத்துக்கள் ஆகம என்ற சொல்லைக் காட்டுவதைக் காணலாம்.
இதன் பொருளாவது,
“பரமசிவனுடைய திருமுகத்திலிருந்து வந்தது. மலைமகளான பார்வதியின்காதுகளில் சென்றது. வாசுதேவனான திருமாலால் ஒப்புக்கொள்ளப்பட்டது”என்பதாகும்.
ஆகம பேதங்கள்:
சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை.
உக்ரஜோதி, சத்யோஜாத, ஸ்ரீராமகண்ட, வித்யாகண்ட, நாராயணகண்ட,வீபூதிகண்ட, ஸ்ரீகண்ட, நீலகண்ட, ஸோமசம்பு, ஈசானசம்பு, ஹ்ருதயசிவ,ப்ரம்மசம்பு, வைராக்ய சிவ, ஞானசம்பு, த்ரிலோசனசிவ, வருண, ஈஸ்வரசிவ,அகோரசிவ என்பதே அப்பதிணெண் சிவாச்சார்யர்களின் திருநாமங்களாகும்.
இதில், அகோர சிவாச்சார்யரின் பத்ததியே ஆகமமரபில் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.
இப்பதிணெண் சிவாச்சார்யர்கள் தவிர, சர்வாத்மசிவ, சர்வேசபண்டித சிவ,வியாபகசிவ, வ்யோமசிவ, உத்துங்க சிவ, பரமானந்த யோகீஸ்வர சிவ, அப்பையதீட்சிதர் என்கிறவர்களும் சிவாகம விளக்க நூல்களைப் படைத்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந்த விளக்க நூல்களில் பலவும் இன்று காணக்கிடைக்காது அழிந்து விட்டன. ஆகமங்களிலும் அதிகளவானவை முழுமையாகவோ, பாகமாகவோ அழிந்து விட்டன.
சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.  
திருமூலர் பெருமான் ஆகமங்கள்பற்றி திருமந்திரத்தில் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
 அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.

nandri  : நீர்வை. தி.மயூரகிரி சர்மா

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் திருவானைக்காவல்

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா


தேவாரப்பாடல் பெற்ற காவேரிக்கரை தென்கரை தலங்களில் இது 60 வது தலம் இங்கு இறைவர் பஞ்சபூதத்தலங்களில் அப்பு தலமாக (நீர்) அமைந்துள்ளது. அம்பிகை 51 சக்தி பீடங்களில் ஞான சக்தி பீடமாக அமைந்துள்ள தலம்.

திருஆனைக்கா கோவில்

இறைவர் திருப்பெயர் : நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
தல மரம் : வெண்நாவல்
தீர்த்தம் : காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.
வழிபட்டோர் : அம்பிகை, சிலந்தி,யானை.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. மழையார் மிடறா, 
2. வானைக்காவில் வெண்மதி, 
3. மண்ணது வுண்டரி 
 2. அப்பர்   - 1. கோனைக் காவிக், 
2. எத்தாயர் எத்தந்தை, 
3. முன்னானைத் தோல்போர்த்த. 

 3. சுந்தரர்  - மறைகள் ஆயின நான்கும்

தல வரலாறு

பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.

ஆனை வழிபட்டதால், இத்தலம் இப்பெயர் பெற்றது.
இறைவனைப் பூசித்த சிலந்தி, அடுத்தப் பிறவியில் ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழ மாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம்.

நடராஜர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட் சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது.

இஃது கோட்செங்கட் சோழ நாயனார் அவதாரப் பதியாகும்.

அவதாரத் தலம் : திருஆனைக்கா.
வழிபாடு : லிங்க வழிபாடு.
முத்தித் தலம் : தில்லை (சிதம்பரம்).
குருபூசை நாள் : மாசி - சதயம்.
ஈசன், சித்தராக வந்து திருநீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது.

சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார்.

சிறப்புகள்

மிகப்பெரிய திருக்கோயில்.
பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.
ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து, அதைத் தோடாக அணிவித்தார்.

பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன.

தல வரலாறு ;


சிவன் கட்டளைக்காக அம்பிகை மானிடப் பெண்ணாகப் பிறந்து இத்தலத்தில் காவேரிக்கரையில் காவேரியாற்றில் நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டதால் இது பஞ்பூத தலங்களில் அப்பு ( நீர்) தலமாக காட்சி அளிக்கிறது, இத்தலத்தில்  ஜம்பு என்ற முனிவர் இந்த லிங்ககத்தை வழிபட்டு, சிவனிடம் நாவல் பழம் பிரசாதமாகக் கொடுத்தார் இதன் மகத்துவம் அறிந்த முனிவர் அதன் விதையுடன் உண்டுவிட்டார் பின்னர் இதுவே மரமாக அவர் உடலில் வளர்ந்து சிரசின் மூலம்வெளிப்பட்டதால் இவர் முத்தி பெற்றார். இதனால் இம் இம் நாவல் மரமே தலவிருச்சமானது, இதனால் இம்மரத்திற்கு ஜம்புஎன்றும் அதன் அடியில் உள்ள லிங்கமே ஜம்புகேஸசர் என்றும் வழங்கப் பெற்றது,
   கைலாயத்தில் சிவ கனங்களாக இருந்த புட்பகுந்தன், மாலியவான் என்ற இருவருக்குள் யார் சிறந்த பக்தர் என்ற போட்டி வந்ததால் இருவரும் இறைவரால் சாபம் பெற்று இத்தலத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் இந்த லிங்கத்தை வழிபட்டு இங்கும் போட்டி ஏற்பட்டு, சிலந்தி யானையின் தும்பிக்ைகயில் நுழைந்து யானையினை கொன்றது, எனவே சிலந்தி வடிவான திருச்செங்கட்வ சோழனாக பிறந்து பல சிவத்தலங்களைக் கட்டிய வரலாறு உண்டு.

  இத்தலத்தில் அம்பிகை தவமிருந்து பூசை செய்து வழிபட்ட தால், இன்றும் இத்தலத்தில் பூசையின் போது அர்ச்சகர் அம்பிகையாகக்கொண்டு புடவை சுற்றி கிருடம் அணிந்து, குண்டலம் அணிந்து இறைவருக்கு பூசை செய்கிறார்,



  இத்தலத்தில் திருமண வைபவங்கள் நடப்பதில்லை, ஏனெனின் இங்கு அம்பிகை இன்றும் தவமிருப்பதாக ஐதிகம்,


அமைவிடம்

திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா
(Thiruvanaikaval, Thiruvanaika) என்பது திருச்சி நகரத்தின் ஒரு சுற்றுப்புறப் பகுதியாகும் ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகில், காவேரி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி உடனாய ஜெம்புகேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இவ்விடம் பஞ்சபூத தலங்களில் ஒன்று.[4]
 ஜம்புகேசுவரர் திருக்கோயில், 
திருஆனைக்கா, 
திருச்சிராப்பள்ளி.
1930 ஆம் ஆண்டின் நோபல் விருது பெற்ற சி. வி. இராமனின் பிறந்த ஊர் திருவானைகாவல் ஆகும்.

திருச்சிற்றம்பலம்
ெதாகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 11 நவம்பர், 2016

திருஐயாறு (திருவையாறு) கோயில் தலவரலாறு

தேவாரப் பாடல் பெற்ற சிவத் திருத்தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற சிவத் திருத்தலங்கள்


திருஐயாறு (திருவையாறு) கோயில் தலவரலாறு

அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 13 கி.மி. தொலைவில் பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 226 திருவையாறு அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.


ஐயாறப்பர் கோயில்
இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்[5]. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

இறைவர் திருப்பெயர் : பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
இறைவியார் திருப்பெயர் : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி. 
தல மரம் : வில்வம். 
தீர்த்தம் : சூரியபுட்கரணி, காவிரி. 
வழிபட்டோர் : திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, 
  சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், 
  அருணகிரிநாதர். 

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கலையார் மதியோடு (1-36), 
2. பணிந்தவர் அருவினை 
3. புலனைந்தும் பொறிகலங்கி 
4. கோடல் கோங்கங் (2-6), 
5. திருத்திகழ் மலைச்சிறுமி 

  2. அப்பர் - 1. மாதர் பிறைக்கண்ணியானை 
2. விடகிலேன் அடிநாயேன் (4-
3. கங்கையை சடையுள் (4-38), 
4. குண்டனாய்ச் சமணரோடே 
5. தானலா துலக மில்லை 
6. அந்திவட் டத்திங்கட் (4-99), 
7. குறுவித்த வாகுற்ற (4-91), 
   8. சிந்திப் பரியன (4-92), 
9. சிந்தை வாய்தலு (5-27), 
10. சிந்தை வண்ணத்த (5-28), 
11. ஆரார் திரிபுரங்கள் (6-37), 
12. ஓசை யொலியெலா) (6-38); 


  3. சுந்தரர் -  பரவும் பரிசொன் (7-77). 

தல வரலாறு

தல வரலாறு

ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.
சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.




அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

சிறப்புகள்

சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

தியாகராஜ ஆராதனை விழா[தொகு]
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

திருவையாறு சப்தஸ்தானம்[தொகு]
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்[6]. பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும்.இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்