சனி, 30 ஏப்ரல், 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - தவறு கங்கை மேல் அல்ல

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - தவறு கங்கை மேல் அல்ல

தவறு கங்கை மேல் அல்ல
பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. பலநாட்டு மக்களுடன் பழகவும் பேசவும் எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போதெல்லாம் இந்தியாவின் ஆன்மீக வளம், இயற்கை வளம், பல்வேறுப்பட்ட கலாசாராம் இருந்தும் காக்கப்படுகிற நாட்டு ஒற்றுமை பற்றியெல்லாம் வெளிநாட்டவர்கள் வியந்து பேசுவார்கள்.

இத்தனை வளங்கள் இருந்தும் நம்நாடு ஏன் செல்வச் செழிப்பு அடையாமல் இருக்கிறது என்று கூடவே என்னை ஆச்சரியத்தோடு கேட்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுவேன்.
ஆனால், இதுபற்றி நான் சிந்திக்காமல் இருந்தது இல்லை. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மைதான் நம்நாட்டு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

தெரியும் என்ற மனநிலையில் இருந்து இயங்குவதுதான் நமக்குத் தெரியாத விஷயங்கள் நம் கண்ணில் புலப்படும்போதுகூட.. அதை அக்கறை கொடுத்துப் பார்க்க நாம் தவறிவிடுகிறோம்.
இயேசுநாதர் சொன்னதைப் போல கண்ணிருந்தும் குருடர்களாக காது இருந்தும் செவிடர்களாக நம்மில் பலர் இருப்பதால்தான் எல்லா வளமும் படைத்திருந்தும் நம்நாடு செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கிறது. இது பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.

அவன் ஒரு சிறந்த மாணவன். இந்திய நாட்டின் பல சிறந்த மகான்களிடம் கல்வி கற்றவன். கங்கை நதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் வருகிறது. அவன் கங்கை எங்கே உற்பத்தியாகிறது... எங்கே குறுகலாய் ஓடுகிறது... எந்த இடத்தில் அகண்ட கங்கையாய் மாறுகிறது, எங்கே வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கிறது... வங்காள விரிகுடாவில் எங்கே சங்கமிக்கிறது என்று சகலவிதமான தகவல்களையும் சேகரித்து அதன் படி ஒரு வரைபடமும் தயார் செய்கிறான்.

இப்போது கங்கையைப் பற்றி சகலமும் தனக்குத் தெரயும் என்ற நினைப்பு அவனுக்குள் வந்து விடுகிறது.  அதே மனநிலையில் ஒரு படகில் ஏறி, ரிஷிகேசத்தில் கிளம்பி வங்காள விரிகுடாவை அடைய கங்கை நதியில் அவன் பயணத்தை துவங்குகிறான். தயாரித்து வைத்திருந்த வரைபடத்தில் கங்கை எந்தெந்த இடத்தில் எல்லாம் திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தானோ அதே மாதிரியே காங்கையும் வளைந்து திரும்பி போய்க் கொண்டிருந்தது. ஆகா... கங்கை நதியின் ஜாதகமே எனக்குத் தெரிந்து விட்டது என்ற மமதை இப்போது பலமாக அந்த மாணவனின் தலையில் ஏறுகிறது.

அந்த சமயம் கங்கை இடது புறமாகத் திரும்புகிறது. மாணவன் திடுக்கிடுகிறான். அவனது வரைபடத்தின் படி அந்த இடத்தில் கங்கை வலது புறமாகத் திரும்ப வேண்டும். ஆனால் தனது வரைபடத்தை தவறு என்பதை மட்டும் அந்த மாணவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கங்கைதான் திடீரென தடம் மாறி ஓடுகிறது என்று சொல்லிவிட்டு அவன் நதியின் மீதே கோபப்படுகிறான். பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து விட்டு ஊர் திரும்புகிறான். தெரியும் என்ற மனோநிலையில் இருந்து செயல்பட்டதால் முழுமையான அனுபவத்தை அவன் பெறவில்லை.

நம்மில் பலரிடம் இருக்கும் இன்னொரு கெட்ட குணம் நம்முடைய தவறுகளை நாம் அவ்வளவு சுலபத்தில் திருத்திக் கொள்வதில்லை என்பது. தவறு என்று தெரிந்தாலும் நமது செயல்களை நியாயப்படுத்துவது. அப்படி நியாயப் படுத்துவதையே ஒரு பெரிய சமார்த்தியமாக நினைப்பது. குதர்க்க புத்தி என்று இதற்குப் பெயர்.

அவன் ஒரு விசிறி வியாபாரி, பனை ஓலையால் ஆன விசிறிகளை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். இந்த விசிறி நூறு வருடம்உழைக்கும், அதனால் நூறு ரூபாய் என்று கூவிக் கூவி விற்கிறான். தனது
மாளிகையின் ஜன்னலிலிருந்து இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு. மன்னன் விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, என்ன விளiயாடுகிறாயா.. அற்பமான பனை ஓலை விசிறி இது. ஒரே ஒரு ரூபாய் கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா? என்று கேட்கிறான்.


மன்னரைத் தான் அதிக விலை சொல்லி ஏமாற்ற முயன்றதை ஒப்புக் கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், மன்னா... இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால் தான் நூறு ரூபாய் என்றான். நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக் கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்கா விட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை என்று மன்னர் எச்சரித்து அனுப்பினார்.

சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டார்.

அந்த நேரம் விசிறி வியாபாரி சொன்னான்.

மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதனால் என் தலையைத் துண்டிப்பதற்குமுன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா..? என்று கேட்டான்.

சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். அடடா, இங்கேதான் தவறு நடந்து விட்டது. மன்னா இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும், இது
உண்மை, ஆனால், இதுபோல விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்ட வேண்டும் என்று சொன்னான்.

அந்த வியாபாரி, அதாவது, தொழிலில் நாணயம் காட்டுவதற்கு பதில், செய்த தவறுக்குச் சப்பைக் கட்டு கட்டினான் அவன்.

இப்போது குதர்க்கம் என்பதற்கு அர்த்தம் புரிகிறதா?



மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

நன்றி ; மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா அவர்களின் கட்டுரையிலிருந்து

தொகுத்தது ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

ஐந்து கரத்தினை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத் தடி போற்றுகின்றேனே /      திருமூலர்


பிள்ளையார் சுழி
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.
‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..
பிள்ளையார்
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.
அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
பிள்ளையாரின் பிறப்பு
ஆதியும் அந்தமுமில்லாத பெருமானுக்கு பிறப்பேது? ஆனாலும் இறைவன் உயிர்கள் மேற் கொண்ட பெருங்கருணையால் அவதாரம் செய்கிறான். எனினும் விநாயகரை ஒரு அவதாரமாகக் கொள்ளலாமா? என்பது ஒரு கேள்வியே.. இவர் ஸ்ரீராமர் போல.. கிருஷ்ணர் போல மண்ணில் அவதரித்தவர் அன்று. எனினும், புராணங்களில் விநாயக உற்பத்தி பற்றி பல செய்திகள் கிடைக்கிறது. மத்ஸ்யபுராணத்தில் உமாதேவி தான் நீராடிய போது தன் உடல் அழுக்குகளைத் திரட்டி வைக்க அப்போது பிள்ளையார் பிறந்தார் என்கிறது. இதனைக் கூறுவது போல விநாயக சஹஸ்ரநாமத்திலும் ஒரு நாமம் உண்டு. ஆனால் இதனை இப்படியே பொருள் கொள்ளலாமா? அல்லது வேறு தத்துவ செய்தி உண்டா? அல்லது இக்கதையை விலக்க வேண்டுமா? ஆராயப்பட வேண்டியது.
விநாயகபுராணம்
மிகப்பெரிய சிக்கல் என்ன எனில் கந்தப்பெருமானுக்கு கந்தபுராணம் போல, விநாயகருக்கு விநாயக புராணம் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயக புராணம் பதிணெண் புராணங்களுள் அடங்காதது. பிற்காலத்தது என்று கருதப்படுவது. அத்துடன் பல முரணான செய்திகள் இங்கு ஒருங்கே இருந்து பெரும் சிக்கலைத் தருகின்றன. இவற்றால் இப்புராணம் அறிஞர்களின் பார்வையிலிருந்து விலகியே இருக்கிறது.
விநாயக அவதாரம் பற்றி விநாயகபுராணத்தில் ‘மூவர் உபாசித்த படலத்தில்’ ஒருவாறாயும், சிந்தாமணி விநாயகர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், விக்னராசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், மயூரேசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், பலப்பல வகையே சொல்லப்படுகின்றன.
ஆனால் இவைகளை எல்லாம் நம்மவர்கள் ஏற்றுப் போற்றினாரில்லை. முக்கியமானதான, பிரணவத்தின் வடிவமாக பிள்ளையார் தோன்றினார் என்பதையே ஏற்றுக் கொண்டனர். உமாதேவியும் சிவபெருமானும் சித்திரமாக வரையப்பட்டிருந்த சமஷ்டிப் பிரணவத்தைப் பார்த்தபோது அதில் அகரம் களிறாக, உகரம் பிடியானதாம். அவை கூடிய போது விநாயகர் தோன்றினார்.
இதைத் திருஞானசம்பந்தர்
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம். இச்செய்தி அற்புதமான தத்துவச் செறிவுடையதாக விளங்குகிறது. விநாயகரின் உருவமே ஓங்காரவடிவம். எனது சிறுவயதில் ஓ என்ற எழுத்தை எழுதி அதனை பின் பிள்ளையாராக வரைந்து பார்க்கிற வழக்கம் இருந்தது ஞாபகம் வருகிறது.
220 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர் என்கிற பெரியவர் விநாயகபுராணத்தைத் தமிழில் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்கள் கொண்ட இப்புராணம் லீலா காண்டம், உபாசனா காண்டம் என்ற இருபிரிவுகள் கொண்டதாயிருக்கிறது. இப்புராணத்தில் இருந்து தான் காரியசித்தி மாலை என்ற எட்டுப்பாடல்கள் தொகுக்கப்பட்டு பலராலும் ஓதப்பட்டு வருகின்றன.
அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்
என்பது முதலாயிருக்கிய கச்சியப்ப முனிவரரரின் பாடல்கள் நனிச்சுவை நிறைந்தவையாயுள்ளன. எனினும் இப்புராணமும் மக்கள் மத்தியில் பெருவழக்கு உடையதாயில்லை என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இலங்கையில் இன்றும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ஏகாதசிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரிப்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருத்தணிகைப்புராணம் என்று பல்வேறு புராணங்களும் ஆலயங்களில் முறைப்படி புராண படனம் செய்யப்படுகிறது. எனினும் விநாயகபுராணத்தைப் படனம் செய்வதாக அறியமுடியவில்லை. எனினும் கச்சியப்ப முனிவராரின் தனிச்செய்யுட்கள் தனிச்சிறப்புடன் ஓதப்பட்டு வருவதைக் காணக்கிடைக்கிறது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராஜபண்டிதர் என்னும் வரதபண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதை என்று ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்கள். இது பிள்ளையார் வைபவத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்ட இப் பிள்ளையார் கதை செய்யுள் நடையில் உள்ளது. கவித்துவம் நிறைந்தது. இது இலங்கையில் மிகப்பிரபலமாயுள்ளது.
‘மந்தரகிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ் சோலை இராசமாநகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டி..’ இப்படி இக்கதை நீண்டு செல்கிறது. ஆனால் இக்கதையூடே விநாயகர் வரலாற்று முறைமை முழுமை பெற்றதாகச் சொல்ல இயலாதிருக்கிறது.
lords-vinayaka-shankara-parvati
எழிலார் விநாயகர் வடிவம்
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர். அவரது திருமுகம் யானை வடிவம். அவரது திருக்கரங்கள் தேவவடிவம். ஆவரின் மேனி மனித வடிவம். அவரது திருவடிகள் பூதவடிவம் என்பர். அவர் மயூரேசராக மயிலேறி வலம் வரும் போது பறவையினத்தையும் அவர் இணைத்துக் கொள்கிறார். ஆக, சகல உயிர்களின் இணைப்பை சித்தரிப்பது போல பிள்ளையாரின் வடிவம் அமைகிறது.
பிள்ளையார் நிறைய உணவு உண்ணும் சாமி என்பது பலரின் தவறான எண்ணம். ஆதனால் தான் அவர் பெரிய வயிறோடு இருக்கிறாராம்.  உண்மை என்ன எனில், இதுவும் பிற்காலத்தைய தவறான அபிப்ராயங்களின் விளைவே என நம்பலாம். அண்டப்பிரம்மாண்டமே தன் வயிற்றில் கொண்டதால் தான் பிள்ளையாருக்கு பருத்த வயிறு அமைந்தது என்பதும் சில தத்துவ அறிஞர்களின் கூற்று. இதுவும் சிந்தனைக்குரியதே.
பிள்ளையார் குழந்தை உருவினராகவே பழைய இலக்கியங்களில்.. மந்திரங்களில், தோத்திரங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
ஆதிசங்கரர் சுப்பிரம்மண்யபுஜங்கத்தில் ஸதாபாலரூபர் என்று விநாயகரைப் போற்றுவார். விநாயகர் குழந்தை உருவினர் என்பதாலேயே நம் தமிழர்கள் பிள்ளை-யார் என்றே அழைக்கிறார்கள். குழந்தைப் பிள்ளை மெல்லிதாக இருப்பதைக் காட்டிலும் சிறிது பருமனாக.. இருப்பதையே விரும்புவர். குழந்தைக் கடவுளான பிள்ளையாரும் அந்தளவில் தான் பருத்த வயிற்றராயிருக்கிறார். ஆனாலும் அவர் என்றும் சுறுசுறுப்பானவர். எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..
விநாயகர் கஜமுகன், உதத்தன், துந்தரன், நக்கிரன், கிருத்திராசூரன், சேமன், குசேலன், குரூராசூரன், பாலாசூரன், வியோமாசூரன், துந்துபி, தர்பாசூரன், சிந்தூரன் இப்படி எராளமான அசுரர்களை அழித்ததாக விநாயக புராணமே சொல்கிறது. இவ்வாறாகில் எவ்வளவு வீரதீரக்கடவுளாக விநாயகர் அமைதல் வேண்டும். இதை விட கணேசக்கடவுள் தன் கரங்களில் அங்குசம், பாசம் முதலிய ஆயுதங்களை வைத்திருப்பதால் அவரது எழுச்சியம்.. அவர் எப்போதும் தன்னடியார்களைக் காத்தருளும் திறனும் வெளிப்படுகிறது.
விநாயகரின் கையில் பூரணத்தின் வடிவமான மோதகத்தைக் காணலாம். அவர் கையிலிருக்கும் மோதக இனிப்பின் ஊடாக பிள்ளையார் தன் அடியவர்களிற்கு இனியன தருவார் என நம்புகிறார். குணநிதியான கணபதியின் வலது திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தனது தனித்துவமான உறுப்பாகிய தந்தத்தை பிள்ளையாரே ஒடித்து தனது கரத்தில் வைத்திருக்கிறார். அது எப்படி?
ganapati_2
வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார். பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார். முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத பூரணத்துவம் கொண்ட தந்தது பதிஞானத்தையும் காட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது. எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே வளரும் என்பது திண்ணம். இதனையை
நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்
என்கிறது திருவருட்பயன்.
‘ஐந்து கரத்தன்’ என்று பிள்ளையாரைப் போற்றுவார்கள். அதில் ஒரு கரம் பாசம் ஏந்துகிறது. பாசக் கயிறு பிணைப்பதற்கு உதவும். அந்தப் பிணிப்பு பிறப்பை உண்டாக்கும். ஆக, அதன் ஊடாக படைத்தல் தொழில் காண்பிக்கப்படுகிறது. இன்னொரு கரம் அங்குசம் ஏந்துகிறது. அது தீமைகளை அழிக்கும். எனவே அது அழித்தல் தொழிலின் அடையாளம். மோதகம் ஏந்திய கரம் அருளலைக் குறிக்கும். அபயகரம் மறைத்தலையும் துதிக்கை காத்தலையும் குறிக்கும் என்றும் விளக்குவர்.
பிள்ளையாரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடுவர். பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி ,ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி,த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.
ஆனால், தற்போது விநாயக சதுர்த்தி நாட்களில் விதம் விதமாக எல்லாம் பிள்ளையாரைப் பார்க்கிறோம். ஆனால், அவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து காட்சி தரவல்ல கடவுள் விநாயகர் தானே? ஆனாலும் அதற்காக கடவுளுக்கே உரிய அழகை அழியாத நிலையில் வடிவங்களை உருவாக்குவது மிகத் தவறானது. அவை கண்டிக்கப்படவேண்டியனவுமாகும். பஞ்சரத்னங்கள் பல உண்டு. அவற்றில் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கணேச பஞ்சரத்னம் என்கிற ‘முதாகரார்த்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்’ என்கிற ஐந்தும் இசை கூடுகிற போது அமைகிற அழகிருக்கிறதே.. இது பஞ்சரத்ன நாயகம் என்கிற பெருமை பெற்று விடுகிறது.
வேதத்தை ஏற்றுக் கொண்டவர்களான வைதீக இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்களும் பௌத்தர்களும் கூட விநாயகரை வணங்கி வருகிறார்கள். விநாயகரும் எந்தப் பேதமுமில்லாமல் எல்லொருக்கும் அருள் செய்கிறார். இவர் விண்வெளிப்பயணம் செய்தவரல்லவா?
தன்னை நினையத் தருகின்றான்
சைவத்திருமுறைகள் கண்டெடுக்கப்படுவதற்கு விநாயகப்பெருமான் காரணராக விளங்கினார் என்பது ஐதீகம். திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்து அதன் மூலமே கல்வி, கலை யாவும் அப்பிள்ளையாரிடமே கற்றவர் நம்பியாண்டார் நம்பிகள்.
அந்த நம்பியடிகளும் இராஜராஜனும் இணைந்து செய்த ஒப்புயர்வற்ற திருப்பணி தான் திருமுறைகள் கண்டெடுத்தமையும் அவற்றை முறைப்படுத்தியமையுமாகும். இதற்கெல்லாம் நம்பிகளின் உள் நின்று வழிகாட்டியவர் மூத்த பிள்ளையாகிய விநாயகர். இவ்வாறெல்லாம் தனக்கு அளப்பெருங்கருணை புரிந்த விநாயகர் மீது நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை பாடியிருக்கிறார்.
என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
என்பது முதலாயுள்ள இப்பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கன. இங்கே இப்பாடலில் ‘தன்னை நினையத் தருகின்றான்’ என்ற வரிகள் இன்பம் பயக்க வல்லன. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இத்துடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கது.
திருஞானசம்பந்தர் தேரழுந்தூர் வந்த போது சிவன் கோயிலைக் காட்டியவர் பிள்ளையார் தானாம். அது போல, திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அளித்த போது அதனை ஒழுங்காக வழங்கியவர் பிள்ளையார் தானாம். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை கூப்பிட்ட கூப்பிட்ட பிள்ளையாரையும், திருவாரூரில் அவருக்காக மாற்றுரைத்த கணபதியையும் பார்க்கலாம்.
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்
என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.
muruga-valli-pillaiyarதமிழ்க்கடவுளான முருகனின் அண்ணனாகிய பிள்ளையாரும் தமிழ்க்கடவுள் தான். ஆனால் சில மேற்றிசை அறிஞர்கள்(?) சில போலித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு அறிஞர்(?) சிலரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பிள்ளையார் மராட்டியக்கடவுள் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் அவர் தமிழருக்குத் தான் அதிகம் சொந்தக்காரர். விநாயகர் ஓங்கார வடிவம் என்று சொல்கிறோம். ஓ என்ற தமிழ் எழுத்தின் வடிவமாகவே அவர் முகம் அமையக் காணலாம். இது வேற்று மொழிகளில் காண்பதரிது.
பிள்ளையாருக்குரிய  பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன. இம்மோதகம் செய்  முறை தமிழ்நாட்டின் சிறந்த சமையற் கலையின் வடிவமாகவே இன்று வரை துலங்குகிறது. இலங்கையில் மோதகம் இல்லாத விசேஷங்களை காண இயலாது. மோதகம் செய் முறைமையை நோக்கின் இது ஒரு சமையற் கலையின் உன்னதப்படைப்பு என்பதும் புலப்படும்.
யானையும் தமிழ்நாட்டின் சேரதேசத்தின் முதன்மை விலங்கு.. ஆக, பழந்தமிழரின் பெரும் செல்வம். நால் வகைப்படையில் கஜ,ரத,துரக,பதாதி என்கிற போது முன் நிற்பது கஜமே. ‘மலைநாடு வேழமுடைத்து’ என்பதும் தமிழ்நாட்டுச் சிறப்பல்லவா? ஆக, வேழமுகனுக்கும் தமிழ்நாடே உரித்து. வாதாபி காலத்தில் திருச்செங்கோட்டுப் பிள்ளையாரை வாதாபி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கலாம்.
அனாலும் அதற்கு முன்னரே நிறைவான விநாயகர் வணக்கம் இருந்திருக்க வேண்டும். இது இப்படியிருக்க, சங்ககாலத்தில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் என்று ஒரு வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டின் தலைநகர் வஞ்சியில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் இருந்ததாகவும் அது கையிற் பாசத்துடன் இருப்பதாயும், அதர்மத்தை அழித்து நன்மையை அது நிலைநாட்டுவதாயும் குறிப்புக்கள் உள. இவை விநாயகர் வழிபாட்டின் அடித்தளமாக இருக்கலாம். பிள்ளையாரையும் பூதநாதன், கணநாதன் என்று சுட்டுவது ஈண்டு சிந்திப்பதற்குரியது.
இலங்கையின் அனுராதபுரத்தில் கிறிஸ்து பிறக்க முன் 2ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் இருகரங்களும் யானை முகமும் கொண்ட உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாவல என்கிற ஆய்வாளர் ஆய்வு செய்து கணநாதன் வடிவம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
எளிமையின் தெய்வம்
vinayaka-t
அறுகும் எருக்கும் பிள்ளையாருக்குரியன. வயல் வெளிகளில் தேடுவாரற்று கிடக்கிற மருத்துவப் பொருளான அறுகை பிள்ளையார் தன் தலையில் சாற்றிக் கொள்வதை விரும்புகிறார். அது போல, எருக்கமிலையை எவருமே நாடுவதே இல்லை.. வெள்ளெருக்கம் வேரில் கூட பிள்ளையார் உறைகிறார் என்று வழிபடுவர். எவரும் விரும்பாத அதனை தன் மிக உவப்பான வில்வமாகக் கொண்டு பிள்ளையார் மட்டும் கருணை செய்கிறார்.
தோர்பி கர்ணம் தான் வேழமுகப்பெருமானுக்கு மிக உயர்ந்த வழிபாடு. தோர்பி என்றால் கைகளினால் என்றும் கர்ணம் என்றால் காது என்றும் பொருள் கொண்டு கைகளால் காதைப்பிடித்துக் கொள்வதை இது குறிக்கும் என்பர். இப்படியே மும்முறை முழந்தாளழவு இருந்து எழுந்து இவ்வழிபாடடைச் செய்வர். இலவச உடற்பயிற்சியாக அமையும் இப்பயிற்சியால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதன் மூலம் குண்டலினி சக்தியிலும் எழுச்சி உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.
ஏற்றப்பாடல் ஒன்று
பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்
இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார். எனவே, அப்பெருமானை பெருவயிறராகக் காண்பது இவ்விடத்தும் சரியாகத் தெரியவில்லை.
பிள்ளையாரும் நகைச்சுவையும்
விநாயகர் தன் ஆடலைக் கண்டு நகைத்த சந்திரனைக் கோபித்து சாபம் கொடுத்து பின் அதே சந்திரனைத் தன் முடியில் சூடிக் கொண்டு பெருமை தந்தவர் என்பது புராணச் செய்தி. ஆக, நகைச் சுவையை என்றைக்கும் பிள்ளையார் விரும்பினார்.
இன்றைக்கு விநாயக சதுர்த்தி நாட்களில் சந்திரனுக்கும் பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இது விநாயகரின் அதிசய கருணையைக் காட்டும். சங்கடஹர சதுர்த்தி (தேய்பிறைச் சதுர்த்தி) களில் சந்திர தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
காஞ்சியில் விகடசக்கர கணபதியாகப் பிள்ளையார் இருக்கிறார். இக்கடவுளைப் போற்றியே கந்தபுராணக் காப்புச் செய்யுள் அமைந்திருக்கிறது. இவை காரணமாக பிள்ளையாருக்கு விகடராஜர் என்றும் பெயர் உள்ளது.
பிள்ளையார் மூஷிக வானராக விளங்குவதும் அவரது எளிமையை, எல்லாருக்கும் இரங்கும் பேருண்மையைக் காட்டுகிறது. இதை காளமேகப் புலர் காஞ்சியில் கண்டார். அவர் கடவுளர்களை நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். அதாவது மேலோட்டமாகப் பார்க்கும் போது நிந்தனை போல இருக்கும் அக்கவிகளில் உள்ளார்த்தம் போற்றுதலாயமையும். அவர் பாடுகிறார்.
மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்
இவ்வாறான சம்பவங்களுக்கும் இடங்கொடுத்துக் காக்கிற கணபதி நம் பிள்ளையார் தானே? திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும். 

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; tamilhindu.com  தி.மயூரகிரி சர்மா

புதன், 27 ஏப்ரல், 2016

சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?


சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?

கலைமகள் எனும் நாமகள் சரஸ்வதி

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.

அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.

காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.

மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்' தெய்வம். பிரம்மா ‘அன்பாபுலர்' தெய்வம். அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.

அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

சகல கலைகளுக்கும், கல்வி செல்வத்திற்கும் அதிபதியாகவும், அதி தேவதையாகவும் விளங்குபவள் சரஸ்வதி தேவி. கலைமகள், வாணி, பாரதி, காயத்ரி, வாகீஸ்வரி, சகலகலாவல்லி, நான்முகன் நாயகி, என பல்வேறு திருப்பெயர்களால் போற்றப்படுகிறாள். சைவ, வைணவ அடியார்கள் மட்டுமின்றி, ஜெயின் மற்றும் புத்த சமய மக்களாலும் வழிபடப்படுகிறாள் சாரதா, மானவி, சரஸ்வதி.

வித்யா, சின்மயி, ஞானவல்லி, ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞானப்பிராட்டி, நாமடந்தை, நாவேறு செல்வி, நாவுக்கரசி, நாமிசைக்கிழத்தி, கலைமகள், வாக்கின் செல்வி, வாக்குதேவி, வாக்கு வாதினி, அன்னவாகனி, சொல்மங்கை, சொல்லிருங்கிழத்தி என பல்வேறு நாமங்களால் நாமகள் பாவலர்களால் பாடப்படுகிறாள். ஆயகலைகள் அனைத்திற்கும் தலைவி, இந்த வீணா வாணியே.

பிரமனின் மனைவி என்பதால் பிராமி என்றும், கலைகளின் பிறப்பிடமாக விளங்குவதால் சரஸ்வதி என்றும் தேவி அழைக்கப்படுகிறாள். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்தாமரையில் அமர்ந்து, வீணை ஏந்தி நாதம் எழுப்பியவண்ணம், பின்வலக்கரத்தில் அக்ஷ மாலையும், முன்வலக்கரத்தில் வியாக்கின முத்திரையும், பின் இடக்கரத்தில் வெண்தாமரையும், முன் இடக்கரத்தில் சுவடியும் தாங்கி எழிலுற வீற்றிருப்பாள் என ஆகமங்கள் கூறுகின்றன.

நான்முகன் நாவில் கலைமகள் குடியிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே, ஞானம் அருளுபவர்கள். அதனால் ஜெபமாலை, சுவடி ஏந்தி இருவருமே காணப்படுகிறார்கள். ஆசை அழிந்தால் தான் ஞானம் பிறக்கிறது எனவே, இருவருமே ஜடாமகுடம், ஸ்படிக மாலை, சந்திரகலை சூடி, ஆணவம் அழிக்கும் மூன்றாம் நெற்றிகண்ணை கொண்டுள்ளனர் என வேதம் குறிக்கின்றது.

பிரமனுக்கு தனி கோயில்கள் இல்லாவிட்டாலும், பிரம்மனின் நாயகி கலைமகளுக்கு நாகை மாவட்டம், கூத்தனூரில் தனிக்கோயில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் வழிபடப்பட்ட இந்த தேவி, கலைகளை வழங்கும் வரப்பிரசாதி. சரஸ்வதி பூசை அன்று தேவியின் திருப்பாதம் வெளிமண்டபம் வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், அதை பக்தர்கள் மலராலும், குங்குமத்தாலும் அர்ச்சித்து வழிபடுவர். தேர்வில் வெற்றி பெற, கலைகளில் தேர்ச்சி பெற, விரும்பிய துறையில் பயில, பணி புரிய வரம் அருள்பவள் சரஸ்வதியே. இங்கு அவளை வழிபட வேண்டிய யாவும் உடனே கிட்டும்.

சரஸ்வதி தேவியை ரோமானியர்கள் மினர்வா என்றும், கிரேக்கர்கள் ஆதீனே என்றும் தேவதைகளாக உருப்படுத்தி வணங்கினர். மூன்று முகமும், ஆறு கரங்களும் கொண்ட மன்சூஸ்ரீ என்ற பெயரால் பௌத்தர்கள் வணங்குகிறார்கள். ஜைனர்களும் 16 வித்யாதேவியருடன் கூடிய சரஸ்வதியை வழிபடுகிறார்கள். சிவன் ஆலயங்கள் பெரும்பாலானவற்றில் சரஸ்வதி தேவி கோஷ்ட தேவியாகவும், தனி சந்நிதி இறைவியாகவும் இருக்கிறாள். மற்ற தெய்வ கோயில்களிலும் மாடங்களிலும், கோபுரங்களிலும், நுழைவாயில் சிற்பங்களிலும் என எங்கும் சரஸ்வதி காணப்படுகிறாள். 

திருச்சிற்றம்பலம், ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

திருவாசகத்தி்ல் மணிவாசகர் காட்டும் வரலாறுகள்

மாணிக்கவாசகர் தன் திருவாசகப்பாடல்களில் இறைவனை போற்றி அவன் வீரதீரச் செயல்களை தன் பதிகப்பாடல் வாயிலாக பாடி அவன் திருவிளையாடல்கள் மற்றும் தன் பக்தர்களுக்காக காட்சி தந்தது, அருள் வழங்கியது பற்றியும், இதன் மூலம் அவரை போற்றி நைந்து ஊருகி பாடிய பாடல்கள் வாயிலாக நாம் கண்ட வரலாறுகளை இங்கு காண்போம்.

1, கிராத வேடம்
 தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  " இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் " என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாற தனிற் சைவனானது.
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்

முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, " யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  " என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, " குறுகு, குறு " கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.
   இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.

6, புலி முலை புல்வாய்க்கு அருளியது
  ஒரு காட்டில் ஒரு பெண்மான் தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு, நீர் பருகும் போது வேடன் ஒருவன் அம்பால் கொல்லப்பட்டு மாண்டது. தாயை இழந்த மான் கன்றை ஒரு பெண்புலி பால்கொடுத்து வளர்க்கும் படி சிவபிரான் அருளினார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் காணலாம்.

7. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
  இராவணன் மனைவி வண்டோதரி சிவபக்தி மிக்கவள். அவர் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுபவள். தான் விரும்பிய போதெல்லாம் சிவபிரான் தனக்கு காட்சி தந்தருள ேவண்டு மென வரம் பெற்றவள். ஒரு நாள் தனது பள்ளி யறையில் இருந்து கொண்டே சிவதரிசனம் காண விரும்பினாள். ெபருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய் காட்சி கொடுத்தார். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் உரத்த குரலில் தோத்திரம் செய்தனள். இந்த ஆரவாரத்தை அடுத்த அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம் என வினவிக் கொண்டே அங்கு வர இறைவர் குப்பாய ஆடவன் உருவை நீக்கி குழந்தை உருவெடுத்தனர்.
 அங்கு வந்த ராவணன் " இக் குழந்தையின் ஆரவாரம் தானா? என்று வினவினான். வண்டோதரி தனது சேடி ஒருத்தி மறு நாட்காலையில் வருவதாகச் சொல்லி அக் குழந்தையை தன்னிடம் அடைக்கலமாக கொடுத்துச் ெசன்றனள் எனக் கூற  இலங்ேகசன் தன் பள்ளி அறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாகி மறைந்தது.
    இதன் குறிப்பு "எவ்வுருவும் தன்னுருவாய்  இலங்ைக அழகமா வண்டோதரிக்கு பேரருள் இன்ப மளித்த பிரானை "
என குயில் பத்து பதிகத்திலும், பள்ளிக்கு பாயத்தர்  என அன்னை பத்து பதிகத்திலும் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என திருவெம்பாவையிலும் பித்த வடிவு கொண்டு இவ்வுலசிற் பிள்ளையுமாய்  உத்திரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்த வா  என்று திருப்பூ வல்லியிலும் காணக் கிடைக்கின்றன.

8. தாயான தத்துவன்  வரலாறு
 சுவாமி இடத்தில் அன்பு மிக்க ஒரு மாது பிரசவ காலத்தில் தன் தாய் வந்து உதவப் பெறாமல் சங்கடப்படும் ேபாது, சுவாமியே அவள் தாய் போல் வந்து மருத்துவம் பார்த்து ஆதரித்து பிரசவம் பார்த்தார். என்பது வரலாறு  அந் நிகழ்வு நடந்த இடம் திருச்சிராப்பள்ளி, இதனால் சுவாமிக்கு தாயுமானவன் எனப் பெயர் வந்தது. இதுவே தாயான தத்துவன் வரலாறு.

9. இந்திரனை தோள் நெரித்தது
  முன்பு ஒரு காலத்தில் இந்திரன் சிவபிரானை மதியாமல் திருமாலை வைத்துக் கொண்டு யாகம் ெசய்ய ஆரம்பித்தான். இதனால் சிவபிரான் கோபம் முற்று இந்திரனை மமதையை அடக்க அவனது தோளை நெெரித்தார்.  இதன் வரலாறு திருவுந்தியார்  பாடலில் காணலாம்..

10. அத்தி உரித்தது.
  பிரேதவரிடம் வரம் பெற்ற கயாசுரன் என்பவன் ேதவர்களை அழிக்க தொடங்கினான். பெருமான் யானை உருவம் கொண்ட அவனை கிழித்து யானையின் தோலை போர்வையாக ேபார்த்தி கொண்டார்.

11. பாலகனார்க்கு பாற்கடல் ஈந்தது
  உபமன்யு முனிவர் குழந்தை பருவத்தில் பால் வேண்டி அழுத போது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அவர் பருக  வரவழைத்து தந்தனர்.
  " பாலுக்கு பாலகன் வே்ண்டி அழுதிட  பாற்கடற் ஈந்த பிரான் "  என்ற பாடல் வாயிலாக அறியலாம்

12. பிரமன் தலை அறுபட்டது
  பிரமனுடைய தான் தான உயர்ந்தவன் என்ற அகந்தயை அடக்க பிரான் பிரமனுடைய உச்சித்தலையில் உள்ள வாய் சிவபிரானை இகழ்ந்து பேச பெருமான் வைரவர் கடவுளை ஏவி அவர் உச்சி தலையை நகத்தால் களைந்தனா்.

13.  வெள்ளம் தரும் ........  வளளல்
  சிவபுரம் என்னும் ஊருக்கு  திருப்பெருந்துறை என்ற  பெயரும் உ்ண்டு. சிவபுரத்து அந்தணர்களுக்கு பாண்டிய மன்னன் அளித்த நிலங்களை சில ஆண்டுகளுக்கு பின் அவ் வூர் அதிபன் என்ற " லுண்டாக்கன் " என்பவன் ைகப்பற்றிக் ெகாண்டான். அந்தனர்கள இந்த அநீதியை அப்போதுள்ள பாண்டிய மன்னனிடம் முறையிட்டனா். இந்த விசாரனையில்  அந்த நிலங்கள் அனைத்தும் தனக்கு உரியது என்றும், இதற்கு உறுதி சான்றாக இந் நிலங்களில் எங்கு , எவ்வளவு ஆழத்தில் வெட்டினாலும், நீர் வராது என்று வாதித்தான். அப்போது அந்தணர் பிள்ளைகளுக்கு வேத பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சாட்சியாக வந்து, இந்த  நிலங்களில் எங்கு வெட்டினாலும், ஒரு முழ ஆழத்திற்குள் தண்ணீர் வந்து விடும் என்று கூற, அதன்படி ஒேர  வெட்டில் நீர் பொங்கி கிளம்பி  எங்கும் வெள்ளமாய்
பரவியிற்று இதைக்கண்ட  லுண்டாக்கன் அச்சம் உற்றான். இவ்வேளையில்  சாட்சி சொன்ன வாத்தியார் யாரும் காணா வண்ணம் மறைந்தார்.. அந்த வாத்தியார் சிவபிரானே என தெளிந்த பாண்டியனும் அந்தணரும் வியப்புற்றனர். எங்கும் வெள்ளமாய் பரவிய  காரணத்தால் சிவபுரம் ெபருந்துறை ஆயிற்று. இதுவே தற்போது திருப்பெருந்துறை என வரக் காரணமாய்  ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவய ஓம்
நன்றி.  திருவாசக ஒளி நெறிக்கட்டுரை
ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஸ்தபதி கணபதி (ஓர் பார்வை)

ஸ்தபதி கணபதி   (ஓர் பார்வை)


(The architect of the memorial is South Indian traditional architect V. Ganapati Sthapati, who is also the architect of the Thiruvalluvar Statue at Kanyakumari.[1]& Valluvar kottam in chennai)

 
இக்கலியுக காலத்தில் சிற்பக் கலையின் ஆனிவேராக இருந்து இந்து சைவ சமயத்தின் ஆலமரமாக பரவச்செய்து, இறைவரின் உருவ, அருவுருவ வழிபாட்டிற்கு வித்தாக ஆகம, வேத விஞ்ஞான அறிவியல் நுட்பத்தோடு பல கோவில்கள் கட்டியும், இந்து மதம் தழைக்க செய்த ஆன்மீக குரு கணபதி ஸ்தபதி ஆற்றிய பணிகள் ஏராளம், கடல் கடந்தும், நம் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம், சிற்ப வேலைகளுடன் திருக்கோவில் பணியினை செய்து சிறப்பு பெற்றவர். தமிழக வரலாற்றில், கன்னியகுமரியில் உள்ள திருவள்ளுவர் பெருஞ்சிலையும், சிங்காரச் சென்னையில் அமைந்த அழகுமிகு வள்ளுவர் கோட்டமும் இவரின் முத்திரை பதிக்கும் வரலாறறு சின்னங்களாகும்.
   [உலகெங்கும் கணக்கற்ற தெய்வத் திருவுருவங்களையும், திருக்கோயில்களையும், கலாசார நினைவுச்சின்னங்களையும் உருவாக்கிய சிற்பக் கலை வித்தகர் வி.கணபதி ஸ்தபதி அவர்கள் செப்டம்பர்-6ம் நாள் சென்னையில் மரணமடைந்தார்.]


 அந்தக் காலத்தில் வைத்தியநாத ஸ்தபதியின் சிற்ப வேலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவர்களின் மூதாதையர்களே,தஞ்சை பெரியகோவி்ல், மற்றும் சிவகங்கை சமஸ்தானம் மருதபாண்டியர்களின் வரலாற்று காளயார்கோவில் மறறும் பிள்ளையார்பட்டி கோவில்கள் கட்டிய பரம்பரையினர் , விஸ்வகர்ம பாரம்பரியத்தில் வந்த ஸ்தபதியின் குலம் இம்மண்ணை ஆண்ட சுதேச மன்னர்களால் மரியாதையுடன் நடத்தப்பட்டு வந்த குலம். ராஜ ராஜ சோழன் முதல் மருது சகோதரர் வரை இந்த மண்ணில் ஸ்தபதிகள் ஆன்மிக கலை கோவில்களின் அறிவியல் ஆச்சாரியர்களாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். காலனிய காலத்தில் இந்த அரச மரியாதைகள் தளர்வுற்று தாழ்ந்த நிலையிலும் சிற்ப அறிவியலை காப்பாற்றிய வாழையடி வாழையான குலத்தில் வந்தவர்தாம் வைத்தியநாத ஸ்தபதி.

விடுதலைக்கு பிறகு அந்த ஸ்தபதியின் கலைத்திறனை அவரிடமிருந்த பாரம்பரிய அறிவியல் திறனை கண்டறிந்தார் ஒரு அரசியல் தலைவர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மனதில் அன்று இந்த பாரம்பரிய அறிவியல் ஆன்மிக கலையில் தலைமுறைகள் அறுந்துவிடாமல் குரு சீட பரம்பரை ஒன்றை வளமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. 1957 இல் ஸ்தபதியின் ஞானம் ராஜாஜிக்குள் ஏற்றிய பொறி அரசாங்க சிற்பக் கலை பயிற்சி மையமாக உருவானது. அதன் தலைமை பொறுப்பு வைத்தியநாத ஸ்தபதிக்கு வந்தது. 
   அந்த வைத்தியநாத ஸ்தபதியின் மைந்தன்தான் புகழ் பெற்ற வி.கணபதி ஸ்தபதி. செட்டிநாட்டு பிள்ளையார் பட்டியில் வைத்தியநாதன் / வேலம்மாள் தம்பதிகளின் மூத்த குமரர் தான் கணபதி ஸ்தபதி,1961 இல் இருந்து 27 ஆண்டுகள் இந்த கலை கோவிலின் ஆன்மிக அறிவியல் வளாகத்தின் பொறுப்பில் இருந்த கணபதி ஸ்தபதி அப்பொறுப்பினை ஒரு தவமாக நடத்தினார். உலகமெங்கிலும் தமிழ் இந்துப் பண்பாட்டின் சின்னங்களாகவும் ஆன்மிக அறிவியல் மையங்களுமாகவும் திகழும் கோவில்களை உருவாக்கினார். வாஸ்து சாஸ்திரத்தை வானவியலுடன் இணைத்தார். முதல் முன்னோடிகளுக்கே உரிய சில அதீதங்கள் அவரிடம் இருந்தன. ஆர்வ மிகுதியால் அவர் செய்த ஒருசில ஊகங்கள் அறிவியல்பூர்வமாக தவறாக இருக்கலாம்; ஆனால் அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு பரந்து பட்ட உலகம் தழுவிய பார்வை அவருக்கு இருந்தது. அதே சமயம் அவரது கால்கள் தமிழ் பாரம்பரியத்திலும், அவரது தொழில் தருமத்திலும் வேரூன்றி இருந்தன.

ஸ்தபதி ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு இயக்கம். மகாபலிபுரத்தில் வாஸ்து வேத அறிவியல் மையத்தை (Vastu Vedic Research Foundation) அவர் உருவாக்கினார். மயனை உலக ஸ்தபதிகளின் ஆதி குருவாக அவர் கருதினார். வாஸ்து அறிவியல் பிரபஞ்ச சூட்சுமங்களை கல்லில் வடிக்கும் ஒரு இசைவியக்கம் என அவர் கருதினார். அவரது வார்த்தைகளில்,

”வஸ்து மற்றும் வாஸ்து குறித்த இந்திய அறிவியல் இப்பிரபஞ்சத்தின் கணிதத்துவ அடிப்படையை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதுவே ஒரு கணிதச் சமன்பாட்டின் வெளிப்பாடு. கணித்த்தின் ஆகச்சிறந்த சாத்தியம் சிற்பமே என்கிறார் மயன். … வாஸ்து சாஸ்திரங்கள் கோவில் கலையை இறைவடிவமாகவே உருவாக்குகின்றன.

’ப்ரஸாதம் புருஷம் மத்வா பூஜயேத் மந்த்ர வித்தம:’ (‘Praasadam Purusham Matva Poojayet Mantra Vittamaha’)

என்று சொல்லும் சில்ப ரத்தினம். எனவே கோவிலே வணங்கப்பட வேண்டியதாகும். இந்த அலகின் அளவுகோலே பிரக்ஞைக்கு வடிவம் அளிக்கிறது. அதுவே ஸ்தூல சூட்சும வடிவங்களை கால-வெளியின் கணிதத்தால் சமைக்கிறது. இதுவே அனைத்து வாஸ்து சாஸ்திரங்களின் அடிப்படையாகும்.”


தென் அமெரிக்க பண்பாட்டின் கட்டிடங்களுக்கும் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலைகளுக்குமான தொடர்பை அவர் சுட்டியிருக்கிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை எளிதாக மறுத்துவிடுவார்கள். ஆனால் ஒருவித அடிப்படை மன ஒத்திசைவு இந்த இரு பண்பாடுகளுக்கும் இருந்திருக்க கூடுமா?

காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகளை உலகிலுள்ள பூர்விக பண்பாடுகள் அனைத்துமே அனுபவித்தன. ஆனால் அதில் பிழைத்து நிற்கும் ஒரே பண்பாடு இந்து பண்பாடுதான். அந்த இந்து பண்பாட்டிலும், அன்னிய படையெடுப்பால் ஆலயங்கள் அழியாமல் தப்பி பாரம்பரிய ஆலயங்கள் கட்டும் கலை-அறிவியல் பிழைத்திருப்பது தமிழ் மண்ணில்தான். எனவே தமிழ் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு உலகமெங்கும் உள்ள பூர்விக பண்பாடுகளுடன் ஒரு ஈர்ப்பும் ஆதரவுத் தன்மையும் இருப்பது இயல்பே. இப்பார்வையில் பார்க்கும் போது ஸ்தபதியின் மாயன் பண்பாட்டுக் கோட்பாட்டை நாம் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தமிழ் இந்து பண்பாட்டுக் கட்டிடக் கலையைப் போல அந்த தென்னமெரிக்க ஆன்மிக கட்டிடக் கலைகளையும் பாதுகாத்து பேண வேண்டியது ஒருவிதத்தில் நம் கடமையும் கூட. இதிலிருந்துதான் அது வந்தது என சொல்லும் போக்கு அறிவியல் தன்மை அற்றதும் தேவையற்றதும் ஆகும்.

அவருக்கு தமிழ் ஹிந்துக்களாக அஞ்சலி செலுத்த வேண்டியது நம் கடமை. உண்மையான அஞ்சலி உலகமெங்கும் இருக்கும் பூர்விக பண்பாடுகளின் ஆன்மிக கலை அறிவியல்களை மீண்டும் வளர்த்தெடுப்பதில் உள்ளது. 

   காஞ்சிப் பெரியவர் பற்றி கணபதி ஸ்தபதி…
(தென்றல் மாத இதழ் – மார்ச் 2009)


சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில் மலைமந்திர் சுவாமிநாத சுவாமி கோவில், ஹவாயில் உள்ள இறைவன் கோவில் – இவற்றில் எதைப் பார்த்திருந்தாலும் நீங்கள் கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனைப் பார்த்திருக்கிறீர்கள். தவிர, லண்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்தபதியார், அவர்களுக்குக் கோவில்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 82 வயது ஆன போதிலும் இன்னும் படைப்பும் ஆய்வும் தொய்வில்லாமல் செய்துவருகிறார்.

மகரிஷி மகேஷ் யோகியின் மஹரிஷி வேதப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ‘Building Architecture of Sthapatya Veda‘, ‘Quintessence Of Sthapatya Veda‘, ‘Who Created God‘ போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்ப கலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற இவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்தபோது…

கே: காஞ்சிப் பெரியவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களைச் சொல்ல முடியுமா?

ப: பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான். சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம்.

“அமோகமாக இருப்பாய்” என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்.

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.

சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று ‘வா என்னுடன்’ என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், ‘இங்கேயே இரு’ என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், ‘எங்கே அந்தப் பையன்?’ என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். ‘இங்கே இருக்கிறேன் சுவாமி’ என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், ‘உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்’ என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, ‘இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ’ என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. ‘ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். ‘இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, ‘எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது’ என்று கூறி சிலாகித்தார். ‘காமகோடி‘ என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

– கணபதி ஸ்தபதி ( அவருடைய குறிப்பு)

கணபதி ஸ்தபதி பெற்ற விருதுகளும் வெகுமதிகளும்

AWARDS & RECOGNITION

PADMABHUSHAN award from Govt of India.
National award for Master craftsmanship by the President of India, in 1973.
Professorship conferred by Madras University in 1978.
Nallaasiriyar Virudhu (Best teacher award) of Tamilnadu Government in 1985.
Kalai Kuzhu Chemmal (fellowship) with cash award by State Lalitha Kala Academy, Madras in 1985
Tulsi Sammaan Award of Madhya Pradesh, 1989 (Rupees one lakh equally shared by three artists)
Emeritus Professor of the Ministry of Human Resource, (Department of Culture), Government of India, New Delhi from 1992 – 1994
Honorary Fellowship of the Indian Institute of Architects (IIA), 1993.
Honorary Doctoral Degree in Vedic Science by Maharishi Vedic University, Holland on 29.10.95.
Adeenam Sthapati, Kauai Adeenam, Saiva Siddhanta Church, Hawaii, USA from 1982 – till date.
Blessed and nurtured by Paramacharyal of Kanchi, Paramacharyal of Sringeri, Paramacharyal of Ahobila mutt.
Rajah Sir Muthiah Chettiar Birthday Commemoration Award, Rupees 1.00 lakh in 1997.
Honoured by Poojya Swami Dayananda Saraswati for designing a Siva Temple at Arsha Vidya Gurukulam, Anaikatti, Coimbatore in Chennai on 13.10.98
Recipient of the Kamban Adipodi Memorial Award by the Kamban Kazhakam, Chennai, awarded on the occassion of their Silver Jubliee celebrations, on the 11th of August 2000.
Recipient of the Kalaignar Award by the Azhvarkal Aayvu Mayyam on the 20th of August 2000. Cash award of Rs.25,000/-
Kalaimamani Award by the Iyal Isai Nadaka Mandram, Chennai on the 25th of November 2000.
Recipient of the ‘Bharathi Award’ instituted by the Vaanavil Cultural Foundation, Chennai on the 9th of December 2000.
Recipient of Gnanaoli Ambassador for Peace Award by VGP Temple of World peace, Chennai, on 18th November 2001.
Recipient of The Bhishma Award of The Ashram Group of Schools and Colleges, Chennai, on 3rd December 2001.
Recipient of Kapilavanar Award conferred by Thirukkovalur Cultural Forum, Cuddalore installed after the renowned Tamil poet Kapilar of Sangam age, on 19th July 2002.
Recipient of Shilp Guru conferred by the office of the Development Commissioner (Handi Crafts), Ministry of Textiles, Govt. of India on the
special occasion of the Golden Jubilee of Handi Crafts Resurgence in India, New Delhi, 2002.

Countries visited on research schedule: 
Germany, Australia, Holland and Central and South America, (Maayan land).


தகவல் ; http://www.tamilhindu.com/  / கணபதி ஸ்தபதி கட்டுரை
தகவல் தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

திங்கள், 25 ஏப்ரல், 2016

ஸ்ரீராமனின் தோஷம் நீங்கிய தலம்

ஸ்ரீராமனின் தோஷம் நீங்கிய தலம்
இராமேஸ்வரம்

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங் கள் உள்ளன. அதில் 11 லிங்கங்கள் வடநாட்டில் உள்ளன. மீதி ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ளது. ஸ்ரீராமனே சிவலிங்கம் செய்து சிவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் இது சைவம் மற்றும் வைணவர்கள் இணைந்து போற்றும் திருத்தலமாக விளங்குகிறது. 21 பிரதான சந்நிதிகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் 22 முக் கிய தீர்த்தங்களும் உள்ளன. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியால் முப்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இத்திருக் கோயிலின் மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது. 1212 தூண்கள் கொண்டது இந்தப் பிராகாரம்.

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம்

அம்பாள் இத்திருத்தலத்தில் பர்வதவர்த்தினி என்ற திருநாமம் கொண்டு விளங்குகிறாள். அம்பாளின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. பர்வதவர்த்தினி அம்பிகையை சித்திரை வருடப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியின் பிராகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் பெருமாளை தரிசிக்கலாம்.

பாலாபிஷேகம் நடக்கும் ஸ்படிக லிங்கம்


கோயிலின் முதல் பிராகாரத்தில், சீதாதேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மணல் லிங்கத்திற்கு ஸ்ரீராமபிரான் பூஜை செய்யும் சந்நிதி உள்ளது. ராமநாத சுவாமியின் கர்ப்பகிரஹத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. அபூர்வமானதும் சக்தி வாய்ந்ததுமாகக் கருதப்படும் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரையும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

ஸ்ரீராமனுக்கு தோஷம் நீங்கிய தலம் என்பதால் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தொன்றுதொட்டு தொடர்பு இருந்து வருகிறது. காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரம் வந்து அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணலும் தீர்த்தமும் எடுத்துக்கொண்டு காசிக்குச் செல்ல வேண்டும். காசியில் கங்கை தீர்த்தத்தில் ராமேசுவரத்து மணலை போட்டு விட்டு, அக்னி தீர்த்தம் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு, காசியிலிருந்து கங்கையின் புனித நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதை முழுமையாகச் செய்து முடித்தால் தான் காசி யாத்திரையின் பலனையும் முழுமையாக அடையலாம்.

மன்னர் வழி மரபு

 சேதுச் சீமையின் மன்னர்களாலும் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தாராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது இத்திருக்கோயில். இதனால் மன்னர் குடும்பத்தினரும் ஜமீன்தார் குடும்பத்தினரும் இங்கு பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் சுவாமி, அம்பாள் முதல் பிரகாரம் முதலியவை கி.பி. 1900-ல் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தாரால் பெரும் பொருட் செலவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

சனி, 23 ஏப்ரல், 2016

பாட்டி வைத்தியம் பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்சிலை!


பாட்டி வைத்தியம்
பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்சிலை!


மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை, துளசியைப் போன்றே தெய்வீக தாவரமாகும். பூக்களுக்கு மணம் உண்டு, அதேபோல சில இலைகளும் நறுமணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்பு பெற்றது திருநீற்றுப்பச்சிலை.

உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. நறுமணம் வீசும் இந்த செடியின் இலைகளை அரைத்து பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும். இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும். திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.

தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது, அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்த இலைச்சாற்றின் சில சொட்டுகளை விட்டால் நிவாரணம் கிடைக்கும். இதன் இலையை முகர்ந்து பார்த்தாலே மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து பூசினால் பலன் கிடைக்கும். குழந்தை உண்டான பெண்கள், பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவ கால வலி விலகும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.


வெயிலைத் தாக்குப் பிடிக்க.....!


வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.

நன்றி ; விகடன் மற்றும் க்ஷெல்த் டிப்ஸ
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சாதனைக் கோர் பாதை


சாதனைக் கோர் பாதை


உங்களுக்குள் ஆத்மா என்ற மாபெரும் சக்தி இருக்கிறது என்பதை உணருங்கள்,
சுவாமி விவேகானந்தர் கூறுவதைக் கவனியுங்கள், " உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வர முடியுமானால் , நீயும் என்னைப் போல ஆக முடியும் "
" நீங்கள்செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள்அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள்,அழியாத திருவருளைப் பெற்றவரகள் "

விவேகானந்தரின் கூற்றுப்படி உங்கள் சக்தியை வெளிக் கொண்டு வர உங்கள் வாழ்வில் சிரித்து, மகிழ்ந்து வாழ்ந்திடுஙகள் உங்கள் ஆத்மா உங்களின் சக்தியை வெளிப்படுத்தும்.
நாம் ஒரு பழக்கடைக்கு செல்கிறோம், அங்கு நல்ல முதிர்ந்த பழங்களும் இருக்கும், சேதமடைந்த பழங்களும் இருக்கும், நமக்கு பிடித்த இனிமையான பழங்களைதான் வாங்குகிறோம், அழுகிய பழங்களை நாம் வாங்குவதில்லை, அதே போலத்தான் வாழ்க்கை என்னும் கடையில் பல பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். 
உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, நல்லெண்ணம், உண்மை, பரிவு உதவி என்று பல நல்ல பழங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதே கடையில் அழுகிய பழங்களை எடுத்து குறைந்த விலைக்கு தனியே வைத்திருக்கிறார், அந்த பழங்களுக்கு பெயரிடுவோமானால், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், ஏமாற்று, பொய், காமம், வஞ்சம்,என்றெல்லாம் அமையும், இந்த அழுகிய பழங்களை வகை வகையாக அந்தக் கடையில் பல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம், என்பது நம் கையில் தான் இருக்கிறது.நாம் உற்சாகமாக இருக்கலாம், பிறரையும் இந்த உலகையுமே உற்சாகமூட்டலாம். மாறாக நாம் பிறரையும் துயர எண்ணங்களில் மூழ்கடித்து நம் சோகத்தின் சுமைதாங்கியாக பிறரையும் மாற்றி அனுப்பி வைக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் தான் செயல்பட ஆசைப்படுகிறார்கள். வலிமையுடன்தான வாழத்தான் பிரியப்படுகிறார்கள். ஆனால்பல சமயம் சந்தேகமும் பயமும் அவரகளை அறியாமல் உள்ளே புக, அவர்களது சிந்தனையின் தடமே மாறிப் போய் விடுகிறது.

கோபமாக இருப்பதை கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை.துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை. காரணம் அவன் துக்கத்திலேயே மூழ்கி விடுகிறான்.
வஞ்சகமும் பொறாமையும் கொண்டவன் அந்த எண்ணங்கள் அந்தஉணர்வுகள் தன்னை ஆட்கொண்டிருப்பதாக உணர்வதில்லை. அதுவாகவே மாறி விடுகிறான்.
துக்கத்தில் இருக்கும் போது " நான் துக்கமாக இருக்கிறேன் " என்ற விசயத்தை புரிந்து கொண்டோ மானால் நாம் மாறுபட்ட மனிதனாக அடுத்த கணமே மாற இயலும்.
அடடா நான் துக்கத்தில் இருக்கிறேனா? அதுதான் என்னை முடக்கி இருக்கிறதா? அதனால் தான் மூஞ்சியை உர் என்று வைத்துக்கொண்டு சோகமாக நிற்கிறேனா? என்று யோசித்தோமானால், நமது துக்கத்தை ஒரு மூன்றாவது மனிதன்போல பார்த்து பரிசீலித்து அதிலிருந்து மீள முடியும்.

வாழ்க்கையின் லட்சியம்

வாழ்க்கை என்னும் கடையில உற்சாகத்தையும் நம்பிக்கையையும்தான் வாங்க வேண்டும், அதற்காகத்தான் வந்திருக்கிறோம், அதுதான் இந்த பிறவியின் தாத்பரியம், மாறாக உற்சாமிழந்து துயரத்தில் இருந்தோமானால், இந்த உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கும். 
உற்சாகத்தை வாங்குவது மேல், உற்சாகத்தை அனுபவிப்பது மேலானது, நம்பிக்கையை வாங்குவது நல்லது, நம்பிக்கையுடன் செயல்படுவது மேல், என்று வாழ்க்கையின் தாத்பரியத்தை - வாழ்வின் லட்சியத்தை நாம் தெளிவா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம்ஒன்றை ஒன்று நம்பி சார்ந்து, ஒருவருக்கொருவர் உதவியாக மகிழ்வுடன் வாழத்தான் படைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி உதவியாக இருந்து மகிழ்வுடன் வாழ்ந்துவிடடு அல்லவா போகவேண்டும்? ஏன் உற்சாகத்தை தேர்ந்தெடுக்க மறுக்கிறோம்? சிறு சிறு விஷயங்களுக் கெல்லாம் கலங்கிறோம்.ஏன் நம்பிக்கையுடன் செயல்பட மறுக்கிறோம்? சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தேகப்படுகிறோம்? 
இதனை மறந்து பிராணிகளிடம் நட்புறவு கொண்டாடுவோம், மனிதர்களிடம் புன்னகையுடன் பேசுவேன், உதவுவேன், ஆகா என்ன அற்புத உலகம் என்று நீங்களே கொஞ்சம் சொல்லிப்பாருங்கள் . சொர்க்கம் வேறல்ல, நாம் உருவாக்குவது தான் சொர்க்கம், நமது மனநிலைதான் சொர்க்கத்தை உருவாக்கிறது. அல்லது நரகத்திற்கு கொண்டு வருகிறது. எது வேண்டும் என்று தீர்மானிப்பதில் என்ன கஷ்டம்?

நம்பிக்கை
அதேபோல் தான் இந்த நம்பிக்கை கொண்ட மனம். என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார்,நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன் என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்வடும்போது அது நம்பிக்கையாக வலிமை தருகிறது. வலிமை பெற்ற எண்ணம் நம்மை செயல் புரியத் தூண்டுகிறது. எண்ணம் நம் செயலால் சாதனை ஆக மாறுகிறது. நம்பிக்கைதான் வாழ்வின் ஆணி வேர். வாழ்வில் முக்கியமான இரண்டு விஷயங்கள் எவை எவை என்று ஆராய்ந்தார்கள் சில மனவியல் அறிஞர்கள். அது உற்சாகம் - நம்பிக்கை என்ற இரண்டு விஷயங்கள் தான் வாழ்வின் ஜீவாதாரம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். எனவே நல்ல வழிகாட்டி உற்சாகமும் நம்பிகையும் தான். 

நன்றி எஸ் உதயமூர்த்தியின் சாதனைக்கோர் பாதை
தொகுப்பு . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்