திங்கள், 26 டிசம்பர், 2022

உழவாரப்பணி

 https://www.facebook.com/groups/666661527155103/permalink/1132746097213308/









இன்று 25,12,22 ஞாயிறு திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் இராஜபாளையம் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்புடன் சேர்ந்து மதுரை மாணிக்கவாசகரரின் பூர்வீகமான திருவாதவூர் என்னும் சிவத்தலத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக பெருமானின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யப்பட்டது கோயிலை சுற்றியுள்ள இடம் மற்றும் தீர்த்த கிணறு அமைந்த பகுதியில் முட்புதர் மற்றும் வேண்டாத கழிவுகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது, பின் அங்கு பக்கத்திலுள்ள அமைந்துள்ள அருள்மிகு வேதவல்லி சமயோத திருமறை நாதர் ஆலயம் சென்று வழிபாடும், அதன் பின் மதுரை சொக்கநாதர் திருக்கோயில் சென்று அருள்மிகு மீனாடசி சுந்தரேரசர் திருக்கோயில் தரிசனமும் செய்து இன்றைய உழவாரப்பணி சிறப்புடன் முடிக்கப்பட்டது

நன்றி,  சிவ, அய்யனார் அவர்கள் விருதுநகர் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்ட அமைப்பு, மற்றும் மதுரை மாவட்ட உலக சிவனடியார் திருக்கூட்டம்

வியாழன், 24 நவம்பர், 2022

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

 

ஆன்மாவின் முத்தி - வீடு பேறு உய்ய அகப்பூசை

ஒரு ஆன்மாவானது தன் உலக வாழ்வை முடித்து வீடு பேறு அடைய தவம் அதாவது சரியை, கிரியை, யோகம் ெசய்து பின் அதன் ஞானம் அடைந்து வீடுபேறு அடைய புறபூசை செய்வதும், அதனால் குருவே ஞானாசிிரியராக வந்து முத்தி பேறு அருள்வதும் உண்டு, இத்துடன் அவ்வான்மா  அகப்பூசையும் செய்து நிட்டைகூடி சிவப்பேறு பெறுவதும் உண்டு. புறப்பூசையால் இறைவனை அடைய சாதா வண்டியில் சென்றால் அகப்பூசையும் செய்தால் விரைவு வண்டியில் செல்வதுபோல் நிச்சிய முத்தி பேறு கிடைக்கும்.அகப்பூசை செ்ய்து முத்தியடைந்த நாயனார் பூசலார்

அகப்பூசை என்பது உள் முகமாய் செய்யும் வழிபாடு, அந்தரியாகம் என்றும் வழங்கப்படும்.

 அகப்பூசையின் போது அபிசேகம், அலங்காரம், தூபம், தீபம் நைவேத்திியம் திருவமுது முதலிய பூசா திரவியங்களை மனத்தால் செய்து, ஆன்மாவின் இடத்ததில் சிவபெருமானை ஞானத்தால்அர்ச்சித்தல், ஓமித்தல், தியானித்தல் ஆகியவற்றை செய்தல், அவ்வாறு செய்யும் போது கண்ணாடிக்கு பொடியிட்டு துலக்கும் போது மாசு நீங்கி ஒளி மேலிடுவது போல அச்சிவம் உள்ளத்தில் மேலிட்டு விளங்கித் தோன்றி மலப்பற்று கழியும். அவ்வாறு கழிவது ஆன்ம சுத்திக்கு ஏதுவாகும். மலம் கழிவது ஆகிய ஆன்ம சுத்திக்கு அந்த அந்தரியாக பூசை அவசியம் இந்த பூசையை முத்திக்கு சிறந்த சாதனம் என அநுபவம் உடைய அருளாளர்கள் அறுதியிட்டு கூறியுள்ளார்கள்.

  இதனேயே திருமூல நாயனாரும்

 காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக

 வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறையநீரமையவாட்டிப்

பூசனைஈசனார்க்கு போற்றிவிக் காட்டினோமே.   திருமந்திரப்பாடல்

   இவ்வுடம்பை கோயலாகவும், நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு  வாய்மையை தூய்மையாகவும், வைத்து மனத்திறகுள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாக பாவித்து அன்பை நெய்யும் பாலுமாக நிறைய வைத்து பூசித்து இறைவனை போற்றினேன். என்கிறார் அகப்பூசையை பற்றி.

  இதில் கோயில் மனம், விளக்கு மெய்ஞானம் சிவதான் என்ற உணர்வு, திருமஞ்சன நீராட்டு மாறிலா இன்பம், திருஅமுது அன்பு, அர்ச்சனை ஐந்தெழுத்து,

  அகப்பூசை செய்யவது மூன்று திறத்தது, 

1, நாபி ( உந்தி) இதுவே வேள்வி செய்யும் இடம்,

    நாேக்கம்; ஈசனாடு பிரிப்பின்றி ஒன்றாய் இருத்தி, சிவஞானத்தீயினை உணர்வால் எழுப்புதல்

 2, இதயம் 

  உணர்வார் பூவும் நீரும் கொண்டு அர்ச்சனை செய்யும் இடம் 

  நோக்கம் ;ஈசனை ஆண்டானாவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வேண்டுதல்

  இதயத்தில் தில்லை கூத்தரை காண முயலுதல்

3, நெற்றி நடு, தியானம் செய்யும் இடம் திருவருளோடு உடனாய்  இருப்பதன் பாவனை

நாேக்கம் ; ஞானபரம ஆச்சாரியார் திருஉரு காணும் உண்மை பாவனை குரு கருடன் உருவம் கருதும் பாவனை கொண்டு திரிமலம் தீர்ந்தது என செய்தல்

  இதன் பொருட்டு பூசை பொருட்கள்

 மறாவாத நினைப்பு, பிறழாத செய்கை, இறவாத இன்ப அன்பு

 பூசா மந்திரம் -  திருவைந்தெழுத்து

பூசா பலன்  ஆன்மபோதம் அற்று உயிர் சிவமாதல்

  அகபூசையால் உயிராகிய தன்னை சிவமாகவே காண முற்படும் சாதனமே மலமாகி நின்ற உயிரைச் சிவமாக்கி, பிறப்பிலிருந்து விடுபட செய்யும்் முயற்சி

  சிவனாருக்குரிய எட்டு குணங்களும் உயிரின மாட்டு வந்து படிவதால் பசுத்துவத்தோடு கூடி பசுவாய் நின்ற உயிர் சிவத்தோடு கூடி சிவம் என நிற்கும்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 6 நவம்பர், 2022

திரு ஐந்தெழுத்தின் மகிமை

 திரு ஐந்தெழுத்தின் மகிமை



" வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம்

மாடு கொடுப்பன மன்னு மாநடம்

ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர்


அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர்.

கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார்.

மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால் புறத்தே அமைந்த உருவத்தில் இறைவனை வழிபாடு செய்து தேவதா(இறைவடிவம்) வடிவம் பெறுவர். உருவ வழிபாட்டில் ஆசிரியர் சதாசிவ மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பித்துப் பேசுகிறார். இறைவனை அடசரவடிமாகச்(எழுத்து வடிமாக) சக்கரத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி அங்கு வழிபடுவதும் புறவழிபாட்டைச் சேர்ந்த ஒன்றாகும். திருமூலர் திருவம்பலச் சக்கரம், சாம்பவிமண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கா¢சக்கரம் முதலியவற்றைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்பது பொருளாகும். மந்திர யோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்று பொருள். இதற்கு உதாரணமாக அமைவதே

பஞ்சாட்சரமந்திரம். அதில் தூல பஞ்சாட்சரம், சூக்சும பஞ்சாட்சரம், அதி சூட்சும பஞ்சாட்சரம் என்ற பிரிவுகள் உள்ளடங்கும், அவற்றுள் நமசிவாய எ்னும் தூல பஞ்சாட்சரமும் சிவாய நம எனும சூட்சும பஞ்சாட்சரமும், சிவசிவ எனும் அதிசூட்சும பஞ்சாட்சரமும் அதன் அதன் தன்மைக்கேற்ற சிறப்பு ெபற்றது, இதில் எதனை ஓதினாலும் அதன் தன்மைக்கு எற்ப சிறப்புண்டு

  உலகியில் வாழ்வில் பெருவாழ்வு விரும்புவோர் நமச்சிவாய மந்திரத்தையும், முத்தி பேறு விரும்புவோர் சிவாய நம, அல்லது சிவசிவ என்ற மந்திரத்தையும் ஓதுவது மிக சிறப்பு.

                 மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம்

நன்றி; தமிழ் வேதம்


சனி, 5 நவம்பர், 2022

பிறவியினை அறுக்க வழி

 பிறவியினை அறுக்க வழி



பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், 

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், 

இறைவன் அடி சேராதார்”   ///         என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.

முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.

இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.


பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.

..... ..... நித்தலும்எம்பெருமான் கோயில்புக்கு

    விடிவதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு

    பூமாலை புணர்ந்தேத்தி, புகழ்ந்து பாடி, 

    தலையார கூம்பிட்டு கூத்துமாடி 

    சங்கர ஜெய ஜெய போற்றி ,,,,,,  என்கிறார்


பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும். 

திருச்சிற்றம்பலம்


வியாழன், 3 நவம்பர், 2022

அன்னாபிசேக பூசை

 சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் நிகழும் ஐப்பசி மாதம் 22ம் நாள்




( 08.11.2022 ) செவ்வாய்க் கிழமை காலை சுமார் 10.00 மணி அளவில் திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு  மன்றம்  மற்றும் சக்திபீட வழிபாட்டு மன்றம் மற்றும் சுந்தரபாண்டியம் ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் (ப.பசும்பொன் இன்சினியர்) ஆகியோரின் ஆன்மீகப் பணியின் தொடர்ச்சியாக  ஐப்பசி மாத பௌர்ணமி பூசையுடன்   அன்று  சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு கைலாய நாதருக்கு அன்னாபிசேக பூசையும்,  சக்திபீடத்தில் அமைந்துள்ள அம்மனுக்கும், அருள்மிகு இராஜகணபதிக்கும், பௌர்ணமி பூசையுடன்,  ஐப்பசி மாத மகா அன்னாபிசேக பூசை வெகு சிறப்பாக இவ்வாண்டு தேவாரப் பாடல்களுடன், தமிழ்  அபிசேக ஆராதனையுடன் சிறப்பு பூசையாக,  அடியார்களின் கைங்கரியத்தால் நடைபெற உள்ளது.

அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்ற பழமொழி கூறப்படுகிறது.

அன்னபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.அன்னபிஷேக பிரசாதம் உண்டால் மங்காத தோற்றப்பொழிவு கிடைக்கும்

அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.

அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.


தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக – தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.

இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.


தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே. உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.

சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம். ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.


அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னப்பிரசாதமாக  அளிக்கப்படும்


      இங்கு நடைபெறும் பூசையில் அடியார்கள் தாங்களே அபிசேப் பொருட்களுடன் கலந்து பூசையின் முடிவில் அர்ச்சனை செய்து  கொள்ளுதல் மிக சிறப்பு.  இறைவனுக்கு தாங்களே மனம் , மொழி , மெய்யால் பணிவிடை செய்து தாங்களே பூவும் இலையும் கொண்டு இறைவிடம் வேண்டி தமிழால் அர்ச்சனை செய்யலாம். அவனை தீந்தமிழ் கொண்டு மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழை போற்றி, மெய்யால் (கரங்களால்) பூ, இலை கொண்டு அர்ச்சித்து வணங்கி அருள் பெறலாம்.அவன் அருள் இருந்தால் தான் அவன் தாள் வணங்கி பூசையில் பங்கு கொள்ள முடியும். புண்ணியம் செய்தோரே  இதற்கு வாய்ப்பு கிடைக்கும்,

திருச்சிற்றம்பலம்

இந்த சிறப்பு பூசையில் அடியார்கள் யாவரும் கலந்து சிவபுண்ணியம் பெற்று உய்ய அன்புடன் அழைக்கிறோம்

திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம்

சக்திபீடம் வழிபாட்டு உபாசகர்கள்

ஸ்ரீலிங்கா பில்டர்ஸ் சுந்தரபாண்டியம்

செவ்வாய், 1 நவம்பர், 2022

சைவ சித்தாந்த சிந்தனைகள் - பதி பரமே

 சைவ சித்தாந்த சிந்தனைகள் -  பதி பரமே



பதி பரமே என்னும் விதிப்பொருளும் பிற ஏதும் பரமில்லை பதியே மேலான பரம் பொருள் பிற ஏதும்மேலான பரம்பொருள் இல்லை என்பதை இது உணர்த்துகிறது.பதியாக பரம் உரு, அரு, இன்றி இருந்தாலும்  ஒரு செயலை செய்வதற்கு உருவம்  இன்றியமையாதது ஏனெனில் உடம்பில்லாமல் எந்த தொழிலும் இயற்ற முடியாது.  எனவே இறைவனுக்கு உருவம் வேண்டும். உருவம் என்று இருந்தாலும், எல்லாவகை தொழில்களையும் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விடும் உதாரணமாக உருவம் பறப்பதற்கு உருவம் தடையாக இருக்கும் எனவே இறைவன் அருவம், உருவம், எனும் இருவகை வடிவுமன்றி தன் சக்தியால் சுத்த மாயையைக் கொண்ட நாதம் தோற்றுவித்து, பின் தன் இச்சா சக்தியால் வேண்டும் வடிவ திருமேனி கொள்வான். இதனால் இவன் எந்த செயலையும் அவன் சங்கற்ப மாத்திரையான் செய்வான் அதுவே நினைத்த அளவில் அது அதுவாகுதல் இதனை பதியின்சங்கற்பம் என்பர்

   காரிய நிலையில் தோன்றுகிற உருவம் காரண நிலையில் கண்ணுக்கு புலனாகாது நிற்பதே அருவம் எனப்படும். அருவம் ஒரு வகையான உருவமே அதாவது கண்ணு்க்கு தெரியாத சூக்கும வடிவமாகும். ஆகையால் பரம்பொருளுக்க உருவம் கிடையாது. இதுவே இறைவனின் சொரூப நிலையாகும்.

  பதியின் தடத்த நிிலை

 சொரூப நிலையில் தான் இறைவனை பரமசிவன், சொரூபசிவனை, சுத்த சிவன் என்றும் இதனையே அருவம் என்றும் கூறுவர். இந்நிலை நீங்கி இறைவன் உலகத்தை நோக்குங்கால் சக்தி என்றழைக்கப்படுவான். வானத்தல் உள்ள சூரியனின் ஒளிக் கதிர்கள்  மண்ணில் வியாபித்திருப்பது போல் இறைவன் உலகத்தில் வியாபிப்பது சக்தியினால்தான் இதுவேசக்திஎன்கின்றனர்.

  முதல்வனாகிய இறைவனுக்கு அவன் சக்தியும் பொருளால் ஒன்றே செயற்பாட்டால் இரு திறப்பட்டு நிிற்கும். சிவமும் சக்தியும் உடனியைந்து செயல்களை இயற்றி நிற்பதால் சிவமும் சக்தியுமாய் தோற்றம் அளிக்கும். சக்தி ஒன்றே செயலால் பல வகைப்படும் இது எவ்வாறெனில் மின் சக்தி ஒன்றால் ஒளிர்தலும், சுடுதல் குளிர்வித்தல் இயக்குதல் போன்ற பல செயல்களை செய்தல் போன்றதாகும் 

   இறைவனி்ன் மேலான நிலையில் உள்ள பராசக்தி என்ற சக்தி அவன் உலகத்தை  நோக்க தொடங்குங்கால் ஆதி சக்தி என்றும்.மறைப்பாற்றல் உள்ள திரோதன சக்தி என்றும் கூறப்படும் உலகத்தை ஒடுக்கும் காலத்தில் அச்சக்தி அருவநிலையை அடையும், இனி உலகத்தை உய்விக்க விரும்பி இறைவன் அச்சக்தியை இச்சாசக்தி, ஞானசக்தி, கிரயா சக்தி என பிரிந்து செயல்படும். பரந்த பராபரை யான பராசக்தி ஆன்மாக்களுக்கு அருளும் நேசமாய் இச்சா சக்தியாகவும், அது வேணடியவற்றை அறியும் அறிவாகிய ஞான சக்தியாகவும், அவற்றை சங்கற்பத்ததால் செயல் படுத்த கிரியா சக்தியாகவும் விளங்கும். இதன் மூலம் ஆன்மாக்களுக்கு இச்சை,ஞானம், கிரியை என்னும் மூன்றையும் நோக்கியும், கருதியும், இலயம், போகம், அதிகாரம் என்னும்மூன்று நிலைகளை அடைகிறது. 

 உலகத்ததை ஒடுக்கிய நிலை இலயம் என்றும், உலகத்தை தோற்றி காக்கும் நிலை, போகம் என்றும், உயிர்களுக்கு போகத்தை ஊட்டும் நில் அதிகாரம் என்ற வகையில் செயல்படும்.இத்தொழில்களை செய்யும் போது இறைவன் ஆனந்ததாண்டவம் ஞான தாண்டவம் கொண்டு ஐந்தொழில் செய்கிறார்.  இத்தொழில்களை சீராக நடத்த அதற்கென அதிபர்களாக பிரம்மா,விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன்,ஈசுவர் நியமிக்கிறார்.

  உலகத்தை செயற்படுத்த தனது சக்தி நிலையில் சிவன் திருமேனிகளை கொள்வான் இச்செயல் தன் பொருட்டன்று இது அவனுக்காக செய்வதில்லை, ஆன்மாக்களுக்கவே வேண்டிய உருவம் கொண்டு செயல்படுகிறான்.இறைவன் ஆன்மாக்கள் உய்யும் வண்ணம் உருவமும் அருவமும் கலந்த அருஉருவாக சதாசிவ மூர்த்தியாகவும் தோன்றுவார்.

  உயிர்கள்மலமுடையனவாகலின் அவற்றிக்கு மலத்தின் வகையாகிய மாயா உருவம் உளதாகும். இறைவன் நின்மலன், மலத்தின் வகையாகிய மாயையிடம் யாதும் தொடர்பு இல்லை, அவனுக்கு அவனது சக்தியே உருவமாய் அமையும் அச்சக்தியே அருளேயாதலின் அவனது திருமேனியும் அருள் திருமேனியே யாகும்.

  எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்

  அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் -  சேரமான் பெருமான் பொன்வண்ணத்து அந்தாதியில் கூறியுள்ளார்.

தகவல் உமாபதியாரின் சைவ சித்தந்த  சிவப்பிரகாசம்

திருச்சிற்றம்பலம் 

வியாழன், 27 அக்டோபர், 2022

மானிட வாழ்வின் முக்கியத்துவம்

 மானிட வாழ்வின் முக்கியத்துவத்தை ரிஷபதேவர் தனது புதல்வர்களுக்கு எடுத்துரைத்தல்.

மாமுனிவரான ரிஷபதேவர் தனது புத்திரர்களுக்கு அறிவுறுத்தினார்: “அன்பார்ந்த மகன்களே! இப்பிறவியில் நீங்கள் பெற்றுள்ள அற்புதமான சரீரத்தை நாய்களையும் பன்றிகளையும் போன்று இன்பம் காண பயன்படுத்தாமல், ஆன்மீக உணர்வில் முன்னேறுவதற்காக பயன்படுத்த வேண்டும். கழிவுப் பொருட்களை உட்கொள்ளும் பன்றிகளே புலனின்பத்திற்காக வாழ வேண்டும், உயர்நிலையில் வாழும் மனிதன் தாழ்ந்த உயிரினங்களின் வழி நடக்கக் கூடாது.”

    அனைத்து ஜீவன்களும் மூவகை பௌதிகத் துன்பங்களுக்கு உட்பட்டவை; இதில் சரீரம் மற்றும் மனதினால் ஏற்படும் துன்பங்களும் அடங்கும். தாங்கள் துன்பப்படுவதை மிருகங்களால் அறிய முடியாது. ஆனால், மனிதர்களால் அறிய முடியும். தான் துன்பப்படுவதை உணராதவன் மிருகமாகவே கருதப்பட வேண்டும். வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும் தாங்கள் கொல்லப்பட இருப்பதை மிருகங்கள் உணர்வதில்லை. ஆனால், மனிதர்களாகிய நாம் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களால் அவதியுறுகிறோம் என்பதை உணர வேண்டும். இத்துன்பங்களை போக்கும் வழியை அறிய ஆவல் கொள்ள வேண்டும்.


 நமது பிறப்பு முதலே நாம் துன்பப்படுகிறோம். சிசுவாக தாயின் கருப்பையில் ஒன்பது மாதங்கள் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் குழந்தை துன்பப்பட்டது. தாய் குழந்தையின் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றபோதும், குழந்தை ஏன் அழுகிறது? துன்பப்படுவதால்தான். மூட்டைப்பூச்சி கடிக்கலாம், வயிற்றுவலி போன்ற வியாதிகளால் அவதிப்படலாம். எவ்விதத்திலும் துன்பம் இருக்கவே செய்கிறது. பின்னர், பள்ளிக்குச் செல்லும்போது கட்டாயத்தின் பேரில், குழந்தை விருப்பமில்லாத கல்வியைக் கற்க நேரிடுகிறது. நமது வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்தால், நமது வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் தொடர்வதைக் காணலாம். பொதுப்படையாகப் பார்க்கும்போது, கட்டுண்ட ஆத்மாக்கள் புத்தி மிகுந்தவையல்ல. ஆகையால், ஏன் இவ்வாறு துன்பத்திற்குள்ளாகிறோம் என்பதை அறியாமலேயே அவை தொடர்ந்து துன்பப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாம் துன்பப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அதற்கான தீர்வினை அறிந்து மேன்மையடைய வேண்டும்.

தகாத உடலுறவு, புலால் உண்ணுதல், போதை பழக்கம், சூதாட்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது வாழ்வதற்கான அடிப்படை விதிகளாகும்; இவ்வாறாக நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டால், படிப்படியாக ஆன்மீக நிலைக்கு உயர்த்தப்படுவோம். ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், “வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்” என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.ஆன்மீக உலகம் வறட்சியானதோ அறிந்துகொள்ள முடியாததோ அல்ல. முன்னரே தெரிவித்தவாறு அங்கே பலவகையான மகிழ்ச்சிகள் உண்டு. நாம ஸங்கீர்த்தனத்தில் நடனமாடுவதால் நாம் பெறும் ஆனந்தம் சொர்க்கத்தில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தின் ஒரு பகுதியே. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் இளமை மிகுந்தவர்கள்; உண்மையில் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் போன்ற துன்பங்கள் அங்கு இல்லை. ஆன்மீக உலகிலுள்ள நமது உண்மையான தன்மைகளான அளவற்ற ஆனந்தம், அறிவு, மற்றும் நிரந்தர வாழ்க்கையைப் பெற விரும்பினால், புலனின்பங்களிலும் பன்றித் தொழுகைகளிலும் நாம் நமது நேரத்தை விரயமாக்கக் கூடாது. ஞான உணர்வை பெருக்கிக் கொள்வதற்கான வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள வேண்டும். 

திருச்சிற்றம்பலம


புதன், 19 அக்டோபர், 2022

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்

இறைவன் ஆன்மாவுக்கு உயிராய் நிற்றல்

  திருவருட் பயன் பாடல் எண் 54

ஊன் உயிரால் வாழும் ஒருமைந்தே,ஊனொடு உயிர்

தான் உணர்வோடு ஒன்றாம் தாம்


     உடம்போடு உயிர் சேர்ந்து ஒன்றாகி இருக்கிறது.உடம்பும் உயிரும் பொருளால் இரண்டு ஆயினும் இரண்டு என்ற தன்மை தோன்றாதபடி உயிர் உடம்போடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது.  உடம்போடு கூடிய உயிர்.  அறிவு வடிவான திருவருளோடு ஒன்ற பட்டு நிற்கிறது. இவ்வாறு திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போல் என்றால் உடம்பும் உயிரும் காெண்டுள்ள ஒற்றுமையைப் போல் போன்றதாகும்.

  உடம்பில் கலந்துள்ள உயிர்  தன் இருப்பை சிறிதும் புலப்படுத்தாது,உடம்பு ஒன்றே உள்ளது என்பது போல் அதனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அது போலவே திருவருள் உயிராேடு நீக்கமின்றி எப்போதும் கலந்திருப்பினும், தன் இருப்பை புலப்படுத்தாது உயிர் ஒன்றே உள்ளது என்னும் படியாக ஒற்றுமைப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இரு பொருள்களுக்கிடையே இரண்டன் தன்மை தெரியாதவாறு அவை இயைந்து நிற்கும் ஒற்றுமைத் தொடர்பு அத்துவிதம் என்றும் அத்துவித சம்பந்தம் என்றும் சொல்லப்படும்

  அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று (துவிதம் (2)) என்றால் அத்துவிதம் 2 அன்று என்று பொருள்படும், என ேவற்றுமை படாமையை குறித்து நிற்கும்

ேவற்றுமை படாமையாவது இது சிவப்பகுதி, இது ஆன்மா பகுதி என பிரித்தறிய வாராத நிலை எனவே ஒற்றிற்று நிற்றல் எனப்பெறப்படும்

  தன்மையால் இரண்டாதல், வேற்றுமையால் / கலப்பால் ஒன்றாதல் ஒற்றமை.இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும், தன்மையால் வேறாயும் நிற்றல். 

  உயிர் செலுத்தவே உடம்பு செயல்படுகிறதே தவிர, உடம்புக்கு என்று தனியே ெசயல் இல்ைல ஏனெனில் உடம்பு சடப்பொருள். அது போல திிருவருள் செலுத்தவே உயிர் செயல்படுகிறதேயன்றி, திருவருள் துணை இன்றி உயிருக்கு தனிச் செயல் சுதந்திரம் இல்லை. 

  திருவருள் தன்னுடன் எப்போதும் பிரிப்பின்றி கலந்திருக்கிறது என்பதையும், அதனுடைய துணை தன் அறிவு விளக்கத்திற்கு இன்றியமையாதது என்பதையும் உயிர் உணர வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். 

மொத்தத்தில் உடலை உயிர் இயக்குகிறது, 

உயிரை திருவருள் இயக்குகிறது, திருவருள் துணையினால் தான் உயிர்களுக்கு கட்டு நிலையில் ( கேவல நிலை / பிறப்பு நிலையில்)  பொது இயல்பும், முத்தி நிலையில் தன் இயல்பும் விளங்குகின்றது. 

உயிர் அறிவதற்கு திருவருள் துணை வேண்டு்ம்

 கண்ணானது காணும் தன்மை உண்டு இருப்பினும் கண் காண ஒளி (ெவளிச்சம்) வேண்டும் அவ்வாறு ஒளி இல்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.

  உயிர் உடன் நின்று செலுத்துவதால் தான் கண் ஒரு பொருளைக் காண முடிகிறது. ஆனாலும் கண்ணுக்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவினால் தான் கண் காணமுடியும். ஒளி இல்லையென்றால் உயிர் உடனின்றும் கண் காண இயலாது/ முடியாது.

 கண் போல் உயிர். உயிர் உடன் நின்று செலுத்துவே கண் காணுமே அன்றி தானாக காணாது. உயிரின் அறிவு விளங்குவதற்காக திருவருள் கருவி கரணங்களை கூட்டு விக்கிறது. அதோடு மட்டுமன்றி கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே நின்று திருவருள் ஒளி செலுத்துகிறது. அவ்வாறு திருவருள் ஒளி செலுத்தாவிட்டால் உயிர் அறிய இயலாது. 

திருச்சிற்றம்பலம்

சனி, 15 அக்டோபர், 2022

முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும்

 சைவ சித்தாந்த சிந்தனைகள்



முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும் முறைமை

திருவருட் பயன் பாடல் 74

" தாடலை போல் கூடியவை தான் நிகழா வேற்றுஇன்பக்

கூடலை நீ ஏகம் எனைக் கொள் "

    ெதளிவுரை ; தாடலை = தாள் + தலை = தாடலை

தாள் ,தலை என்னும் இரண்டு சொற்கள் கூடி இரண்டாக காணப்படாமல்தாடலை என்னும் ஒரு சொல்லாய் நிற்கின்றன.

  இந்த சொற்புணர்ச்சி போல் உயிரும், சிவமும் ஆகிய இரண்டு பொருள்கள் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்தி நிலை என்று கொள்ளவேண்டும்.

   உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு இவ்வாறு சொற்புணர்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டுகிறார். தாடலை என்பது தாளும்(பாதமும்), தலையும் என இரு சொல்லே, ஆயினும் அவை இரண்டு என வேறாக காணப்படாமல்ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பது ஒரு சொல் என்றோ, இரு சொல் என்றோ காெள்ளமுடியாது அது போல உயிரும், இறையும் முத்தி நிலையில் கூடும் போது ஒரு பொருளாக ஆகி விடாமலும், இரண்டு பொருளாக நில்லாமலும் வேறின்றி நிற்கும். சிவம் சிவாநுபவத்தை வழங்குபவனாக, உயிர் அவ்வின்பத்தைதுய்ப்பவனாக என்ற வகையில் இரு பொருள்களாக இருந்தாலும், உயிருக்கு தன்னை பற்றிய உணர்வு தோன்றாது அவ்வின்பத்திலேயே மூழ்கி விடுவதால் அங்கு சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும், முத்தி நிலையில் ஆன்மாவும் சிவமும் நிற்கும்முறைமை இதனால் கூறப்படுகிறது.

   தாடலை என்பது போல வேறு புணர்மொழிகள் உண்டு ஆயினும் தாள் என்பது இறைவன் திருவடியையும், தலை என்பது உயிர்களையும் குறிப்பதற்கு பொருந்தி வருவதால் இந்த சொற்களை எடுத்தாளப்பட்டது.

  தாளின் கீழ் தலை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய் ஆன்மா முனைப்பு அடங்கி அருள் வழி நிற்றலைக் குறிக்கும். தலைமீது தாள் வைத்தல் என்பது ஞானாசிரியனாகிய சிவத்தின் செயலாய் பாசத்தை நீக்கி அருள் வழங்குதலை குறிக்கும்

திருச்சிற்றம்பலம்


செவ்வாய், 11 அக்டோபர், 2022

பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்

 பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்







சிவபெருமானை முழுமுதல் கடவுளாகக் கொள்ளவேண்டிய சிவன் கோவில்களில் அன்றாட வழிபாடும், சிறப்பு நாள் வழிபாடும் நடத்தப்பெறாமல் போகுமானால் பெருந்தீங்கு விளையும் என்கின்றார் திருமூலர். அன்றாட வழிபாட்டிலும் சிறப்பு நாள் வழிபாட்டிலும் சிவ ஆகமங்களில் சொல்லப்பட்ட முறைகள் தவறி பூசனைகள் நடத்தப்படுமாயின் நாட்டில் நலப்படுத்த முடியாத பல நோய்கள் பரவுகின்ற நிலை ஏற்படும். நாட்டில் மழை பெய்யாது நீர் வளம் குன்றி வறட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டு வறுமை தலைவிரித்தாடும் என்கின்றார். மேலும் நாட்டில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அரசியல் நிலைத்தன்மை கெட்டு அரசாட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்பதனை, “ஆற்ற அரு நோய்மிக்கு அவனி மழையின்றிப், பேற்றுஅரு மன்னரும் போர்வலி குன்றுவர், கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை, சாற்றிய பூசனைகள் தப்பிடில் தானே” என்கின்றார் திருமூலர்.


சிவ ஆகம விதி மாறி பூசனை இயற்றினாலே இவ்வளவு தீமைகள் ஏற்படும் என்றால் சிவ ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்துவிப்பதும் அதில் பூசனை இயற்றுகின்ற பூசகருக்கும் இச்செயலினால் மக்களுக்கும் எவ்வளவு தீங்கு ஏற்படும் என்பதனை விளக்க வேண்டுவது இல்லை. முழுமுதலான சிவபெருமானின் பிற வடிவங்களான முருகன், பிள்ளையார், அம்மை போன்ற திருவடிவங்களையும் சிவலிங்கம் என்ற சிவக்கொழுந்தினையும் துணை தெய்வங்களாக (பரிவார தெய்வங்கள்) வைத்துவிட்டு, காவல் தெய்வங்களான எல்லை தெய்வங்களை, நடுகல் வீரர்களைக் கருவறையில் மூலவராக வைத்துப் பூசனைகள் இயற்றுவதனால் எத்தகைய தீமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பதனைச் சீர்மிகு செந்தமிழர் சிந்தித்தல் வேண்டும். முன்பு காலத்தில் பழக்கத்தினால் நடந்துவிட்ட தவறுகளை எண்ணிப் பார்த்துத் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றபோது அவற்றைச் சரிசெய்து கொள்ள வேண்டும். திருக்கோவில்களில் பொது பூசனைகளில் தனி நபர் புகழ் பாடுதலைப் பூசகர்கள் விட்டொழிக்க வேண்டும். பூசனைச் செலவுகளை ஏற்றுக்கொள்பவர், ஆலயத் தலைவர், அறங்காவலர், அரசியல்வாதி, செல்வந்தர், பதவியில் உள்ளவர், என்பதற்காகத் திருக்கோவில் பூசனையை அவர்கள் வருகைக்காகக் காலந்தாழ்த்தி இயற்றுவதுவும் நடு பூசனையில் பூசனையை நிறுத்தி விட்டு அவர்களுக்கு மறியாதைகள் செய்வதுவும் பிறரின் இறை வழிபாட்டிற்குத் தடையாய் இருப்பதோடு சிவ பூசனை விதியை மீறிய தீங்கினையும் விளைவிக்கும். பணம் படைத்தவர்களைத் திருக்கோவில் பூசகர்கள் தனியாகச் சிறப்பாக ஆர்வம் காட்டி வரவேற்பதுவும் ஏழை எளியோருக்கு முகம் சுழிப்பதுவும் சிவபூசை குற்றங்களாகும்.


திருக்கோவிலில் சிவபூசனை இயற்றும் போது அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு சிவபூசனை இயற்றுவதுவும் பூசனைக்குத் துணையாய் உள்ள பணியாளர்களைச் சினத்துடன் திட்டித் தீர்ப்பதுவும் சைகை மொழிகள் பேசி சிரிப்பதுவும் இடையிடையே வந்திருக்கின்றவர்களைப் பார்த்துப் புன்னகைப்பதுவும் சைகை செய்வதுவும் சிவ பூசனைக் குற்றங்களாகும். தவிர சிவ பூசனையில் ஓதப் பெற வேண்டிய பஞ்ச புராணத்திற்கு ஓத இடம் அளிக்காமலும் அதற்கு முதன்மை கொடுக்காமலும் அது ஓதப்பட வேண்டிய முறையைத் தெரிவிக்காமலும் அப்பஞ்சபுராணத்திற்குப் பதில் சிவ வழிபாட்டிற்குப் பொருத்தமில்லாத பாடல்களைப் பூசகர்களும் துணை பூசகர்களும் ஓதி சிவ ஆகம விதியை மீறுதல் குற்றங்களாகும்.


ஆலயத்திற்கும் தனக்கும் வறுமானம் கிட்டும் என்பதற்காகப் புதுப்புது பூசனைகளை அறிமுகம் செய்து மக்களை அறியாமையில் தள்ளுவதும் சிவபூசனை விதிகளை மீறுவதும் பெருந்தீங்கினை உண்டாக்கும் என்கின்றார் திருமுலர். மண்டையில் தேங்காய் உடைத்தல், கொதிக்கும் எண்ணெயில் கையை விடல், மண்சோறு உண்டல், புதிய புதிய முறையில் விளக்கு ஏற்றுதல், விலங்குகளைப் பலியிட்டு அதன் குறுதியில் குளிப்பாட்டுதல், தல மரங்களுக்குத் திருக்கல்யாணம் செய்துவித்தல், மண் மேடுகளையும் புற்றுகளையும் வழிபடச்செய்தல் போன்றவற்றைச் செய்து மக்களை அறியாமையில் ஆழ்த்துவது சிவ பூசனைக் குற்றங்கள் ஆகும். திருக்கோவிலின் கருவறையில் பூசனைக்குரிய இறைவன் இருக்க, மரக்கிளைகளிலும் வேர்களிலும் சந்தனத்தையோ மஞ்சளையோ தடவி அதனைப் பிள்ளையார் என்றும் அம்பிகை என்றும் கூறி அதற்கு ஆடை அணிகலன்களை எல்லாம் அணிவித்து, அவற்றிற்குத் திருவிழாக்கள் கொண்டாடுவதும் சிவ பூசனைக் குற்றங்களாகும் என்று தெளிதல் வேண்டும் என்கின்றார் திருமூலர். வேப்பிலை மரத்திற்கும் மாமரத்திற்கும் சேலைகள் அணிவித்து அதனை அம்பிகை என்று வழிபாடு இயற்றும் பூசகர்களினால் மக்களுக்கும் நாட்டிற்கும் பெருங்கேடு உண்டாகும்; அது சிவ ஆகம விதிக்குப் புறம்பானது என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.


திருக்கோயில்களுக்குப் பல சிக்கல்களோடும் துன்பங்களோடும் ஆறுதல்களை எதிர்பார்த்து வருகின்ற அன்பர்களுக்கு அன்பாக, ஆறுதலாக, ஒரு சமய ஆசானாக நல்ல சொற்களையும் ஊக்கம் ஊட்டும் ஏடல்களையும் வழங்காது பல்வேறு இறைக்குற்றங்கள்(தோசம்) இருக்கின்றன, அதற்குத் தீர்வு (பரிகாரம்) பல்வேறு பூசனைகள் இயற்ற வேண்டும் என்று அச்சுறுத்திப் பணம் பறிப்பதும் தேவையற்ற பூசனைகள் இயற்றச் சொல்வதும் சிவ பூசனைக் குற்றங்களே என்கின்றார் திருமூலர். இதனால் அவ்வாறு செய்கின்றவர்களுக்கும் அவர்களை நம்புகின்றவர்களுக்கும் பிறருக்கும் பல்வேறு நோய்களும் தீமைகளும் வந்து அமைவதோடு மட்டுமல்லாமல் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவ சமயத்தின் சீர்மைக்கும் உயர்விற்கும் உண்மைக்கும் ஆளுமைக்கும் களங்கம் ஏற்படும். சினத்தைப் பின்தள்ளி நம் சமயத்தின் உயர்வை முன் வைப்போமாக! உயர்ந்த பொருளை நாடுவோமாக!

 இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

கொல்லிமலைஆன்மீக பயணம்

 திருநாவுக்கரசர் திருச்சபையின் ஆன்மீக வழிபாட்டு மன்றத்தின் மூலம் ஒரு ஆன்மீக பயணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர்  மற்றும் மாசி பெரியசாமி எட்டுக்கை அம்மன் வழிபாடு நிமித்தமாக பயணம் அமைக்கப்பட்டு 4.9,22 அன்று பயணம் மன்ற அடியார்களோடு சென்ற செய்தியினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சென்றது ஆன்மீக பயணமாக இருந்தாலும் இது ஒரு மலை வாஸஸ் தலமாக இருந்தபடியால் அருமையான பொழுதுபோக்கு பயணமாகவும் அமைந்தது.



 இங்குள்ள சுற்று சூழல் ஏலகிரி சதுரகிரி மற்றும் மேகமலை போன்றே அமைந்துள்ளது.70 பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது. முதலில் அங்குள்ள சிற்றறிவில் குளியல் செய்து அறப்பளீஸ்வரர் தரிசணம் ெசய்தோம்.மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பள்ள மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறப்பளீஸ்வரர் கோவில்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.  திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி. இறைவன் அறப்பளீஸ்வரர், அன்னையின் பெயர் அறம்வளர்நாயகி என்பதாகும். அறை என்றால் மலை, பள்ளி என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள். மலையின்மீது ஆலயம் அமைந்துள்ளதால் அறைப்பள்ளீஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஆனால் காலப்போக்கில் இப்பெயர் மருவி அரப்பளீஸ்வரர் என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகிறார்

கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவிழா கொண்டாடப்படுகின்றது.

கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. இதுவே எட்டுக்கை அம்மன் என்று மலையின் காவல் தெய்வமாக நமக்கு காட்சி தருகிறது. கிராமக் கோயில் வழக்கமாக மலையில் சிறந்து விளங்குகிறது. அதுவும் தரிசணம் செய்தோம்.



கொல்லிமலையின் மிக சிறப்பாக அமைந்தது் இங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி அது சென்ற சில தினங்களின் தொடர் மழையான காரணத்தால் சுற்றுலாபயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் அதற்கு அடுத்தபடியாக உள்ள நம்ம நீர் வீழ்ச்சியில் அடியார்கள் அனைவரும் மனம் மகிழ்ந்து குளித்து மனம் மகிழ்ந்தனர். நாங்கள் சென்ற நேரம் சற்று கூட்டம் குறைவாக இருந்தபடியால் மிகவும் வசதியாக ரம்மியமான குளியலாக குளித்து புத்துணர்வு பெற்றோம். குளித்து இறைவனை வேண்டிம் முகத்தான் எல்லா அடியார்களும் சேர்ந்து தேவார திருவாசகப் பதிகம் பாடி இறைவனை வணங்கி மகிழ்ந்து சுற்றுலாவினை முடித்து கீழே இறங்கி, நாமக்கல் அடைந்து அங்குள்ள இராம பக்தர் ஸ்ரீ அனுமன் கோவில் தரிசனம் பெற்று ஆன்மீக பயணம் முடித்தோம்.








திருச்சிற்றம்பலம்


வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு

 

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு


தற்காலத்தில் கிரகங்களும் நட்சத்திரங்களும் (நாளும் கோளும்) சரியில்லை என்று வருத்தப்பட்டு அலைந்து திரிந்து இதனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர். இதனால் சிவன் கோவில்களில் நவக்கிரங்களின் வழிபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அனுதினமும் காணும் உண்மை. இது பற்றிக் கடவுளைக் கண்டவர்கள் கூறியுள்ள உண்மைகள் யாவை என்பதை காண்போம்.


"ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில்லார்களே" திரு ஞான சம்பந்தர் த.வே.2


தற்காலத்தில் மக்கள் கோள்கள் தான் தங்களுக்கு நன்மையைச் செய்யும் என்று நினைத்து அவற்றையே பெருந்தெய்வமாக கருதி (முழுமுதற் பொருளாக) வழிபட்டும் வருகிறார்கள். இது முற்றிலும் பொருந்தாத செயலாகும்.

கோள்கள் யாவும் தமக்குவமை இல்லாத சிவபெருமானாரை வணங்கியே கிரகப்பதங்கள் பெற்றுள்ளன. இவை யாவும் சிவபெருமானாருடைய ஆனையின்படி செயல்படக்கூடியவை என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும்


" சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை .............. திருமந்திரம் த,வே, 10


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்றில்லை " திருமந்திரம்


பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாதவர் சிவபெருமானார் ஒருவரே ஆவார். இவரைத்தான் பெருந்தெய்வம் என்றும், முழுமுதற் பொருள் என்றும் கூறுகிறோம். இவரை வழிபட்டால் நவக்கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யா. மேலும் நமக்கு நன்மைகளைச் செய்யும் என்று சொல்கிறார் மூன்று வயதில் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞானசம்பந்தர்


" ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" ........... ஞானசம்பந்தர் கோளாரு பதிகம்


சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி , இராகு,கேது ஆகிய ஒன்பது கிரகங்களும் சிவபெருமானாரை வணங்குபவர்கட்கு நன்மைகளைச் செய்யும் என்பது கடவுளை கண்ட சம்பந்த சுவாமிகள் திருவாக்கு ஆகும்.

போலிவேடதாரிகளை நம்பி வேண்டாப் பொருளற்ற சடங்குகளைச் செய்து காலத்தையும், செல்வத்தையும் வீண் செய்ய வேண்டாம். கடவுள் நிலையறிந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ளனவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.


திருமுறைப் பாடல்கள் பாடியே இறைவரை நாம் வணங்க வேண்டும். நமக்கு பசி வந்தால் நாம் தான் சாப்பிட வேண்டும். நமக்கு நோய் வந்தால் நாம் தான் மருந்து உட்கொள்ள வேண்டும் நமக்கு தாகம் எடுத்தால் நாம்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இதைப்போல நம்முடைய தீயவினைகள் நீங்கி நல்வினை பெருகி நலம் பெறுவதற்கு நாம்தான் பாடிப்பரவ (வணங்க ) வேண்டும்.


"பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர்

ஓட்டினார் வினை ஓல்லையே" .............. ஞான சம்பந்தர் தி,முறை 1


உலகில் எண்ணாயிரம் கோடி சீவராசிகள் உள்ளன. அவற்றுள் பேசும் திறம் பெற்றுள்ளவன் மனிதன் மட்டுமே. அதனால் வாயினால் பாடி வணங்குவதுதான் நலம் தருவதாகும்.

" நீரார் சடையானை நித்தல் ஏத்துவான்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே" .................... ஞான சம்பந்தர் தி.மு. 1


ஒன்பது கோள்களும் சிவபெருமானாரை வழிபட்ட தலங்கள் பற்றியும், அத்தலங்களுக்குரிய பதிகங்களையும் " தமிழ் மாலைகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் " எனும் நூலில் காணலாம்.


பொதுவாக மக்கள் துன்பங்கள் வரத் தொடங்கும் பொழுது கிரகங்கள் பற்றியும், தாங்கள் வாழுமிடங்கள் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.

" நோய்எல்லாம் நோய் செய்தார் மேலவாம்" எஎன்பது திருக்குறள்


பிற உயிர்கட்கு ஏற்கனவே நாம் செய்துள்ள துன்பங்கள்தான் இப்பொழுது நமக்கு வருகின்றன என்பதை தான் மறுக்க முடியாத உண்மை.


"இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையினால் முடிந்தது" ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, திருமந்திரம்


எந்த வகையில் துன்பங்கள் வருகின்றனவோ அந்த வகையில் முற்பிறவிகளில் நாம் பிற உயிர்கட்குத் துன்பங்கள் செய்கின்றோம் என்று உணர வேண்டும், இப்பொழுது அவ்வகையில் புண்ணியங்களைச் செய்துவிட வேண்டும்.


நாம் ஏற்கனவே செய்துள்ள புண்ணியத்தால் இப்பொழுது இன்பங்களை அனுபவித்து வருகின்றோம். புண்ணியம் முடிந்து விட்ட பொழுது, துன்பங்கள் தொடர ஆரம்பிக்கின்றன.ஆதலால், அன்றாடம் புண்ணியங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும் ( வங்கியில் நம் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே இருப்பது போல)

விதைத்தைத் தான் அறுவடை செய்கிறோம். முள்ளை விதைத்தால் நெல்லை எதிர்பார்த்தால் கிடைக்காது தானே? புண்ணியத்தால் நற்செயல்களால் நலன்கள் பல பெறலாம் இதுவன்றி வெற்றுச் சடங்குகளால் பெற்றுவிட முடியாது.


எங்குச் சென்றாலும் நம்முடைய நிழல் நம்மைத் தொடர்வது போலு, நாம் செய்யும் நல்லனவும் தீயனவும் நம்மைத் தொடர்ந்து வரும். இதை உணர்ந்து விட்டால், போலித் துறவிகளிடம் சென்று ஏமாற மாட்டோம். ஏழைகட்கு உதவும் செல்வந்தர் நீண்ட நன்மையை தேடிக் கொள்கிறார். என்பதை மனதில் கெர்ள்ள வேண்டும், நாம் நன்மைகளைப் பெற்று நலமாக வாழ்வதன் பொருட்டுப் பிற உயிர்கட்கு கனவிலும் தீமையை நினைக்க க் கூடாது. அனுதினமும் " சிவாயநம" எனும் திருஐந்தெழுத்து மந்திரத்தை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலி நலமாக வாழலாம் என்பது ஞானசம்பந்தர் சொல்வது போல் உண்மை. இவர்கள் வானில் அரசாழ்வார் என்பது சம்பந்தரின் கட்டளை,


திருச்சிற்றம்பலம்

நன்றி: தமிழ் வேதம்


திங்கள், 15 ஆகஸ்ட், 2022

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

 பெரியபுராணம் காட்டும் பெண்கள்

நான்கு நிலைகளில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் சிலரை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெண்களை எவ்வாறு வெவ்வேறு தரங்களில் வைத்து விவரிக்கிறார் 


நாயன்மார் நிலையில் உள்ள பெண்கள்- காரைக்காலம்மையார், மங்கயற்கரசியார்



கோயில் தொண்டில் ஈடுபட்ட பெண்கள்- திலகவதியார் நாயன்மாரான கணவருக்கு தொண்டில் உதவிய பெண்கள்- திருவெண்காட்டு நங்கை (சிறுத்தொண்டரின் மனைவி), இயற்பகை நாயனாரின் மனைவி அறியாது செய்த சிறு தவறால் தமது கணவரான நாயனாராலோ அல்லது வேறு நாயனாராலோ தண்டிக்கப்பட்டவர்- கலிக்கம்ப நாயனாரின் மனைவி, கழற்சிங்க நாயனாரின் மனைவி


இந்த நான்கு நிலைகளில் உள்ளவர்களை விட தமது கணவரின் தொண்டில் உதவிய பல பெண்கள் பற்றிச் சேக்கிழார் கூறிய போதும் அவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஏற்ற நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படவில்லை என்பதால் அவர்களை இக்கட்டுரையில் ஒரு பிரிவாகச் சேர்க்கவில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளும் ஓரளவில் சேக்கிழார் கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. முதல் மூன்று பிரிவினரும் தனியாக அல்லது தத்தமது நாயனார் கணவருடன் இறைவனடி சேரும் பேறு பெற்றவர். நான்காவது பிரிவைச் சேர்ந்தவர் தண்டனை பெற்றபின் அவர்களைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிட விரும்பவில்லையாதலால் அவர்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி அறிய வழியில்லை.


முதலாவது பிரிவைச் சேர்ந்த பெண் நாயனார்கள் மூவரே. அவர்களுள்ளும் காரைக்காலம்மையாரே உண்மையில் நாயனார் வரிசையில் வைத்துக் கூறப்படுவதற்குரிய முழுச் சிறப்புக்களையும் பெற்றவர். இசைஞானியார் பெரியபுராணத்தின் கதாநாயகனான சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற காரணத்தாலும் சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையின் கடைசிப் பாடலில் தன்னை இன்னாரின் புதல்வன் என்று அடையாளம் காட்டிய காரணத்தாலும் நாயனாரானவர். சேக்கிழார் அவர் பற்றி அதிகமாக ஒன்றும் கூறிவிடவில்லை. சடையனாரின் மனைவியும் நம்பியைப் பெற்றவருமான அவரைத் தனது புன்மொழியால் புகழமுடியாது என்பதை மட்டுமே கூறுகிறார்.


பாண்டியநாட்டில் சமணம் மடிவதற்கும் திருநீற்றின் பெருமை ஓங்குவதற்கும் காரணமான சம்பந்தரை மதுரைக்கு அழைத்த காரணத்தால் சம்பந்தரால் பதிகத்தில் போற்றப்படும் சிறப்பைப் பெற்ற மங்கையற்கரசியார் இரண்டு பாடல்களில் பெரியபுராணத்தில் போற்றப்படுகிறார். அவர் இசைஞானியாரைப் போலன்றித் தான் ஒரு வகையில் சைவத்திற்குச் செய்த தொண்டால் பெருமை பெறுகிறார். பாண்டிய குலத்திற்கு வந்த பழியைத் தீர்த்த தெய்வப் பெண் என்று சேக்கிழாரால் போற்றப்படுகிறார். அவர் தனது கணவரான நெடுமாறனுக்குச் சைவ வழித் துணையாக நெடுங்காலம் வாழ்ந்து தனது கணவனுடன் ஈசன் திருவடியில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.


தனது வாழ்வாலும் தான் பாடிய சிறப்புமிக்க பதிகங்களாலும் பெருமை பெற்றவர் புனிதவதியார் எனப்படும் காரைக்காலம்மையார். அவர் பற்றிய புராணத்தின் இறுதியில் தான் எழுதிய சூசனத்தில் நாவலர் சிவனடியார்களுக்கு உணவளித்தமையையும் சிவன் மீது அவர் கொண்ட அன்பையும் சிறப்பித்துக் கூறி, ‘இவ்வம்மையார் பெருமை இவரைப் பரமபதியாகிய சிவபெருமான் அம்மையே ‘ என்று அழைத்தருளியமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்கு திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் ‘அஞ்சியருளியமையானும் அறிக ‘ என்று குறிப்பிடுகிறார். புனிதவதியார் சிறு வயது முதல் இயல்பாகவே சிவனில் ஏற்பட்ட அன்பினால் சிவனடியாருக்கு உணவளிப்பதைத் தனது வாழ்வின் பணியாக ஏற்றுக் கொண்டார். அவர் அழகான பெண்ணாக தனதத்தன் என்ற செல்வந்தருக்குப் பிறந்து பரமதத்தன் என்ற செல்வந்தனுக்கு வாழ்க்கைப்பட்ட போதும் அவரது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்பது பெரியபுராணத்திலிருந்து தெரிய வருகிறது.


சிவனடியாருக்கு உணவளிக்கும் பணியுடன் சாதாரணமாகப் போய்க் கொண்டிருந்த அவரது இல்லற வாழ்வில் ஒருநாள் இடம்பெற்ற மாம்பழச் சம்பவம் அவரது வாழ்வையே திசை மாற்றியது. கணவன் கொண்டு வந்து கொடுத்த இரு மாம்பழங்களில் ஒன்றை உணவு தயாரித்து முடியாத நிலையில் பசியுடன் வந்த சிவனடியாருக்கு வழங்கிவிட்டார். பின்னர் முதல் மாம்பழத்தை உண்ட கணவன் அதன் சுவையில் மயங்கி மற்றதையும் கேட்க அச்சமுற்ற அவர் இறைவனிடம் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதன் சுவை மூவுலகிலும் கிடைத்தற்கரியது என்று எண்ணிய அவன் மனைவியிடம் ‘எவ்வாறு இதைப் பெற்றாய் ? ‘ என்று வினவ அவர் உண்மையைச் சொல்ல, இன்னொரு பழம் அவ்வாறு பெற்றுத்தரும் படி கேட்டான். அவரும் இறைவனைப் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுக்க, அவன் வாங்கிய கணமே அது கையில் இருந்து மறைந்தது. அன்றிலிருந்து தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி விலகியிருந்து, பின்னர் வணிகத்துக்கு வேற்றுருக்குப் போக நேர்ந்த சந்தர்ப்பத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணம் செய்து, தனது பெண் குழந்ததைக்குப் புனிதவதி என்று பெயரிட்டதுடன், ஒருநாள் தன் மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான். அவர்கள் வணங்கிய அக்கணத்தில் தனது இல்லற வாழ்வு முற்றுப்பெற்றதை அம்மையார் அறிந்து கொண்டார்.



தான் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் இரண்டையும் தானே உண்ண விரும்பிய பரமத்தனுடன் புனிதவதியார் வாழ்ந்த வாழ்க்கை பெரியளவில் மகிழ்ச்சிமிக்கதாக அமைந்திருக்க வழியில்லை. சிவனடியாருக்கு உணவளிப்பதில் அவர் இன்பம் கண்டபோதும் இல்லற வாழ்க்கையை வேண்டா வெறுப்புடன் வாழவில்லை. எனவே கணவன் தன்னை விட்டு விலகியிருந்த போதும், அவன் தனது இரண்டாவது மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து காலில் விழுந்த போதும் அவர் உள்ளுர வேதனையடைந்திருப்பார். தான் இனித் தனித்து வாழப்போகும் வாழ்க்கை பற்றி அச்சமடைந்திருப்பார். அதனாலேயே தன் அழகு தனக்குப் பகையாய் அமைந்துவிடும் என்ற பயத்தில் இறைவனிடம் பேயுருவை வேண்டிப் பெற்றுக் கொண்டு தன் வாழ்வை இறை அனுபவத்தில் திழைக்க அர்ப்பணித்துக் கொண்டார். ஆயினும் சிறுவயதிலிருந்தே சிவ வழிபாட்டில் அவருக்கு அளவில்லாத ஈடுபாடு இருந்ததால் இல்லற வாழ்வு சீர் குலைந்த போது அவர் முற்றாக இறை அனுபவத்தில் மூழ்க வழியேற்பட்டது. அத்துடன் அவரது உணவளிக்கும் பணி முடிவடைந்து அவரது பாடும் பணி ஆரம்பமாகியது.


அவரது பாடல்களான அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியன அவர் பெற்ற இறை அனுபவத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. அவரது இல்லற வாழ்வின் முறிவு அவரைப் பாதித்ததற்கு அவற்றில் சான்றுகள் இல்லை. மாறாக மகிழ்ச்சியும், நகைச்சுவையும், கனிவும், பக்தியும் அவற்றில் நிறைந்து அவற்றுக்கு காலத்தை வென்று நிற்கும் சிறப்பை அளித்துள்ளன. அவர் இளம் வயதிலேயே பாட ஆரம்பித்த போதும் மற்ற நாயனார்களின் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் அறவே இடம்பெறாது போயிருப்பது வியப்பளிக்கிறது. இளம் வயதிலேயே ஏற்பட்ட முதிர்ச்சி தாய்மையுணர்வுடன் இறைவனைப் பார்க்கும் மனப்பக்குவத்தை அவருக்கு அளித்துள்ளது. தலையால் நடந்து கைலாசத்தை அடைந்து இறைவனிடம் இறவா அன்பும், பிறவாமையும், பிறந்தால் இறைவனை மறவாமையும் வரமாகப் பெற்றவர். சுடுகாட்டிலே இறைவனது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்த அவருக்கு பேயுரு வாழ்க்கை கசப்பாக அமையவில்லை. பேராசிரியர் வேலுப்பிள்ளை கூறுவது போல சுடுகாட்டைக் காட்டி வாழ்வின் நிலையாமையைப் போதித்த சமணத்திற்கு மாறாக அங்கு நடனமிடும் இறைவனின் அழகைக் காட்டுகிறாaர் அம்மையார். ஆயினும் சமணத்தைக் கண்டிக்கும் எந்தச் சான்றையும் அவரது பாடல்களில் காணமுடியவில்லை. அவர் சமுகப் பாதிப்பு எதுவுமின்றி தானும் கடவுளும் உள்ள ஓருலகைச் சிருஷ்டித்து அதற்குள் வாழ்ந்தது போலவே பெரியபுராணமும் அவரது பாடல்களும் அவரைக் காட்டுகின்றன. சேக்கிழார் சிவனில் அம்மையார் கொண்ட அன்பை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்.


பெரியபுராணத்தில் வரும் அடுத்த முக்கிய பெண் நாவுக்கரசரின் சகோதரியான திலகவதியார். அவர் நாயனார் அந்தஸ்த்தைப் பெறாதுவிடினும் சிவபணிக்குத் தனது வாழ்வைப் பூரணமாக அர்ப்பணித்து விட்ட அவரைப் பற்றிச் சேக்கிழார் சிலாகித்துக் கூறுகிறார். காரைக்காலம்மையார் திருமணம் முடித்தும் கணவனுடன் அதிக காலம் வாழும் பேறைப் பெறவில்லை என்றால் திலகவதியாருக்கு நிச்சயம் செய்யப்பட்ட கலிப்பகையார் திருமணத்திற்கு முன்னரே போரில் இறந்து போய்விட்டார். அந்தத் துயரத்தில் பெற்றோரும் இறந்துவிட தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட கணவருடன் தானும் மேலுலகில் இணைய விரும்பி உயிரை மாய்க்க முற்பட்டபோது சகோதரன் வந்து தடுக்கவே அவருக்காக உயிர் வாழ ஒப்புக்கொண்டார். ஆயினும் பின்னர் சகோதரனான மருணீக்கியார் சமணத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு மதம் மாறிவிட நேர்ந்த போது திலகவதியாரது வாழ்வும் அம்மையாரது வாழ்வைப் போல தனிமையானதாகவே அமைந்துவிட்டது.



காரைக்காலம்மையார் பக்திப் பாடல்கள் பாடி திருவாலங்காட்டுடன் தன்னைப் பிணித்துக்கொண்டது போல திலகவதியார் திருவதிகை வீரட்டானத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். பிஞ்ஞகன்பால் ஆராத அன்பு கொண்ட அவர் திருக்கோயில் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்துடன் தனது சகோதரனைச் சமணசமயத்திலிருந்து மீட்டுத்தர வேண்டுமென்று இறைவனைத் தினமும் வழிபட்டு வந்தார். அவரது வேண்டுகோள் ஒருநாள் நிறைவேறியது. சூலைநோயால் பாதிக்கப்பட்ட மருணீக்கியார் சகோதரியிடம் ஓடோடி வந்தார். வந்தவருக்குத் திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி திருநீற்றை அளித்து திருவீரட்டம் கோயிலுக்குள் புகுமாறு பணித்தார். அங்கே மருணீக்கியாருக்கு நோய் தீர்ந்தது, முதன் முதலாகப் பாட ஆரம்பித்தார். அதனால் நாவுக்கரசர் என்ற நாமமும் பெற்றார்.


தன் வாழ்வைத் தனது சகோதரனது வாழ்வுக்காகவும் இறை பணிக்குமாக அர்ப்பணித்த திலகவதியார் இறைவனது அருளால் பரசமயத்தில் இருந்து மருணீக்கியாரை மீட்டெடுத்தார். சைவத்துக்கு அருமையான தேவாரம் கிடைக்கவும், ஆன்மிகத்தில் சிறந்த நாயனார் கிடைக்கவும் வழி சமைத்தார். அம்மையாரும் திலகவதியாரும் பல வகைகளில் ஒற்றுமையுடையவர்கள். இருவரும் மிக இளம் வயதிலேயே சைவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள். அம்மையார் திருமணத்தின் ஊடாகக் கடந்து வர, திலகவதியார் அது கிடைக்காமல் பணிக்கு வந்தவர். அம்மையார் முதலில் சைவ அடியார்களுக்கு உணவளிக்கும் பணி செய்த போதும் பின்னர் தனது பாடல்கள் மூலம் இறையனுபவமும் இறையருளும் பெற்றவர். திலகவதியார் கோயில் திருப்பணி மூலம் கடவுள் அருளைப் பெற்றவர். அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஒரு இளம் பெண் தனியாகத் திரிந்து பணியாற்றுவதற்குரிய சூழ்நிலை இருந்திருக்க வாயப்பிருக்கவில்லை போலுள்ளது. அதனாலேயே அவர் பேயுருவை வேண்டிப் பெற்றார். திலகவதியார் வாழ்ந்த காலத்தில் இந்த நிலை சற்று மாறியிருந்திருக்க வேண்டும். அவர் தனது இளமை உடலுடனேயே கோயிலில் பணியாற்ற ஆரம்பித்தார். வயது முதிரும் வரை அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இவ்விரு பெண்கள் பற்றியும் சேக்கிழார் மிக உயர்வாகப் பேசுகிறார். அவர்களது பணியையும் பக்தியையும் புகழ்கிறார்.


இவர்கள் இருவரும் தமது இல்லற வாழ்வை இழந்த போதும், தனியாக இருந்து சுதந்திரமாகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள். ஆனால் நாயன்மாரது மனைவியராக வாழ்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில்f தமது கணவரால் கட்டுப்படுத்தப்பட்டனர், தமது நாயனார் கணவருடன் இணைந்து அனைத்துச் சமய காரியங்களிலும் கைகொடுப்பது மட்டுமல்ல விரும்பியோ விரும்பாமலோ தமது கணவரின் மிகக் கஷ்டமான தொண்டுகளுக்கும் அவர்கள் துணை செய்ய வேண்டி நேர்ந்தது. அவர்கள் செய்த சிறிய தவறுகளுக்கும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டனர். நாயனாருக்கு மனைவியாக இருப்பது என்பது லேசான காரியமில்லை என்பதைச் சேக்கிழார் தனது கதைகள் மூலம் காட்டுகிறார்.



இயற்பகை நாயனார் சிவனடியார் எது கேட்கினும் இல்லையென்னாது கொடுக்கும் இயல்பினர். ஒருநாள் சிவனடியார் அவரது மனைவியைத் தரும்படி கேட்டபோது மனைவியை ஒரு வார்த்தை கூடக் கேட்காது கொடுக்கச் சம்மதித்து விட்டார். தான் சிவனடியாருக்கு வழங்கப்பட்டதை அறிந்து மிகவும் மனம் கலங்கிய நாயனாரது மனைவி பின் தெளiந்து ‘ன்று நீர் கேட்பது இதுவாகில் இதை மறுப்பதற்கு எனக்கு உரிமை உள்ளதோ ‘ என்று கூறிக் கணவரை வணங்கி சிவனடியாருடன் புறப்பட்டார். நாயனாரது உறவினர் இதனைக் கேள்வியுற்று ஏஉன் மனைவியை அன்னியன் ஒருவருடன் அனுப்புகிறாயே உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறதுஏ என்று கூறி ஆயுதங்களுடன் வந்து தடுத்தபோது, நாயனார் ஆயுதம் தாங்கி வந்து தம் உறவினர் அனைவரையும் வெட்டிக் கொன்று விட்டு சிவனடியாரையும் தனது மனைவியையும் பாதுகாப்பாக ஊர் எல்லையில் கொண்டு போய் விட்டார். ஆயினும் சிவனடியார் மறைந்து இறைவன் தோன்றி அவரது அன்பைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறி நாயனாரையும் மனைவியையும் தம்முடன் வரும்படி கூறி மறைந்தார்.


இயற்பகையாரின் மனைவி முதலில் மனச் சஞ்சலம் அடைந்தது போல சிறிதும் சஞ்சலம் அடையாது தனது பிள்ளையை வெட்டும் போது பிடிக்கவும், பின்னர் கறி தயாரிக்கவும் மனப்பூர்வமாகச் சம்மதித்தவர் சிறுத்தொண்டரின் மனைவியாகிய திருவெண்காட்டு நங்கை. அவர் தினமும் சிவனடியாருக்கு உணவளிக்கும் தொண்டில் மிக விருப்புடன் கணவனுடன் இணைந்து உதவி வந்தவர். ஆனால் ஒருநாள் வந்த சிவனடியார் பிள்ளைக் கறி, அதுவும் தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தயாரிக்கப்பட்ட கறி கேட்ட போதும் தமது பிள்ளையை வெட்டிக் கறி சமைக்க நாயனார் முடிவெடுத்த போதும் அவர் மனச் சஞ்சலம் எதுவுமின்றிச் சம்மதித்தார். பின்னர் நடைபெற்ற அனைத்துக் காரியங்களிலும் ஒரு கருமயோகி போல பங்குபற்றிச் சிவனடியாருக்கு உணவளித்தார். இறுதியில் சிவனடியார் வேடத்தில் வந்த சிவன் மகனை உயிருடன் மீட்டுக் கொடுத்ததுடன் அவர்கள் அனைவருக்கும் சிவபதமும் அளித்தார்.


இந்த இரு கதைகளிலும் சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமான காரியங்களில் நாயன்மார் ஈடுபட்டதால் இறைவனே சிவனடியார் வேடத்தில் நாயனாரின் அன்பைப் பரீட்சிக்க வந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். மற்றவர்கள் இக்காரியங்களில் ஈடுபடக் கூடாதென்பதாலும் சேக்கிழார் இவ்வாறு கூறியிருக்கலாம். ஒருவர் தனது மனைவியை அன்னியன் ஒருவனுடன் அனுப்புவது என்பது தமிழர் காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த கற்புக் கொள்கைக்கு எதிரானது என்பதால் சேக்கிழார் மிகவும் அவதானமாகவே கதையை அமைத்துள்ளார். இக்கதை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் சேக்கிழார் சிந்தித்திருப்பார். எனவேதான் மனைவியின் தயக்கத்தையும் பின்னர் கணவர் கூறுவதற்கு எதிராக முடிவெடுப்பதற்குத் தனக்கு உரிமையில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுவதையும் சேர்த்துள்ளார்.



சிறுத்தொண்டரது கதை சற்று மாறுபட்ட தன்மை கொண்டது. அத்துடன் அது பல நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் வழங்கி வந்த கதை. எனவே சேக்கிழார் சிறிதும் தயக்கமின்றிக் கதையை வளர்த்துச் செல்கிறார். இது முதல் கதையை விட மிகக் கொடுமையான செயல் மூலம் பக்தியைக் காட்டுவதால் அச் செயலில் கணவன் மனைவி இருவருக்கும் சமபங்களிக்க அவர் விரும்பி இருக்கவேண்டும். தன் பிள்ளையைக் கொல்லச் சம்மதிக்கவும் அக் கொலையில் பங்கு கொள்ளவும் பொதுவாக எந்தத் தாயும் சம்மதிக்க மாட்டாள். ஆனால் இங்கே தாய் சம்மதிக்கிறார். அவரின் மனநிலையில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டதாகச் சேக்கிழார் கூறவில்லை. கவனமாகக் காரியத்தைச் செய்து சிவனடியாரது பசியை ஆற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர அச் செயலில் ஈடுபட்ட போது துயரமோ வேறு மன நிலையோ இருக்கவில்லை. ஆயினும் மிகக் கொடுமையான ஓர் அனுபவத்தினூடாகச் செல்ல வேண்டிய நிலையைச் சேக்கிழார் சிறுத்தொண்டரின் மனைவிக்கு அளித்துள்ளார். ஆயினும் அவரது மனநிலையைக் கூறி கதை கேட்போரின் அனுதாபத்தை பெறும் சந்தர்ப்பத்தைச் சேக்கிழார் அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே மனைவி அனைத்துக் காரியங்களிலும் மனப்பூர்வமாக பங்கு பெறுவதாகக் கூறுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.


வேறு இரு கதைகளை சேக்கிழார் முற்றாகப் பெண்களுக்கு எதிராக அமைத்துள்ளார். அதாவது நாயனாரின் பணிக்குச் சாதகமாக இல்லாதவர் எவரும் தண்டனைக்கு உரியவர் என்பது அவரது கருத்து போல தெரிகிறது. கலிக்கம்பரின் மனைவி எப்போதும் சிவனடியாருக்கு உணவளிக்கும் பணிக்குத் தன் பங்களிப்பை வழங்கி வந்தவர். தினமும் பெரியளவில் சுவையான உணவு தயாரிப்பது மட்டுமல்ல சிவனடியார் வந்ததும் வாசலில் அவர்களது கால்களைக் கணவன் கழுவுவதற்கு தண்ணீர் வார்ப்பதும் அவரது கடமை. அவர் ஒரு போதும் அக்கடமைகளில் தவறியவர் இல்லை. ஒருநாள் தம்மிடம் முன்னர் பணியாளாக இருந்து கோபித்து விலகிச் சென்ற ஒருவன் சிவனடியாராக வந்திருப்பதை தண்ணீர் ஊற்ற வந்தபோது அவதானித்த அவர், தண்ணீர் வார்க்க ஒரேயொரு கணம் தாமதித்ததற்காக கணவனான நாயனார் உடனே போய் வாளை எடுத்து வந்து தண்ணீர் வார்க்க தாமதித்த அவரது கையைத் தறித்தார். பின் தானே நீர் ஊற்றிக் கழுவி அடியாருக்கு அமுது செய்வித்தார்.


அடுத்த கதையில் நாயனாரான கழற்சிங்கன் என்ற அரசனின் பட்டத்துராணி அவருடன் ஒருநாள் கோயிலுக்குப் போயிருந்த போது கீழே கிடந்த பூவொன்றை எடுத்துப் பெண்களுக்குள்ள இயல்பின்படி நுகர்ந்துவிட்டார். அப்போது அங்கே வந்த செருத்துணை நாயனார் இராணியின் அச்செயல் கண்டு தாளாத கோபங் கொண்டு கருவி எடுத்து வந்து அவளது பூவை மணந்த மூக்கை வெட்டினார். அதனால் ஏற்பட்ட வலியினால் அவள் கீழே விழுந்து அழுத அழுகுரல் கேட்டு அங்கே வந்த அரசன் நடந்ததை செருத்துணை கூறக் கேட்டு, பூவை எடுத்த கையையும் தறிக்க வேண்டுமென்று கூறித் தனது வாளால் அவளது கையையும் தறித்தார். அப்போது அவரது செயலை மெச்சி வானத்திலிருந்து தேவர் மலர்மாரி பொழிந்தனர்.


இவ்விரு கதைகளிலும் நாயனார்கள் மட்டும் இறுதியில் சிவனடி சேர்ந்ததாகக் கூறப்படுகின்றதேயன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி பற்றி எதனையும் சேக்கிழார் கூறவில்லை. அத்துடன் மூக்கையும் கையையும் வெட்டிய செயல் கொடுமையானது என்று யாரும் கருதுவதற்கு இடமளியாது அது சரி என்பதை ஏற்றுத் தேவர்களே பூமாரி பொழிந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். கலிக்கம்பரின் மனைவி எந்த விதத்திலும் தனது கணவனின் பணிகளுக்குத் தடையாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருக்கவில்லை. விபூதியும் உருத்திராக்கமும் இடையில் கந்தையும் அணிந்து வருபவர் அனைவரும் சிவனடியார் என்ற பிரிவுள் அடங்குவர். அவர்களது உள் இயல்பையோ அல்லது முந்தைய வாழ்க்கையையோ ஆராயவேண்டிய அவசியமில்லை என்பது சேக்கிழாரது வாதம். வேறு கதைகளிலும் சேக்கிழார் இந்த வாதத்தை முன்வைப்பதைக் காணலாம். அதனாலேயே ஒரு சிறிய தவறுக்கு கலிக்கம்பரின் மனைவி பெரிய தண்டனை பெறவேண்டியதாயிற்று.


கழற்சிங்கனது மனைவி கீழே விழுந்து கிடந்த பூவையே எடுத்து மோந்தார். அதனால் அவர் மூக்கையும் கையையும் இழக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளானார். இரண்டு நாயனார்களால் தண்டிக்கப்பட்ட ஒரேயொரு பெண் இவர்தான். கீழே விழுந்த பூ பூசைக்கு உரிய தகுதியை இழந்து விடுகிறது. ஆயினும் கோயிலுக்குள் இருந்ததால் அதற்கு ஒரு புனிதம் வந்ததென்றும் அதனை மணப்பதன் மூலம் இராணி அந்தப் புனிதத்தை மாசுபடுத்திவிட்டார் என்று சேக்கிழார் கருதியதாலேயே அவருக்கு அவ்வளவு பெரிய தண்டனையை அளித்துள்ளார். சைவத்தைப் பாதுகாப்பதற்கு சிவனடியாருக்குச் செய்யும் சேவைகளையும் கோயிலின் புனிதத்தையும் பாதுகாப்பது மிக அவசியம் என்று சேக்கிழார் கருதியதால் போலும் இரண்டு பெண்களும் சிறிய தவறுக்குப் பெரிய தண்டனை பெற்றார்கள்.


பொதுவாகப் பெரியபுராணத்தில் வரும் பெண்கள் அனைவரும் ஏதோ வகையில் தியாகம் செய்பவர்களாகவே காட்டப்படுகிறார்கள். ஒன்றில் இளமையையும் தமது வாழ்வையும் தியாகம் செய்பவர்களாயிருப்பர். அல்லது தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளையோ அல்லது தமது அழகிய உடல் உறுப்புகளையோ தியாகம் செய்பவர்களாயிருப்பர். ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ‘ என்று பாரதியார் பாடிiயது பெரியபுராணத்தில் வரும் பெண்களுக்கும் பொருந்தும் போல தெரிகிறது.

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே



மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

 பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.

  இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது.

  பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில்எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.

  நம்வாழ்வில் அவதூராக பேசும் வார்த்தைகள் கூட இன்று தெய்வமாக வணங்கப்படுகிறது. சீ ! சனியனே ! நாயே ! ஆ பாம்பு என்று கத்துகிறோம் ஆனால் அதற்கே தெய்வமாக சிலையை வைத்து பால் வார்த்து வணங்கப்படுகிறது. வழி பாதைகளில் ஒரு வேம்பு மரம் இருத்தால் உடனே அதற்கு ஒரு துணியை கட்டி மஞ்சள் பூசு பொட்டு வைத்து மாரி என்கிறார்கள்.இப்படி திடீர் தெய்வங்கள் கண்ட இடங்களில்எல்லாம் காட்சிகளாக மாறி வருகிறது.

  ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

  இன்னும் சிலர் சாதங்களில் பரிகாரம் என்று இந்த கோள் வழிபாடு செய்,அந்த கோள் வழிபாடு செய் என்றும் வீட்டில் காக்கை வந்தால் விரட்டியடுக்கிறோம் ஆனால் காக்கையே தெய்வமாக ஊர்வலம் வருகிறது.

மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.

சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.

  திருச்சிற்றம்பலம்


வியாழன், 28 ஜூலை, 2022

பெண்மையை போற்றுவோம்...


 பெண்மையை போற்றுவோம்...

63 நாயன்மார்களின் புகழுக்குத் துணை நின்ற போற்றுதலுக்குரிய மகளிர்.....தில்லைவாழ் அந்தணர்களின் தொண்டு சிறக்க துணைநின்ற அவர்களின் மனைவியர்....
தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம் என்ற வைராக்கிய பெண்மணி திருநீலகண்ட நாயனாரின் மனைவி மணம் முடித்தவுடன் கணவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு சிவனடியாருடன் செல்ல ஒத்துக் கொண்ட இயற்பகை நாயனாரின் மனைவி.
விதைத்த விதை நெல்லைக் கணவர் தர அதை அரிசியாக்கி வீட்டின் கூரையையே விறகாக்கி சிவனடியாராக வந்த இறைவர்க்கு உணவு சமைத்த இளையான்குடி நாயனாரின் மனைவி,
கணவரின் சொல்லை மதித்து, அடியாராக வந்த இறைவனாரின் கோவணத்துக்கு இணையாக தராசு தட்டில் தமது செல்வங்களுடன் தன்னுடைய மகனுடன் நிற்கத் துணிந்த அமர்நீதி நாயனாரின் மனைவி வறுமையிலும் செம்மை காத்த குங்கிலிய கலய நாயனாரின் மனைவி அடியாராக வந்த இறைவர், திருமணமாக வேண்டிய பெண்ணின் அழகிய கூந்தலை வேண்ட.
உடன் அதை அரிந்து கொடுக்க ஒப்புக் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் மகள் அரிவாட்ட நாயனாரின் ஆழ்பக்திக்குத் துணைநின்று வறுமையிலும் இறைவனாருக்கு அமுது படைத்த அவரது மனைவி சமணத்திலிருந்த தம்பியை திருநீறிட்டு சைவத்திற்கு கொணர்ந்து நாம் படித்து மகிழும் பல பதிகங்களை நமக்குக் கிடைக்கச் செய்த திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கை இறைவர்க்கு அமுதளித்து, இறைவரால் அம்மையே என்று அழைக்கப்பட்டு பேயுடம்புடன் தீந்தமிழ் பாடல்கள் பல பாடி இறைவனாரின் திருநடனத்தை தினம் கண்டு களிக்கும் பேறு பெற்ற நம் பாட்டியார் காரைக்கால் அம்மையார்.
பெற்றமகன் வாழை இலை கொணரச் சென்றபோது பாம்பு தீண்டி இறக்க, உடலை ஒரு அறையில் மறைத்து வைத்து தம் குல குரு அப்பர் பெருமானுக்கு உணவு பாறிமாறிய அப்பூதி அடிகளின் மனைவி
இறைவனாரின் மேலுள்ள ஆழமான அன்பாலும் கணவரின் சிவபக்திக்குத் துணை நிற்கும் தன்மையாலும் தான் சுமந்து பெற்ற மகனை மடியில் சுமத்தி கணவர் அரிய பிள்ளைக்கறி சமைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மனைவி.
கறியமுது சமைக்க உதவிய அவர்களது பணிப்பெண்
திருநீல நக்க நாயனார் வழிபாட்டில் இருந்தபோது இறைவர்மேல் சிலந்தி விழக்கண்டு வாயால் ஊதிய காரணத்தால் கணவரின் கோபத்திற்கு ஆளான திருநீலநக்க நாயனாரின் மனைவி
நாம் தமிழால் இறைவரைப் பாட பல பாடல்கள் தந்த திருஞானசம்பந்தரை ஈந்த தாயார் மறுநாள் மணமுடிக்கவுள்ள காதலரை பாம்பு தீண்ட அந்த துக்கத்திலும் இறைவரை அப்பெண் புகழ்ந்து அழ அதுகேட்டு ஞானசம்பந்தர் தேன்தமிழில் பதிகம் பாடி உயிர்பிக்கக் காரணமான அப்பெண்.
மயிலை செட்டியார் மகள் பூம்பாவையை பாம்புகடித்து இறந்து விட அப்பெண்ணினச சாம்பலை தீந்தமிழ் பதிகம் பாடி உயிர்ப்பித்தார் ஞான சம்பந்தப் பெருமான் . அவரது செந்தமிழ் பாடலால் உயிர்பெற்ற அப்பெண் பூம்பாவை.
மணமுடித்தவுடன் ஞானசம்பந்தப் பெருமானுடன் ஜோதியில் கலந்து இறைவரடி சேர்ந்த அவரது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை.
சமணத்தின் ஆதிக்கத்தால் சைவநெறி குன்றிய காலத்தில் ஞானசம்பந்தரை வரவழைத்து சைவத்தை தென்னகத்தில் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார்
பரவை நாச்சியாரிடம் இறைவரை தூது அனுப்பினார் சுந்தரர் என்பதறிந்து கோபிக்க, இரண்டு நாயன்மாரையும் இணைக்க விரும்பிய இறைவர் ஏயர்கோன் கலிக்காமருக்கு சூலை நோய் தந்து அது தீர சுந்தரர் பெருமான் நேரில் வந்து திருநீறு தரத் தீரும் என்றார். சுந்தரர் பெருமான் மேலுள்ள கோபத்தால் அவர் வரும் முன் தன்னை மாய்த்துக் கொண்ட கலிக்காமரின் உடலை ஒரு அறையில் கிடத்தி சுந்தரரை வரவேற்று உபசரித்த கலிக்காமரின் மனைவி
இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கும் மகன் கோயில்கள் பல எழுப்புவான் என்பதறிந்து தன்னை ஒருநாழிகை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச் செய்ததால் தனதின்னுயிர் துறந்த கோச்செங்க சோழரின் தாயார்.
அடியார்களுக்கு அமுது படைப்பதற்காகவே கணவர் சுந்தரப் பெருமானிடம் செல்வம் கேட்க அதற்காக பல செந்தமிழ் பதிகங்களை இறைவரிடம் பாடி பரிசுகள் பல பெற காரணமான பரவை நாச்சியார்.
இவரிடம் சுந்தரருக்காக இறைவனாரே தூது சென்றுள்ளார். இறைவர்க்கு பூமாலை செய்து வழிபட்டு அவரே தூதுசென்று சுந்தரரை மணமுடித்த சங்கிலியார்.
பரமன் தடுத்தாட்கொண்ட சுந்தரர் பெருமானாரிர் தாய் இசை ஞானியார்
உலகின் அனைத்து பெரியோர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் மனைவி வாசுகி அம்மையார்.
ஆத்திச்சூடி வினாயகர் அகவல் என பல தேன்தமிழ் இலக்கியங்கள் தந்த ஔவையார்.