புதன், 29 ஏப்ரல், 2015

தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் - சிவ வாக்கியர்


தங்கத்தைப் பார்த்து பயந்த சித்தர் - சிவ வாக்கியர் இறைவனைப் பற்றி அறியும் ஞானமே பிரம்ம ஞானம் என்று சொல்லப்படுகிறது. பெளதீக, சூக்கும, மனோ தத்துவங்களை உருவாக்கியவர்கள் , பிரம்ம ஞானம் பெற்ற சித்தர்கள். உடலில் இருக்கும் ஞானேந்திரியங்களை சரியான முறையில் வசப்படுத்தினால் உயர்ந்தஜீவன்களாக ஆக முடியும். மனிதனின் அறிவுக்கு எட்டாத ரகசியம் எதுவும் இல்லை. காலச் சக்கரம் சுழலும் போது அந்த ரகசியங்கள் சில காலம் மறைந்து விடுகின்றன. மனிதர்களின் நிலையைப் புரிய வைப்பதற்காக சித்தர்கள் தோன்றினார்ககள். அந்த சித்தர்கள் மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். உடலையும் மனதையும் வசப்படுத்தினால் உடலே கோவில் என்பதை உணர முடியும் என்று கூறய சித்தர்தான் சிவவாக்கியர், கருவில் இருக்கும் குழந்தை உலகம் என்ற பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைக்கும் போது எழுப்பும் முதல் ஒலி அம்மா என்ற குரலே. ஆனால் சிவ சிவா என்ற குரல் எழுப்பி குழந்தை பிறந்தது என்றால் ஆச்சரிய படுவோம் அல்லவா?. அப்படி பிறந்த குழந்தை க்கு சிவ நாமத்தை எப்போதும் உச்சரிக்கும் வகையில் சிவ வாக்கியர் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே தத்துவத்தை உணர்ந்து வாழ்ந்த சிவ வாக்கியர் முக்திக்கு விடை தேடி தேச சஞ்சாரத்தை மேற்கொண்டு காசியில் ஒரு சித்தரை பார்த்தார். அந்த சித்தரை செருப்பு தைக்கும் தொழிலாளியாக மட்டுமே மற்றவர்கள் பார்த்தார்கள். ஆனால் சிவவாக்கியர் அவர்களின் கண்களுக்கு உலகத்தை அறிந்த ஞானிபோல் தென்பட்டார். அவர் அருகே அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்த சித்தரின் மனதில் உபதேசம் கற்க போகும் மாணவன் கிடைத்து விட்டான் என்று தோன்றியது. எவரிடமும் இல்லாத புரிந்து கொள்ளும் சக்தி சிவவாக்கியருக்கு இருப்பதாக அவரது உள் உணர்வு கூறியது. சிவ வாக்கியரிடம் அவர் பெயரை கேட்காமலேயே " சிவவாக்கியரே இந்த காசை, என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்துவிட்டு, இந்த சுரைக்காயின் கசப்புத் தன்மையை கழுவிட்டு வா" என்றார் சித்தர. சிவவாக்கியருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மறுப்பு சொல்லாமல் பேய் சுரக்காயையும் காசையும் வாங்கிக் கொண்டு கங்கை நதிக்கு சென்றார். காசை கங்கை நதியில் போடுவதற்காக தண்ணீர் அருகே கொண்டு சென்றார். நதியிலிருந்து ஒரு கை வெளியே வந்து காசை பெற்றுக் கொண்டுவிட்டது. வியப்பு மேலிட, பேய்ச் சுரக்காயை கழுவி எடுத்துக் கொண்டு சித்தரிடம் வந்தார், மீண்டும் சிவவாக்கியரைச் சோதிக்க நினைத்த சித்தர், " சிவவாக்கியரே, இந்த தோல் பையில் உள்ள கங்கை தண்ணீரிடம் நீ கொடுத்த காசை கேட்டு வாங்கிக் கொடு" என்றார். குருவுக்கு அடிபணியும் சீடனைப்போல எந்த வித சலனமும் இல்லாமல் " கங்கை நீரே, என் ஆசான் கொடுத்த காசைக் கொடு" என்றார். அந்த தோல்பையிலிருந்து ஒரு கை நீண்டது. அந்த கையிலிருந்து காசை பெற்று சித்தரிடம் கொடுத்தார் சிவவாக்கியர். காசை பெற்றுக் கொண்ட சித்தர் " உன்னிடம் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது. இனி நான் உனக்கு உபதேசம் செய்கிறேன், என்று கூறி உபதேசம் செய்தார். சில காலம் அவரிடம் சீடராக இருந்தார் சிவவாக்கியர். ஐம்பத்தொரு வயதான நிலையில் சிவவாக்கியருக்கு இல்லற ஈடுபாடு மனத்துக்குள் தோன்றயது. இதையறிந்த சித்தர், " சிவவாக்கியரே சிறிது காலம் இல்லற சுகத்தில் ஈடுபட்டு அதன்பின் முக்தி நிலையை அடைவாய்" என்று கூறினார். மனதில் இருந்த எண்ணத்தை எப்படி அறிந்தார் என்ற கேள்விக் குறியோடு சித்தரை நோக்கினார் சிவவாக்கியர், சித்தர் அவரது கையில் மணலையும், பேய் சுரக்காயையும் கொடுத்து " இந்த இரண்டையும் எந்த பெண் சமைத்துக் கொடுக்கிறாளோ அவளை மணந்து கொள்" என்று கூறி விடையளித்தார் சித்தர். அவைகளை பெற்றுக் கொண்ட சிவவாக்கியர் உபதேசங்களை செய்து கொண்டே நடந்தார், கூட்டங்களில் புதிர்போடுவது போல் " இந்த மணலையும், பேய் சுரைக்காயையும் சமைத்து உணவாக பரிமாற முடியுமா? என்று கேப்பார், பெண்கள் திகைத்தனர், யாராலும் முடியும் என்று கூற முடியவில்லை, ஒரு கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது " மணலையும் பேய் சுரக்காயையும் சமைத்து தர முடியுமா? என்று நரிக்குறவர்கள் மத்தியில் இருந்த பெண்களிடம் கேட்டார், அப்போது யாரும் எதிர் பாராமல் ஒரு பெண் முன்னே வந்து " நான் சமைத்துத் தருகிறேன் என்று கூறி வாங்கிச் சென்றது. சிறிது நேரத்தில் மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைத்து கொண்டு வந்தாள். அதை சாப்பிட்ட சிவவாக்கயர் இவளே என் மனைவி என்பதை அறிந்து , அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டு திருமணம் செய்து கொண்டார். நரிக்குறவர்களோடு சிவவாக்கியரும் வாழத் தொடங்கினார். மூங்கில் மரத்தை வெட்டி கூடை செய்யும் தொழிலை கற்றுக்கொண்டார், ஒருநாள் மூங்கில் மரத்தை வெட்டினார், அந்த மரத்தில் இருந்து தங்கத்துகள்கள் கொட்டத் தொடங்கியதைக் கண்டார். இதைப் பார்த்த சிவவாக்கியர் " சிவபெருமானே ! உன்னிடம் நான் முக்திக்கு வழி கேட்டுக் கொண்டு இருக்கும் போது செல்வத்தைக் காட்டி என்னை மயக்குகிறாய்? என்று தங்கத்தை பார்த்த அதிர்ச்சியில் தலை தெறிக்க ஒடினார், இதைக்கண்ட கிராமத்து மக்கள் அவரிடம் என்ன என்று கேட்க, அந்த மரத்தில் பூதம் வருகிறது என்று பொய் கூற மக்கள் அதன் பக்கத்தில் நெருங்கி பார்க்க தங்க துகள்கள் இருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு தங்கத்துக்காக மாண்டார்கள், இதைப் பார்த்த சிவவாக்கியர் மனம் வெறுத்து அங்கிருந்து புண்ணியத் தலங்களுக்கு சென்று ஆசைகளை ஒழித்தால் சிவனைக் காணலாம் ஆசையை ஒழிக்காவிடில் எமனைத்தான் காண முடியும் என்ற தத்துவத்தை மக்களுக்கு போதித்தார். நாத்திக கருத்துக் கொண்டு ஆன்மீகத்தை நெறிபடுத்தி ஆன்மீகத்தை தத்துவப்பாடல் கள் கொண்டு நூல்கள் இயற்றி உள்ளார், அவர்தம் கருத்துக்கள் எதிர் மறை போல் தோன்றினாலும் அதன் உள்கருத்து பல தத்துவங்களை கொண்டது என்பது தெளிவர விளங்கும். இறுதியில் இவர் சமாதி ஆன இடம் கும்பகோணம், சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர் கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு. சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும் சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில் ஏனைய சித்தர்பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை. விக்கிரக ஆராதனை சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப் படுகின்றது. நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வ மென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையே யாகும் என்கிறார். “ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே” நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட வாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து, அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே கல்லுருவம் நம்மால் செய்து வைக்கப்பட்டது. அதைப் பழமையான பொருள், அழியாத இறை என்று எண்ணுகிறீர்கள். அதற்கு என்னென்னமோ பேர் சொல்லுகிறீர்கள். உங்கள் மனதில் தோன்றும் பெயர்களையெல்லாம் இட்டு அழைக்கின்றீர்கள். உங்களின் அறியாமை காரணமாகத்தான் இப்படி யெல்லாம் கடவுளின் பெயரைக் கல்லுக்கு வைத்துஅழைக்கின்றீர்கள். இந்த உலகைப் படைத்த ஒன்று எல்லாவற்றையும் செய்ய வல்லது; உலகையும், உலகப் பொருள்களையும் படைக்க வல்லது. தாம் படைத்த பொருளை அறியாமல் வைத்திருக்கவும் காப்பாற்றவும் வல்லது. அதுமட்டுமல்ல; அவைகளைத் தேவைப்படாத பொழுது அழிக்கவும் வல்லது. இப்படி படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருளை நீங்கள் கல்லிலே காண இயலாது. உங்கள் நெஞ்சினில் மட்டுமே உணர முடியும். மனதில் மட்டுமே உணர முடியும் என்று உண்மையை உரைக்கின்றார் சிவவாக்கியர். இதில் எங்கும் நிறைந்த கடவுளை உருவ வழிபாட்டின் மூலம் வழி படுவது தவறு என்றும், அப்படி வழிபடுபவர்கள் அறியாமையை உடைய ஏழைகள் என்றும் சாடுகின்றார். உருவ வழிபாட்டையே மறுக்கும் சிவவாக்கியர் அவ்வுருவ வழிபாட்டின் பெயரால் நடைபெறும் திருவிழாக்களை மட்டும் ஏற்றுக்கொள்வாரா என்ன? திருச்சிற்றம்பலம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015


தகட்டூர் பைரவர் திருக்கோயில், நாகப்பட்டினம் மூலவர் : பைரவர் உற்சவர் : சட்டைநாதர் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : யந்திரபுரி ஊர் : தகட்டூர் மாவட்டம் : நாகப்பட்டினம் மாநிலம் : தமிழ்நாடு பொது தகவல்: அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார் . தலபெருமை: தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி: கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே. பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார். நாய் வாகனம்: தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. பெயர்க்காரணம்: இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது. தல வரலாறு: இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார். இழந்த சொத்துக்கள் திரும்பப் பெற : 27 மிளகை ஒரு சிறு வெள்ளைத் துணியில் கட்டி பைரவருக்கு முன்னால் ஒரு அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட இழந்த சொத்துக்கள், பொருட்கள் மற்றும் எதை நினைத்து அர்ச்சனை செய்கிறோமோ அவை விரைவில் திரும்பக் கிடைக்கும்

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்


சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர் மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள் ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர், விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம். சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது. இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார். ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார், எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள். சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள். சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் " என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் " கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு "கோரக்கர்" என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர். கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார். இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர். கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர், மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார், காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார், கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

மாந்திரீக மர்மங்கள்: பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்தி...

மாந்திரீக மர்மங்கள்: பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்தி...:        ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் ...

வியாழன், 23 ஏப்ரல், 2015


வினை நீக்கமும் இறை உணர்தலும் " நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் " என்பது, திருநல்லூர் என்ற சிவ ஸ்தலத்தின் மீது திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருப்பதிகம் ஒன்றின் துவக்கம். இது, நினைதல் உருகுதல் , நைதல் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பது. முதல் கட்டமாக இறைவனைப்பற்றிய நினைப்பு வர வேண்டும். அதன் பின்னர் அவனை எண்ணி எண்ணி உருக வேண்டும். மூன்றாவதாக, உருகி உருகி மனம் நைந்து குழைய வேண்டும். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேட்டால் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு ஆப்த நண்பர் " எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதில்லை " என்றார். அவர் நாத்திகர் அல்ல. கோயில்களுக்குக் குடும்பத்துடன் செல்பவர் தான். ஆனால் அவரது ஆன்மீகப்பயணம் அதோடு முடிந்து விடும். நாம் ஏதாவது ஆன்மீக சிந்தனைகளைச் சொன்னால் கேட்கும் குணமும் அவருக்கு உண்டு. அதற்கு அடுத்தபடிக்குச் செல்ல முடியாமல் அத்துடன் நின்று விடுவார். நினைப்பு என்பது சிந்தையில் எற்படுவது.இறை சிந்தனையோ தானாகவே ஏற்படுவதில்லை .வீட்டில் உள்ளவர்களோ ,பிறரோ சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அவர்களால் சொல்லத்தான் முடியுமே தவிர சிந்தையைத் திருத்தி ஆள முடியாது. ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பத்திற்குள் எல்லோருக்கும் ஒரே அளவிற்குத் தெய்வ சிந்தனை இருப்பதில்லை. ஒரு சிலர் அதில் நாட்டம் இல்லாமலே போய் விடுவதும் உண்டு. தெய்வத்தைக் காட்ட முடியுமா என்று கேட்பவர்களுக்கு விடையாக, " அவரவர்கள் உணரத்தான் முடியும் " என்று சமாதானம் சொல்கிறார்கள். அவ்வாறு உணருவது என்பது எல்லோருக்கும் சாத்தியமா? நூலறிவால் உணர முடியுமா? நூலின் பொருளை வரிக்கு வரி உரை நூல்களின் துணை கொண்டு படிப்பதால் அறிய முடியுமா? முற்றோதுதல் செய்தால் உணர முடியுமா? அப்படியே செய்தாலும் இன்னும் எத்தனை மணித்துளிக்கு நிறைவு பெறும் என்றுதானே மனம் கணக்குப் போடுகிறது! பாடலின் கருத்தையே ஏற்க முனையாத மனம் எவ்வாறு அதன் உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனை உணரப்போகிறது? அப்படி உணரத்துவங்கிவிட்டால் சிவப் பிரகாச சுவாமிகள் சொல்வது போல் கண்கள் நீர் பெருக்கி, மேற்கொண்டு படிக்க முடியாமல் தடை செய்யும் அல்லவா? இந்நிலை ஏற்படாதவரை நினைப்பதோ, உருகுவதோ நைவதோ எங்ஙனம் சாத்தியம் ஆகும் ? நம்மால் உயரிய நிலையை எட்ட முடியாதபோது நம் சிந்தை எவ்வாறு திருத்தம் பெறும்? இதற்கு விடையாகத் திருவாசகம், " சிந்தையைத் திருத்தி ஆண்ட சிவலோகா " என்பதால் இறைவனது துணையும் அருளும் இல்லாமல் சிந்தை திருத்தம் பெறாது என்பது வெளிப்படை. இதற்குத் தடையாக இருப்பது அவரவர்களது வினை. யாராக இருந்தாலும் அவரவர் செய்த நல்வினை- தீவினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டும். " அவ்வினைக்கு இவ்வினையாம் " " முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய " என்ற தேவார வரிகள் இதையே காட்டுகின்றன. வினை முழுவதும் நீங்கியவர்களுக்குத் தான் இறையருள் கிட்டுமா எனக் கேட்கலாம். பல்பிறவி எடுத்து, ஓரளவு வினை எஞ்சி நிற்பவர்கள் பால் இரக்கம் ஏற்பட்டு, அவர்களது சிந்தையைத் தாயைக் காட்டிலும் தயை உடைய பரமன் திருக்கண் நோக்கம் செய்கிறான். ஆன்மீக வாதிகளின் முதல் படி இதுவே. அந்தப் பேரருளைத் தந்த இறைவனை மீண்டும் நினைக்காமல் நம் மனம் அதோடு நின்று விடுகிறது. எதை எதையோ சிந்திக்கத் தொடங்கி விடுகிறது. ஆழ்ந்த பக்தி ஏற்படாததன் முதற் காரணம் இதுதான். திருப்பெருந்துறையில் தனக்குத் தரிசனம் தந்த இறைவனை மீண்டும் காண வேண்டி மாணிக்க வாசகர் விண்ணப்பம் செய்கிறார். அவனை எண்ணி எண்ணிக் கரையவில்லையே, உருகவில்லையே, அவன் புகழ் பாட வில்லையே, பாடி ஆடிக் கூத்து ஆட வில்லையே, பன் மலர்களை அவனடிக்கு அர்ப்பணிக்க வில்லையே, அவனது நாமம் சொல்வோரும் கசிந்து உருகுவோரும் எத்தனையோ அடியார் இருக்கும் போது தன்னை ஆட்கொண்ட பெருங்கருணையை எண்ணி,நையாமல் , விழி நீர் பெருக்காமல் மரக் கண் உடையவனாகியும், சிவநாமங்களைக் கேளாத இரும்பு போன்ற செவியனாயும் அலறும் எனக்கு அருள் செய்தமைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் " என அகம் குழைந்து பாடுகிறார். புராணங்களையும் பிற அற நூல்களையும் படிப்பது என்பது நல்ல அடித்தளம் எற்படுத்துவது போன்றது. பள்ளங்களைச் சமன் செய்து மண்ணாலும் கல்லாலும் நிரப்புவது போன்றது. ஆனால் அதுவே, பயணம் செய்வதற்கு ஏற்றதாகி விடாது அல்லவா? அதற்கு மேல் செம்மண், ஜல்லி, தார் போன்ற பொருள்களை இட்டு ஏற்றதாகச் செய்வது போல நாமும் முதல் கட்டத்திலேயே நின்று விடக்கூடாது. மணி வாசகர் சொல்வது போல் நாம் அரிய வாய்ப்பை நழுவ விடலாகாது. பின்னால் பார்த்துக்கொள்வோம் என்று தாமதித்தால் அந்த அருள் மீண்டும் கிடைக்குமா என்று சொல்ல முடியாது அவனது பாத மலர்களை விடாது பற்றினால், அடுத்த இரு நிலைகளும் வினை நீக்கம் பெற்றுப் பிறவா நிலைக்குக் கொண்டு சென்று விடும்.அதனால் தான் இம்மூன்று நிலைகளையும் குறிப்பிட்ட நாவுக்கரசர், " நில்லாமே தீ வினைகள் நீங்க வைத்தார் " என்று அடுத்த வரியில் விளக்கமாக அருளிச் செய்கிறார். உணர்ந்து ஓதுதல் என்பது பாட்டின் பொருளை உணர்ந்து ஓதுதல் அன்று. பாட்டின் பேரின்பப் பொருளாகிய பரமனை உணர்ந்து பாடுதலே ஆகும். " ஓதி யாரும் அறிவார் இல்லை " " யார் உன்னை அறியகிற்பாரே " " இவர் தன்மை அறிவார் ஆர் " " சான்று காட்டுதற்கு அரியானை " "இன்ன தன்மையன் என்று அறி வொண்ணா எம்மான் " முதலிய திருமுறை வரிகள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. எல்லா உலகத்து உயிர்களுக்கும் இது பொருந்தும். சந்திர சேகரனும் கங்காதரனுமாகிய சிவ பரஞ்சுடரின் குஞ்சித பாத மலர்களை இடையறாது நினைந்து ,உருகி, நைவதே முழுவதுமாக மலநீக்கம் பெற்றுச் சிவானந்தம் பெற ஒரே வழி. : "நையாத மனத்தினனை நைவிப்பான் " என்று திருவிசைப்பாவும் இந்த சைவ சித்தாந்த சாரத்தையே காட்டுகிறது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவுலாவிய நீர் மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். , - பெரிய புராணம் நன்றி ; தெய்வத்தமிழ் http://deivathamizh.blogspot.in/

திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;


திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்; தாய் தந்தையரை தெய்வாகப் போற்றுதல்: கடவுள் நிலை அறிந்து அம்மயமான மூவர் பெருமக்கள் அருளிய பாடல்களைத் தேவாரம் எனத் தொகுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக தொகுத்துள்ளார்கள். இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருமுறைப்பாடல்களை அருளிய அருளாளர்கள் மனித உணர்வு (சீவபோதம்) அகன்ற, இறை உணர்வில் ( சிவபோதத்தில் ) மூழ்கிய நிலையில் பிறந்தவை இப்பாடல்கள். சாதாரண அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல. இறைவருடைய அருளால் பாடப்பட்டவை திருமுறைப்பாடல்கள். " வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" - திருஞான சம்பந்தர் இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலம் இறைவர் அருளிய திருமுறைப்பாடல்களில் தற்கால முறைக்கு ஏற்ப பலப்பல அறவுரைகள் சிலவற்றை இங்கே காண்போம். தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வமாக போற்றப் பட வேண்டும். பத்து மாதங்களாகத் தாய் - தந்தையின் மூலம் கிடைத்த அணுவின் கருவை சுமக்கிறாள். தாய் கருவுற்றருக்கும் காலங்களில் படும் துன்பங்கட்கு எதனையும் ஈடாக சொல்ல முடியாது. பிள்ளைப் பேறு என்பது மறு பிறப்பு எனலாம். பிள்ளை பெற்ற பிறகு தாயின் பங்கு குழந்தை வளர்ப்பில் மிக கவனமும் அதிகமாகும். குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்றால் தாய் மருந்து உண்டு , தான் தரும் தாய்ப் பால் மூலம் குழந்தைக்கு மருந்தளிக்கிறாள். பிள்ளைகட்கு வேண்டியனவற்றை செய்வதில் தந்தையின் பங்கும் அதிகமாகும். பிள்ளைகளை நல்வர்களாக வளர்க்க தாய்தந்தை படும் பாடு செல்லில் அடங்கா. பன்னிரு திருமுறைகளில் தாயும் தந்தையும் முதல் தெய்வங்கள் என போற்றப்படுகின்றன.தாய் தந்தையர்களை அப்பன் ஈஸ்வரான நினைத்தாலும் சரி, அண்ணல் ஈஸ்வரனை தாய் தந்தையர்களாக நினைத்தாலும் சரி , எது எப்படியாயினும் " அப்பன் நீ அம்மை நீ" - என்கிறார் நாவுக்கரசர் "தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே" என்கிறார் ஞானசம்பந்தர் "எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே" - சம்பந்தர் "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்கிறார் மாணிக்க வாசகர் ஒருமுறை பெற்றோரை வணங்கினால் நூறு முறை கங்கையில் நீராடியதற்கு சமமாகும். சான்றோர்களை போற்றுதல் வேண்டும் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற ஆலங்காடு தலத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சினார், திருஞான சம்பந்தர் திரு ஆலங்காட்டிற்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் தங்கினார், இரவில் ஆலங்காட்டு இறைவர் திருஞான சம்பந்தர் கனவில் காட்சி அளித்து தம்மை பாட ஆலயத்திற்கு வரும்படி கூறியருளினார். தமக்கு முன்னோடியாக தமிழ் பதிகம் பாடி முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போற்றிய காரணத்தால் இறைவருடைய காட்சி கிடைக்கப் பெற்றார் சம்பந்தர் சுவாமிகள். இவருக்கு பிறகு அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள், இவர் திருஞான சம்பந்தர் காட்டிய வழியைப் பற்றி நடந்தவர். இப் பெருமானார், திருநாவுக்கரசர் சுவாமிகள் கைகளால் உழவாரப்பணி செய்த திருவதிகை வீரட்டாணத்தை வழிபடுவதற்கு வந்தார். ஆனால் அப்பதியை தம் கால்களால் மிதிக்க அஞ்சி வீரட்டாணத்திற்கு அருகில் உள்ள சித்தவடம் என்னுமிடத்தில் இரவு தங்கினார், அன்றிரவு இறைவர் தமது திருவடியை சுந்தரர் தலைமீது சூட்டிக் கருணை புரிந்தார். திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த தலமாகிய சீர்காழியை மிதிக்க அஞ்சி ஊரின் வெளிப்புறத்தே நின்று பதிகம் பாடி வழிபட்டார் சுந்தரர். சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் சுந்தரருக்கு இருந்த இடத்திலேயே காட்சி கொடுத்தருளினார். சான்றோர்களைப் போற்றிவதால் நாம் அடையும் நலன்களை அளவிட முடியாது. இப்பண்பு இளைஞர்களிடையே பரவ வேண்டும், இவர்கள் நலம் பல பெற்று வாழ்வார்கள். கூர்த்த அறிவு பெற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்; திருமால், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் நஞ்சினை கண்டு பயந்து ஓடினார்கள், இப்படிப்பட்ட நஞ்சினை திருவைந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி அருந்தி நலமுடன் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். ஐந்தெழுத்தை சொல்லி கல்லையும் கடலில் மிதக்க செய்தவர் இவர். இவர் அருளியுள்ள அறவுரையினைக் காண்போம். "பூரியா வரும் புண்ணியம் பொய்கெடும் கூரிதாய அறிவு கைகூடிடும் சீரியார் பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன் தன் நாமம் நவிலவே" ( 5-77-1) "கூரிதாய அறிவு கைகூடிடும்" என்னும் திருவாக்கினை மனத்தில் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு வேளையில் 108 முறை "சிவாயநம" என்னும் ஆதி மந்திரத்தை சொல்லுவார்களானால் யாவரும் நன்மதிப்பு பெற்று உயர்வர் என்பது திண்ணம். தீயன செய்யாதிருத்தல்: "..... செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" (7-35-4) நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால்இம்மையில் செய்த தீமைகள் இம்மையிலேயே நம்மை வந்தடையும் என்ற உண்மையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார்கள் இளமையில் எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது என்னும் பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.இதுவே முதுமை வரை தொடரும். தீமை செய்யா வினையை வளர்த்துக் கொள்ளும். எனவே எப்பிறப்பிலும் தீமை வரா என்பது திண்ணம். யாவரையும் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். "தலையே நீ வணங்காய்" என்றார் திருநாவுக்கரசர் இளமையிலேயே கடவுள், பெற்றோர், ஆசிரியர், மற்றும் சான்றோர் ஆகியவர்களை வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். வணங்க தலைப்படும் பொழுதே வளர்ச்சி நம் பக்கம் திரும்பும், வளைந்து கொடுக்கும் நாணல் வளர்கிறது. நிமிர்ந்து நிற்கும் மரம் வேருடன் தண்ணீரால் சாய்க்கப்படுகிறது. என்பதை உணர வேண்டும். வாயினால் வாழ்த்தல் வேண்டும் " வாயே வாழ்த்து கண்டாய்" - நாவுக்கரசர் முதலில் நம்மைக் காக்கும் கடவுளை வாயினால் வாழ்த்தப்பாட பழகிக் கொள்ள வேண்டும். வாயில் அபத்தமான சொற்கள் இளமையில் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலம் இனிமையாக அமையும், வாழ்த்துவதன் மூலம் நாம் நலமாக வாழலாம். இது மறுக்க முடியாத உண்மை. நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்: " பரவுமின் பணிமின் பணிவாரோடே விரவுமின் விரவாரை விடுமினே" (5-43-5) " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும்" ராமலிங்க அடிகள் நல்ல சிவபக்தி உடையவர்களுடன் மட்டுமே நட்புக் கொள்ள வேண்டும். இவர்கள் தீயவென்பன கனவிலும், நினைவிலா சிந்தைத்தூய மாந்தர் ஆவர். நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் நட்புக் கொண்டால் நாமும் நல்லவர்களாகவே வளர்வோம், தீயவர்களின் நட்பு வேண்டவேண்டாம் என்கிறார் திருநாவுக்கரசர். " சேரிடம் அறிந்து சேர்" என்னும் பழமொழியை மனத்தில் கொள்ள வேண்டும். புறங்கூறுதல் வேண்டவே வேண்டாம் " அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்வியனாகிப் பிறர் பொருள் வல்வன்மின்" திருமுறை 10 மனிதராகப் பிறந்த நாம் பொறாமையின் காரணமாக மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் பெரும் பாவமாகும். இதனால் நமது புண்ணியம் குறையும். அத்துடன் யாரைப் பற்றி புறங்கூறினோமோ அவர் செய்த பாவத்தின் ஒரு பகுதி நம்மை வந்தடையும். நலம் பெற நன்மைகள் மட்டுமே செய்தல் வேண்டும் " இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையினாலே முடிந்தது" - திருமுறை 10. இப்பிறவியில் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை நாம் ஏற்கனவே செய்துள்ள நல்வினை தீவினைகளின் பலனே ஆகும் என்கிறார் திருமூலர் "தீங்கு வந்து அடையுமாறு நன்மைதான் சேருமாறும் தாங்கள் செய்வினையினாலே தத்தமக்கு ஆயஅல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினோர் சிலரும் உண்டோ" முள் விதையை விதைத்தால் அறுவடை முள்ளாகத்தான் இருக்கும். கனியாக இராது. வினை விைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை ஞாபகம் கொளல் வேண்டும். இருப்பதைக் கொடுக்கப் பழக வேண்டும் இல்லாதவர்கட்கு கொடுத்தால் இறைவர் நமக்கு தவறாமல் வாரி வழங்குவார் என்கிறார் நாவுக்கரசர் "இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கெல்லாம் கடும்நரகங்கள் வைத்தார்" திருமுறை 4 செல்வம் இருந்தால் இல்லாதவர்கட்கு கொடுத்துப் பழக வேண்டும். இளமையில் பழகுவது பசுமரத்தில ஆனி அடித்தது போல வந்துவிடும். பொய் நீக்கி உண்மையைக் கொள்ள வேண்டும் " பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும் ஐயஞ்சின்அப்புறத்தானும் ஆருர் அமர்ந்த அம்மானே" நாவுககரசர் சிறுவயது முதலே பொய் பேசாமல் உண்மையைப் பேசி பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சான்றோராக்கும். உண்மை தான் கடவுள் , பொய்தான் சாத்தான். உண்மைதான் உயர்வினைத் தரும். இனியனவே நினைக்க வேண்டும் நல்லன நினைத்தால் நல்லன நடக்கும் என்பது முதியோர் வாக்கு. "இனிய நினையாதார்க்கு இன்னாதானை" திருமுறை 6 நம்முடைய நினைவு அல்லது எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். சிறுவயதிலேயே நல்லனவற்றை நினைக்கப் பழகிக்கொண்டால் வாழ்வின் சூழலே இனியதாய் அமையும். வெறுப்பு, கவலை, பேராசை, பயம், பகைமை, பொறாமை போன்ற கீழான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். கொடுக்கும் குணம், ஈகை, அன்பு,, நேர்மை, இரக்கம், உண்மை முதலிய உணர்வுகளை மனதில் ஏற்றுங்கள் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்கள் அமைகின்றன. செயல்களே உம்முடைய விதியை வருங்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன. நீங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றீர்களோ அதுவாகிறீர்கள். வாழ்வில் நன்மை பெற விரும்பும் நீங்கள் இனியவற்றையே சிந்திப்பீர்களானால் உங்கள் வாழ்வில் உயர்வு கட்டாயம் உண்டு. எந்த எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்ளளை தன்பால் ஈர்க்கிறது, இதுதான் நியதி, வாழ்வும் வளத்துடன் அமையும், நாடுமு வலிமையுடன் நிகழும். திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவய ஓம் நன்றி: தமிழ்வேதம் மேலும் ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சொற்றுணை வேதியன்


https://devarathirumurai.wordpress.com/2015/04/20/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ சொற்றுணை வேதியன் by devarathirumurai சொற்றுணை வேதியன் பதிக எண்: 4.11 கடலில் அருளியது பண்: காந்தாரபஞ்சமம் பின்னணி தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.. இதனை சேக்கிழார் குறிக்கும் பெரியபுராண பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து துதிப்பார் சொற்றுணை வேதியன் என்னும் தூமொழி நற்றமிழ் மாலையா நமச்சிவாய என்று அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார். இந்தப் பதிகத்தினை நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை நாம் பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம். மூவர் பெருமானார்கள் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை உணர்த்தும் விதமாக நமச்சிவாயப் பதிகங்கள் அருளியுள்ளனர். காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும், மற்று பற்று எனக்கின்றி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும், இந்த வரிசையில் அமைந்த பதிகங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான், தனது திருவாசகத்தின் முதல் பாடலான சிவபுராணத்தை, நமச்சிவாய வாழ்க என்ற வாழ்த்துடன் ஆரம்பிக்கின்றார். பாடல் 1 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே விளக்கம்:: புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். எனவே சொல் என்றால் வேதங்கள் என்றும் பொருள் கூறுவர். வேதங்களை முதலில் விரித்துக் கூறியவன் சிவபிரான் என்று பல தேவாரப் பதிகங்களில் கூறப்படுகின்றது. அவ்வாறு விரித்துக் கூறியதன் மூலம் வேதங்களுக்குத் துணையாக நின்ற வேதியன் என்ற பொருளில் சொற்றுணை வேதியன் என்று அழைத்ததாகவும் கருதலாம். . உலகத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படும் வேதங்களின் நடுவில் வருவது நமச்சிவாய என்ற திருமந்திரம். எண்ணிக்கையில் வேதங்கள் நான்கு என்று வகுக்கப்பட்டு இருந்தாலும், சாம வேதம் என்பது ரிக் வேதத்தின் மந்திரங்களை இசை வடிவில் கூறுவதாகும் என்பதால், மொத்த வேதங்கள் மூன்று என்று நாம் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் மூன்று வேதங்களில் நடுவாக வருவது யஜுர் வேதமாகும். ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது. வாழ்க்கை நெறிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்கும் வேதத்தின் நடுவில் சிவபிரானின் திருநாமம் வருவதால், சொற்றுணை வேதியன் என்று கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் நடுவில் வைத்து போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்பதால், சொற்றுணை வேதியன் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம் மாயை என்ற மும்மலங்களின் தன்மையால் இருளில் மூழ்கியிருக்கும் நமக்கு ஒளியாகத் தோன்றி வழிகாட்டும், வானவர்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை சோதி வானவன் என்று அப்பர்பிரான் குறிக்கின்றார். பொழிப்புரை: புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும். பாடல் 2 பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே விளக்கம்: திருநாவுக்கரசர் சமண மதத்தை நிந்தனை செய்தார் என்று சமணகுருமார்கள் கொடுத்த புகார் மீது திருநாவுக்கரசரை அரசவைக்கு அழைத்த மன்னான் அவரை ஏதும் விசாரிக்காமல் அவருக்கு பல தண்டனைகள் அளித்தான். இதனால் நடுநிலையிலிருந்து தவறி ஒரு பட்சமாக தண்டனை அளித்த பல்லவ மன்னனின் புகழுக்கு களங்கம் ஏற்படுகின்றது. தான் பெற்ற தண்டனைக்கு காரணமாகிய அரசனின் இந்த தன்மையை நினைவு கூறும் அப்பர் பிரான், இந்தச் செய்தியை இங்கே குறிப்பிட்டாலும் அரசன் மீது கோபமாக ஏதும் சொல்லவில்லை. மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், சமணர்களையும், சிவபிரானை வழிபடாதவர்களையும் இழித்துப் பேசும் அப்பர் பிரான் இந்த நமச்சிவாயப் பதிகத்தில் எவரையும் இழித்துக் கூறாதது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே. நடுநிலை தவறாமல் இருப்பது அரசரக்கு அழகு என்று பல இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது. செங்கோல் வளைந்தது என்றால் அரசன் நடுநிலை தவறிவிட்டான் என்று பொருள். கோணாத கோல் என்று வளையாத செங்கோலினை உணர்த்தும் அபிராமி பட்டர், அபிராமி பதிகத்தின் ஒரு பாடலில், அபிராமி அம்மையிடம் வேண்டும் பொருட்களில் ஒன்றாக, கோணாத கோலினை, குறிப்பிடுகின்றார். அபிராமி அம்மையின் பாதங்களைத் தொழும் தொண்டர்களுக்கு கிடைக்கும் பேறுகள் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றாக கோணாத கோல் என்று குறிப்பிடப்படுவதால் எவ்வளவு உயர்வாக நடுநிலை தவறாத அரசன் மதிக்கப்படுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கன்றாத வளமை என்றால் வற்றாத செழுமை என்று பொருள். துய்த்தல் என்றால் அனுபவித்தல் என்று பொருள். தான் தூங்கிக் கொண்டு இருந்தாலும் உலகில் நடப்பவை அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர் திருமால் என்பதால், அவரது தூக்கம் அறிதுயில் என்று கூறப்படுகின்றது. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே பொழிப்புரை: பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம் போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை, அரசர்களுக்கு அணிகலனகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை. நாக்குகளுக்கு அரிய ஆபரணம் போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும். பாடல் 3 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே விளக்கம்: தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும் பயிலுதல் என்று கூறுவார்கள். உலகினில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டு இருப்பதால் பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியை பிடுங்கவேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டால் தான் அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகின்றது என்று இங்கே அப்பர் பிரான் கூறுகினார். பொழிப்புரை: ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம். பாடல் 4 இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம் அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே விளக்கம்: தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றி கொண்ட தருமசேனரின் இழப்பு சமணர்களை வெகுவாக பாதித்தது. பல கொடுமைகளை அவருக்கு இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்து விடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால் சைவ மதத்தைச் சார்ந்த நிலையில் மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்த கொள்கைப் பிடிப்பு இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. . அடுக்கல்=மலை. அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடல்கள் பெரும்பாலும் இராவணின் கயிலை நிகழ்ச்சியும் அப்போது சிவபிரான் அரக்கனுக்கு அருளிய கருணைச் செயலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் பதிகத்தின் கடைப்பாடல் அவ்வாறு அமையவில்லை. அந்த நேரத்தில் சிவபிரான் அருள் செய்யாதிருந்தால் கயிலை மலையின் கீழே நெருக்குண்ட இராவணின் உடல் கூழாக மாறியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த நிலையில் இராவணன் சிவபிரானின் நாமத்தை புகழ்ந்து கூறும் சாமவேதத்தினை இசைத்து பாடவே இறைவனின் கருணையைப் பெற்றுய்ந்தான். மலையின் கீழ் அமுக்குண்டு இருந்த இராவணின் நிலை அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வரவே, அத்தகைய இடறினின்று அவனை நமச்சிவாய மந்திரம் காத்தது போல் தனது நடுக்கத்தையும் கெடுத்து காப்பாற்றும் என்று இங்கே உணர்த்துகின்றார். பொழிப்புரை: எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும். பாடல் 5 வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம் அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே விளக்கம்: விரதிகள்=விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள். வெந்தநீறு=சாம்பல், இங்கே விபூதியினைக் குறிக்கும். நங்கள்=நாம் அனைவர் பொழிப்புரை: பல வகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும். பாடல் 6 சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம் குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே விளக்கம்: சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன். சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள் இங்கே நினைவு கூறத் தக்கவை. கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரை செய்வார் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே பொழிப்புரை: அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் . பாடல் 7 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே விளக்கம்: வீடினார்=உலகப் பற்றினை விட்டவர்கள்; விழுமிய=சிறந்த சமண சமயம் சார்ந்து இருந்த நேரத்தில் தானுற்ற சூலை நோயினைத் தீர்க்கும் வழி தெரியாமல் திகைத்த போது, சிவபிரானின் அடியாராகிய தனது தமக்கையாரைப் பற்றி, அவரைப் பின்தொடர்ந்து திருவதிகை திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு, சூலை நோய் தீர்ந்து நன்மை அடைந்த நிலை இங்கே குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. அவனது அருளால் சிவபிரானின் உருவத்தைத் தான் தெரிந்து கொண்ட பின்னர் அவனது திருநாமத்தை இடைவிடாது பயின்று, வாயார நமச்சிவாய என்ற நாமத்தைச் சொல்லி திருநீறு அணிந்துகொண்டதாக, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் அப்பர் பிரான் கூறுகின்றார். கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால் திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு அணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே பொழிப்புரை: வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது. பாடல் 8 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே விளக்கம்: இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது. பொழிப்புரை: நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும். பாடல் 9 முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன் தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன்னெறியாவது நமச்சிவாயவே விளக்கம்: இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் தனது துன்பங்களிலிருந்து விடுவிக்குமாறு வேறு எவரையும் வேண்டேன் என்று அப்பர் பிரான் கூறியதற்கு காரணம் இந்தப் பாடலில் சொல்லப் பட்டுள்ளது. அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பது தான் அந்த காரணம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நெறி வீடுபேறு ஒன்று தான். வீடுபேறு அடைந்த உயிர் உலகின் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபிரானுடன் கலந்து என்றும் அழியாத இன்பத்தைப் பெறுகின்றது. பொழிப்புரை: முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும், பாடல் 10 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே விளக்கம்: மாப்பிணை=மான் கன்று. சிவபிரான் தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்தி காட்சி அளிக்கின்றார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும் போது அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான்கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கு இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்பு தானே. சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகின்றார். கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களை குறிப்பதில்லை. ஆனால் இந்த நமச்சிவாயப் பதிகத்தில், பலன் கூறப்பட்டுள்ளது. இதே போல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும் கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும் அப்பர் பிரான் அந்த பதிகத்தை பாடுவதால் ஏற்படும் பலனை குறிப்பிட்டுள்ளார். அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப் புலியூர் அருகே கரை ஏறியதே, இந்த பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கின்றது. பொழிப்புரை: மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது. முடிவுரை துன்பங்கள் நம்மைத் தாக்கும் போது நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்த பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும் அவரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள் ஆணவமலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம் நாவுக்கரசரை கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும் சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகின்றார். இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ நமது உயிர் இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப் பட்டு உடலுடன் கூடிய நிலையில் இருப்பது திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகின்றது. மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை தனது அலைக் கரங்களால் நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகின்றது. பின்னர் நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டு கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகின்றார். கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர் ஒல்லை நீர் புக என் வாக்கினால் நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனை தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னை கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்த போது அருளிய பதிகம் கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம். அதே போன்று வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க் கரையில் உள்ள திருவையாற்று பெருமானை தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல் பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம். இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம் போல் காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பாடப்படும் காந்தார பஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகின்றது. வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார்


நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார் பகைமையிலும் நட்பானவர் நெற்றிக்கண்ணை திறந்து சுட்டாலும் குற்றம் குற்றமே என்று எதிர் கொண்டார் நக்கீரர் திருவிளையாடல் புராணத்தில், தன் காதல் வசத்தால் தனக்காக இறைவனையே பெண்ணிடம் தூது அனுப்பினார் - ஆருரார் என்ற சுந்தரமூர்த்தி நாயனார். சிவனாடியார் இறைவரின் நண்பராக அன்பு செலுத்திய போதிலும், அவர் அடியாருக்கும் அடியவராக விங்கிய போதிலும், அவ்வடியார் மேல் சினம் கொண்டு இறைவரே தனக்கு சூலை நோயை தந்து துன்புறுத்திய போதிலும், ஆருராரிடம் நட்புக் கொள்ளவோ அவரை சென்று சந்திக்கவோ மறத்தவர் - எதிர்த்தவர் , இச்செயலைக் கண்டு சீற்றம் கொண்டும் தனக்கு இறைவரால் சூலைநோய் கண்டும் வெகுண்டு , அன்னாரிடம் பிணக்கு கொண்டார் கலிக்காம நாயனார். சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் மங்கலக்குடி எனும் தலம் உள்ளது, இதன் அருகே வைத்தீசுவரன் கோயிலும், திருப்புன்கூரும் உள்ளன. மங்கலக்குடி எனும் ஊரில் வேளாளர் குலத்தில் ஏயர் குடியில் கலிக்காமர் அவதரித்தார். ஏயர் குடியினர் சோழ மன்னரின் சேனாபதிகளாக இருந்து வந்தவர்கள். கலிக்காமர் அடியார் சிவபக்தியில் சிறந்து விளங்கினார், சிவனாடியார்களை பணிந்து அவர்கள் இட்ட பணிகளை செய்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். "தங்கள் நாயகர் அடிபணி வார்அடி சார்ந்து பொங்குகாதலின் அவர்பணி போற்றுதல் புரிந்தார்" என்கிறார் சேக்கிழார் திருப்புன்கூரில் உள்ள சிவலாயத்திற்கு அளவிலாத் திருப்பணிகள் செய்தார். இடையறாத சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்தார். அந்நாளில் திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை தன் இல்வாழ்வு பிணக்கு நீங்க பரவையாரிடம் இரவிலே தூது அனுப்பிய செய்தியை க் கலிக்காம நாயனார் கேள்வியுற்றார். உள்ளம் வெகுண்டார், இறைவரை பெண்ணிடம் தூது அனுப்புவது எவ்வகையிலும் முறையன்று என்று எண்ணிக் கொதித்தார். தூது அனுப்பியவரைக் கண்டால் யாது நிகழுமோ? என்று பலப்பல நினைந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் பகை கொண்டிருந்தார். கலிக்காம நாயனாருடைய சீற்றத்தை கேள்வியுற்றார் சுந்தரமூர்த்தி நாயனார். ஒரு சிறந்த சிவனடியார் தம் மீது சினம் கொண்டிருப்பதை கண்டு மிகவும் வருந்தினார். அவரது சினத்தை போக்கி நட்புக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார், ஆரூரார், கலிக்காமர் என்மீது கொண்டுள்ள பிணக்கை தேவரீர் தீர்த்தருள வேண்டும் என்று நாள்தோறம் முறையிட்டு வந்தார். ஏயர் கோன் கலிக்காமருக்கு கொடிய சூலை நோயை அருளி, ஆரூராரை சந்திக்க நிலையினை உண்டாக்கினார், ஆனால் கலிக்காமரோ தனக்கு கொடுமையான சூலை நோயினையும தாங்க மாட்டாமல் சிவபெருமானை வேண்டினார், அதற்கு சிவனார் " கலிக்காமரே! உன்னை வருத்தும் சூலை நோய் திருவாரூரில் உள்ள சுந்தரன் வந்து தீர்த்தாலன்றி நோய் நீங்காது " என்று நீலகண்ட பெருமான் கலிக்காமருக்கு முன் மொழிந்தருளினார். பெருமானே என் தந்தை, தந்தைக்கு தந்தை என்று வழிவழியாக தேவரீருக்கு திருத்தொண்டு புரிந்து வரும் குடியில் வந்த பழைய அடியவன் நான், அண்மையில் தங்களால் ஆட்கொள்ளப்பட்ட புதிய அடியவர் வந்து நோயை தீர்ப்பதைவிட இந்நோயால் வருந்துவது நன்று என்று உறுதியுடன் கூறினார். சிவபெருமான் சுந்தரரிடம் " ஆரூரனே ! நம்மால் சூலை நோய் பெற்ற வருந்தும் கலிக்காமனிடம் சென்று சூலையை நீக்குவாயாக" என்றளினார் சுந்தரர் கலிக்காமரிடம் தாம் வருகின்ற செய்தியைக் கூறம்படி ஒருவரை அனுப்பினார், " இறைவரைத் தூது அனுப்பிய ஒருவர் வந்து என் சூலை நோயைத் தீர்ப்பதை விட இறப்பதே மேல்" என்றுஉடைவாளை எடுத்து வயிற்றை கிழித்துக் கொண்டார். சூலை நோயும் உயிரும் ஒருங்கே தீர்ந்தன. கலிக்காமருடைய மனைவியாரும் கணவருடன் சேர்ந்து சிவபதம் அடைய எண்ணினார். அப்போது சுந்தரர் வந்து செய்தியை கேள்விப்பட்டார். அம்மையார், அடியார் ஒருவர் வரும் போது அழுவது முறையன்று என எண்ணினார். கணவர் திருமேனியை ஒருபுறம் மறைத்து வைத்து விட்டு, வேலையாட்களைக் கொண்டு அடியாரை வரவேற்க காத்திருந்தார். ஏவலர்களும் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வரவேற்று அவரது திருவடிகளை வணங்கி ஆசனத்தில் அமர்த்தினர். "அன்பர்களே கலிக்காமருடைய சூலை நோயை தீர்த்து அவருடன் இருப்பதற்கு மனம்விரும்புகின்றது. அவர் இருக்குமிடம் யாது? என வினவினார். அண்ணலே! கலிக்காமருக்கு தீங்கு ஒன்றுமில்லை, உள்ளேபள்ளி கொண்டுள்ளார், என்று அம்மையார் உத்தரவுப்படி கூறனார்கள். கலிக்காமருக்கு தீங்கு ஒன்றுமில்லை என்றாலும் என்மனம் மருள்கின்றது. அவரைக் காண வேண்டும் என்றார் சுந்தரர் வேறு வழியின்றி கலிக்காமருடைய உடலைக் காட்டினார்கள், குடல் சரிந்து அவர் மாண்டு கிடந்ததைக் கண்டார், சுந்தரர், இவருடன் அடியேனும் தொடர்ந்து செல்வேன் என்று கூறி உடைவாளை கையில் எடுத்தார். கண்ணுதற் பெருமானின் அளப்பெருங் கருணையினால் கலிக்காமர் அந்த வினாடியே உயிர் பெற்றேழுந்தார். கேளிரைக் காணப் பெற்றேன் என்று வாளை பற்றிக் கொண்டார் கலிக்காமர். சுந்தரர் கலிக்காமரை வணங்க, கலிக்காமரும் சுந்தரரை வணங்க ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சில நாட்கள் கலிக்காமருடன் தங்கி இருந்தார், பின்னர் திருவாரூர் புறப்பட்டார, கலிக்காமரும் அவருடன் திருவாரூர் வந்தார், ஆரூர் அண்ணலை இருவரும் வணங்கி மகிழ்ந்தார்கள், சில நாட்கள் சென்ற பிறகு ஆரூராரிடம் விடை பெற்றுக் கொண்டு கலிக்கம்பர் தமது ஊராகிய மங்கலக்குடி வந்து சேர்ந்தார், பற்பல தொண்டுகள் செய்து விமலரின் அடிமலர் சேர்ந்து இன்புற்றார். இவ்வாறு இறவைருக்கு இழிவு நேர்ந்துவிடுமோ என்று இறைவரையே எதிர்த்து தன் உயிரையும் மாய்த்து, அடியாரின் அடியாருக்கு அன்பு கொண்டார் கலிக்காம நாயனார். திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார்

வியாழன், 16 ஏப்ரல், 2015

சொறகள் சொல்லும் சுவையான செய்தி


சொற்கள் சொல்லும் சுவையான செய்தி / முகநூல் வெளியீட்டதன் தொகுப்பு உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அரிக்கேன் விளக்கு அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது. ********************************************************** கதர் கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் சிசேரியன் ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது. ************************************************************************* ரூபாய் ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் "ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள். மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார். ஆப்பிரி்க்கா ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள் உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஆங்கிலச் சொற்கள் 1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும். 1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும் b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை. ************************************************************************* கபடி கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம். அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும். ****************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்புத்தகம் பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் புத்தகம் ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு புத்தகம் நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் புத்தகம் பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புத்தகம் ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது. சிவப்பு புத்தகம் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது பச்சை புத்தகம் இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளை அறிக்கை அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது. ********************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம் இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு Pack my box with five dozen Jugs of liquor. The quick brown fox jumps over the lazy dog. Jackdaws love my big sphinx of Quartz. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் (Boyocott) பாய்காட் "காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது. -------------------------------------------------------------------------------------------- உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்தி: டாங்க் (Tank) போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது. ------------------------------------------------------------------------------------------- நோபல் பரிசு 1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. ------------------------------------------------------------------------------------------- ஜெராக்ஸ் பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது. ------------------------------------------------------------------------------------------- செங்கடல் செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்: அட்ட (அஷ்ட) வீரட்ட ஸ்தலங்கள் ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள், இத்தலங்கள் சமயக்குறவர்கள் நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் "அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே," அவையாவன: 1) திருப்பறியலூர் வீரட்டம் : தக்கன் யாகம் அழித்தல் ஸ்தலம் 2) திருக்கண்டியூர் வீரட்டம் : தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்தல் ஸ்தலம் 3) திருவதிகை வீரட்டம் : முப்புரம் - மும்மலங்கள் - திரபுர சம்காரம் செய்த ஸ்தலம் 4) திருக்கோவிலூர் வீரட்டம் : பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகா சூரன் வதம் செய்த ஸ்தலம் 5) திருக்குறுக்கை வீரட்டம் : காமதகன மூர்த்தி யாகி காமமை - மன்மதனை எரித்த ஸ்தலம் 6) திருக்கடவூர் வீரட்டம் : சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை - கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம் 7) வழுவூர் வீரட்டம் : கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோ லினை அணிந்த தலம் 8) திருவிற்குடி வீரட்டம் : சலந்திர ஸ்தலம் ( தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையைஅறிந்த ஸ்தலம்) ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஓசி OC இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது கம்பெனித் தபால்களை On Company Service என்று குறித்து கட்டணம் செலுத்தாமல் அனுப்புவது வழக்கம், ( தற்போதும் அரசு அலுவலகத்தபால்கள் அனைத்தும் அரசு இலவச சேவையிலேயே அனுப்பப்படுகிறது, அதனை தற்போது இந்திய அரசு பணி சர்வீஸ் ' OIGS" ) அதன் சுருக்கமான OCS என்பதே ஓசி ( OC ) ஆகி , காசு கொடுக்காமல் வாங்கும் பொருளை எல்லாம் இன்று ஓசி என்று அழைக்கின்றோம் ----------------------------------------------------------------------------------------------12.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்படம் Blue Film அந்த மாதிரியான படங்ககளுக்கு நீலப்படம் என்று பெயர் வந்தது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் ஸ்காட்லாந்தில் விலை மாதர்களை கைது செய்தால் , நீலநிற கவுனை அணிவித்து விடுவார்கள், அங்கே இது போன்ற தவறான தகாத செயல்களை நீலநிறத்தில் தான் அடையாளப்படுத்துவார்கள். அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல்களைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது,அதன் பெயர் " ப்ளூ" . என்பதாகும், மேலும் நீல நிறத்திற்கு செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்குரிய சக்தி இருக்கிறது, எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றது. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் A,B,C,D,E, F ஆங்கில வரிசை எழுத்துக்கொண்ட சிறிய வார்த்தை A,B,C,D,E, Fஆகிய ஆறெழத்துக்களையும் கொண்ட மிகச் சிறியஆங்கில வார்த்தை 'FEED BACK" ********************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் தினமும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அதிகம் பயன்படும் வார்த்தை எது தெரியுமா? " ஹலோ "என்னும் வர்த்தை தான் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் எட்டுன் (அட்ட ) பொருள் கொண்ட வார்த்தைகள் அட்ட சுபம் பொருட்கள் இணையக் கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி, நிறைகுடம், முரசு, விளக்கு அட்ட சூரணம் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், காயம், இந்துப்பு அட்ட தனம் அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம் அட்ட தாது எட்டு உலோகம்: பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம், அட்டதானப் பரீட்சை வைத்தியன் அறிகுறி எட்டு, நாடி, முகம், மலம்,அமுரி, கண்,நா, சரீரம், தொனி. ********************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் திரி கடுகு சுக்கு, மிளகு, திப்பிலி இம் மூன்றும் திரிகடுகம்என்றுரைப்பர் திரி சாதம் லவங்க பத்திரி, ஜாதிபத்திரி, தாளிய பத்திரி திரி மஞ்சள் கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், மர மஞ்சள் திரி கந்தம் சந்தனம், அகில், கட்டை, தேவதாரி திரிகாயம் வெளளுள்ளி, சுக்கு, பெருங்காயம் திரி கோபம் சந்தனம், சிவதை,, வெங்குங்குலியம் திரி மூலம் கண்டு பரங்கி மூலம், திப்பிலி மூலம், சித்தர மூலம் திரி நிம்மம் மலை வேம்பு, நில வேம்பு, கறி வேம்பு திரி பத்திரி லவங்க பத்திரி, ஜாதி பத்திரி, தாளிச பத்திரி திரி லவங்கம் கிராம்பு, அகில், சண்பகம் திரி லவங்கப்பூ சண்பகப்பூ, சிறு நாகப்பூ, கிராம்பு முக்கூட்டு எண்ணெய் நெய், ஆமணக்கெண்ணை,எள் எ்ண்ணெய் முச் சீரகம் சீரகம், கருஞ்சீரகம், காட்டு சீரகம் **************************************************************************** 13.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் முலட்டோ நாம் ஆங்கிலேயரும் இந்தியரும் கலந்த இனத்தை ஆங்கிலோஇந்தியன் என்று கூறுவது போல் வெள்ளையரும் நீக்ரோவும் கலந்த கலப்பினத்திற்கு பெயர் " முலட்டோ " என்பதாகும். கம்யூனிகேஷன் Communication கம்யூனிகேஷன் Communicationஎன்ற சொல், Communis கம்யூனிஸ் என்ற லத்தீன் சொ்ல்லிருந்து தோன்றியது, இதற்கு பொது என்று பொருள், இருவருக்கிடையே பொதுவான கருத்து என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகின்றது, கறுப்பு பெட்டி விமானத்தின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டியின் இன்னொரு பெயர் சிவிஆர் ( CVR) காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்டர் எ்ன்பதாகும் பாரதி பபரதியாருக்கு " பாரதி" என்ற பட்டப் பெயர் எட்டயபுரம் அரச சபையால் அளிக்கப் பட்டது, டிராகுலா DRACULA செஞ்சிலுவைச் சங்கத்தினர் , தாங்கள் அமைத்த புதிய இரத்த சேமிப்பு நிலையத்திற்கு BLOOD BANK டிராகுலா DRACULA எனப் பெயர் வைத்தனர், DRACULA என்பது 'DONORS REGISTRATION AND CALL UP LINKED ACCESSION 'என்பதன் சுருக்கப் பெயராகும், பெயர் பொருத்தம்சூப்பராக இருக்கிறதல்லவா? மஞ்சள் புரட்சி, வெண்மை புரட்சி ஒரு நாட்டில் உணவு எண்ணெய் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உணவு எண்ணெய் உற்பத்திக்கு சூரியகாந்தி என்ற எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி திட்டத்தினை மஞ்சள் புரட்சி என்றும், பால் மற்றும் முட்டை அதி தீவிர உற்பத்தி திட்டத்திற்கு வெண்மை புரட்சி என்றும் பெயரிடப்பட்டு தி்ட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. திருக்குறளில் காணப்படாத எழுத்து தமிழ் கடவுள் ஆகிய சொற்களும், ஒள என்ற எழுத்தும் திருக்குறளில் எங்கும் காணப்படவில்ைல நெம்பர் 1 ன் சிறப்பு 2011 ஆம் ஆண்டிற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு, அதாவது நெம்பர் 1ஐ மட்டுமே உபயோகித்து இவ்வருடத்தி்ல் நான்கு நாட்களை குறிப்பிட முடியும், அதாவது, 1.1.11 , 11/1/11. 1/11/11. 11/11/11 ஆகியவையே அந்த நாட்கள் இது போன்று 100 வருடங்கள் கழித்துதான் மறுபடியும் வரும் எனபதை காண்க. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 14.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் பஞ்சா (5) ஐந்து இனத்தினை குறிக்கும் சொற்கள் பஞ்ச தந்திரங்கள் கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல், நண்பர்களை சம்பாதித்தல், பகைவரிடம் உறவாடி வெல்லுதல், பொருள் அழிவு,ஆய்வினையின்றி ( ஆராய்ச்சின்றி) செயலில் இறங்குதல், ஆகியவை ஆகும். பஞ்ச புராணம் தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து இலக்கியங்களை பஞ்சபுராணம் என்று கூறப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலியன கொண்டது ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். பஞ்ச பூதங்கள் பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்கள் எனப்படும். பஞ்ச பூத தலங்கள் காஞ்சிபுரம் ( பூமி), சிதம்பரம்( ஆகாயம் ), காயஹ்திரி (காற்று), திருவண்ணாமலை ( நெருப்பு), திருவானைக்கால் ( நீர்)ஆகியன. பஞ்சமா பாதகங்கள் கொலை, பொய், திருட்டு, மது, குருநிந்தை முதலிய கெட்ட குணங்கள் பஞ்ச வர்ணம் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பசுமை என்ற பச்சை, பொன்னிறம் ஆகியன ஐம்படைத் தாலி சங்கு, சக்கரம், கதை, வாள், வில், ஆகிய உருவம் கொண்ட குழந்தைகளுக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி என்பதாகும். திருமண பஞ்சமூலம் நாணல் வேர், தருப்பை வேர், கரும்பு வேர், நெல்பயிர் வேர், வெள்ளை அசன் வேர் ஆகியன. பஞ்ச கவ்வியம் ஆவின்பால், தயிர், வெண்ணை , நீர், சாணம், - கோமாதாவின் சீறு நீரையும் ( கோமியத்தையும் பஞ்சகாவியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது) பஞ்ச கோலம் சுக்கு, திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், சித்திரை மூலம் பஞ்ச அமிர்தம் பால், சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,( அல்லது) பேரீச்சம் பழம். பஞ்ச காரம் சீனிக்காரம் , சவுக்காரம், பொரிகாரம், பிரிகாரம், படிகாரம். பஞ்ச காரகம் காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம் பஞ்ச சாரம் நவச்சாரம், எவச்சாரம், உவாச்சாரம், சத்திச்சாரம், கதவிச்சாரம் பஞ்ச திரவியம் ஏலம், சண்பகம், சீரகம், கிராம்பு, கொட்டம் பஞ்ச மோகினி கோரோசினை, குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புணுகு பஞ்ச வர்க்கம் சிறுநாகப்பூ, ஏலம், லவங்கம், சாதிக்காய், கற்பூரம் பஞ்ச வேம்பு நல்வேம்பு, மலைவேம்பு, கருவேம்பு, நிலவேம்பு, சிவனார் வேம்பு முதலியன பஞ்சாக்கினி மூலம் காட்டுக்கறணை, கறிக்கறணை, புளிமடல், பிரண்டை, கோப்பிரண்டை. பஞ்சரத்தினம் முத்து, வைரம், மரகதம், நீலம், பொன்(தங்கம்) இவை ஐந்தும் பஞ்சரத்தினம் என்று அழைக்கபடுகிறது. பஞ்ச இந்திரியம்(உறுப்புக்கள்) மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் பஞ்ச இந்திரயம் எனப்படும் பஞ்சாங்கம் நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட குறிப்பு புத்தகத்திற்கு பஞ்சாயங்கம் என்று பெயர். பஞ்சக்கிரி சாதிக்காய், சாதி பத்திரி, கிராம்பு குராசாணி, வசுவாசி ஆகியன பஞ்ச தரு சந்தனம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம், கற்பகம் பஞ்சபீத மூலி வெள்ளெருக்கு, மாவிலங்கை, கொடி வேலி, புன் முருங்கை,கோவை கிழங்கு பஞ்சலோகச்சாயம் திப்பிலி,திப்பிலி மூலம், சுக்கு, செவியம், கண்டுபரங்கி பஞ்சலோகம் பாசை, வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு பஞ்சவாசம் ஏலம், தக்கோலம்,இலவங்கம், சாதிக்காய், கற்பூரம் பஞ்சாட்சர மந்திரம் நமசிவாய என்ற மந்திரத்தின் நடு எழுத்தினை மாற்றி மாற்றி அமைக்கும் சொற்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவநசி , வசியநம, +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்களுக்கு தெரியுமா? சொறகள் சொல்லும் சுவையான செய்தி கடிகாரம் "கடிகை" என்னும் சொல் தமிழில் நாழிகை என்ற கால அளவை குறிக்கும், அதனால் காலத்தை அளக்கும் கருவிக்கு கடிகாரம் என்று தமிழில் ெபயர் வந்து விட்டது. 14ம் நூற்றாண்டில், வழக்கத்தில் இருந்த கடிகாரத்திற்கு மணியைக்காட்டும் ஒரே ஒரு முள் மட்டுமேஇருந்தது. கிராம வாத்தியங்கள் முரசு, பறை, உறுமி, பம்பை, தாளம், ெநடுங்குழல் ஆகியன கோவில் வாத்தியங்கள் கொம்பு, தாதை, திருச்சினம், பூரி, சங்கு கச்சேரி வாத்தியங்கள் யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள் நரம்புக் கருவிகள் யாழ், வீணை, பிடில் தோலிசைக் கருவிகள் தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம் துளைக் கருவிகள் வேங்குழல், நாதசுரம், மகுடி நரம்புக்கருவிகள் யாழ், வீணை, பிடில் குதிரைச் சக்தி HP ஒரு நொடிப் பொழுதில் ஒரு அடி தூரத்திற்கு 550 பவுண்ட் எடையை தூக்க தேவையான சக்தியே ஒரு குதிரை சக்தி HP எனப்படும், நாலும் / இரண்டும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் ( நாலடியார்) இரண்டும் ( குறள்) சொல்லுக்குறுதி தந்தை நாடு உலகில் ஒரே ஒரு நாடு மட்டும்தான் தந்தை நாடு என்று அழைக்கப்படுகின்றது, அது ஜெர்மானியர்கள் தாம் பிறந்த நாட்டை "தந்தையர் நாடு" என்றே அழைக்கின்றனா். வந்தே மாதரம் வந்தே மாதரம் என்பதற்கு " தாயே உன்னை வணங்குகிறேன்" எனப் பொருளாகும். சிம் கார்டு SIM நாம் நம் கைபேசியில் பயன்படுத்தும் சிம் SIM கார்டு என்பது SUBSCRIBER INFORMATION MODULE என்பதன் சுறுக்குமாகும் 15.04.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் சைலன்ட் கி்ல்லர் இரத்த அழுத்த நோய் "சைலன்ட் கில்லர்" என அழைக்கப்படுகிறது. சரிகமபதநி (இசை இராகம்) இசைக்லையை சட்ஜமம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்று ஏழாக பிரித்துள்ளார்கள்,இவற்றின் முதல் எழுத்துக்கள் சேர்ந்ததே " சரிகமபதநி" ஆகும். ஒன்பது தலைமுறை நாம் பேச்சு வாக்கில் " ஒன்பது தலைமுறைக்கு சொத்து இருக்கு" என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம், இந்த ஒன்பது தலைமுறை என்பது எவை தெரியுமா? 1, சேயோன் 2, ஓட்டன் 3, பூட்டன் 4, பாட்டன் 5. தந்தை/தாய் 6. மனன்/மகள் 7. பேரன்/ பேத்தி 8. கொள்ளுப்பேரன் 9. எள்ளுப்பேரன் என்ற வரிசையாகும் பண்டைதமிழகத்தின் நீட்டல் அளவு சொற்கள் 12 விரல் கொண்டது ஒரு சாண் 2 சாண் ஒரு முழம் 4 முழம் ஒரு கோல் ( பாபம்) 500 கோல் ஒரு கூப்பிடு 4 கூப்பிடு ஒரு காவதம் ( காதம்) காதம் என்பது "மைல்" என்று அழைக்கப்படுகிறது, ஒரு மைல் என்பது எட்டு பர்லாங் ( தற்போதைய 5 பார்லாங் (1000 மீ) ஒரு கிலா மீட்டர் தமிழக கால பாகுபாட்டு சொற்கள் 2 கண்ணிமை 1 நொடி 2 கை நொடி 1 மாத்திரை 2 மாத்திரை 1 குரு 2 குரு 1 உயிர் 2 உயிர் 1 கணிகம் 2 கணிகம் 1 விநாடி 60 விநாடி 1 நாழிகை இரண்டரை நாழிகை ஒரு ஒரை மூன்றை நாழிகை ஒரு முகூர்த்தம் 2 முகூர்த்தம் ஒரு ஜாமம் 4 ஜாமம் ஒரு பொழுது 2 பொழுது ஒரு நாள் 15 நாள் 1 பக்ஷ்ம் 2 பக்ஷ்ம் ஒரு மாதம் 6 மாதம் 1 அயனம் 2 அயனம் ஒரு வருடம் 60 வருடம் 1 வட்டம் காலையும் , மாலையும் சந்தி ..... காலை தொடங்கும் நேரம் கருக்கல் ............. இருண்ட காலைப் பொழுது புலர் காலை ................... விடியற்காலை புலரி ........................... விடியும் பொழுது வைகறை ................. இருளை அறுத்த காலை பொழுது அந்தி .................... கதிர் மறையும் பொழுது செக்கர் ....................... மாலை செவ்வானப் பொழுது அந்திக் கருக்கல் ........................ கதிர் மறைந்து இருளும் பொழுது இவ்வாறு தமிழ் இலக்கியத்தில் பிரித்து வகுக்கப்பட்டுள்ளது. ப்ளு டயரி எந்தவிதமான ஒளிவு மறைவின்றி உள்ளது உள்ளபடியே நடந்தது நடந்தபடியே எழுதப்பட்ட நாட்குறிப்புக்கு ஆங்கலத்தில் "ப்ளு டயரி" என்று பெயர். உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான தகவல்கள் ருத்திராட்சம் ருத்ராட்சக் கொட்டைக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? ருத்ரன் என்றால் சிவன் / அட்சம் என்றால் கண் ,,,,,, அதாவது சிவனது கண் போன்ற மணி என்ற புனிதப் பொருளிலேயே ருத்ராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது உங்களுக்கு ெதரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான தகவல்கள் டிப்ஸ் TIPS டிப்ஸ் TIPS என்பது To Insure Prompt Service என்ற நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களின் சேர்க்கையே, அதாவது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதை ஊக்கப்படுத்தும் தொகை என்பது இதன் பொருள் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சொற்கள் சொல்லும் சுவையான செய்தி / முகநூல் வெளியீட்டதன் தொகுப்பு


சொற்கள் சொல்லும் சுவையான செய்தி / முகநூல் வெளியீட்டதன் தொகுப்பு உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அரிக்கேன் விளக்கு அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது. ********************************************************** கதர் கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் சிசேரியன் ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது. ************************************************************************* ரூபாய் ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் "ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள். மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார். ஆப்பிரி்க்கா ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள் உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஆங்கிலச் சொற்கள் 1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும். 1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும் b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை. ************************************************************************* கபடி கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம். அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும். ****************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்புத்தகம் பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் புத்தகம் ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு புத்தகம் நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் புத்தகம் பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புத்தகம் ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது. சிவப்பு புத்தகம் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது பச்சை புத்தகம் இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளை அறிக்கை அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது. ********************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம் இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு Pack my box with five dozen Jugs of liquor. The quick brown fox jumps over the lazy dog. Jackdaws love my big sphinx of Quartz. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் (Boyocott) பாய்காட் "காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது. -------------------------------------------------------------------------------------------- உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்தி: டாங்க் (Tank) போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது. ------------------------------------------------------------------------------------------- நோபல் பரிசு 1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. ------------------------------------------------------------------------------------------- ஜெராக்ஸ் பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது. ------------------------------------------------------------------------------------------- செங்கடல் செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது. ------------------------------------------------------------------------------------------------------------------------------------------ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்: அட்ட (அஷ்ட) வீரட்ட ஸ்தலங்கள் ஈசன் சிவபெருமானார் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் எட்டு இதனையே அட்ட வீரட்ட ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தும் தஞ்சை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களான காவேரி டெல்டா பகுதிகள் காணப்படும் தலங்கள், இத்தலங்கள் சமயக்குறவர்கள் நால்வர் பாடல்களில் அதிகம் காணப்படும் கோவில்கள் கொண்ட தலங்கள் உதாரணமாக திருநாவுக்கரசர் பாடலில் கண்ட வரிகள் "அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே," அவையாவன: 1) திருப்பறியலூர் வீரட்டம் : தக்கன் யாகம் அழித்தல் ஸ்தலம் 2) திருக்கண்டியூர் வீரட்டம் : தான் என்ற கர்வம் பெற்ற பிரம்மன் சிரத்தை பைரவர் மூலம் தலை கொய்தல் ஸ்தலம் 3) திருவதிகை வீரட்டம் : முப்புரம் - மும்மலங்கள் - திரபுர சம்காரம் செய்த ஸ்தலம் 4) திருக்கோவிலூர் வீரட்டம் : பைரவர் உருவம் தாங்கி வானர்களுக்காக அந்தகா சூரன் வதம் செய்த ஸ்தலம் 5) திருக்குறுக்கை வீரட்டம் : காமதகன மூர்த்தி யாகி காமமை - மன்மதனை எரித்த ஸ்தலம் 6) திருக்கடவூர் வீரட்டம் : சிவபக்தன் மார்க்கண்டேயனுக்காக காலனை - கூற்றுவனை வதம் செய்த ஸ்தலம் 7) வழுவூர் வீரட்டம் : கயமுகா சூரனாகிய யானையினை (கொன்று ) வதம் செய்து அதன் தோலை உரித்து யானைத் தோ லினை அணிந்த தலம் 8) திருவிற்குடி வீரட்டம் : சலந்திர ஸ்தலம் ( தன்கால் பெருவிரலால் கீறியமைந்த சக்கரத்தினால் தலையைஅறிந்த ஸ்தலம்) ஆக எட்டு வீரச்செயல்கள் புரந்த ஸ்தலங்கள் அட்ட வீரட்டம் என்றழைக்கப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஓசி OC இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது கம்பெனித் தபால்களை On Company Service என்று குறித்து கட்டணம் செலுத்தாமல் அனுப்புவது வழக்கம், ( தற்போதும் அரசு அலுவலகத்தபால்கள் அனைத்தும் அரசு இலவச சேவையிலேயே அனுப்பப்படுகிறது, அதனை தற்போது இந்திய அரசு பணி சர்வீஸ் ' OIGS" ) அதன் சுருக்கமான OCS என்பதே ஓசி ( OC ) ஆகி , காசு கொடுக்காமல் வாங்கும் பொருளை எல்லாம் இன்று ஓசி என்று அழைக்கின்றோம் ----------------------------------------------------------------------------------------------12.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்படம் Blue Film அந்த மாதிரியான படங்ககளுக்கு நீலப்படம் என்று பெயர் வந்தது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் ஸ்காட்லாந்தில் விலை மாதர்களை கைது செய்தால் , நீலநிற கவுனை அணிவித்து விடுவார்கள், அங்கே இது போன்ற தவறான தகாத செயல்களை நீலநிறத்தில் தான் அடையாளப்படுத்துவார்கள். அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல்களைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது,அதன் பெயர் " ப்ளூ" . என்பதாகும், மேலும் நீல நிறத்திற்கு செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதற்குரிய சக்தி இருக்கிறது, எனவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றது. ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் A,B,C,D,E, F ஆங்கில வரிசை எழுத்துக்கொண்ட சிறிய வார்த்தை A,B,C,D,E, Fஆகிய ஆறெழத்துக்களையும் கொண்ட மிகச் சிறியஆங்கில வார்த்தை 'FEED BACK" ********************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் தினமும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் அதிகம் பயன்படும் வார்த்தை எது தெரியுமா? " ஹலோ "என்னும் வர்த்தை தான் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் எட்டுன் (அட்ட ) பொருள் கொண்ட வார்த்தைகள் அட்ட சுபம் பொருட்கள் இணையக் கயல், கண்ணாடி, சாமரம், கொடி, தோட்டி, நிறைகுடம், முரசு, விளக்கு அட்ட சூரணம் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், காயம், இந்துப்பு அட்ட தனம் அழகு, குணம், ஆயுள், குலம், சம்பத்து, வித்தை, விவேகம், தனம் அட்ட தாது எட்டு உலோகம்: பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம், அட்டதானப் பரீட்சை வைத்தியன் அறிகுறி எட்டு, நாடி, முகம், மலம்,அமுரி, கண்,நா, சரீரம், தொனி. ********************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் திரி கடுகு சுக்கு, மிளகு, திப்பிலி இம் மூன்றும் திரிகடுகம்என்றுரைப்பர் திரி சாதம் லவங்க பத்திரி, ஜாதிபத்திரி, தாளிய பத்திரி திரி மஞ்சள் கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், மர மஞ்சள் திரி கந்தம் சந்தனம், அகில், கட்டை, தேவதாரி திரிகாயம் வெளளுள்ளி, சுக்கு, பெருங்காயம் திரி கோபம் சந்தனம், சிவதை,, வெங்குங்குலியம் திரி மூலம் கண்டு பரங்கி மூலம், திப்பிலி மூலம், சித்தர மூலம் திரி நிம்மம் மலை வேம்பு, நில வேம்பு, கறி வேம்பு திரி பத்திரி லவங்க பத்திரி, ஜாதி பத்திரி, தாளிச பத்திரி திரி லவங்கம் கிராம்பு, அகில், சண்பகம் திரி லவங்கப்பூ சண்பகப்பூ, சிறு நாகப்பூ, கிராம்பு முக்கூட்டு எண்ணெய் நெய், ஆமணக்கெண்ணை,எள் எ்ண்ணெய் முச் சீரகம் சீரகம், கருஞ்சீரகம், காட்டு சீரகம் **************************************************************************** 13.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் முலட்டோ நாம் ஆங்கிலேயரும் இந்தியரும் கலந்த இனத்தை ஆங்கிலோஇந்தியன் என்று கூறுவது போல் வெள்ளையரும் நீக்ரோவும் கலந்த கலப்பினத்திற்கு பெயர் " முலட்டோ " என்பதாகும். கம்யூனிகேஷன் Communication கம்யூனிகேஷன் Communicationஎன்ற சொல், Communis கம்யூனிஸ் என்ற லத்தீன் சொ்ல்லிருந்து தோன்றியது, இதற்கு பொது என்று பொருள், இருவருக்கிடையே பொதுவான கருத்து என்ற அர்த்தத்தில் வழங்கப் படுகின்றது, கறுப்பு பெட்டி விமானத்தின் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கறுப்புப் பெட்டியின் இன்னொரு பெயர் சிவிஆர் ( CVR) காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்டர் எ்ன்பதாகும் பாரதி பபரதியாருக்கு " பாரதி" என்ற பட்டப் பெயர் எட்டயபுரம் அரச சபையால் அளிக்கப் பட்டது, டிராகுலா DRACULA செஞ்சிலுவைச் சங்கத்தினர் , தாங்கள் அமைத்த புதிய இரத்த சேமிப்பு நிலையத்திற்கு BLOOD BANK டிராகுலா DRACULA எனப் பெயர் வைத்தனர், DRACULA என்பது 'DONORS REGISTRATION AND CALL UP LINKED ACCESSION 'என்பதன் சுருக்கப் பெயராகும், பெயர் பொருத்தம்சூப்பராக இருக்கிறதல்லவா? மஞ்சள் புரட்சி, வெண்மை புரட்சி ஒரு நாட்டில் உணவு எண்ணெய் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உணவு எண்ணெய் உற்பத்திக்கு சூரியகாந்தி என்ற எண்ணெய் வித்து பயிர் உற்பத்தி திட்டத்தினை மஞ்சள் புரட்சி என்றும், பால் மற்றும் முட்டை அதி தீவிர உற்பத்தி திட்டத்திற்கு வெண்மை புரட்சி என்றும் பெயரிடப்பட்டு தி்ட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. திருக்குறளில் காணப்படாத எழுத்து தமிழ் கடவுள் ஆகிய சொற்களும், ஒள என்ற எழுத்தும் திருக்குறளில் எங்கும் காணப்படவில்ைல நெம்பர் 1 ன் சிறப்பு 2011 ஆம் ஆண்டிற்கு முக்கிய சிறப்பு ஒன்று உண்டு, அதாவது நெம்பர் 1ஐ மட்டுமே உபயோகித்து இவ்வருடத்தி்ல் நான்கு நாட்களை குறிப்பிட முடியும், அதாவது, 1.1.11 , 11/1/11. 1/11/11. 11/11/11 ஆகியவையே அந்த நாட்கள் இது போன்று 100 வருடங்கள் கழித்துதான் மறுபடியும் வரும் எனபதை காண்க. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- 14.4.2015 உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் பஞ்சா (5) ஐந்து இனத்தினை குறிக்கும் சொற்கள் பஞ்ச தந்திரங்கள் கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல், நண்பர்களை சம்பாதித்தல், பகைவரிடம் உறவாடி வெல்லுதல், பொருள் அழிவு,ஆய்வினையின்றி ( ஆராய்ச்சின்றி) செயலில் இறங்குதல், ஆகியவை ஆகும். பஞ்ச புராணம் தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து இலக்கியங்களை பஞ்சபுராணம் என்று கூறப்படும். ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலியன கொண்டது ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். பஞ்ச பூதங்கள் பூமி, ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்கள் எனப்படும். பஞ்ச பூத தலங்கள் காஞ்சிபுரம் ( பூமி), சிதம்பரம்( ஆகாயம் ), காயஹ்திரி (காற்று), திருவண்ணாமலை ( நெருப்பு), திருவானைக்கால் ( நீர்)ஆகியன. பஞ்சமா பாதகங்கள் கொலை, பொய், திருட்டு, மது, குருநிந்தை முதலிய கெட்ட குணங்கள் பஞ்ச வர்ணம் வெள்ளை, கருப்பு, சிவப்பு, பசுமை என்ற பச்சை, பொன்னிறம் ஆகியன ஐம்படைத் தாலி சங்கு, சக்கரம், கதை, வாள், வில், ஆகிய உருவம் கொண்ட குழந்தைகளுக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி என்பதாகும். திருமண பஞ்சமூலம் நாணல் வேர், தருப்பை வேர், கரும்பு வேர், நெல்பயிர் வேர், வெள்ளை அசன் வேர் ஆகியன. பஞ்ச கவ்வியம் ஆவின்பால், தயிர், வெண்ணை , நீர், சாணம், - கோமாதாவின் சீறு நீரையும் ( கோமியத்தையும் பஞ்சகாவியம் என்று சொல்லும் பழக்கம் உள்ளது) பஞ்ச கோலம் சுக்கு, திப்பிலி, திப்பிலி மூலம், செவ்வியம், சித்திரை மூலம் பஞ்ச அமிர்தம் பால், சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,( அல்லது) பேரீச்சம் பழம். பஞ்ச காரம் சீனிக்காரம் , சவுக்காரம், பொரிகாரம், பிரிகாரம், படிகாரம். பஞ்ச காரகம் காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம் பஞ்ச சாரம் நவச்சாரம், எவச்சாரம், உவாச்சாரம், சத்திச்சாரம், கதவிச்சாரம் பஞ்ச திரவியம் ஏலம், சண்பகம், சீரகம், கிராம்பு, கொட்டம் பஞ்ச மோகினி கோரோசினை, குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், புணுகு பஞ்ச வர்க்கம் சிறுநாகப்பூ, ஏலம், லவங்கம், சாதிக்காய், கற்பூரம் பஞ்ச வேம்பு நல்வேம்பு, மலைவேம்பு, கருவேம்பு, நிலவேம்பு, சிவனார் வேம்பு முதலியன பஞ்சாக்கினி மூலம் காட்டுக்கறணை, கறிக்கறணை, புளிமடல், பிரண்டை, கோப்பிரண்டை. பஞ்சரத்தினம் முத்து, வைரம், மரகதம், நீலம், பொன்(தங்கம்) இவை ஐந்தும் பஞ்சரத்தினம் என்று அழைக்கபடுகிறது. பஞ்ச இந்திரியம்(உறுப்புக்கள்) மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் பஞ்ச இந்திரயம் எனப்படும் பஞ்சாங்கம் நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் என்னும் ஐந்து அங்கங்கள் கொண்ட குறிப்பு புத்தகத்திற்கு பஞ்சாயங்கம் என்று பெயர். பஞ்சக்கிரி சாதிக்காய், சாதி பத்திரி, கிராம்பு குராசாணி, வசுவாசி ஆகியன பஞ்ச தரு சந்தனம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம், கற்பகம் பஞ்சபீத மூலி வெள்ளெருக்கு, மாவிலங்கை, கொடி வேலி, புன் முருங்கை,கோவை கிழங்கு பஞ்சலோகச்சாயம் திப்பிலி,திப்பிலி மூலம், சுக்கு, செவியம், கண்டுபரங்கி பஞ்சலோகம் பாசை, வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு பஞ்சவாசம் ஏலம், தக்கோலம்,இலவங்கம், சாதிக்காய், கற்பூரம் பஞ்சாட்சர மந்திரம் நமசிவாய என்ற மந்திரத்தின் நடு எழுத்தினை மாற்றி மாற்றி அமைக்கும் சொற்கள் நமசிவய, சிவயநம, யநமசிவ, மசிவநசி , வசியநம, +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்களுக்கு தெரியுமா? சொறகள் சொல்லும் சுவையான செய்தி கடிகாரம் "கடிகை" என்னும் சொல் தமிழில் நாழிகை என்ற கால அளவை குறிக்கும், அதனால் காலத்தை அளக்கும் கருவிக்கு கடிகாரம் என்று தமிழில் ெபயர் வந்து விட்டது. 14ம் நூற்றாண்டில், வழக்கத்தில் இருந்த கடிகாரத்திற்கு மணியைக்காட்டும் ஒரே ஒரு முள் மட்டுமேஇருந்தது. கிராம வாத்தியங்கள் முரசு, பறை, உறுமி, பம்பை, தாளம், ெநடுங்குழல் ஆகியன கோவில் வாத்தியங்கள் கொம்பு, தாதை, திருச்சினம், பூரி, சங்கு கச்சேரி வாத்தியங்கள் யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள் நரம்புக் கருவிகள் யாழ், வீணை, பிடில் தோலிசைக் கருவிகள் தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம் துளைக் கருவிகள் வேங்குழல், நாதசுரம், மகுடி நரம்புக்கருவிகள் யாழ், வீணை, பிடில் குதிரைச் சக்தி HP ஒரு நொடிப் பொழுதில் ஒரு அடி தூரத்திற்கு 550 பவுண்ட் எடையை தூக்க தேவையான சக்தியே ஒரு குதிரை சக்தி HP எனப்படும், நாலும் / இரண்டும் ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் ( நாலடியார்) இரண்டும் ( குறள்) சொல்லுக்குறுதி தந்தை நாடு உலகில் ஒரே ஒரு நாடு மட்டும்தான் தந்தை நாடு என்று அழைக்கப்படுகின்றது, அது ஜெர்மானியர்கள் தாம் பிறந்த நாட்டை "தந்தையர் நாடு" என்றே அழைக்கின்றனா். வந்தே மாதரம் வந்தே மாதரம் என்பதற்கு " தாயே உன்னை வணங்குகிறேன்" எனப் பொருளாகும். சிம் கார்டு SIM நாம் நம் கைபேசியில் பயன்படுத்தும் சிம் SIM கார்டு என்பது SUBSCRIBER INFORMATION MODULE என்பதன் சுறுக்குமாகும் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015


உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அரிக்கேன் விளக்கு அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது. ********************************************************** கதர் கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் சிசேரியன் ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது. ************************************************************************* ரூபாய் ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் "ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள். மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார். ஆப்பிரி்க்கா ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள் உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஆங்கிலச் சொற்கள் 1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும். 1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும் b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை. ************************************************************************* கபடி கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம். அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும். ****************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்புத்தகம் பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் புத்தகம் ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு புத்தகம் நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் புத்தகம் பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புத்தகம் ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது. சிவப்பு புத்தகம் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது பச்சை புத்தகம் இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளை அறிக்கை அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது. **********************************************************************************************

சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள்


உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அனைத்து எழுத்துக்களும் கொண்ட ஆங்கிய வாக்கியம் இந்த ஆங்கில வாக்கியத்தில் ஏ முதல் இசெட் (A -Z)வரையிலான அனைத்து ஆங்கில எழுத்துக்களும் அடங்கியுள்ளது இதன் சிறப்பு Pack my box with five dozen Jugs of liquor. The quick brown fox jumps over the lazy dog. Jackdaws love my big sphinx of Quartz. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் (Boyocott) பாய்காட் "காப்டன் பாய்காட்" என்பவர் அயர்லாந்தில் ஒரு பண்ணையின் உரிமையாளர், ஒரு சமயம் விவசாயிகள் இவர் சொற்படி நடக்க மறுத்தார்கள் வியாபாரிகளும் அவருக்கு தங்கள் பொருட்களை விற்க மறுத்தார்கள், அதிலிருந்து பகஷ்காரம் (புறக்கணிப்பு) செய்வதைக் குறிப்பிட பாய்காட் என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது. -------------------------------------------------------------------------------------------- உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்தி: டாங்க் (Tank) போர்க்களத்தில பயன்படும் முக்கியமான வாகனம் டாங்க் ஆகும். 1915ல் இது உருவானது. முதல் உலகப் போரின் போது இது ஒரு வகை போர் சாதனம் என்பது எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க, தண்ணீர் கொண்டு வரும் வண்டி , அதாவது ' டாங்க்' Tank என்று சொன்னார்கள், இதுவே , நாளடைவில் நிலைத்து விட்டது. ------------------------------------------------------------------------------------------------ நோபல் பரிசு 1896 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி காலமான ஆல்பிரட் நோபல் என்பவர் 90 லட்சம் டாலர்களை பேங்கில் வைப்பு நிதியாக போட்டு, அதன் வட்டியை ஆண்டுதோறும் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார். இதுவே நோபல் பரிசாகும். 1901ஆம் ஆண்டு முதல் பெளதிகம், ரசாயனம், மருத்துவம், இலக்கியம், சமாதானம், ஆகிய ஐந்து துறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் 1968 ம் ஆண்டிலிருந்து பொருளாதாரத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது. ---------------------------------------------------------------------------------------------------------------------------- ஜெராக்ஸ் பொதுவாக, ஒரு பிரதி போல் மற்றொரு பிரதி காப்பி எடுப்பதை "ஜெராக்ஸ்" எடுப்பது என்று சொல்லப்படுவதுண்டு. ஜெராக்ஸ் என்ற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா? முதன் முதலில் நகல் எடுப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட மெசினின் பெயர்தான் ஜெராக்ஸ் என்பது அதுவே நாளடைவில் காப்பி எடுப்பதற்கான சொல்லாக மாறிவிட்டது. ----------------------------------------------------------------------------------------------------------------------------- செங்கடல் செங்கடல் என்றால் சிவப்பாக இருக்கும் கடல் என்பதல்ல. எடாம் என்ற மலையின் நிழல் கடலில் தெரியும். ஹிப்ரூ மொழியில் எடாம் என்றால் சிவப்பு எனப்பொருள் அதனால் தான் செங்கடல் என பெயர் பெற்றது.