புதன், 26 ஏப்ரல், 2017

திருவண்ணாமலை அண்ணாமலையாரின் இன்னருள் பெற்ற ஞானியர் பலர். பற்பல சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் இத்தலம் சேர்ந்து மகிமை பெற்றுள்ளனர் அவர்களுள் சிலர்:
Iதிருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.
“திருவண்ணாலைக்கு வந்து ஞான குருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.
திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.
உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர் தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.
திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.
திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.
தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியத்தால் அண்ணாமலையானையே நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.
யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர். பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.
ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணாமலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர். காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணாமலையானின் திருக்கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர் மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.
வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.
Image result for திருவண்ணாமலை
கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.
தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர். இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இபுறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணாமலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.
திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.
பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.
பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், பாதிக் கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.
திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.
கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)
“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். ண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.
“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரிப்பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற்கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.
உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.
திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 1008 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள்.
1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.
திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று,
திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950)
விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக் கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்
thiruchirambalam

திங்கள், 24 ஏப்ரல், 2017

மரணத்தை வெல்லும் யோகம்

அர்த்தமுள்ள இந்துமதம் - மரணத்தை வெல்லும் யோகம்

எப்பொழுதுமே தன்னை உணர்ந்து கொண்டு விட்ட மனிதன், மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.

அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், `அவன் உடம்பு தான் செத்துவிட்டது, ஆன்மா சாகவில்லை’ என்பது பொருள்.

`என்னையே எனக்குக் கொடு’ என்னும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.

துயரங்கள் தோன்றாமல் சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது, அவன் உடம்பு அழிந்து விடுகிறது.

இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.

இமய மலையில் குடி புகுந்தவன், மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?

ஆன்மாவை உணர்ந்து கொண்டவன், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?

இப்போது நான் சொல்லப் போவது, மரணத்தை வெல்லும் யோகம் பற்றிய `கடோப நிஷதம்’ ஆகும்.

கவுதமரின் குமாரர் வசிஸ்ரவர்; அவரது குமாரன் நசிகேதன்.

அவர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள் களையும் தானம் செய்தார்.

அவரது குமாரன் நசிகேதனுக்கும், `தன்னை, தந்தை யாருக்குத் தானம் செய்வார்?’ என்ற கேள்வி எழுந்தது.

`தனக்கு வயதான பின் தானம் செய்வதில் பொருளிருக்க முடியாது. கடைசி முறையாகத் தண்ணீர் குடித்துப் புல்லைத் தின்று மலடாகி விட்ட கிழட்டுப் பசுக்களைத் தானம் செய்வதில் என்ன யோகம் இருக்க முடியும்? இந்த ஒன்பது வயதிலேயே, தானும் தானம் செய்யப்பட வேண்டும்!’ என்று நசிகேதன் கருதுகிறான்.

`தந்தையே! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்?’ – தந்தையைக் கேட்கிறான்.

அவர் பேசாமல் இருக்கிறார்.

அவன் மீண்டும், மீண்டும் கேட்கிறான்.

அவர் கோபத்தோடு, `உன்னை யமனுக்குத் தானம் செய்யப் போகிறேன்’ என்கிறார்.

நசிகேதன் யோசிக்கிறான்:

`தன்னைப் பெற்றுக் கொள்வதால் யமனுக்கு என்ன லாபம்? நான் யமனிடம் போவதென்றால், பலருக்கு முன்னால் போகப் போகிறேன். அல்லது சிலருக்கு நடுவில் செல்லப் போகிறேன். என்னை அடைவதன் மூலம் யமன் செய்யப் போவது என்ன இருக்கிறது?’

அவன் ஏதேதோ யோசிக்கிறான்.

`தந்தையே! நம் முன்னோர்கள் நடந்து வந்த விதத்தைக் கவனியுங்கள். தானியங்களைப் போல மனிதன் அழிகிறான்; தானியங்களைப் போலவே மீண்டும் பிறக்கிறான். நானும் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்படுகிறான்.

நசிகேதன் ஸ்தூலத்துடனேயே யம தர்மனைப் பார்க்கப் புறப்படுகிறான்.

தானியங்களை உதாரணம் காட்டியதில், அவன் ஒரு அர்த்தத்தைக் குறிப்பிடுகிறான்.

`ஒரு தானியத்தின் ஆயுள் காலம் எவ்வளவோ, அவ்வளவுதான் மனிதனின் ஆயுட்காலம்’ என்பது அவனது நம்பிக்கை.

வாழ்வு இவ்வளவு சிறியதாக இருக்கும் போது, அதில் ஆசை வைப்பானேன்?

காம, குரோத, லோபங்களில் சிக்குவானேன்?

தந்தையிடம் சொல்லுகிறான், தன் புறப்பாட்டை.

தந்தையும், அவன் யமனைப் பார்க்கப் போவதை அனுமதிக்கிறார்.

யமனைத் தேடி நசிகேதன் சென்ற போது, யம தர்மன் வீட்டில் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அவன் அங்கே தங்க நேரிடுகிறது.

மூன்று நாளும் நசிகேதன் உண்ணாவிரதம் இருக்கிறான்.

மூன்றாவது நாள், யம தர்மன் வருகிறான்.

ஒரு பிராமணச் சீடன் தனக்காக மூன்று நாட்கள் விரதம் இருப்பதைப் பார்த்து, யமன் சொன்னான்:

`ஏ அதிதியே! பிராமணா! என் வீட்டில் நீர் மூன்று இரவுகள் உணவருந்தாமல் கழித்து விட்டீர். அதற்குப் பதிலாக மூன்று வரங்களை உங்களுக்குத் தருகிறேன். என்னென்ன தேவை என்று நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வணக்கம். உமக்கு நன்மை உண்டாகட்டும்.’

உடனே நசிகேதன் மூன்று வரங்களைக் கேட்கிறான்.

முதல் இரண்டு வரங்களும், நசிகேதனின் தந்தையைப் பற்றியதும், சொர்க்கத்தைப் பற்றியதுமாகும். அதில் ஒன்று, அக்னி யாகம். அதற்காகக் கற்கள் பதித்த ஒரு தங்கச் சங்கிலியை யமன் தருகிறான்.

அது யம தர்மனின் முத்திரை.

மூன்றாவது கேள்வி தான் சிக்கலானது.

`யமதர்ம ராஜரே! ஒரு மனிதன் இறந்த பிறகு, `அவன் இருக்கிறான்’ என்று சிலர் சொல்லுகிறார்கள்; `இல்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். `உண்மை எது?’. அவன் இருக்கிறானா இல்லையா? இந்தச் சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.’

இந்த இருபதாவது ஸ்லோகத்துக்கு விளக்கம் சொல்லும்போது, சுவாமி சின்மயானந்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:

`உபநிஷத ரிஷிகள் பெருமையே பெருமை! கதாநாயகனுடைய சித்திரத்தைச் சொல்லாத வார்த்தைகளிலேயே எவ்வளவு திறமையாக அமைக்கிறார்கள்! இது ஷேக்ஸ்பியரின் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒன்றாகும்! அந்த அமர ரிஷிகளுக்கு நம் வணக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் உரியனவாகுக.’

`நாம் முன்னால் பார்த்தோம்; இலட்சிய (ஆன்ம வித்தை) மாணவனாக நசிகேதன் மனவமைதியையும் இன்பத்தையும் வேண்டி, முதல் வரத்தைத் தீர்த்தான். இரண்டாவது வரத்தை மனித சமுதாயம் ஆசி பெற அர்ப்பணித்தான்; இப்பொழுது கடைசி வரம் என்ற பொழுது தான் தன் நலத்தைப் பற்றி நினைக்கிறான். தன் பெரிய சந்தேகங்கள் ஒன்றைத் தீர்த்து வைக்குமாறு கேட்கிறான்.

தியாகம் வேண்டும். தனக்குரியவர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவருக்கு நன்மை புரிந்து, அவர்கள் நன்மையைத் தன் ஆன்ம விடுதலையை விட முதலில் எண்ணுமளவுக்குத் தன்னுள்ளே, `தயை’ வேண்டும். உண்மையான ஆன்ம முன்னேற்றம் தேடுபவன், உண்மையைத் தேடிச் செல்லும் யாத்திரையில் முழு வெற்றியையும் பெற வேண்டும் என்றால், அவனுக்கு இன்றியமையாத முக்கிய குணம் வேண்டும். இது, இன்று பக்தர்கள் வர்க்கத்தில் மெதுவாக வந்து செறிந்து நிற்கின்ற நம்பிக்கைக்கு நேர்மாறானது தான். தப்பிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்தத் தப்பான அர்த்தத்தில் தான் அவர்கள் சங்கடங்கள் தங்கும் குளவிக் கூடும் அமைகிறது.’

`மதத்தைப் பின்பற்றுவது நன்மைக்கமைந்த, சமுதாய அல்லது சமூக வாழ்க்கைக்கு இடையூறு அல்ல; இடையூறாக இருக்கவும் முடியாது. ஆன்மீக வாழ்வு விழைபவன் ஊமையாகவும், செவிடாகவும் இருத்தல் வேண்டும் என்பதில்லை.

அவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் உலகின் தேவைகளும், துயர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் தேடித் தன்னுள்ளே ஓர் அன்பையும், பிறர் துயருக்கு அழுது கரைகின்ற உள்ளப் பொறையையும் பெற வேண்டும். தன் உறவினர், தன் தலைமுறை மக்கள் இவர்களுடைய உள்ளங்களுடன் தன் உள்ளத்தைப் பொருத்தி அறியும் ஆற்றல் இல்லாத ஒருவனுக்கு உண்மையின் கோயிலுக்குள் தூய்மையுள் தூய்மையான அந்த நிலையை அடையத் தகுதி கிடையாது.’

`இந்தச் சுலோகத்திலிருந்து உபநிஷதம் என்பது ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ததெல்லாம், ஒரு பக்குவமடைந்த ஜீவனைப் பூரண தகுதி வாய்ந்த ஆசாரியரின் எதிரே கொண்டு வருவதற்கான நாடக இயல் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தைக் காட்டி அமைப்பதற்கான முயற்சிதான்.’

`அந்த பிராமணச் சிறுவன் எழுப்பிய சந்தேகம், அவன் `சாஸ்திரப் பண்பாட்டை’யும் அவனது `தன் வளர்ச்சி’யையும் காட்டித் தருகிறது. எப்பொழுதும் இந்திரியங்கங்களையே தேடித் திரியும் மிருக மனிதன், வாழ்க்கையைப் பற்றி முழுதாக எண்ணி, ஆழ்ந்த ஒரு முனைப்பட்ட இவ்விதமான சந்தேகத்தைக் கொள்ள முடியாது. அவன் அதற்காகவும் சமநிலையும், புத்தித் திறனும் கொண்டிருப்பது மிகவும் அபூர்வமே!’

`ஆகா! வாழ்க்கையில் கண்ணீர் வரவழைக்கும் இச்சம்பவம் இருக்கிறதே, சாவு என்ற ஒன்று, அதனுடைய பயங்கர அழகின் சுழலில் விழுந்து தத்தளிக்கிற சிந்தனையாளர்கள் எவ்வளவோ; இன்றும் கூடச் சாவு எல்லா நிலைகளிலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், தத்துவவாதிகள் எல்லோரையுமே தன்பால் ஈர்க்கும் ஓர் அழகிய கருத்துத்தான். ஆனால் இந்தக் கம்பீரமான பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் வருவது மிகவும் குறைவே என்றும் நாம் பார்க்கிறோம்.


ஆனால், முனிவர்கள் தம் அமைதியில் அவர்கள் அறியவும் உணரவுமாகத் தம் கருவிகளை நன்கு தயார் செய்து கொண்டார்கள். பரநிலையான அந்த மேலேயுள்ள உத்தம நிலைக்கு உயர்ந்தார்கள். அமைதியாகக் கவனித்து, விஞ்ஞான முறையில் அலசி ஆராய்ந்து, இந்த அற்புதமான சாவு எப்படி ஏன் என்கின்ற கேள்விக்கு முடிவையும் உண்மையாகக் கண்டுபிடித்தார் கள்.’

`இந்தியத் தத்துவ விசாரணையாளர்களையே எடுத்துக் கொண்டாலும், அவர்களிடையே சாதாரணமாக நிகழக்கூடியதாக இருந்தாலும், விசித்திரமான சாவைப் பற்றி முரணானதும், தம்மையே தாம் மீறுகின்றதுமான முடிவுகளைக் காண்கிறோம். நசிகேதனே இந்தச் சுலோகத்தில் அதைத்தான் சொல்லுகிறான்.

சாவே முடிவு; அதற்கப்பால் சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிலைநாட்டிய விசாரணையாளர்களில் சில வர்க்கங்கள் இருக்கின்றன. மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள், `அது உண்மையல்ல. சாவுக் குழிக்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது,’ என்று வாதம் புரிந்து நிலை நிறுத்தவும் செய்கிறார்கள்’.

`சாவுக்குப் பின் வாழ்வு உண்டா? இல்லையா?’ என்ற கேள்வி, மனதும் புத்தியும் புகழக்கூடிய பிரதேசத்திற்குரிய ஒன்றன்று. நம் எல்லைக்கு அப்பால் ஒரு ஞான உலகம் பரவியிருக்கிறது என்பது உண்மை. உணர்ச்சி தரும் மனதும், சிந்தனை புரியும் புத்தியும் மிக மிக முயன்றாலும், அந்த உலகத்தைக் குறித்துக் கையை நீட்டி விரலைக் காட்டித் தெளிவற்ற சில வழிகளை மட்டுமே காட்ட முடியும். அந்தச் சுத்த அறிவின் தேசத்துக்குப் போக வேண்டுமே! சாதாரண மனிதனிடம் அதற்குத் தக்க வாகனம் கிடையாது! அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சரி; உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் சரியே. துறவு, ஞானம் இவ்விரண்டின் சீமான்கள் தான் அந்த சகஜ ஆற்றல் பெற்றிருப்பார்கள். அவர்கள் தம் விருப்பப்படி ஒருவனை அந்த `அப்பாலுள்ள’ தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடியும்.

`சுருங்கக் கூறினால், இப்படிப்பட்ட அப்பாலுக்கு அப்பாலைப் பற்றிய கேள்விகள், வார்த்தைகளாலே விளக்கப்பட முடியாதவை. நமக்குத் தெரிந்த சாதாரணமான நேர் அறிவு, அனுமானம், ஒத்திட்டு அறிதல் முதலிய எந்த அறிவும் நிரூபணத்தின் மூலமும் காட்டி நிலை நாட்டிவிட முடியாதவை. அவற்றை அணுகித் தீர்க்க ஒரே முறைதான் உண்டு. `ஆகமம்’ மூலம் தான் அது முடியும். ஆன்ம அறிவு கைவந்த மகான்கள் தந்த ஞானச் சொற்களைத்தான் `ஆகமம்’ என்கிறோம். அந்த ஞான சீலர்களைச் `சாது’க்கள் என்றும் `முனிவர்கள்’ என்றும் சொல்கிறோம்.’

`ஆகவே தான் நசிகேதன் யமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர் தர்மங்களுக்கெல்லாம் அரசரல்லவா! அதனால் தான் அவரிடம் இந்தக்கேள்வியைக் கேட்டதில் நியாயம் இருக் கிறது.’

`முக்கியமாகப் புத்தரைப் பின்பற்றும் சூனியவாதிகளும், இந்துக்களிடையே உலகாயதவாதிகளான சர்வாகர்களுமே, `முடிவு ஒரு சூனியமே’ என்று முடிவு செய்கிறவர்கள்.’

உலகாயதவாதிகள் வாதம் இதுதான்: `உடல்தான் எல்லாம். உயிர் என்பதை கை, கால்கள் முதலிய அங்கங்களைச் சேர்ப்பதால், தானே ஏற்படும் ஓர் அற்புதமே!’

`அவர்கள் வாதத்தில், உயிர்க்கும் இந்த உயிரின் இனிய வெம்மை, உடலின் இன்ப துன்பங்களுக்கு இறைவனாக நிற்கும் அந்தத் தெய்வ சக்தியல்ல. ஆனால், அது தானாகச் சேர்க்கையின் பொழுது ஏற்பட்ட ஒரு சினைப் பொருள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்றால் ஒரு செந்நிறம் தனித்துத் தானாக நேர்கிறதல்லவா? அந்த மாதிரி அந்த நிறம், இந்தத் தனித்தனி ஒன்றிலுமே இல்லையே! அதேபோல அவர்கள் கட்சி, உடலின் அங்கங்களைச் சேர்த்தால், அதாவது இயற்கை அவ்விதம் சேர்க்கும் பொழுது உயிர் தோன்றுகிறது! அப்படிப் பேசுகிற குழுவினருக்குச் சாவு என்பது உடல் மறைவு; உயிரின் சூன்யம் அவ்வளவுதான். சூனியத்திலிருந்து உயிர் வெளியாகிறது; கொஞ்ச நேரத்திற்கு நிச்சயமற்ற சில ஆட்டங்கள் போடுகிறது; பிறகு சூனியத்திலே மறைந்து விடுகிறது.’

`பகுத்துச் சிந்திக்கும் ஒருவனுக்கு அந்தத் தத்துவம் தகர டப்பாச் சத்தம் என்று தெரியும். சூனியத்திலிருந்து ஒன்றும் ஆகாது. அதற்குள் ஒன்றும் மறையவும் முடியாது – மீண்டும் சூனியமாக!’

`புத்த மதத்தைச் சேர்ந்த சூனியவாதிகளின் கட்சி வாதங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்வதையே அவர்கள் வாதம் கண்டிக்கிறது. இதை நாம் வெகு சுலபத்தில் புரிந்து கொள்ளலாம். பரம உண்மை என்பது நிர்வாணம் அல்லது இல்லாதிருக்கும் தன்மை என்று நிலைநாட்ட அவர்கள் வாதம் புரிகின்றார்கள். அதுவே, முன்னுக்குப் பின் முரணான வாதம். சங்கர பகவத் பாதாள், அதே வார்த்தையையே எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். வாதக் களத்திலிருந்தே அவர் களை விரட்டி விடுகிறார்கள்.’

`அவர்கள் சொல்லுகிறதை அப்படியே ஒப்புக் கொள்வோம் என்றால் என்ன முடிவு ஏற்படும்? அவர்கள், இல்லாதிருக்கும் இருப்பை அறிந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சங்கராசாரியார் மற்றும் வேதாந்திகள் கருத்துப்படி, `இல்லாதிருக்கும் நிலை’யை அறிகிறவன் அல்லது அந்த அறிவாகிய ஞானம்தான் பரம தத்துவம். நம்முன் இருக்கும் இந்த ஞானம் அல்லது அறிகின்ற அந்தப் பொருள் தேய்வதில்லை. சாய்வதில்லை.’

`ஆகவே, வெறும் ஏட்டுப் படிப்பெல்லாம் ஞானம் விழைபவனைக் குழப்பப்படுத்தும். பலதரப்பட்ட சிந்தனையாளர்கள் தங்கள் முறையில் தங்கள் மனப்பாங்கு, பண்பாட்டுக்கு ஏற்றவாறு தனித்தனியே எண்ணி வாதம் புரிந்து முடிவு காணுகிறார்கள். அந்த முடிவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாயிருக்கின்றன. உண்மையான தீர்ப்பைத் தருவதுதான் யார்? எந்தத் தர்மபுத்திரன் நமக்கு உண்மையைச் சொல்வார்? அந்த உண்மையை உள்ளபடி அனுபவித்துணர்ந்த ஆத்ம ஞானிதான் செய்ய முடியும். ஆகவே, நசிகேதன், யம தர்மனைப் பார்த்து இந்த ஆத்யாத்மிகக் கேள்வியைக் கேட்டது முற்றிலும் சரியே!’

இந்தக் கேள்வியால் யம தர்மனுக்குப் பயம் வந்து விடுகிறது.

`நசிகேதா! இந்த விஷயத்தில் தெய்வங்களே சந்தேகம் கொண்டிருக்கின்றன. உண்மையில் அதைப் புரிந்து கொள்வது சுலபமில்லை தான். தயவு செய்து என் பொருட்டு நீ இதைக் கேட்காதே!’

நசிகேதன் சொல்லுகிறான்:

`மரணத்தின் தந்தையே! இறைவனுக்குக் கூட இதில் சந்தேகம் உண்டு என்று நீ சொல்கிறாய். இதை அறிய முடியாது என்கிறாய். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது; இதற்குப் பதில் சொல்லக் கூடியவன் நீ ஒருவனே! எனது இந்த மூன்றாவது வேண்டுகோள் மிக முக்கியமானது.’

நசிகேதன் விடவில்லை; மரண ரகசியத்தை வெளியிட யம தர்மனும் தயாராக இல்லை.

`உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், மக்கள், பேரர்கள், நூறு வயது, தங்கம், பசுக்கள், ராஜாங்கம் எல்லாம் தருகிறேன். அழகான பெண்களைத் தருகிறேன்; சேவகர்களைத் தருகிறேன். அனுபவி. மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!’ என்றான் யம தர்மன்.

`யம தர்மா, மரணத்தை மடியில் கட்டிக் கொண்டு இவற்றை அனுபவிப்பது எப்படி? ஆகவே, அந்த ரகசியத்தை நீ சொல்லியே ஆக வேண்டும்’ என்கிறான் நசிகேதன்.

யம தர்மன் வேறு வழியின்றிச் சொல்லத் துவங்குகிறான்…

`நசிகேதனுடைய வாதம் மிகவும் ஆணித்தரமானது. கடோபநிஷத்தின் முக்கியமான பகுதி அதுதான். ஆனால், அவன் நின்ற இடம், மரணத்தின் ரகசியத்தைத் தவிர வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் என்பதே. ஒரு இலட்சியப் பிடிப்பை இதில் காண்கிறோம்.’

`ஒரு ஏழை, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். லட்ச ரூபாய் தருகிறேன், என் பெண்ணை மறந்து விடு’ என்று சொன்னால், சிலர் மறந்து விடுவார்கள்.

ஆனால், நசிகேதனோ, பூலோகம் தெரிந்து கொள்ள விரும்பும், `மரண ரகசிய’த்திலேயே நிற்கிறான்.

யமன் சொல்லும் ரகசியமோ, திடுக்கிடத் தக்கதாக இல்லை. அது, பகவத்கீதையின் மற்றொரு பதிப்பாக நின்று ஆன்மாவையும், பற்றற்ற தன்மையையும் அதிகம் பேசுகிறது.

நித்தியம், அநித்தியம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைக் கூறுகிறது.

மேலும் `அர்த்தமுள்ள இந்துமதம்’ வாசகர் களுக்குப் பிடிபட முடியாத கடினமான தத்துவங்களை விளக்குகிறது.

ஆனால், சுருக்கம் இதுதான்.

ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்தவன், மரணமடைந்தாலும் அவன் செத்ததாக அர்த்தமில்லை. அது அல்லாதவன் மட்டுமே இறந்தவனாகக் கருதப்படுகிறான்.

`கடோபநிஷத்தைப் படித்ததில் இருந்து ஒன்று எனக்குப் புரிகிறது. பகவான் கீதையில் சொல்வது போல், `எதிலும் சம நோக்கு உள்ளவனே மரணமற்ற நிலையை எய்துகிறான்,’ என்பதே அது.

கிட்டத்தட்ட ஒரு மரம், அல்லது மலையின் நிலை தான்.

வெயிலடித்தாலும் பனி விழுந்தாலும் எல்லாவற்றையும் அவை ஒரே சீராகத் தாங்கிக் கொள்கின்றன.

இது ஒரு பக்குவ நிலை.

மனிதன் விலங்காக இருந்தால், அந்த விலங்கிற்கும் குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் இருக்கின்றன. தெய்வமாக இருந்து விட்டால் கேள்வியே

இல்லை.ஆனால், அவன் மனிதனாகவே இருக்க வேண்டும். இருட்டையும் வெளிச்சத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.

`இந்த யோக நிலையை எய்தியவன், இறந்தும் வாழ்கிறான்’ என்கிறான், யம தர்மன்.

`அவன் உயிரை நான் கொண்டு போகவில்லை! வெறும் சக்கையையே கொண்டு போகிறேன்!’ என்பது யம தர்மன் வாதம்.

மானிட ஜாதி முழுவதும் இந்தப் பக்குவ நிலையை எய்திவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும்.

வீட்டுக்குக் கதவும், பூட்டும் தேவைப்படாது.

கோர்ட்டிலே சத்தியப் பிரமாணம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒருவன் மனைவி, இன்னொருவன் பக்கத்திலே தூங்கலாம்; அவர்கள் இருவரும் தொட மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறுக்கே போடப்பட்டுள்ள திரைகள் விலகிவிடும்.

ஆசை என்ற வார்த்தை இல்லாமற் போய்விடும்.

`எல்லாம் அநித்தியம்’ என்பது உணரப்பட்டு விடும்.

`காமம் என்பது ஒரு குழந்தையின் ஜனனத்துக்காவே’ என்ற உணர்ச்சி வந்து விடும்.

`பொருள் என்பது உயிர் வாழ்வதற்கு மட்டுமே’ என்ற நிலை தோன்றிவிடும்.

ஏமாற்றுதல், கலகம் செய்தல், பதவிப் போட்டிகள் நீங்கி விடும்.

கட்சிகள் இருக்கமாட்டா.

அப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் பதவிக்கு வரவேண்டும் என்று கருதமாட்டார்.

அடுத்தக் கட்சிக்காரனைப் பார்த்து, `நீங்களே வரவேண்டும்’ என்று ஆசைப்படுவான்.

`நான், என்னுடையது’ என்ற எண்ணம் அடங்கி விடும்.

பங்கீடு செய்து வாழத் தோன்றும்.

`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்ற காந்திஜியின் ஆசை கைகூடும்.

சொல்லப் போனால், துயரங்களுக்கெல்லாம் எவை எவை காரணமோ, அவையெல்லாம் அடிபட்டுப் போகும்.

இப்படிப் பக்குவம் பெற்று விட்ட மனிதன் மரணமடைந்தாலும், மரணமடைவதில்லை.

`துன்பத்திற்குரிய மரணம்’ என்ற நிலையில் இருந்து விடுபட்டு விடுகிறான்.

இதுவே யோகங்களில் எல்லாம் கர்ம யோகம்.

நூற்றுக்கு நூறு ஜனங்களுக்கு இது வருமா?

வருவது கடினம்.

வந்துவிட்டால் மத்திய சர்க்காரும் கிடையாது. மாநில சர்க்காரும் கிடையாது!

சோஷலிச, கம்யூனிஸம், முதலாளித்துவம் எதுவும் கிடையாது.

மனிதத் தன்மை என்ற ஒன்றே நிலைபெற்று விடும்.

சிறுத்தொண்ட நாயனார்

சிறுத்தொண்ட நாயனார்
குருபூசை நாள் 26,04,2017

சோழமண்டலத்திலே, திருச்செங்காட்டங்குடியிலே, மகாமாத்திரர் குலத்திலே, பரஞ்சோதியாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஆயுள் வேதங்களிலும், படைக்கலத் தொழில்களிலும், குதிரை யேற்றம், யானையேற்றங்களிலும் மிகச் சிறந்தவர். வேதமுதலிய நூல்களை மெய்ப்பொருளை அறிதல் வேண்டுமென்னும் அவாவினோடு திருவருளை முன்னிட்டு ஓதியுணர்ந்தமையால், பரமசிவனே மெய்க்கடவுள் என்றும், அவருடைய திருவடிகளை அடைதலே முத்தி நெறியென்றுந் தெளிந்து, அவருடைய திருவடிகளை அகோராத்திரம் இடைவிடாது அன்பினோடு தியானிப்பவராயினார். சிவனடியார்களுக்கு எக்காலமுந் திருத்தொண்டு செய்பவர்

அவர் அரசனிடத்திலே அணுக்கராகி, அவன்பொருட்டு யானை செலுத்திக் கொண்டு சென்று, அவனோடு மாறுபட்ட பலவரசர்களை வென்று, அவர்களை தேசங்களைக் கைப்பற்றி, அவனால் நன்கு மதிக்கப்பட்டவர். ஒருமுறை உத்தரதேசத்திலே வாதாவியென்னும் நகரத்திற்சென்று, அதனை வென்று, பலவகையிரத்தினங்களும், நிதிக்குவைகளும் யானைக்கூட்டங்களும், குதிரைக்கூட்டங்களும் அரசனுக்கு முன்கொண்டுவந்தார். அது கண்டு, அரசன் அவருடைய யானையேற்றத்தின் வலிமையை அதிசயித்துப் புகழ்ந்து பேச, அவரை அறிந்த மந்திரிகள் அரசனை நோக்கி "மகாராஜாவே! இவர் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்கையால் இவ்வுலகத்திலே இவருக்கு எதிராவார் ஒருவருமில்லை" என்றார்கள். அரசன் அதைக் கேட்டு அஞ்சி நடுநடுங்கி, இரண்டு கண்களினின்றுஞ் சோகபாஷ்பஞ் சொரிய, 'இவர் நமது கடவுளாகிய பரமசிவனுடைய திருத்தொண்டர் என்பதை உணராது, கொடிய போர்முனையிலே விட்டிருந்தேன், ஐயையோ! இது எவ்வளவு கொடிய பாவம்" என்று சொல்லி, பின்பு பரஞ்சோதியாரை நோக்கி "சுவாமீ! இக்குற்றத்தைப் பொறுத்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்து நமஸ்கரித்தான். பரஞ்சோதியார் அரசன் தம்மை நமஸ்கரித்தற்கு முன் தாம் அவனை நமஸ்கரித்து, "மகாராஜாவே! நான் எனது உரிமைத் தொழிற்கு அடுத்த திறத்தைச் செய்வேன். அதனாலே என்ன தீங்கு" என்றார். அரசன் அவருக்கு நிறைந்த நிதிக்குவைகளையும் விருத்திகளையுங்கொடுத்து, "நீர் உம்முடைய நிலைமையை நான் அறியாவண்ணம் நடத்திக்கொண்டு வந்தீர். இனி என் மனக்கருத்துக்கு இசைந்து, எனக்குப் பணிசெய்தலை ஒழிந்து, நீர் விரும்பியவாறே சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் வெளிப்படத்ட் திருத்தொண்டு செய்யும்" என்று விடைகொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுக் கொண்டு, தம்முடைய திருப்பதியிற்சென்று, கணபதீச் சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வணங்கி, அவருக்குத் திருத்தொண்டுகளை வழுவாது செய்வாராயினார். திருவெண்காட்டுநங்கையாரென்னும் மங்கையாரோடு கூடி இல்லறத்தில் வாழ்ந்திருந்து, நாடோறும் முன்னே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, பின் தாம் உண்பார் சிவனடியார்களை மிகுந்த அன்பினோடு வழிபட்டு, அவர்கள் திருமுன்பே மிகச்சிறியராய் ஒழுகுகின்றமையால், அவருக்குச் சிறுத்தொண்டரென்னும் பெயர் கொடுக்கப்பட்டது கணபதீச்சுரருடைய திருவருளினாலே அவருக்குத் திருவெண்காட்டுநங்கையாரிடத்த்லே, சீராள தேவரென்னும் புத்திரர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயசிலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். அந்நாளிலே அத்திருப்பதிக்கு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தப்பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்து, அவரை வணங்கித் துதித்து, அவராலே திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடியருளப்பட்டார்.

சிவபெருமான் சிறுத்தொண்டநாயனாருடைய மெய்யன்பை நுகர்ந்தருளுதற்குத் திருவுளங்கொண்டு, உட்சமயங்களாறனுள் ஒன்றாகிய வைரவத்துக்கு உரிய திருவேடங்கொண்டு, திருக்கைலாசத்தினின்றும் நீங்கி, திருச்செங்காட்டங்குடியை அடைந்து சிறுத்தொண்டநாயனாருடைய வீட்டுவாயிலிற்சென்று, "சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கின்றாரோ" என்று வினாவ; தாதியாராகிய சந்தனநங்கையார் முன் வந்து வணங்கி, "சுவாமீ! அவர் சிவனடியார்களைத் தேடிப் புறத்தே போய்விட்டார். தேவரீர் உள்ளே எழுந்தருளும்" என்றார். அதற்கு வைரவர் "பெண்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகோம்" என்று அருளிச்செய்ய; திருவெண்காட்டுநங்கையார் அதைக்கேட்டு, "இவ்வடியவர் போய்விடுவார் போலும்" என்று பயந்து, விரைந்து வந்து, "சுவாமீ! அடியேனுடைய நாயகர் எப்போதும் சிவனடியாரைத் திருவமுது செய்விப்பவர். இன்றைக்கு ஒருவரையுங் காணாமையால் தேடிப்போயினார். தேவரீருடைய திருவேடத்தைக் கண்டாராயின் மிகமகிழ்வர். இனித்தாழ்க்கார் இப்பொழுதே வந்து விடுவார் எழுந்தருளியிரும்" என்று விண்ணப்பஞ் செய்தார். வைரவர் "நாம் உத்தரதேசத்திலுள்ளேம். சிறுத்தொண்டரைக் காண வந்தேம். எப்படியும் அவர் இல்லாத போது நாம் இங்கே இரேம். கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தி மரத்தின் கீழ் இருக்கின்றாம். அவர் வந்தமாத்திரத்திலே அவருக்குத் தெரிவியுங்கள்" என்று சொல்லித் திருவாத்தியை அணைந்து அதன்கீழ் இருந்தருளினார்.

சிறுத்தொண்டநாயனார் சிவனடியார்களைத் தேடி எங்குங் காணாது, வீட்டுக்குத் திரும்பிவந்து, மனைவியாருக்குச் சொல்லித் துக்கித்தார். மனைவியார் "உத்தரதேசவாசியாகிய ஒரு வைரவர் இங்கு வந்து, தாங்கள் இங்கே எழுந்தருளியிருக்கும்படி சொல்ல, அது கேளாது கணபதீச்சரத்தில் உள்ள திருவாத்தியின் கீழே போய் இருக்கின்றனர்" என்றார். உடனே சிறுத்தொண்ட நாயனார் மிகுந்த விருப்பத்தினோடு விரைந்து சென்று, அவரைக் கண்டு வணங்கி நிற்க, அவர் "பெரியசிறுத் தொண்டர் நீரோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். சிறுத்தொண்டநாயனார் அவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்கள் தங்கள் கருணை மேலீட்டினாலே அடியேனையே அப்படி அருளிச்செய்வார்கள். அது நிற்க. இன்றைக்குத் திருவமுதுசெய்யவேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்தார். வைரவர் "அன்பரே! நாம் உத்தர தேசத்தில் உள்ளேம் உம்மைக் காண வந்தோம். நம்மை அமுது செய்வித்தல் உம்மால் முடியாது. அது மிக அருமை" என்றார். சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்தருளும் இயல்பை அருளிச்செய்யும். சீக்கிரம் பாகம் பண்ணுவிப்பேன். சிவனடியார்கள் தலைப்பட்டால் தேடுதற்கு அரியனவும் எளியனவாம்" என்று விண்ணப்பஞ் செய்ய; வைரவர் "நாம் ஆறு மாசத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இந்நாளேயாம். அப்படியூட்டுதல் உம்மாலியலாது" என்றார். சிறுத்தொண்டநாயனார் "மிகநன்று, அடியேன் அநேக பசுக்களையுடையேன். தேவரீருக்குப் பிரீதியாகிய பசு இன்னது என்று அருளிச் செய்வீராகில், அடியேன் விரைந்து சென்று பாகம் பண்ணுவித்துக் காலந்தாழ்க்காமல் வருவேன்" என்று சொல்ல; "வைரவர் நாம் உண்பது நரபசு, அது ஐந்து வயசினையுடையதாயும், அவயவப் பழுதில்லாததாயும், ஒரு குடிக்குத் தான் ஒன்றேயாயும் இருக்க வேண்டும். அவ்வியல்புடைய சிறுவனை மனமகிழ்ச்சியோடு தாய் பிடிக்கத் தந்தை அரிதல் வேண்டும். இப்படிச் சமைக்கப்பட்ட கறியே நாம் இங்கு உண்போம்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "தேவரீர் திருவமுது செய்வீராகில், அடியேனுக்கு இதுவும் அரிதன்று" என்று சொல்லி, அவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினார்.

சிறுத்தொண்டநாயனார் பெருங்களிப்புடையராகி, விரைந்து சென்று, திருவாத்தியின்கீழ் இருந்த வைரவரை வணங்கி, "சுவாமி! தேவரீர் பிரீதிப்படி பாகம் பண்ணுவித்தேன் எழுந்தருளிவந்து திருவமுது செய்தருளல்வேண்டும்" என்று விண்ணப்பஞ்செய்து, அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், ஆசனத்தில் இருத்தி, அவருடைய திருவடிகளை ஜலத்தினால் விளக்கி, அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் சிரசின் மேலே தெளித்து, வீடெங்கும் புரோக்ஷித்து, அவரைப் புஷ்பங்களினால் அருச்சித்துத் தூபதீபங்காட்டி வணங்கினார். வணங்கியபின், நாயனாரும் மனைவியாரும் வைரவரை நோக்கி, "சுவாமீ! திருவமுது படைக்கும் வகை எப்படி" என்று கேட்க; வைரவர் "அன்னத்துடன் கறிகளெல்லாம் ஒருங்கே படைக்கவேண்டும்" என்றார். மனைவியாராகிய திருவெண்காட்டுநங்கையார் பரிகலந்திருத்தி, அன்னமுங் கறியமுதும் படைத்தார். வைரவர் அதைப் பார்த்து, "நாஞ் சொல்லியமுறையே கொன்ற பசுவினது உறுப்புக்களெல்லாவற்றையும் பாகம்பண்ணினீரா" என்று வினாவ; திருவெண்காட்டுநங்கையார் "தலையிறைச்சி மாத்திரம் திருவமுதுக்கு ஆகாது என்று கழித்துவிட்டோம்" என்றார். வைரவர் "அதுவும் நாம் உண்பது" என்றார். அதுகேட்டுச் சிறுத்தொண்டநாயனார் மனைவியாரோடுந் திகைத்து அயர; சந்தனநங்கையார் "நான் அத்தலை யிறைச்சியை அடியவர் திருவமுதுசெய்யும்பொழுது நினைக்கவரும் என்று முன்னமே பாகம் பண்ணி வைத்தேன்" என்று சொல்லி எடுத்துக் கொடுக்க; திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து, வாங்கிப் படைத்தார். அதன்பின் வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "நாந்தனியே உண்ணோம். சிவனடியார்களைக் கொண்டுவாரும்" என்று அருளிச்செய்ய; சிறுத்தொண்டநாயனார் ஏங்கி, "ஐயோ அடியவர் திருவமுது செய்தற்கு இடையூறு இதுவோ" என்று நினைந்து, வீட்டுக்குப் புறத்திலே போய் சிவனடியார்களைத்ட் தேடிக் காணாது துக்கத்தோடு திரும்பிவந்து, வைரவரை வணங்கி, "சுவாமீ! சிவனடியார்களைக் காணேன். அடியேனும் திருநீறிடுவாரைக் கண்டு அன்னங்கொடுப்பேன்" என்று விண்ணப்பஞ்செய்ய; வைரவர் சிறுத்தொண்டநாயனாரை நோக்கி, "உம்மைப்போலத் திருநீறிட்டார் உளரோ? நீர் இருந்து உண்ணும்" என்று சொல்லி பின் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, "இவருக்கு வேறொரு பரிகலத்திருத்தி, அன்னமும் இறைச்சியும் நமக்குப் படைத்ததில் எடுத்துப் படையும்" என்று அருளிச்செய்ய; அவரும் அப்படியே எடுத்துப் படைத்தார். சிறுத்தொண்டநாயனார் வைரவரை ஊட்டவேண்டி, உண்ணப்புகலும், வைரவர் தடுத்தருளி; "ஆறுமாசத்துக்கு ஒருமுறை உண்ணுகின்ற நீர் முன் உண்பது என்னை! நம்முடன் உண்ணும்பொருட்டு உமக்குப் புத்திரன் உண்டேல் அழையும்" என்றார் சிறுத்தொண்டநாயனார் "இப்போது அவன் உதவான்" என்று சொல்ல; வைரவர் " அவன் வந்தாற்றான் நாம் உண்போம் தேடி அழையும்" என்றார். சிறுத்தொண்டநாயனார் தரியாது எழுந்து மனைவியாரோடு விரைந்து வீட்டுக்குப் புறத்திலே போய், "புதல்வனே வா" என்று அழைக்க; மனைவியாரும் நாயகரது பணியில் நிற்பாராகி, "சீராளனே! சிவனடியார் அடியேங்கள் உய்யும்பொருட்டு உடனுண்ண உன்னை அழைக்கின்றார் வா" என்று அழைத்தார். அப்பொழுது அப்புதல்வர் பரமசிவனது திருவருளினாலே பள்ளிக் கூடத்தினின்றும் ஓடி வருவார்போல வந்தார். தாயார் அவரை எடுத்துத் தழுவி நாயகர் கையிற்கொடுக்க; அவர் "இனிச் சிவனடியார் திருவமுது செய்யப்பெற்றோம்" என்று மனமிகமகிழ்ந்து, அப்புதல்வரை விரைவிற்கொண்டு அடியவரைத் திருவமுது செய்வித்தற்கு உள்ளே வந்தார். அதற்கு முன் வைரவர் மறைந்தருள; சிறுத்தொண்டநாயனார் அவரைக்காணாமையால் மனங்கலங்கித் திகைத்து விழுந்தார். கலத்திலே இறைச்சிக்கறியமுதைக் காணாமையால் அச்ச முற்றார். "வைரவர் அடியேங்கள் உய்யும் பொருட்டுத் திருவமுது செய்யாமல் எங்கே ஒளித்தனரோ" என்று தேடி மயக்கங்கொண்டு, புறத்திற்செல்ல; அச்சிறுத்தொண்ட நாயனார் செய்தது நிஷித்தானுட்டானமாயினும், அவர் சிவானந்தானுபவமேலிட்டு நிற்கையால் கருவிகரணங்கள் தற்போதச்சீவிப்பாய் நின்று செய்யாது சிவபோதச் சீவிப்பாய் எழுந்து செய்தமைபற்றி அதனை விகிதானுட்டமாகவே கொண்டருளிய சிவபெருமான். அரிபிரமேந்திராதிதேவர்கள் முனிவர்கள் முதலாயினோர் சேவிக்க, உமாதேவியாரோடும் சுப்பிரமணியசுவாமியோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருளினார். சிறுத்தொண்டநாயனாரும் மனைவியாரும் புதல்வரும் தாதியாருமாகிய நால்வரும் அவர்களைத் தரிசித்து ஆனந்தவருவி சொரிய, எலும்பும் மனமும் நெக்கு நெக்குருக, பரவசர்களாய் விழுந்து நமஸ்கரித்து, எழுந்து அஞ்சலியஸ்தர்களாகி நின்று, தோத்திரம் பண்ணினார்கள் பின்பு பரமசிவனும் பார்வதியம்மையாரும் சுப்பிரமணிய சுவாமியும், அவர்கள் நால்வரையும், தங்களை எக்காலமும் பிரியாது வணங்கிப் பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் பொருட்டு உடன் கொண்டு திருக்கைலாசத்தை அடைந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உய்வார்கள் உய்யும் வகை:

உய்வார்கள் உய்யும் வகை:

நமச்சிவாய என்பார் உளரேல் அவர
 தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால்
 அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும்
 இமைத்து நிற்பது சால அரியதே.


உய்வார்கள் உய்யும் வகை:
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?
சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.
இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.
இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை.

இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.
கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.

 தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
        விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
        பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
        மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.
இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். 

திருச்சிற்றம்பலம்

சனி, 22 ஏப்ரல், 2017

திருநாவுக்கரசு நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்
குருபூசை நாள் 22,04,2017

திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புலழனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கின்ற புத்திரியார் பிறந்தார். அவர் பிறந்து சிலவருஷஞ் சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணீக்கியார் என்கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார் உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ் செய்வித்தார். மருணீக்கியார், தந்தையாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பலகலைகளையும் கிரமமாகக் கற்று வல்லவராயினார்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆனபொழுது, அப்புகழனார் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவபத்தியிலே சிறந்தவரும், இராஜாவிடத்தில் சேனாதிபதியாயுள்ளவருமாகிய கலிப்பகையார் என்பவர், அப்புகழனார் இடத்திலே சில முதியோர்களை அனுப்பி, திலகவதியாருக்குந் தமக்கும் மணம் பேசுவித்தார். புகழனார் அதற்கு இசைந்தமை கண்டு, அம்முதியோர்கள் மீண்டும் சென்று, கலிப்பகையாருக்குத் தெரிவித்தார்கள். கலிப்பகையார் தாம் விவாகஞ்செய்தற்கு முன் தம்முடைய அரசனது ஆஞ்ஞையினாலே சேனைகளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத்தரசரிருக்குமிடத்தைச் சேர்ந்து அவர்களோடு நெடுநாள் யுத்தஞ் செய்தார். அங்கே அப்படி நிகழுங்காலத்திலே இங்கே புகழனார் தேகவியோகம் அடைந்தார். அப்பொழுது அவர் மனைவியராகிய மாதினியார் சககமனஞ் செய்தார். அவர்கள் பிள்ளையாகிய திலகவதியாரும் மருணீக்கியாரும் சுற்றத்தார்களோடு மிக மனக் கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத்தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்ய வேண்டும் அந்தியகருமங்களை முடித்தார்கள்.

இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்தகளத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம்பைப் பெற்றுக் கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதியாருக்குச் செவிப்புலப்பட அவர் "என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்து கொடுக்க உடன்பட்டிருந்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆதலால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணீக்கையார் வந்து, அத்திலகவதியாருடைய இரண்டு பாதங்களிலும் விழுந்து அழுது, "அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்றோ உயிர்வைத்துக் கொண்டிருக்கின்றேன்; அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்" என்றார். திலகவதியார் அதைக் கேட்டு தம்பியார் உயிரோடு இருக்க வேண்டும், என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேறொருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண்ணியம் உள்ளவராகி வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.

மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வ நிலையாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலைகளை வைப்பித்தார்; குளங்களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புலவர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்யத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். 

தம்முடைய தம்பியாராகிய மருணீக்கியார் கபடமார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவேசித்தமையை நினைந்து துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, வீரட்டானேசுரரை வணங்கி "சர்வாபீஷ்டவரதரே! தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின் தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைப் பறித்தெறிந்து விட்டு நின்று கொண்டே உண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழியிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதினின்றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்" என்று பலமுறை விண்ணப்பஞ் செய்தார். பரமசிவன் திலகவதியார்க்குச் சொப்பனத்திலே தோன்றி "தபோதனியே! நீ உன் மனக்கவலையை ஒழி; உன்னுடைய தம்பி துறவியாகி நம்மை அடையும் பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றான். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதினாலே அந்நியமதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினால் வருத்தி ஆட்கொள்வோம்" என்று சொல்லி மறைந்தருளினார்.

பரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவருடைய திருவருளினாலே, தருமசேனருடைய வயிற்றிலே கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனால் அவர் வருந்தி நடுக்கமுற்றுச் சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக்கைவந்த சமணசமய மந்திரோச்சாரணத்தால் தடுக்கவும், அச்சூலை நோய் தடைப்படாமல் மேற்கொண்டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக்கொண்டாற் போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, "இந்தச் சூலைநோய் போலக் கொடிய நோய் முன்னொரு போதும் கண்டறியோம் இதற்கு யாது செய்வோம்." என்று துக்கமுற்று, பின் கமண்டலத்தில் இருக்குன்ற ஜலத்தை அபிமந்திரித்துக் குடிப்பித்தார்கள். அதனாலே தணியாமையால் மயிற்பீலிகொண்டு காலளவுந் தடவினார்கள். அதினாலுந் தணியாமல், சூலைநோய், முன்னிலும் அதிகப்பட; தருமசேனர் அதைச் சகிக்கலாற்றாதவராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு "ஐயோ! இதற்கு நாம் யாது செய்வோம்" என்று மனங்கலங்கி, "இந்நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்" என்று சொல்லிக்கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயினார்கள். பின் தருமசேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்பினார். அப்பாகுகன் திருவதிகையிற் சென்று, அத்திலகவதியாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, "நான் உம்முடைய தம்பியார் ஏவலினால் இவ்விடத்துக்கு வந்தேன்" என்று சொல்ல; திலகவதியார் "தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா" என்றார்.
திலகவதியார் தம்பியாரை நோக்கி, தமக்குச் சொப்பனத்திலே பரமசிவன் அருளிச் செய்தபடி முடித்ததை நினைந்து, மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலி செய்துகொண்டு "அறியாமையினாலே பரசமயப் படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுபவிக்கின்ற தம்பியாரே! எழுந்திரும்" என்றார். தம்பியார் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலி செய்தார். திலகவதியார் "இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர்களுக்கு இன்னருள்புரியும் அக்கடவுளயே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்" என உபதேசித்தார். உடனே மருணீக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க; திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொடுத்தார். மருணீக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி, அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.

திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத் தோண்டியும் எடுத்துக் கொண்டு, திருக்கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக் கொண்டு போனார். மருணீக்கியார் வீரட்டானேசுரரைப் பிரதக்ஷிணஞ்செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று, அவருடைய திருவருளினாலே தமிழ்ச் செய்யுள் பாடுஞ்சத்தி உண்டாகப் பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், பிற்காலத்திலே அன்போடு ஓதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கிற்று, அப்பொழுது மருணீக்கியார் தமக்கு உயிரையுந்தந்து முத்தி நெறியையுந்தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, நிலத்திலே விழுந்து புரண்டு, "சமண சமயப் படுகுழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவியேன் சிவபெருமானுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின்பவாழ்வைப் பெறும்படி செய்த சூலைநோய்க்கு என்ன பிரதியுபகாரஞ் செய்வேன்" என்றார்.

சிவபெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெரு வாழ்வைத் தந்தருளினாரே" என்று களிகூர்ந்து அத்தன்மையனாகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு, வணங்கினார்

சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது. 
 இதன் பின்பும் இறவாத இவனை நஞ்சு கலந்த உணவளித்து கொடுமைப் படுத்தினர் துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனாருக்கு எதிரே யானையைக் கொண்டு வந்து விட்டார்கள். நாயனார் சிறிதும் பயமின்றி சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் "கொடிலப் புனலு முடையாரொருவர் தமர்நா, மஞ்சுவதியாதொன்று மில்லையஞ்ச வருவது மில்லை" என்று பாடியருளினார். யானையானது அந்நாயனாரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன் மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினாலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பை காட்டினார்கள்
அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினால் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஓடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது.

அதன்பின் மேலும் பல கொடுமையாக அரசன் கொலைத்தொழில் செய்வோரை நோக்கி, "தருமசேனனைக் காவலோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டி ஒரு படகில் ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத் தொழில் செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறுது மில்லாத திருநாவுக்கரசுநாயனாரைக் கொண்டு போய், அரசன் சொல்லியபடியே கடலிலே தள்ளிவிட்டுத் திரும்பினார்கள்.
சமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசுநாயனார் "அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக; அடியேன் எம்பெருமானைத் தோத்திரம் பண்ணுவேன்" என்று நினைந்து, "சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட; சமுத்திரத்திலே கல்லானது நாயனார்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிறோ அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனாரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான்

நாயனார் வீரட்டானேசுரர் மேலே பின்னும் பல திருப்பதிகங்களைப் பாடிப் பணிசெய்து கொண்டிருக்கு நாளிலே சமணர்களுடைய துர்போதனைக்கு இசைந்து தீங்கு செய்துகொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே வந்து, நாயனாரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித்தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய்யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலிபுத்திரத்திலிருந்த சமணருடைய பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகையிலே கொண்டுவந்து, பரமசிவனுக்கு குணபரவீச்சரம் என்னுங்கோயிலைக் கட்டினான்.

ஒருநாள் திருநாவுக்கரசுநாயனார் சோழமண்டலத்திலுள்ள சிவஸ்தலங்களெல்லாவற்றையும் வணங்கவேண்டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு விண்ணப்பஞ் செய்து, அவரோடும் திருக்கோலக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணினார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவ்விடத்தினின்றும் மீண்டருளினார்.

பாம்பு தீண்டிய பிள்ளையை பிழைக்கச் செய்தது
சிலநாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரினின்றும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக் கொண்டு, திங்களூரின் வழியாகச் சென்றார். செல்லும்பொழுது, அவ்வூரிலே அப்பூதியடிகணாயனார் என்பவர் தம்முடைய புத்திரர்களுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித்தும் தம்முடைய அன்னசத்திரம், கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே "இது திருநாவுக்கரசுநாயனாருடையது" என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று, அவருடைய வீட்டுக்கு எழுந்தருளினார். அப்பூதிநாயனார் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவியார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி, அங்கே திருவமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அந்நாயனார் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திரராகிய மூத்த திருநாவுக்கரசை நோக்கி, "தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்து கொண்டுவா" என்று சொல்லியனுப்பினார். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது; ஒரு பாம்பு அவரைத் தீண்டிற்று. அதை அவர் பேணாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும்படி குருத்தை அரிந்து கொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந்தலைக்கொள்கையால் மயக்கமடைந்து, வாழைக்குருத்தைத் தம்முடைய தாயார்கையிலே கொடுத்துவிட்டு, கீழேவிழுந்து இறந்தார். அது கண்டு அப்பூதிநாயனாரும், அவர் மனைவியாரும், "ஐயோ! இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை மறைத்துவைத்துச் சிறிதுந் தடுமாற்றமின்றி அப்ப மூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி! எழுந்து வந்து திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினால் அறிந்துகொண்டு, அவர்களுடைய அன்பை நினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து "ஒன்று கொலாமவர் சிந்தை" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். உடனே அப்புத்திரர் உணர்வு பெற்று எழுந்தார்

சிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீலநக்க நாயனாரும் சிறுதொண்டநாயனாரும் முருகநாயனாரும் மற்றையடியார்களும் அநுமதிபெற்றுக்கொண்டு போய்விட, திருவம்பர் என்னுந்தலத்தை அடைந்து வணங்கி, திருக்கடவூரிற் சென்று வீரட்டானேசுரரைப் பணிந்து, குங்குலியக்கலய நாயனாரால் அவருடைய திருமடத்திலே திருவமுது செய்விக்கப்பட்டு; திருக்கடவூர்மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத்தரித்து, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள்.


 சில நாட்கள் சென்ற பின் இருவரும் திருவீழிமிழலையை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள். சிலநாட் சென்ற பின், மழையின்மையாலும் காவேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனால் உயிர்களெல்லாம் வருத்தமுற்றன. அக்காலத்திலே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கும் திருநாவுக்கரசுநாயனாருக்குந் தோன்றி, "காலபேதத்தினாலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயினும், உங்களை வழிபடுகின்ற அடியார்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்றோம்" என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயிலின் கிழக்குப்பீடத்திலும் மேற்குப்பீடத்திலும், தினந்தோறும் படிக்காசு வைத்தருளினார். அவ்வடியார்களிருவரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங்கள் வாங்குவித்து, அமுது சமைப்பித்து, "சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசனம் பண்ணக்கடவர்கள்" என்று இரண்டு காலங்களினும் பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் பரமசிவனுக்குக் குமாரராகையாலும் பாடற்றொண்டுமாத்திரஞ் செய்கையாலும் தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்றார். 

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டியநாட்டிலே ஆருகதசமயம் பரம்பச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களை வென்று சைவஸ்தாபனஞ் செய்யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப்பொழுது திருநாவுக்கரசுநாயனார் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும் படி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைத் தடுக்க; திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.

பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார்.

பின்பு கடவுளுடைய திருவருளினால் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கிவந்து, நாயனார் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர் மேற் பூக்களைப் பொழிந்தும் அவரை அணைபவர்கள் போலச் சமீபித்தும், அளகம் அவிழ இடைநுடங்க ஓடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத்தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவருளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்தநிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணியிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகளை முன்னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவாமிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்" என்னுங்கருத்தால், "பொய் மாயப்பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார்.

திருச்சிற்றம்பலம்.