புதன், 30 செப்டம்பர், 2015

திருத்தல யாத்திரை ( பகுதி 2)


திருத்தல யாத்திரை ( பகுதி 2) சென்ற பகுதியில் திருஞான சம்பந்தர் கூறிய திருத்தலங்களின் சிறப்பும், அவ்வூர் இறைவர்கள் விபரங்கள் கண்டோம், இனி திருவருட் செல்வர் அப்பர் பெருமானார் கூறும் திருத்தல யாத்ததிரை தலங்களின் இறைவர் மற்றும் நமக்கு கிடைக்கும் பரிகாரங்கள் விபரத்தைக் காண்போம். பாடல் எண் : 1 தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லில் திகழ்சீரார் காளத்தியுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : தில்லைச்சிற்றம்பலம் , செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கொல்லி அறைப்பள்ளி , கோவல் வீரட்டம் , கோகரணம் , கோடிகா , முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி , முழையூர் , பழையாறை , சத்தி முற்றம் , குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . சிற்றம்பலம் , தில்லைக் கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம் ; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்றி இப்பெயர் அத் திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு , இறைவனது அருளாற்றல் . அம்பலம் - வெளி . எனவே , ` சிற்றம்பலம் ` என்பது , ` அருள்வெளி ` என்பதாம் . திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` எனத் தொடங்கி , முடிக்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` என முடித்தற்கும் இதுவே காரணம் ; அஃதாவது , அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம் என்க . தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப் பட்டதும் இதுபற்றியே என உணர்க ,. இறைவனது அருளாற்றல் அறிவே வடிவாய் இருத்தல்பற்றி , ` சிற்றம்பலம் ` என்பது, ` சீகாழி ` என்றல் மரபு . தில்லைச் சிற்றம்பலம் . செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கோடிகா , சத்திமுற்றம் இவை . சோழ நாட்டுத் தலங்கள் . தேவன்குடி - திருந்துதேவன்குடி . கோவல் - கோவலூர் ; கோவலூர்வீரட்டம் . நடுநாட்டுத் தலம் . கோகரணம் , துளுவநாட்டுத் தலம் . முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு ; இது , முருகன் பூண்டிக்கு அடை . முருகன்பூண்டி , கொங்குநாட்டுத் தலம் . கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற . காளத்தி , தொண்டைநாட்டுத் தலம் . கொல்லியறைப்பள்ளி , முழையூர் , பழையாறை இவை வைப்புத் தலங்கள் . ` முளையூர் பாடல் எண் : 2 ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங் கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங் காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் , ஆவூர் , பேரூர் , பிரமபுரம் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் , எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் , மேகங்கள் தங்கும் கழுக்குன்றம் , கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 3 இடைமரு தீங்கோ யிராமேச் சரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் சடைமுடி சாலைக் குடிதக்களூர் தலையாலங் காடு தலைச்சங் காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : இடைமருது , ஈங்கோய் , இராமேச்சரம் , இன்னம்பர் , ஏர்இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , தலையாலங்காடு , தலைச்சங்காடு , கொடுமுடி , குற்றாலம் , கொள்ளம் பூதூர் , கோத்திட்டை , கோட்டாறு , கோட்டுக்காடு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 4 எச்சி லிளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : எச்சில் இளமர் , ஏமநல்லூர் , இலம்பையங் கோட்டூர் , இறையான்சேரி , அச்சிறுபாக்கம் , அளப்பூர் , அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , ஆறை , கைச்சினம் , கற்குடி , கச்சூர் , ஆலக் கோயில் , கரவீரம் , காட்டுப்பள்ளி , கச்சிப்பலதளி , ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 5 கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரு மேம கூடங் கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : கொடுங்கோளூர் , அஞ்சைக்களம் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் , நீடூர் , நியமநல்லூர் , இடும்பாவனம் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , எறும்பியூர் , அழகிய ஏமகூடம் , கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 6 மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும் பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் கண்ணை களர்காறை கழிப்பா லையுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வக்கரை , மந்தாரம் , வாரணாசி , வெண்ணி , விளத்தொட்டி , வேள்விக்குடி , விளமர் , விராடபுரம் , வேட்களம் , பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை , பெண்ணாகடம் , பிரம்பில் , பெரும்புலியூர் , பெரு வேளூர் , கண்ணை , களர் , காறை , கழிப்பாலை , முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 7 வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதிகுடி விசய மங்கை வியலூர் ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா மலையாலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி கடல்நாகைக் காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : வீழிமிழலை , வெண்காடு , வேங்கூர் , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , ஆழி , அகத்தியான்பள்ளி , அண்ணாமலை , ஆலங்காடு , அரதைப் பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , பனங்காட்டூர் , காழி , கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் . பாடல் எண் : 8 உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : உஞ்சேனை மாகாளம் , ஊறல் , ஓத்தூர் , உருத்திர கோடி , மறைக்காடு , மேகங்கள் பொருந்திய பொதியமலை , தஞ்சை , வழுவூர்வீரட்டம் , மாதானம் , கேதாரம் , வெஞ்சமாக்கூடல் , மீயச்சூர் , வைகாவூர் , வேதீச்சரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சனூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 9 திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழும்அதிகை வீரட் டானம் ஐயா றசோகந்தி ஆமாத் தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : திண்டீச்சரம் , சேய்ஞலூர் , செம்பொன்பள்ளி , தேவூர் , சிரபுரம் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , கூந்தலூர் , கூழையூர் , கூடல் , குருகாவூர் வெள்ளடை , குமரி , கொங்கு , தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம் , ஐயாறு , அசோகந்தி , ஆமாத்தூர் , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் , ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் பாடல் எண் : 10 நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை தோணிபுரந் துருத்தி சோமேச் சரம் உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர் ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங் கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : நறையூரிலுள்ள சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , மேம்பட்ட துறையூர் , சோற்றுத்துறை , சூல மங்கை , தோணிபுரம் , துருத்தி , சோமேச்சரம் , உறையூர் , கடலை அடுத்த ஒற்றியூர் , ஊற்றத்தூர் , ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம் , கறையூர் , கருப்பறியல் , கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 11 புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர் கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : புலிவலம் , புத்தூர் , புகலூர் , புன்கூர் , புறம்பயம் , பூவணம் , பொய்கைநல்லூர் , வலிவலம் , மாற்பேறு , வாய்மூர் , வைகல் , வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் . திருச்சிற்றம்பலம் ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திருத் தல யாத்திரை


தற்காலத்தில் தான் ஆன்மிக சிந்தனைகள் வளர்ந்த நிலையில் திருத்தல யாத்திரைத் தலங்கள் நாம் பல யாத்ரா சர்வீஸ் கள் மூலம் பல தலங்களுக்கு சென்று வருகிறோம், இதற்கென்று பல வழிகாட்டிகள் இதற்காகவே உள்ளனர், அவர்கள் அந்தந்த யாத்திர தலங்களின் வரலாறுகளையும் பெருமைகளையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றனர். இந்த வசதிகள் இல்லாத இதிகாசங்களில் சிவத்தல ங்களின் சிறப்புக்களையும் அதன் பெருமைகளையும் சிவனடியார்களான நம் குருநாதர்கள், சமயக் குரவர்கள் நால்வரும் தமிழ்நாட்டிலுள்ள தும், வட நாட்டிலுள்ளதுமானதும், ஈழ தேசத்திலுள்ளதுமான சிவதலங்கைள தங்கள்பாடல்கள் வாய்லாகவும், அந்தந்த தலங்களுக்கு சென்று அங்குள்ள இறைவர்களையும், அவர்களால் நமக்கு கிடைக்கும் பரிகார நலங்களையும் கண்டு தங்கள் பாடல் வாயலாக தெளிவு படுத்தியுள்ளார்கள். நம் பாரத தேசத்திலுள்ள 242 சிவலாயங்களையும், அவைகள் காவிரிக்கரையின் தென்கரை, வடகரை,மற்றும் பாண்டிய நாட்டு தலங்கள் சோழ வள நாட்டுத்தலங்கள், பல்லவ தேச தலங்கள் என பிரித்து வகைப்படுத்தியும் உள்ளனர், அவர்கள் நமக்கு அறிவித்த தலங்கள் இன்றும் பாடல் பெற்ற தலங்கள் என்னும் வரிசையில் இயங்கி வருகின்றன. நல்ல அறநெறியில் ஈட்டிய செல்வத்தை கொண்டு நாம் , நம் மனைவி, மக்கள், சுற்றத்தோடும், அடியார்களோடும் திருக் கோவில்கள் சென்று வழிபடுதல் வேண்டும். " நாடும் நகரமும், நல் திருக்கோவிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்த பின் கூடிய நெஞ்சத்து கோயிலாய் க் கொள்வானே " என்று திருமூலர் அருளியுள்ளார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறியில் நிற்பவர்களுக்கும் அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்யும் இடம் திருக்கோயிலாகும், ஆக எல்லோருக்கும் உரிய இடமாக திகழும் திருக்கோயில்கள் கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் காலம் கடந்து நிற்கும் அற்புதப் பணியாகும். திருத்தலங்கள் ெசல்லும் நாம் நம்மால் இயன்ற திருப்பணிகளும்,உழவாரப்பணிகளும் செய்வது சைவரின் கடமையாகும்,. ஆக திருத்தல யாத்திரைகள் மேற்கொள்வதன் மூலம் இறைவனது பல்வேறு திருமேனிகளை அதன் பயனாக நம் உள்ளத்துள்ளே இறைவனைத் தொழும் பேறு பெறலாம். இத்தலங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை திருஞானசம்பந்தரின் திரு சேத்திரக்கோவை எ்ன்ற பதிகத்தின் வாயிலாக நாம் காண்போம் இரண்டாம் திருமுறை ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார் நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப் பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. பொழிப்புரை : பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும். பெருந்தலங்கள். குடந்தை, குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங் கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும் பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே. பொழிப்புரை : அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும். பாடல் எண் : 3 அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள் எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும் மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும் சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே. பொழிப்புரை : இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக. காடொன்பது - திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால் உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே. பொழிப்புரை : நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும். ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர் சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே பொழிப்புரை : சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக . மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும் இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும் கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே. பொழிப்புரை : வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும். மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும் கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ******** பொழிப்புரை : மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள். குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம் போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே. பொழிப்புரை : திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக. நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர் கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச் சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே. பொழிப்புரை : நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக. குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும் அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப் புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே. பொழிப்புரை : குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின். அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக் கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே. பொழிப்புரை : தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி பனனிரு திருமுறை பாடல்கள் தொகுப்பு (தொடரும்) மேலும் பலஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

பிறவி நோய் நீங்கும் வழி கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே விபூதி- ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது. " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா? பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும் உறங்குவதும் தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன தவறு? " பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா! தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர். நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும். நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் மன அமைதி இழந்து தவிக்கிறோம். மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது: திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில் ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில் அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே. பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

இறைவனுடைனான நமது நட்பு


இறைவனுடைனான நமது நட்பு நட்பு என்பது என்ன? எந்தவித பிரதிபலனும் எதிர் பார்க்காமல் நம் நண்பருக்கு உதவுவதும், அவர் துன்பத்தில் இருக்கும் போது ஓடி வந்து அவருக்கு ஆறுதல் கூறுவதும் அவர் வளர்ச்சி கண்டு நாம் பேரின்பம் கொள்வதுமே நட்பு எனப்படும். இறைவனுடன் நாம் நட்பு கொண்டால் தான் இத்தகைய நன்மைகள் கிடைக்கும். இறைவன் நமக்கு மிகச் சிறந்த நண்பன். இத்தகைய பெரிய உலகத்தையே நாம் அனுபவிக்க வழங்கிய அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை. மாறாக அவன் நமக்கு வழங்குவது ஏராளம். இறைவன் நாம் நண்பனாக ஏற்றுக் கொண்டால் நமது வாழ்க்கை வளமாக மாறும். அர்ச்சுனன் கண்ணன் நட்பு : அர்ச்சுனன் கண்ணனை தனக்காக நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். கண்ணன்நல்ல நண்பன். நல்ல நண்பன் என்ன செய்வான்? தன்னுடைய நண்பன் செருக்குக் கொள்ளும்போது அவனைக் கண்டித்து திருத்துவான். கண்ணன் அர்ச்சுனனை அப்படித் திருத்தினான். பாரதப் போரில் அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கு போர் மும்முரமாக நடக்கிறது, அர்ச்சுனன் பாணத்தால் கர்ணன் எங்கோ போய் விழுந்தான், அர்ச்சுணனுக்கு உடனே செருக்கு தலைக்கேறி விட்டது. அவன் உடனே கண்ணனைப் பார்த்து " பார்த்தாயா கண்ணா நான் அடித்த பாணத்தில் கர்ணன் எங்கு போய் விழுந்தான் " என்று எக்காளத்தோடு கேட்டான். கண்ணன் தேரில் மேல் பார்த்தான். ஆஞ்சநேயர் கொடியிலிருந்து சிரித்தார். அர்ச்சுனா ! சென்ற யுகத்தில் ஆஞ்சநேயரிடம் பேச வேண்டிய விசயம் பாக்கி இருக்கிறது. இதை பேசிவிட்டு வந்து விடுகிறோம் என்று தானும் தேரை விடடு இறங்கி, ஆஞ்சநேயரையும் அழைத்து சென்றான். திரும்பி வந்து பார்க்கும் போது அர்ச்சுனன் ஒருபுறம் தேர்ஒருபுறம் சாய்ந்து கிடக்கிறான். அப்போதுதான் அவனுக்கு புரிந்தது. அது அவன் சாமர்த்தியம் அல்ல , தனக்கு சாரதியாய் அமர்ந்திருக்கும் கண்ணன் அருளே என்று அவன் உணர்ந்தான். அர்ச்சுணன் மனம் தளரும் போதெல்லாம் அவனுக்கு நல்ல ஆறுதல் வழங்கியவன் கண்ணன். இறைவனாகிய கண்ணனை நண்பனாக பெற்றதால் அர்ச்சுனன் பெற்ற நன்மைகள் கணக்கற்றவை. இறைவனாகிய கண்ணனுடைய நட்பு அவனுக்கு கிடைத்ததால் கெளரவர்களின் தீய செயல்களிலிருந்து பாண்டவர்களை காத்தான். நல்லவர்களுக்கு எப்பொழுதுமே ஆண்டவனுடையநட்பும் ஆசியும் உண்டு. இதனால் மிகப் பெரிய லட்சியம் என்ற வெற்றி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதைச் சாதித்தாலும் இதை நான் சாதித்தேன் என்று கூறாமல் இறைவனுடைய அருளால் இச்செயல் வெற்றியாக முடிந்து என்று கூறுங்கள். தொடர்ந்து வெற்றிகள் உங்களை வந்தடையும்.எல்லாம் இறைவனால் நடைபெறுகிறது என்று நினைக்கும் போது நம் மனதில் ஆணவம் எழுவதில்லை. ஆணவம் எழாததால் அழிவும் ஆபத்தும் நமக்கில்லை. சுந்தரர் சிவபெருமான் நட்பு: அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானை தன் தோழராகவே எண்ணினார். அதனால் அவர் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார். அவர் பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சுந்தரர் தன் மனைவி பரவையார் மீது கொண்ட ஊடல் காரணத்தால், தன் நண்பனுக்காக பரவையாரிடமே தன் ஊடலை தீர்க்க தூதுவனாக அனுப்பினார், நண்பனுக்காக இறைவனே பரவையாரிடம் தூதுவனாகச் சென்று ஊடலை தீர்த்து வைத்தார். இத்துடன் இல்லாது சுந்தரர் வேண்டும் போதெல்லாம் பொன்னும் பொருளும் கொடுத்து இடர்களைந்தார். இந்து சைவ சமய மார்க்கத்தில் அவர் இறைவனிடம் கொண்டது சகமார்க்கம் என்பதாகும். நண்பன் என்பவன் நிஜத்தைத் தொடரும்நிழலைப் போன்றவன். நட்புக்கு கரும்பை உவமையாக சொல்கிறது நாலடியார்என்னும் நீதி நூல், கரும்பை நுனியிலிருந்து தின்றுபடிப்படியாக அதன் அடிப்பகுதியை சுவைப்பது போன்றதாகும். இது போனறுதான் பெரியோர்களின் நட்பு. இறைவனிடம் நாம் கொள்ளும் அன்பு என்னும் நட்பு அளவிடர்கரியது. நாம் வழங்கும் அன்பையே உணர்வான். இறைவன் அன்பே வடிவானவன். இதனால் வள்ளலார், இறைவனை " அன்பெனும் பிடிக்குள் அகப்படும்மலையே என்றார். திருமந்திரம் தந்த திருமூலரும் " அன்பே சிவம் " என்றார். ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட நட்பு : ஆண்டாள் பெருமாள் மீது கொண்ட காதல் எனும் நட்பு. ஆண்டாள் இறைவனுக்கு அனுதினமும் முதலில் தான் அணிந்து அழகு பார்த் பின்புதான் இறைவனுக்கு சார்த்தினார். ஆண்டாள் அவ்வாறு தான் அணிந்த பின்பு இறைவனுக்கு அணித்த மலர்மாலையில் முடி இருப்பதை அவருடைய தந்தையார் கண்டார். மனம் கலங்கினார், உடனே அந்த மாலையை மாற்றி புதிதாக ஒரு மலர்மாலையை பெருமானுக்கு சார்த்தினார். அம்மாலையை இறைவன் ஏற்க வில்லை. அவர் ஆண்டாள் தனக்கு அணிவித்த மாலையில முடி இருந்தாலும்அவளுடைய அன்பின் திறம் கருதி அதனையே தான் அணிந்து கொண்டார். இதனால் ஆண்டாள் " சூடிக்கொடுத்த சுடர்க் கொடி"என அழைக்கப் பட்டாள். கண்ணப்ப நாயனார் காளத்தி நாதர் நட்பு: கல்லும் கரையுமாறு கனி தமிழில் திருவாசம் பாடிய மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனாரை வியந்த பாராட்டுகிறார், அவர் இறைவர்பால் நட்புக்கு ஈடு இணை இல்லை அவர் அளவிற்கு அன்பு செலுத்துவர் யாரும் இல்லை என்கிறார். அன்பில் உச்சியில் கண்ணப்பர் நிற்கின்றார், இதனை அவர் " கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் " என்ற வரியில் பாராட்டுகின்றார். கண்ணப்ப நாயனாரை சமயக்குரவர் நால்வரும் நக்கீரர் முதலிய பெரும் புலவர்களும் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். கண்ணப்பர் தான் வேட்டையாடிய விலங்கின் மாமிசத்தை முதலில் தான் உண்டு, அது சுவையாக இருந்தால் மட்டுமே அதனை இறைவனுக்கு படைப்பார், தன்கு என்ன சாப்பிடப் பிடிக்குமோ அதனையே இறைவனுக்கு நிவேதனம் செய்தார் கண்ணப்பர், இவர் அன்புருவாகி இறைவன் மீது எல்லையற்ற அன்பைச் செலுத்தி ஆறு நாள் தொண்டு செய்து முக்தி பெற்றார். குகன் இராமபிரான் நட்பு : கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். உயர்ந்த அன்புக் கருவூலமாக விளங்கினான். இராமபிரானிடம் அன்பு செலுத்தியவர்கள் பலர். அனுமன், சுக்ரீவன், விபிஷணன், ஜடாயு,சபரி, சரபங்கர் பாரத்துவாசர் முதலியோர் ஸ்ரீராமரை நேசித்தார்கள். ஆனால் சிறுபயன்கூட கருதாமல் நேசித்தவன் குகன், நிஷ்காம்ய பக்தி செய்தவன், நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன். என்று குகனை சுக்ரீவன் வியந்து பாராட்டுமளவுக்கு சிறந்தவன் குகன். இராமனுக்கு சிறந்த நண்பனாக குகன் விளங்கினான். ஆசாரம், கல்வி, தகுதி முதலியஒன்றினாலும் உயர்வு இல்லாத வேடர் தலைவன் குகன். எனினும், அவனை தன் தம்பி என்று கூறி தழுவிக் கொண்டார் ஸ்ரீராமர். இவர்களுடைய நட்பை கம்பர் தன் பாடலில் " பொய்யில் உள்ளத்தன்" என்றும், இலட்சுமணன் இராமபிரானிடம் குகனைப் பற்றி கூறுங்கால், " சுற்றமுந் தானும் உள்ளந் தூயவன் தாயின்நல்லான் " என்று குறிப்பிடுகின்றார். இத்தகைவர்களிடமெல்லாம் அன்பு கொள்ள ஒரு தகுதி வேண்டும். இங்கே நட்பு என்பது மேலானது. பொருத்தமானது, அவசியமானதும் கூட, வாழ்க்கையில் எத்தனையோ உறவு முறைகள் இருந்தும், அத்தனையும் கடந்து நிற்பது நட்பு மட்டுமே. ஒருவர் தன் தாயிடம் சில விஷயங்களையும் தன் சகோதரிகளிடம் சில விஷயங்களையும் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களிடம் தனிப்பட்ட சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் ஒருவர் நண்பரிடத்தில் மட்டும் தான் அனைத்து விசயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் இது நட்பின் தனிச் சிறப்பாகும். ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்னும பழமொழி கூட நட்பின் சிறப்பை விளக்க எழுந்ததேயாகும். "நல்ல நண்பனைப் பெறாதவன் அந்தஇடத்தை காலியாகவே வைத்திருக்கிறான் என்பது பெரியோர்களின் ஆழமான கருத்து" இங்கே நீங்கள் கூர்ந்து சிந்திக்க வேண்டும். இந்தக் காலியான வெறுமையே அவனுடைய வாழ்க்கையில் ஒரு விரக்தியையும் வறட்சியையும் உண்டாக்கி விடும். வாழ்க்கையில் விரக்தியும் வறட்சியும் வந்து விட்டால் வாழ்வே வெறுத்து விடும். உள்ளன்போடு வாழப் பிடிக்காமல் ஏதோ பூமிக்கு பாரமாக வாழ வேண்டியது வரும். வரலாற்றில் கொடுமையானவர்கள் என்று சித்தரிக்கப் பட்டவர்கள் கூட ( ஹிட்லர், முசோலினி போன்றோர்) நண்பர்கள் தான், உண்மையான நட்புறவு இல்லாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். நட்பு என்பது எல்லாவற்றையும் கடந்தது. எந்தவித பிணைப்பும் இல்லாதது. இணைப்பது. நட்பு, நிர்ப்பந்தத்திற்குள் உங்களைத் தள்ளாது. கம்பனும் சடையப்ப வள்ளலும்கொண்டதும் நட்புதான். கண்ணன் எல்லோரிடமும் அன்பு பூண்டொழிகினான். ஆனால் அர்ச்சுனனையும் குசேலரையும் மட்டுமே நண்பர்கள் என்றான். இதற்கு என்ன காரணம்? நாம் அனைவரிடமும் பழக முடியும். பேச முடியும், ஆனால் ஓரிருவரை மட்டுமே நண்பராக கொள்ளமுடியும். அதுவும் தன்மேல் அளவு கடந்த அன்பு கொண்டோரிடம் மட்டுமே நாம் நட்பு கொள்ள முடியும். வள்ளலார் இறைவனிடம் வேண்டும் போது, நண்பர்கள் எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலாவாமை வேண்டும் " என்கிறார். கண்ணன் மேல் அளவு கடந்த பக்தியும நட்பும் கொண்டவன் அர்ச்சுனன். கண்ணனிடம் ஆலோசனை கேட்காமல் எந்த செயலையும் செய்வதில்லை. அர்ச்சுனன் மனம் தளர்ந்தபோதெல்லாம் அவனுக்கு ஆறுதல் கூறி, அவனை மீண்டும் நல்ல நிலைக்கு உயர்த்தினான் கண்ணன். மகாபாரதம் இதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துரைக்கின்றது. குசேலர் கண்ணன் நட்பு: குசேலர் ஓர் ஏழைப் பிராமணர். கண்ணன் அவருடைய பாலிய இளம் உயிர் தோழன். இருவரும் ஒரு சாலை மாணவரகள். கண்ணன் குசேலரை அளவு கடந்து நேசித்தான். குசேலரும் அப்படியே. குசேலர் கண்ணனை காண ஆடம்பர பொருள்கள் ஏதும் கொண்டு வரவில்லை. பாவம் ஏழை பிராமணரிடம் அதெல்லாம் ஏது? அவரே வறுமையின் கொடுமையால் வாடியவர் ஆயிற்றே. வறுமையின் கொடுமை தங்காமல் அவருடைய மனைவி அவருடைய பால்ய நண்பனான கண்ணனைக் கண்டு வரும்படி ஏதாவது பொருள் பெற்று வரும்படி அவலை மட்டுமே அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். தன்னுடைய நீண்டநாள் நண்பரான கண்ணனை பார்க்க வெறும் அவலை மட்டுமே கொண்டு போகிறோமே என்று கலங்கினார் குசேலர். எனினும் தன்னுடைய நண்பன் கண்ணன் தான் என்ன கொண்டு வந்திருக்கிறோம் என்று பார்க்காமல், தன்னுடைய நட்பை மிகவும் போற்றுவான் என்ற மனவுறுதியில் குசேலர் கண்ணனைக் காணச் சென்றார். குசேலரைக் கண்ட கண்ணன் தாய் பசுவைக் கண்ட கன்றுபோல துள்ளினான். தன் இருக்கையை விட்டு எழுந்து விரைந்து சென்று குசேலரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். குசேலரிடம் நலம் விசாரித்தான் கண்ணன். அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தான்.குசேலர் உறங்கும் போது இந்த கால்கள் எத்தனை மலைகளைக் கடந்து வந்தனவோ என்று மனம் உருகி அந்தக் கால்களை இதமாக பிடித்து விடுகிறான் கண்ணன். எத்தனை ஆழமான நட்பு கண்ணனுக்கும் குசேலருக்கும் இருந்த நட்பு!. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? தகுதியை எதிர்பார்த்து வருவது அல்ல நட்பு தன்மையை எதிர்பார்த்து வருவதே நட்பு " முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு " என்கிறார் வள்ளுவர் இந்த நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் தான் கண்ணனும் அர்ச்சுனனும், கண்ணனும் குசேலரும். அனைத்து உறவுகளின் கதாபாத்திர்தையும் நிறைவு செய்தான் கண்ணன். நண்பன் என்ற சொல் அன்பனாக மாறுகிறது. எல்லா உறவுகளுமே பின் விளைவை ஏற்படுத்தும், ஆனால் நட்பு அப்படியன்று. மனித வாழ்க்கையில் உள்ள உறவுகள் அனைத்தும் இறுதியில் கடனாக மாறும் நட்பு அப்படியல்ல. என்றுமே இளமை குன்றாமல் இருக்கும். நெல்லின் உமியானது நீக்கி விட்டு, மீண்டும் அரிசியை அந்த உமியில் போட்டால் முன்பிருந்த உறுதி அந்த நெல்லுக்கு இருக்காது. அது போல்,, நெருங்கி பழகிய இருவர், ஒரு நாளும் பிரியக் கூடாது. பிரிந்து மீண்டும் இணைந்தால் பழைய நட்பின் உறுதி இருக்காது. நட்பாக இருப்பதற்கு வயதும் இனமும் பொருளாதாரமும் கல்வியறிவும் ஜாதியும் மதமும் ஓத்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. இவை ஒன்று கூட இல்லாமல் இருந்தால் தான் நட்பு, அப்பர் பெருமான் வயதென்ன? ஞான சமபந்தர் வயதென்ன? ஒருவர் முதியவர், இன்னொருவர் இளையவர், இவர்களுடைய நட்புக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை. இருவரும் இணைந்தே பல சிவத்தலங்கள் சென்று பதிகங்கள் பாடினர். நட்பு வட்டம் மயமானது. ஆன்மிகத்தில் கண்ணன் கடவுள். அர்ச்சுனன் மனிதன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவருடைய நட்புத்தான் எல்லா புராண இதிகாச, வேத, உபநிடத, சாஸ்திர சம்பிரதாய உறவுகளின்உயர்வாக ஆழமாக போற்றப்படுகிறது. கண்ணன் பரமாத்மா அர்ச்சுனன் ஜீவாத்மா இது குரு சிஷ்ய உறவு அல்ல, குரு சிஷ்ய உறவுக்குக்கூட ஒரு இடைவெளி இருக்க் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது, "யாரும் யாரைவிடவும் குறைந்தவர்கள் அல்ல " என்று குர்ரான் கூறுகிறது. ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் காலில் விழ வேண்டியதில்லை என்கிறது இஸ்லாம் சமம் என்பது பொன்னைக் கொண்டோ, பொருளைக் கொண்டோ நிர்ணயிப்பது இல்லை. ஆன்ம அன்பைக் கொண்டு நிர்ணயிப்பது, பரமாத்மாவாகிய இறைவன், ஜீவாத்மாவாகிய மனிதனைப் படைக்கிறான். ஜீவாத்மாவானது எல்லா உயிர்களையும் தன்னைப் போன்றே எண்ணி, யாருக்கும் துன்பம் ஏற்படுத்தாமல், மற்றவர்களுக்குத் தொண்டு செய்யும் போது மகாத்மாவாக உயர்கிறது. அண்ணல் காந்தியடிகள் அப்படி உயர்ந்தவர்கள் தான்.அவர் தன்னைப் போன்றே பிற உயிர்களையும் எண்ணியவர். பரமாத்மா, ஜீவர்மா இந்த இரண்டு ஆன்மாவுமே தெய்விக வல்லமையி நிரம்பியவைதான். இரண்டும் தராசின் இரண்டு தட்டுகள் என்றால், ஒன்று உயர வேண்டும் என்றால் மற்றொன்று தாழ வேண்டும். அப்படி தாழ்கின்ற தட்டில் ஏதாவது ஒரு சுமை ( கனம்) இருக்க வேண்டும். மேலே இருக்கின்ற தட்டுகாலியாக இருக்க வேண்டும். நிர்வாணம் என்கிற தட்டு மேலே இருக்கிறது. அகங்காரம் என்கிற காலித்தட்டு கீழே இறங்குகிறது. கீழே ஒரு தட்டு இறங்காது போனால் மேலே ஒரு தட்டு செல்லாது. இறைவன் என்ற தட்டு உங்கள் சுமைகளை வாங்கி கொண்டு உங்களை மேலே உயர்த்துகிறது. தன்னை எளிமையாக தாழ்த்திக் கொள்கிறது. இறைவன் தன்னை அனபர்களுக்கு முன் எளிமையாக்கிக் கொள்ள பெரிதும் விரும்புகிறான். இறைவனை நோக்கி பக்தன் ஓர் அடி எடுத்து வைத்தால் பக்தனை நோக்கி இறைவன் பத்தடி எடுத்து வைப்பான். தன்னுடையஅன்பர்கள் செய்யும் செயலை இறைவன் பிரியமுடன் ஏற்றுக் கொள்கிறான். அன்புதான் அவனுக்கு முக்கியம். சாக்கிய நாயனார் மனதில் அன்பு கொண்டு சிவபெருமானுக்கு கல்லால் அர்ச்சனை செய்தார். அது சிவபெருமானுக்கு பூ மாலையாக ஆனது. மன்மதன் மனதில் அன்பில்லாமல் மலரையே அம்பாக சிவபெருமான் மேல் எய்தான். அந்த மலர் சிவபெருமானை எரிச்சலூட்டியது. உடனே அவர் தன் நெற்றிக் கண்ணால் எரித்தார். சிவலிங்கத்தில் இரத்தம் வடிவதைக் கண்ட கண்ணப்பர் தன்னுடைய காலை சிவலிங்கத்தின் மீது வைத்து தன்னுடைய கண்ணை தோண்டி அந்த சிவலிங்கத்தில் பொருத்தினார். கண்ணப்பர் அன்பினால் செய்த இச்செயல் சிவபெருமான் விரும்பி ஏற்புடையதாயிற்று தன் மனைவி பரவையார் தன்னிடம்கொண்ட ஊடலை தவிர்ப்பதற்கு சிவபெருமானையே தூதாக அனுப்பினார் சுந்தரர். சிவபெருமானும் பரவையாரிடம் நண்பனுக்காக தூது சென்று பிணக்கை நீக்கினார். எனவே, அன்பர்களுக்கு எளிமையானவன் இறைவன். மகாபாரதப் போரில் கண்ணன்அர்ச்சுனனுக்கு தேர்ஓட்டும் சாரதியாக பணி செய்தான். இது அர்ச்சுனின் மேல் கொண்ட நட்பின் சிறப்பு, நட்பு மட்டுமே இது போன்று பணியாளராக இதைச் செய்யும். கடவுளை நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் " உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும் ". தகவல் : ஆன்மீகம் அறிவோம் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

குருவிடம் சரணடைதல்


குருவிடம் சரணடைதல் குரு என்பது தமிழ் சொல், குரு என்ற சொல்லுக்கு ஓளி என்பது பொருள். ஒளியற்ற தன்மை குருடு எனப்படும். அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றி, மெஞ்ஞானம் என்னும் ஒளியை ஏற்றி வைப்பவரே "குரு" எனப்படுவார்.. அஞ்ஞானம் என்பது என்ன? மெஞ்ஞானம் என்பது என்ன? இறைவனை அறிய மறுப்பது, இறைவனை நம்பாதது அஞ்ஞானம். இறைவனை அறிய முற்படுவது,இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்புவது மெஞ்ஞானம் எனப்படும். தாய் சொன்னால் தான் ஒரு குழந்தைக்கு தந்தை யார்? என்பது தெரிவது போல், குருவின் மூலமாகத்தான் ஒரு சாதகன் இறைவனை அறிய முடியும், உணர முடியும். அத்தனை முக்கியமானவர் குரு. குருவிற்கு இந்து சமயம் மிக உயர்ந்த இடத்தை வழங்கியுள்ளது. குருவின் சொல்லைத் தட்டுபவன் நரகம் எய்துவான் என்றும் இந்து மதம் கூறுகிறது. இதுகாச காலத்தில் பஞ்சபாண்டவர்களும், கெளவர்களும் துரோணாச்சாரைக் குருவாகக் கொண்டு சகல கலைகளையும் கற்றார்கள், இருப்பினும் தருமத்தைக் கடைப்பிடித்த பாண்டவர்கள் பக்கம் வெற்றி கண்டது. துரோணரை மானசீகமாகக் குருவாகக் கொண்டுதினமும் சகல கலைகளும் கற்றான் ஏகலைவன் அவனும் சிறந்து விளங்கினான். எனவே ஒருவன் குருவை நம்பி, அவரிடம் சரணாகதி அடைந்து ஒன்றைக்கற்றுக்கொண்டால் சிறந்து விளங்குவான் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால் நமக்கு கிடைக்கும் குரு உண்மையான குருவாக இருக்க வேண்டும். இதில் உண்மைக்குரு, போலிக்குரு என உண்டா? என்றால் கண்டிப்பாக உண்டு என்ற பதில்தான் கிடைக்கும். இரவு, பகல், இன்பம் - துன்பம், இனிப்பு - கசப்பு என்பது போல் உண்மை என்று உண்டெனில் போலி என்று ஒன்று இருக்கத்தானே செய்யும். உண்மையான குருவைத் தேடி அவரிடம் நாம் யோகம் பயில வேண்டும். போலிக் குருவை தங்களுக்கு வழிகாட்டியாக கொண்டவர்கள் பெருந்துன்பம்அடைவர். போலிக்குருவின் தன்மையை திருமூலர்: "குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழியினில் விழுந்த வாறே." என்று தன்னுடைய திரு மந்திரத்தில் விளக்கியுள்ளார். குருடன் ஒருவன் எப்படி இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியும்? குருட்டாம் போக்கில் நடந்தால் இருவரும் குழியில் விழுந்து இடர்பட வேண்டியதுதான். எனவே , உண்மைக்குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் யோகம் பயிலுங்கள். அவர்வழி நடக்க பயில வேண்டும். குடிமக்கள் செய்யும் பாவம் அரசனைச் சேரும், மனைவி செய்யும் பாவம் கணவனைச் சேரும், சீடன் செய்யும் பாவம் குருவைச் சேரும். எனவே நல் சீடன் பாவம் செய்யக்கூடாது. குரு மிகவும் மேன்மையானவர், அதனால் தான் அவரை மாதா, பிதாவிற்கு அடுத்த நிலையில் வைத்தார்கள்.தெய்வத்திற்கு அடுத்த ஸ்தானத்தை குருவிற்கு வழங்கினார்கள் பெர்யோர்கள்.தன்னிடம் பயிலும் சீடனை குரு யோக்கியனாக ஆக்க வில்லை யெனில், அவன் செய்யும் பாவங்கள் யாவும் குருவிற்கே சென்றடையும் என்கிறது சாஸ்திரங்கள். சீடன் ஒருவன் குருவிடம் பயிலும் போது, அவன் குருவிற்கு வழங்கும் சன்மானம் குருதட்சனை எனப்படும், இதனையே உபநிஷத்தில் குருதட்சணை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. தட்சணை என்றால் என்ன? நாம் ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்காமல், அவரிடமிருந்து எந்த பிரயோஜனத்தையும் அடைந்து விட முடியாது. எந்தப் பொருளானாலும் அதற்கு விலை கொடுத்து வாங்கினால் தான் அது நம்மிடம் நிலைத்து நிற்கும். குரு தான் கற்றுக் கொடுத்த கலைக்காக மாணவன் - சீடன் அவருக்கு கொடுக்கும் காணிக்கையே குரு தட்சணை எனப்படும். இதனையே உபநிஷத்தில் ஒரு குருவானவர் சிஷ்யன் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவனுக்கு பண்ணும் உபதேசம் குறித்தும் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அதில் உண்மை பேசு, தர்மத்தின் படி நட, தெய்வத்திற்கு பிதாவுக்கு குருவிற்கு செய்ய வேண்டிய நற்செயல்களை ஒரு நாளும் விடாதே. என்று விளக்கியுள்ளது. நல்ல குருவானவர் ஒரு மாணவனுக்குவாய்க்கப் பெற்றால் அது அவன் செய்த பூர்வ புண்ணிய செயலாகும். ஆன்மீகத்தில் தங்களுக்கு சரியான உண்மையான குரு வாய்க்கப் பெற்றால் பரிணாமத்தின் படி அவர் அடிதொட்டு படி ஏறி உயரே பயணிக்க வேண்டும்.பாதையில் மேலிருந்து கீழ், கீழ் இருந்து மேல் என்று ஒன்று இருப்பதில்லை. அது தொடங்குபவரைப் பொறுத்தது. ஒரு பாதை தொடக்கமாக இருப்பதும், முடிவாக இருப்பதும் உங்களைப் பொறுத்ததே. நீங்கள் குருவை எப்படி கண்டு உணர்ந்தீர்களோ, அவர்இறுதிவரை அப்படியே இருப்பார், மாற்றம் என்பது உங்களிலேயே தோன்றும். இந்த மாற்றம் முன்னேற்றப் பாதையில் இருக்க வேண்டும். இந்த பயணத்தில் முடிவுகளை நீங்களே எடுக்க முடியாது. இது இருவர் சார்ந்து பயணிக்கும் மூன்றாவது ஒன்றினைத் தேடி பயணிக்கும் பயணம். இதில் முடிவுகளை குருவிடம்விட்டு சரணாகதி அடைவதே நீங்கள் செய்ய வேண்டியது. சரணாகதி தத்துவம் என்பது என்ன? தன் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு இறைவா, என் செயலாவது யாதொன்றும் இல்லை, எல்லாம் உன் செயலே என்று இருப்பது தான் சரணாகதி எனப்படும். மனிதன் எப்பொழுது இறைவனை சரணடைகிறான். தன்னால் ஆன முயற்சி களை எல்லாம் செய்து விட்டு, தன்னால் இனி ஒன்றும் செய்ய இயலாது , இனி இறைவன் தான் என்னைக் காப்பாற்ற வேண்டம்என்று நினைக்கும் போதுதான் மனிதன் இறைவனை சரணடைகிறான். இதனை விளக்கும் முகமாகத்தான் மகாபாரத்தில் பாஞ்சாலியும், கஜேந்திரன் என்ற யானையும், தங்களால் ஒன்றும் முடியாது என உணர்ந்த பின் கண்ணா- ஆதிமூலா என்று இறைவனிடம் சரணாகதி அடைந்ததை காட்டுகிறது. எனவே, குருவிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பவர்களை அந்த குரு உலக ஆசைகளிலிருந்து விடுவித்து அவருக்கு பிரம்மத்தை அறிய வழிகாட்டுவார் என்பது உண்மையாகும். திருச்சிற்றம்பலம் .... ஓம் நமச்சிவாயம் மேலும்பல ஆன்மிகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வியாழன், 24 செப்டம்பர், 2015

பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு


பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் ! அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த கால், கூன்,குரடு, செவிடு, நொண்டி என உடல் ஒச்சமின்றி பிறத்தல்அரிது. இவ்வாறு கிடைத்த / அளித்த எம்பெருமான் அவர்களின் அருளால் கிடைத்த /இம்மானிட பிறப்பின் அங்கங்களை அவனை வணங்க பயன்படுத்தாது வீணே வளர்த்து என்ன பயன் எனவே நாம் பிறந்த பிறப்பின் முழுப் பயனை பெறவும், இன்னும் பிறவாத நிலை பெறவும், நம் உடல் அங்கங்களை அவனை தொழுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று திருவருட் செல்வர் திரு நாவுக்கரசர் பெருமான் தனது பதிகம் நான்கில் அங்கமாலை என்ற பதியத்தின் வாய்லாக நமக்கு அற்புதமாக தெரிவித்துள்ளார், தலை ; தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய் தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக. தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது. இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங் கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற (பிச்சைப்) பாத்திரம். சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறு கோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. `தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே` (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?` ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே. அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை (பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. கண்கள்; கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள் காட்சியின் பயன், காணும் வினைமுதல்வனுக்குத் தீர்த்தற்கு அரியதொரு துயரின் நீக்கம். உயிர்கள் அடிமைகள். அவை உடையவனைக் காண்டலின் பயன் தம் பிறவி நீக்கம். அப்பெருந் துன்பம் போக்கவல்லான் பிறவியில்லாதவனாதல் வேண்டும். `பிறவா யாக்கைப் பெரியோன்` இறவாமை திண்ணம். அது நஞ்சுண்டும் சாவாமையால் உறுதியாயிற்று. ஆகவே, "கண்காள் கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னைக் காண்மின்கள்` என்றருளினார். உயிர்களுடைய பிறப்பிறப் பாட்டம் ஒழிய உடையவனது அருளாட்டத்தை என்றும் மறவாது காண்டல் வேண்டுதலின், `எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்கள்` என்றருளினார். `குனித்த புருவம் முதலிய ஐந்தும் திருவாய் பவளத் திருமேனி இரண்டும் ஆகிய ஏழும் காணப்பெற்றவர்க்குப் பிறப்பில்லை என்பதுறுதியாதலின், மன்றாடற் காட்சி அன்றாடம் பெற்று உவக்க, நீங்கும் பிறவியும் நீங்காதிருக்க வேண்டும் என்று வெளியிட்டருளினார். `சிற்றம்பலத் தரன் ஆடல் கண்டாற் பீழையுடைக் கண்களால் பின்னைப்பேய்த் தொண்டர் காண்பதென்னே` (தி.4 ப.80 பா.1) ஆடல் அன்றிக் கண்கொண்டு காண்பது யாதும் இல்லை. செவி ; செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள். செவிகாள்! சிவனும், எம் இறையும், செம்பவளமும் எரியும் போன்ற மேனிப் பிரானும் ஆகிய முழுமுதல்வன் திறத்தை எப்போதும் கேண்மின்கள். குறைவிலா மங்கல குணத்தன் திறம் கேட்டலே முழுப்பயன் ஆகிய துன்ப நீக்கமும் இன்பப் பேறும் விளைக்கும் என்பார் சிவன் என்றும் இவ்வடிமையின் செவிகள் ஆண்டவன் திறமே கேட்கற்பாலன என்பார் `எம் இறை` என்றும், கண்ணுக்குப் பிடிக்காதவர் திறத்தைக் காது கேளாது; கண் களிக்கக் காணத்திகழ்வார் திறத்தையே காதுகள் கேட்க விரும்பும் ஆதலின், `செம்பவளம்போல், எரிபோல் மேனி` என்றும், உயிர்க்குயிராய் நின்று என்றும் பிரியாதவனது திறத்தைக்கேட்டலே உயிர்க்கு உய்தி தருமென்பார், எப்போதும்` என்றும், கற்றலிற் கேட்டலே நன்று என்பார் (முன்னும், பின்னும்) கேண்மின்கள்! என்றும் பணித்தருளினார். ஆளாகாதும், ஆளானாரை அடைந்துய்யாதும், மீளா ஆட்செய்து மெய்மையுள் நில்லாதும் வாளா மாய்ந்து மண்ணாகிக் கழியும் தொழும்பர் செவி தோளாத சுரை (தி.5 ப.90 பா.3). `இளையகாலம் எல்லாம் எம்மானை அடைகிலாத் துளையிலாச் செவி(த் தொண்டர்)` (தி.5 ப.66 பா.3) எனப் பழிக்கப்படாமை வேண்டி, செவிகாள் பிரான் திறம் எப்போதும் கேண்மின்கள் என்றருளினார். மூக்கு ; மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை மூக்கே நீமுரலாய் மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக. மூக்கின்றொழில். உயிர்ப்புக்கால் (பிராணவாயு) மூக்கின் வழி வெளிப்படுவது. அதனியக்கம் இன்றேல், உடலின் நீங்கும் உயிர். உடல் முதுகாட்டிற் கிடத்தியெரிக்கப்படும். அங்கு உறையும் முக்கண்ணனை உடலோடிருக்கும்போதே முரன்று கொண்டிருப்பின், அவனருளால், இறவாது வீடு பெற்று இன்புறலாம் என்பார் `முதுகாடுறை முக்கண்ணனை மூக்கே நீ முரலாய்` என்றார். மூக்குவழி யியங்கும் மூச்சு, உலகில் இரவியும் திங்களும் எரியும் இன்றேல் நின்றொழியும். அம் மூன்றனையும் இயக்கியும் உருவெனவும் கண்ணெனவும் கொண்டும் உயிர்கட்கருளும் இறைவனை முரல்வாய் என்பார் `முக்கணனை` என்றார். இறைவனைக் குறித்த தாகலின், வாக்கால் உரைத்தபடி விளங்கிக் கொள்ளும் நிலைமை மூக்கால் முரன்றாலும் அவனுக்கு இனிது விளங்குவது இயல்பும் எளிமையும் ஆம் என்பார், `வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்` என்றார். சொல்லும் பொருளும் ஆனான் அம்மை யப்பனே எனலும் அதனால் விளக்கலாயிற்று. `சிவ சிவ` என்னும் வாக்கே அவன் ஆன்மாக்களிடத்திலிருந்து நோக்கியிருக்கின்றான். அவன் அத்திருவைந்தெழுத்து நினைவோடு, வாயால் உரையாது மூக்கால் முரல்கினும், அவனது நோக்கம் அதுவாதலின், மங்கை மணாளனாம் தனது மங்கலகுண நிறைவாகிய சிவாநந்தாநுபவத்தை வழங்குவதில் ஒருபோதும் தவறான் என்பார், `மங்கைமணாளனை முரலாய்` என்றார். மணாளன் நோக்குவது வாக்கின் பொருளையுடைய மூக்கின் முரற்சி. மங்கை நோக்குவது அம்முரற்சியாயமைந்த வாக்கு என்பாராய் `மூக்குவாய் செவிகண்ணுடலாகி.....காக்கும் நாயகன் கச்சியேகம்பனே` என்புழி மூக்கினை முற்கூறினார். அதன் கருத்துணர்க. வாக்கே நோக்கிய மங்கைமணாளன், உயிர்ப்பாய்ப் புறம் போந்தும் அகம்புக்கும் உயிரினுள்ளே நிற்பான். அவ்வீசனுக்கு அவ்வுயிர்ப்பியங்கும் வாசலாதல் தோன்ற `மூக்கே` என்றார். `மூக்கினால் முரன்றோதி அக்குண்டிகை தூக்கினார் குலம்` (தி.5 ப.58 பா.2). `ஞமணஞாஞண ஞாண ஞோணமென் றோதி` (தி.7 ப.33 பா.9) வீண்காலம் போக்குமவர் போலாது முக்கணனை முரல்வாய் என்றார். நோக்கம் பிறிதொன்றன்கண் இன்றி வாக்கின்கண்ணதேயாதலின், மூக்கின் முரற்சியும் வாக்கின் வரும் விளக்கத்தை விளைவிக்கும் என்பார் மூக்கே நீ முரலாய் என்றார் எனலுமாம். வாய் ; வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய் வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த` அத் தலைவனையே (தி.5 ப.90 பா.7). `வாழ்த்த வாயினை வைத்தார்` (தி.4 ப.30 பா.3) என்றுணர்ந்து வாழ்த்திப் பயின்ற தமது பெருமை தோன்ற `வாயே` என விளித்தார். இருந்தமிழே படித்தும் இறைவனுக்கு ஆளாகும் பேற்றினை உறாத ஆயிரம் சமணர் வாய் அவர்களை அழித்தற்குப் பயன்பட்டன. (தி.5 ப.58 பா.9) அவ்வெவ்வாய் போல்வது அன்று தம் செவ்வாய் என்பது தோன்ற விளித்ததுமாம். வாழ்த்துவதன் பயன் தமக்கு வாழ்ச்சி யெய்துதல். வாழ்த்தப் பெறுவோனால் வாழ்த்துவோற்கு வாழ்ச்சியுறாதேல் அவ் வாழ்த்துப் பயனிலாததாம்.`வாயே வாழ்த்து` என்று விளித்து ஏவியருளினார். `நாக்கொண்டு பரவும் அடியார்வினைபோக்கவல்ல புரிசடைப்புண்ணியன்` `நாக்கைக்கொண்டு அரன்நாமம் நவில்கிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் வாயே வாழ்த்து என்றார். நெஞ்சு ; நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய் நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக. பிஞ்ஞகன் பேர் மறப்பன்கொலோ என்று கிடந்து மறுகிடும் உள்ளம் என்பார் `நெஞ்சே?` என்று விளித்து `நீ நினையாய்` என வினாக்குறிப்புணரக் கூறினும், `விச்சையும் வேட்கையும் நிச்சல் நீறணிவாரை நினைப்பதே` (தி.5 ப.92 பா.8) `வந்தவரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார்` (தி.6 ப.16 பா.9) அவரை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்` `கவலைக்கடல் வெள்ளத் தேனுக்கு விளைந்த தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல்` (தி.5 ப.91 பா.9) `உள்ளமே தகழி` (தி.4 ப.75 பா.4) `நெஞ்சத்துள் விளக்கு` (தி.4 ப.29 பா.2) `சிந்தையுட் சிவம் ` (தி.4 ப.29 பா.4) (தி.5 ப.48 பா.5) `நினைப்பவர் மனம் கேயிலாக் கொண்டவர்` (தி.5 ப.2 பா.1) `என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையான்` (தி.6 ப.66 பா.7) கை தொழுவார் மனம் ஆலயம் (தி.4 ப.17 பா.8) நெஞ்சினால் நினைந்தேன் நினைவெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின (தி.5 ப.44 பா.4) `துன்பமெலாம் அறநீங்கிச் சுபத்தராய்....ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆம் அவர்க்கு அன்பர்` என்ற அநுபவஞான சொரூபராதலின், தம் நெஞ்சம் செய்த மாதவத்தைத் தாமே வியந்து `நெஞ்சமே எந்த மாதவம் செய்தனை` (தி.5 ப.7 பா.2) `என்னை மாதவம் செய்தனை` (தி.5 ப.77 பா.2) எனப் போற்றும் பெருமை தோன்றவும் `நெஞசே?` என்று விளித்தார். வேறு எப்பொருளை நினைப்பினும் வெப்பமே மேவும்; தட்பம் சாராது; அம்மையப்பனையே நினைத்தாற்றான் பிறவிக் கோடையையும் தீர்க்கும்; பேரின்பக் குளிர்ச்சியையு முண்டாக்கும் என்பார் `மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். மலைமங்கை தன் நினைப்பால் தனது தாட்சாயணி என்ற பெயர் நீங்கினாற்போல், நின் நினைப்பால் நினது சீவன் என்ற பெயர் நீங்குவாய்; அவள் அவனை அடைந்தவாறு அடைந்தும் இடையறா தின்புறுவாய் என்பார் `(மலைமங்கை மணாளனை) நீ நினையாய்` என்றருளினார். நினைக்க முயலும் முன்னரே பத்திவெள்ளம் பரந்தது (தி.5 ப.44 பா.6) என்பார் `நினையாய்` என விரைவித்தார். `சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி உயக்கொளும் காண்` (தி.5 ப.71 பா.9) என்பார், விரைவுக் குறிப்புணர, `நெஞ்சே நீ நினையாய்` என்று அருளினார். கைகள் ; கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர் கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக. `தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரைக் கீழ்க்கணக்கில் எழுதும் (தி.5 ப.21 பா.8) மெய்மையை அறிந்து, சலம் பூவொடு தூபம் மறந்தறியாராய் வழிபட்டு வந்து, நகமெலாம்தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி, முகமெலாம் கண்ணீர்வார முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலாற் கோயில் இல்லை (தி.4 ப.40 பா.8) அம்போது எனக்கொள்ளும் (தி.4 ப.12 பா.10) எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் என்று உணர்ந்து தெளிந்த நம் கைகளுக்குத் தாம் கூப்புவித்தல் வேண்டாதே அவையே கூம்பும் என்பார் அப் பயிற்சி மிகுதி தோன்றக், `கைகாள்` என்றார். குவிதலும் தொழுகையும் தம் கைகளுக்குச் சிவபிரான்கண்ணவேயன்றிப் பிறாண்டில்லை என்பார் `கூப்பித் தொழீர்` என்றார். ஐம்பொறிகளையும் அடக்காதவனாதலின், பாம்பணை மேல் தூங்கும வனானான் மாலோன்; அவற்றை அடக்கும் ஆற்றலை, உடலிற் பாம்பினை அணிந்தும் தலைமேல் ஐந்தலைப் பாம்பு ஏந்தியும் தோற்றினான் நீற்றினை நிறையப்பூசிய நின்மல சிவன்; நீர் கைகூப்பித் தொழலால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை; அவன் `கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைதெழுவாரையும் வாடலன்` நும்குவித்தலும் தொழலும் நுமக்கே பயன் விளைவிப்பன என்பார் `கைகாள் கூப்பித்தொழீர்` என்று மீண்டும் தூண்டினார். ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை மனத்தே வைத்து `நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும்` (தி.5 ப.82 பா.6) `புரமூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீரும்` `ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை` (தி.5:- ப.82 பா.5, ப.83 பா.9). `பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் `தூவிநின்று கூப்பித் தொழீர்` என்றார். `கழலடியே கைதொழுது காணினல்லால் மற்றோர் களைகண் இல்லீர்` என்பார் `தொழீர்` என்றார். ஆக்கை (உடம்பு); ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ் ஆக்கை யாற்பயனென் எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்? தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம்தமக்கு வாய்த்த உடம்பின் பயன்? `கொடுமாநுடமேனும் இறைவன் கழலேத்தியிருக்கில் ஒரு குறைவும் இல்லோம்` (தி.5 ப.39 பா. 5) குனித்தபுருவம் முதலியவற்றைக் காணப்பெறாத மனித்தவுடல் அநித்தவுடலே, உடையானிடத்தில் நிலாவாத நெஞ்சத்தை யுடைய புலாலுடம்பு நிற்பது ஒத்து நிலையிலாதது. இந் நிலையிலா ஆக்கை நிற்கும்போதே இதனால் ஆகும் பயனை விரைந்து பெற்றுக் கொள்வதே அறிவுடைமைக்கு உகந்தது. அங்ஙனம் பெறாதார்க்கு ஒரு பயனும் இல்லை என்பார், `ஆக்கையால் பயன் என்` என்றார். ஊனாலும் உயிராலும் உள்ள பயன்கொளநினைந்து வானாறு பொதி சடையார் மலரடி வணங்குந் தமக்குத் துணையாய் நின்றமை தோன்ற `ஆக்கை` என்றருளினார். ஆக்கை பெற்றது மீண்டும் அதனை ஆக்கை ஒழித்தற்கே. அது நிகழ, உயிரைச் சாரும் கட்டினை ஒழித்து வீடுநல்குவது முழுமுதற் பொருளே என்பார் `அரன்` என்றார். எடுத்த உடலாய், `ஒருகாலும் திருக்கோயில் சூழா`தேல், அவ்யாக்கை பெயர்த்தும் போக்குவரவு புரியும் உயிர்க்குச் சுமை என்பார் `வலம் வந்து போற்றி என்னாத இவ்வாக்கை` என்றார். `பூக் கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்` `உண்பதன்முன் அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணார்` `நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்` நெஞ்சம் தன்னுள் (- அடைந்தார்க்கு இன்பங்கள் தரும் தன்னுள்) நிலாவாததும் நிற்பது ஒத்து நிலையிலாததுமாகிய புலாலுடம்பிலும் புகுந்து நின்ற அக்கற்பகத்தைத் தலையாரக் கையாரக் கும்பிட்டு வாயார நாவாரப்பாடிச் சித்தமாரநினைந்து போற்றி அலறாநிற்றலைச் செய்யாதார் யாவர்க்கும், அவ்வுடம்பால் ஒரு பயனும் இல்லை என்பார் 'பூக் கையாலட்டிப் போற்றியென்னாத இவ்வாக்கையாற் பயன் என்' என்றார். வழிபாடில்லையேற் பயனிலாத யாக்கை யென்பது கண்கூடாம் என்பார். கால்கள் ; கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென் . நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்? இவ்வுடம்பின் கால்கள், திருக்கோயில் சூழாக் கால்களாய் அவ்வாய்க்கால்களிலும் இழிந்தன என்பார்' கால்களாற் பயன் என்' என்றார். ஒரு காலும் தீவண்ணர் திருக்கோயில் சூழாவாகில் அளியற்றவராய்ப் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும்கால் என்பார் `கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோகரணம் சூழாக் கால்களாற் பயன் என்என்று வினவினார். திருக்கோயில் வலம் வரும் மெய்யன்பரை நஞ்சு தீண்டாப் பேறு தோன்றக், `கறைக் கண்டன் கோயில்' என்றார். `ஓட்டை மாடத்தின் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழலடி நாட்டி நாண்மலர்தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும்' என்பார் அங்ஙனம் கூறினார் எனினும் பொருந்தும். ஆக்கையின் பிரிவாய தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை எல்லாம் முற்கூறிவிட்டமையால் எஞ்சிய கால்களை ஈண்டுக் கூறினார். பிற்கூறற்பாலதாய ஆக்கையை முற்கூறியதென்னை எனின், கால்கள் ஆக்கையின் ஒரு பிரிவேயாயினும், அவ்வுறுப்பால் ஏனைய உறுப்புக்கள் (ஆக்கை) தாங்கப்படுதலின், முற்கூறினார். அக் கால்களிலிருந்தும் கூற்றால் உயிர் நீங்கும் போது உய்ந்து போக்கில்லை, என்பார் `கால்களாற் பயன் என்' என்று அடுத்துள்ளதன் தொடர்பு தோற்றினார். கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்? எனவே எடுத்த பிறப்பின் பயன் பெற நம் யாக்கையில் உள்ள அங்கங்கள் அனைத்தும் எம்பெருமானு்க்கே பயன்படுத்துவோம் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com/ http://www.vpoompalani05.weebly.com/

புதன், 23 செப்டம்பர், 2015

Sadhananda Swamigal: சும்மா இருப்பது சுகம் !!!!!

Sadhananda Swamigal: சும்மா இருப்பது சுகம் !!!!!: தியானம் செய்வது எப்படி, தியானம் செய்வது எப்படி என்று நிறையப்பேர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.தியானம் செய்வது எப்படி என்று கேட்பதை...

வியாழன், 17 செப்டம்பர், 2015

திருப்பட்டூர் பிரகதீசுவரர் கோவிலின் அதியங்கள்


திருப்பட்டூர் பிரகதீசுவரர் கோவிலின் அதியங்கள்
மனித வழிபாட்டு தலங்களிலும் , பரகாரத்தலங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதும் திருப்பட்டூர் பிரகதீசுவர் ஆலயம் இக் ேகாவிலின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம், இத்தலத்தில் காசி விசுவநாதர் பராசக்தி சகிதமாகவும், விசாலாட்சி தனி சன்னதியுடனும் அமைந்த தலமாகும். இத்தலத்தில் நந்திகள் நால்வருடன் திருமூலர், பதஞ்சலி , சிவயோக மாமுனி, ஆகியருடன் வியாக்கிர பாத முனிவர் என்ற எண்பரில் உள்ள வியாக்கிர பாதமுனிவர், காசி விசுவநாதரை வணங்கியும், அங்கேயே சமாதி பெற்ற இத்தலம், இம்மகாமுனிவர் இங்கு தவமிருந்து காசிநாதரை பூசித்து வரும் நாளில், இங்கு கடும்வறட்சி ஏற்பட்டதால், விசுவநாதருக்கு அபிசகம் செய்யக்கூட நீர் கிடைக்க வில்லை, இவ்வாரான வேளையில், திருச்சி காவரியாற்றங்கரையில் அமைந்துள்ள திருவானைக்கா கோவிலில் பூசைக்காக, வெள்ளையானை தினமும் காவேரியில் நீர் எடுத்து ஈசுவரை வழிபட்டதை அறிந்த முனிவர், இங்குள்ள காசு விசுவநாதருக்கு நீர் ெகாண்டு வந்த தர வேண்டினார், ஆனால் இந்த யானை இதற்கு இணங்காததால், வெகுண்ட முனிவர், தனது புலிக்காலினால் , காசு விசுவ நாதருக்கு அபிசேக நீருக்காக ஊற்று ேதாண்டினார், இந்த ஊற்று, இன்றும் புண்ணிய தீர்த்த குளமாக அமைந்துள்ளது. இக்குளத்தில் நீர் நிரைந்திருக்கும் போது, தினமும் சூரியனும் சந்திரனும், குளத்தில் தன் கதிர்களைப்பதித்து, தனது பிரதிபிம்பத்தால் இறைவ ரை தரிப்பதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றளவும் குளத்தில் நீர் நிரம்பி உள்ள தருணங்களில் சூரிய சந்திர ஒளிக்கதிர்கள் குளத்தில் பட்டும், பின் அதன் பிம்பங்கள் இறைவரை வணங்குவதாக உள்ளது. இதனால், நவக்கோள்களில் பிரதான ேகாள்களான, சூரியனம் சந்திரனும், தினமு்ம், இக்கோவிலில் வந்து வணங்கி செல்வதால், இக்கோவிலில் நவக்கிரகங்களில் ஆதிக்கம் இல்லை ெயனவும், அவர்களுக்கு இ்ங்கு கோவில் இல்லை என்பதும் வரலாறு. தவயோக மாமுனி வியாக்கிர பாதர் ( புலிக்கால் பாதம் உடையவர்) இங்கு தவம் ெசய்தும், இ்ங்கு சமாதி கொண்டதால் இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். ேமலும் நவக்கோள்களின் அதிபதியான் சூரிய, சந்திரர்கள் இங்கு தினமு்ம் வந்து பூசை ெசய்து செல்வதால், இத்தலம் ேமலும் சிறப்பு பெற்றுள்ளது. திருச்சிற்றம்பலம் ................ ஓம் நமசிவாய ஓம் ேமலும் ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

புதன், 16 செப்டம்பர், 2015

திரு ஐந்தெழுத்தின் பெருமை


திரு ஐந்தெழுத்தின் பெருமை திரு ஐந்தெழுத்தின் பெருமை "அஞ்செழுத்துங்கண்டீர் அருமறைகள் ஆவனவும் அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் / நஞ்சவித்த காளத்தி யார்யார்க்குங் காண்டற்கு அரிதாய்ப்பேய் நீளத்தே நின்ற நெறி ..... " நக்கீர தேவநாயனார் தி,முறை 11 திரு ஐந்தெழுத்தே அருமறை ஆகும்.அஞ்செழுத்தை ஓதி மந்திர யோகம் கைவரப் பெற்றவர்கட்கு முத்தி நெறி ( பிறவா நெறி) மிக எளிதாகும் மற்றவர்கட்கு அரிதாகும். பிறவாமை வேண்டுவோர் பல வழிகளை மேற்கொள்கிறார்கள் இது இயல்பே ஆகும். மிக எளிய வழி திரு ஐந்தெழுத்தை எப்போதும் ஓதுவது தான் என்பது நக்கீர தேவ நாயனாரின் அனுபவ வாக்கு ஆகும். கோபம் வரும் காலங்களிலும், துன்பம் வரும் காலங்களிலும் நோய் மிகும் காலங்களிலும் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லிப் பழகிவிட வேண்டும், பழக்கத்தினால் இதனை செய்யலாம், காளத்தியிலிருந்தே கயிலையைக் கண்டு வணங்கிய நக்கீர தேவ நாயனார் அல்லவா இதனைக் கூறுகிறார், எனவே இது ஒரு மகா மந்ததிரம் நாமும் அனுதினமும் ஓதி பழகுவோம், நற்பயன் பெறுவோம், நன்றி ; தமிழ் வேதம் திருச்சிற்றம்பலம் ........ ஓம் நமசிவாய ஓம் ஆனமீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 14 செப்டம்பர், 2015

திருமுறை கூறும் இறையன்பு


திருமுறை கூறும் இறையன்பு தற்காலத்தில் பக்தி அதிகமாக வளர்ந்திருக்கிறது என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். அவ்வாறு அதிகமான பக்தி எத்தகைத்தது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இறைவன் பால் கொள்ளும் இறையன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று நம் மூதாதையர்கள் மற்றும் ஞானிகள், சித்தர்கள் கூறிய நெறி என்ன? அவ் நெறி தற்போது கடைபிடிக்கப்பட்டு இறையன்பு உள்ளதா ? என்றால் அதுவும் வியக்கத்தக்கதாகவே உள்ளது. இவ்வுலகத் தேவைகளை நிறைவேற்றித் தருபவராக இறைவரை எண்ணுவதை இறைவர் விரும்பவில்லை என்பது திருமுறைகள் கூறும் உண்மை. நாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் இறைவரைத் தொழகிறோம். பொன் வேண்டி, பொருள் வேண்டி, மற்றும் இம்மைப் போகங்கள் வேண்டி இறைவரை வழிபடுகிறோம். உலக பொருள்களை விரும்பி இறைவரிடம் வேண்டும் நாம் இறைவரை விரும்பி வேண்டி வழிபடுவதில்லை. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் போலிகள் முதற்கொண்டு சாதாரண மனிதர் வரை அழிக்கூடிய பொன் பொருளைத்தான் விரும்புகிறார்கள். பக்தி என்பது இம்மையின் இன்பமாய் வாழ்வதற்குரிய பொருள்களை இறைவரிடம் கேட்பது இல்லை. அந்தப் பரம்பொருளையே விரும்பிக் கேட்பதுதான் பக்தி என்கின்றனர் உண்மை ஞானிகள். பரம் பொருளைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பாமையே பக்தியாகும். சிலர் இவ்வுலக வாழ்விற்குப் பின் சுவர்க்கம் பெற வேண்டும் என்று வழிபடுகிறார்கள். இவ்வுலக இன்பத்தைப் போல பலமடங்கு அதிகமான இன்பத்தை தரும் இடமாக சுவர்க்கத்தை நாம் கருதுகிறோம. இது நம்முடைய அறியாமையே ஆகும். உண்மை ஞானிகள் எப்படி பக்தி செய்து காட்டினார்கள் என்பதை மணிவாசகர் ஒரு பாடலைக் கொண்ட காண்போம். "யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து இரேன் தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே ! எம்பெருமான் எம் மானே ! உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே." திரு வாசகம் இப்பாடலின் கருத்து: இந்த உலகில் பிறப்பதற்கோ, இறப்பதற்கோ நான் அஞ்சவில்லை. வானுலக இன்பம் பெறினும் அதனை நான் விரும்ப மாட்டேன். இம்மண்ணுலகை ஆள்வதையும் ஒரு பொருளாக எண்ணுவது இல்லை. தேன் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சிவபெருமானாரே ! தங்களின் திருவருள் என்று கிடைக்கும் என்று ஏங்கி நிற்கின்றேன். வானுலக இன்பத்தையும் வேண்டாம், என்பவர்கள் உண்மை ஞானிகள். திருநாவுக்கரசு சுவாமிகள்இறைவரிடம் கேட்டுள்ள வரம் யாது எனக் காண்போம். "புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்" ................. எந்தப் பிறப்பு எடுத்தாலும் சரி, தேவதேவா! தங்களின் திருவடியை மறவாதிருக்க வரம் மட்டுமே தாருங்கள் என்று வேண்டியுள்ளதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். " கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அது வேண்டேன் "............. காரைக்கால் அம்மையார் திருவந்தாதி அண்டம் ஆளும் பேற்றினை அளித்தால்கூட அதை நாம் விரும்ப மாட்டேன் என்று சொல்லும் காரைக்கால் அம்மையாரின் உன்னதமான பக்தியை நாம் மனத்தில் இறத்தல் வேண்டும். இறையருள் ஒன்றை மட்டுமே விரும்பும்அடியார் பெருமக்களுக்கு இந்திர பதவி, வானுலகம் சுவர்க்கம், நரகம், குபேர பதவி ஆகியவற்றைப் பற்றி சிறிதும் அக்கறை இருப்பதில்லை. அவை யாவும் அற்பமாகி விடுகின்றன அத்தூயவர்கட்கு. சிவபெருமானார் மீது அன்பு செலுத்துவது ஒன்றே பிறவிப்பயன் என்று வாழ்ந்து காட்டியவர்கள் அருளாளர்கள். வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுபவன் கரையை நாடுவது போலவும், கோடை வெயிலில் நடப்பவன் மரநிழலை நாடுவது போலவும், மழைக்கு அஞ்சியவன் வீட்டை நாடுவது போலவும், ஏழை செல்வந்தனை நாடுவது போலவும், அடர்ந்த இருளிலே தவிப்பவன் விளக்கை நாடுவது போலவும், குளிரிலே நடுங்குபவன் நெருப்பை நாடுவது போலவும், இறைவருடைய திருவருளை நாடுவது தான் பக்தியாகும். இதை விடுத்து பலப்பல சடங்குகள் செய்வதுதான் பக்தி என்று எண்ணி வாழ்நாளை வீழ்நாளாக்கி வருகிறோம் நாம். மூவாயிரம் ஆண்டு தவம் இருந்த திருமூலர் கூறும் கருத்து, "என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடுஉருகிஅகம் குழைவார்க்குஅன்றி என்போல் மணியினை எய்த வொண்ணாதே" திருமந்திரம் கருத்து: நம் எலும்புகளையே விறகாக ஆக்கி, நெருப்பு மூட்டி, அதில்நம் உடல் சதைகளை இட்டு வறுத்து எடுத்துக் கடுந்தவம் செய்தால் இறையை உணர்ந்திட முடியாது. உடலை எவ்வளவு வருத்தினாலும் பயன் இல்லை. இதனை நன்கு மனதில் நாம் கொள்ள வேண்டும். உள்ளத்தில்உண்டாகும் அன்பின் மிகுதியினால் அகம் குழைய வேண்டும். அன்பு என்பது தன்னலம் இல்லாத தன்மை ஆகும். தன்னலப்பற்றை நீக்கி, கருணை மிகும் பொழுது உள்ளம் மென்மையாகிவிடுகிறது, இத்தன்மையே உருகிய நிலை என்பர். வெண்ணெய் உருகினால் நறுமணம் வெளிப்படும் தங்கம் உருகினால் கல் பதியும், உள்ளம் உருகினால் இறையருள் பதியும். தீய குணங்கள் யாவும் நீங்கி நற்குணங்கள் மட்டுமே நிறைந்த உள்ளம் மென்மையான - உருகிய உள்ளம் எனலாம். " என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள நண்பலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்பச் சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி!! .......... திருவாசகம் கருத்து: இறைவரைக் காண வேண்டும் என்ற மிகுதியான ஏக்கத்தால் உள்ளம் உருகுகிறது. அதன் பயனாய் உடலும் உருகுகின்றது. இறைவர் மீது உண்டாகும் அன்பு கரை பரண்டு ஓடும் ஆற்று வெள்ளம் போல் பெருகுகின்றது. ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்து " பெருமானாரே ! " என்று புலம்பும்பொழுது சொற்கள் தடுமாறுகின்றன, உரோமங்கள் சிலிர்க்கின்றன. கைகள் பூவின் மொட்டுப்போல் குவிகின்றன. இதயம் மலர்ந்து விரிகின்றது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுகின்றது. இத்தகைய சாயா அன்பினை (இடையறா அன்பினை) நாள்தோறும் வளர்க்கும் பக்தர்களின் தாயாக நின்று அருளுகிறார் இறைவர். "ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை ஈரம் உடையவர் காண்பர்இணையடி" .......... திருமந்திரம் ஈரம் மெய்மையாக இருந்து இரண்டு பொருட்களை ஒட்டுவதற்கு எவ்வாறு உதவுகிறதோ, அதுபோல அன்பு மென்மையாக இருந்து நம்மை இறைவருடன் இணைக்கத் துணைபுரிகின்றது. எனவே அன்பிற்கு ஈரம் என்று பெயர். இத்தகைய அன்பினைத் தளராமல் செலுத்துவோர்க்கு தாயாக இருந்து அருள்புரிவார் இறைவர். நாம் இறைவரிடம் கேட்க வேண்டியது " புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே வழுவாதிருக்க வரம் தாருங்கள்" என்பது தான். உலகப் பொன் பொருள் போகங்கள் அல்ல என்பதை உணர்ந்து பக்தி நெறி நின்று பிறவியை ஒழிப்போமாக. திருச்சிற்றம்பலம் -- ஓம் நமசிவாய ! மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தத்துவக் கதைகள்


தத்துவக் கதைகள் சிவபக்தியுடைய ஒரு பெரியவர் காசிக்கு சென்றார். பய பக்தியுடன் காசி விசுவநாதப் பெருமானை வழிபட்டார். பல நாட்கள் காசியில் தங்கியிருந்து விட்டு ஊருக்கு திரும்பும் நாளில் கங்கையாற்றின் கங்கா தீர்த்தம் ஒரு குடத்தில் எடுத்துக் ெகாண்டு ஊர்வந்து சேர்ந்தார். இப்புனித நீரை இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்று இதனை பூசை அறையில் வைத்திரு்ந்து பாதுகாத்து வந்தார். காசிக்கு போய் வந்ததின் நினைவாக இனி பொய் சொல்வதி்ல்லை சிவனுக்கு ஒவ்வாத உணவுகள் உண்பதில்லை என முடிவெடுத்தார். இராமேஸ்வரம் செல்ல சில காலம் ஆகியிற்று. இதற்கிடையில் கடும பஞ்சம் வந்தது. குடிக்க தண்ணீர் பஞ்சம் வந்தது. கோடை காலம் உச்சி வெயில் நேரம் அக்கால நேரத்தில் ஒரு கழுதை தாகத்தின் மிகுதியால் உயிர் போகும் நிலையில் படுத்துக் கிடந்தது. அக் கணம் பக்தரின் மகன் முக்கண்ணன் என்பான் தன் தந்தையார் வைத்திருந்த கங்கை நீரை இறக்கும் தறுவாயில் இருந்த கழுதைக்கு வைத்து குடிக்க செய்தார். இதை அறிந்த பெரியவர் மிகவும் வருத்தப் பட்டார். இரவு முழுவதும் தூங்க வில்லை. நள்ளிரவில் சற்றே கண் அயர்ந்தார். இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமநாத பெருமான் கனவில் எழுந்தருளி, " நீ எனக்கு ஆயிரம் குடம் கங்கை நீரை அபிடேகம் செய்த புண்ணியம் பெற்றாய் உன் மகன் தாக முற்றிருந்த கழுதைக்கு கங்கை நீரை அளித்தது என்னை வந்து சேர்ந்தது. என்று கூறி மறைந்தார். பிற உயிர்களை புறக்கணித்தல் கூடாது. இறைபணி மட்டும் பக்தி ஆகாது. பிற உயிர்களுக்கு தக்க சமயத்தில் உதவும் பணியும் இறைப்பணியாகும். ஈகை, இறக்க குணம் , உண்மை, நேர்மை இருந்து பிற உயிர்களிடம் இறக்கம் கொண்டு உதவுதலும் இறைவர் வேண்டும் பகதி நெறியாகும். திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாயம் நன்றி ; தமிழ் வேதம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 12 செப்டம்பர், 2015

யோக வாழ்வு


யோக வாழ்வு யோகம் என்பது முற்றிலும் அனுஷ்டானத்திற்குரியது. நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க கூடியது. இந்து சமயத்தின் முதல் யோகி சிவபெருமானாரே ஆவார். யோகியின் பெருமை கடல் போன்று அளவற்றது. ஐம்புலன்களை அவற்றின் வழியில் செல்ல விடாமல் தடுத்து அவற்றை இறை வழிக்கு திருப்புதலே யோகமாகும். இதைச் செய்பவரே யோகியாவார். எளிய மனிதர்கள் போகிகள் மட்டுமே. அதாவது இன்பங்களை அனுபவிக்க மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். அவர்களை பொறுத்தவரை சிற்றின்பமே பேரின்பமாகும். ஆனால், உண்மையான இன்பம், பேரின்பமாவது எப்பொழுதும் இறைவனோடு தொடர்பு கொண்டிருப்பதே ஆகும். இந்த பேரின்பத்தை பெற யோகம் உதவுகிறது. பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் ஞானயோகம், கர்ம யோகம், பக்தி யோகம் என்ற தலைப்பில் யோகத்தின் சிறப்பை விளக்கியுள்ளார். இந்த யோகம் என்பது அதிர்ஷ்டமாக யாருக்கு கிடைப்பதல்ல, அதுவல்ல யோகம், அவர் யோகக் காரர் அவருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதல்ல, மனிதன் வெற்றியாளனாக செயல்பட இந்த யோகம் உதவுகிறது. யோகம் என்பது கடவுளுடையது மட்டுமல்ல, அது நம்முடையதும் தான். இந்து சமய கடவுள்கள் எல்லாம் யோகத்தில் இருக்கிறார்கள். உடல் ஒரு வழியில் , மனம் வேறு வழியில் பயனிக்கின்ற மனிதனை ஒன்றிணைக்கும் முறை இது. மனிதர்களிடம் இருக்கின்ற முரண்பாடுகளை நீக்குகின்ற அற்புதமான முறை யோகம்தான். யோகம் என்பது உயர்ந்த ஒன்று, அதனை இலட்சியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அதனை கீழ் நிலைக்கு பயன்படுத்துவது அபத்தமானது. யோகத்தை யார் வேண்டுமானாலும் பயிலாம். எளிய மனிதனை மட்டமான சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்த இலட்சிய வாழ்க்கைக்கு உயர்த்துகிறது. ஆனால் உயர்ந்த ஒன்றை கீழான ஒன்றினுள் பயன்படுத்துவது தவறான செயலாகும். இதனையே அநேகர் செய்கிறார்கள். இந்த உயர்ந்த சாதனங்களான யோகமும், ஆன்மிகமும் இந்த நாகரிக உலகில் கீழ்நிலைக்கு பயன்படுத்தப் படுகின்றது.இதனை மாந்திர தந்திர காரணங்களுக்காக பயன்படுத்தி விளம்பரமும் சுய கெளர உயர்வும் பெற அநேகர் பயன்படுத்துகின்றனர். இச் செயல் ஆனது பன்றிகளுக்கு முத்துக்களின் மதிப்பு தெரியாது என்று இறைமகன் யேசு குறிப்பிடுவது போன்று குரங்கின்கையில் மாணிக்க கல் கிடைத்தது போன்று ஆகும். பலஹீனமானவர்கள் யோகத்தை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். அவன் தன்னையே அளவீடாக வைத்து தன்னளவிலேயே சிந்தித்து, தானே எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொண்டு, தன்னால் எது கடைபிடிக்க முடியுமோ அதுதான் யோகம் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அவனுக்கு எது உண்மை? எது பொய் என்பதெல்லாம் தெரியாது , தன்னளவில் சிந்தித்து சுயமுடிவு எடுத்து செயல் படுகின்றனர். அப்படி என்றால் , அவன் எதுவாக இருக்கின்றானோ அதுவாகவே இன்னும் அதனை திறம்பட செய்கிறான். அவன் திருடனாக இருந்தால், அச்செயலை இன்னும் அழகாக செய்கிறான். அவனுடைய திருட்டு எண்ணம் மேன்மேலும் ஓங்கி வளர்கிறது. அவன் எதை நினைக்கிறானோ, அதைச் செய்கிறான். அதுதான் அவனளவில் யோகமாகிறது. இந்த அஞ்ஞான முடிவே மெய்ஞானமானது என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகிறது. மனதளவில் பலஹீனமான யாவருக்கும் பொருந்துவதாகும்.எனவே, யோகத்தின் மூலம் மனதை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையான யோகம் என்பது உண்மையான குருவின் மூலம் மட்டுமே கற்றுக் கொள்ளப்படுவதாகும், சுவாமி விவேகானந்தர் சிறந்த ஞானி என்பதையும், ஆன்மிக குரு இராமகிருஸ்ண பரமஹம்சர் என்பவரின் சீடர் என்பதும் யாவரும் அறிந்ததே. அவர் ஒரு கதை சொன்னாராம். மனிதர்கள் உயர் இலட்சியம், நோக்கம் கொண்டு இறைத்தேடலில் இறங்கித் தேடினால், அதில் ஒருவன் அசுரன், மற்றொருவன் தேவன், இருவரும் ஒரு ஞானியிடம் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள், அவரும் "தத்வமஸி" நீயே அது என்றார். முதலாமவன் தான் இறைவன் என்ற முடிவை எடுத்துக் கொண்டு ,தன்னளவிலேயே அனைத்தையும் செய்து கொண்டான். இரண்டாமவனோ, (இவன் தேவன்) மறுபடியும் அந்த ஞானியிடம் சென்று அவரைச் சரணடைந்து, அதன் அறுதி உண்மையை அறிந்தான். அனைத்து முடிவுகளையும் தன்னளவில் எடுத்துக் கொண்டு தன்னைத்தானே எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொள்வது, ஒரு உயர்ந்த நோக்காக எண்ணுவது அறிவிலித்தனம் , இது அசுரனுக்குரியது குணாம்சம் அவ்வாறு செய்வதைக் கைவிட வேண்டும் என உணர்ந்தான். எனவே அவனவன் நினைக்கின்ற அளவிலேயே அவன் யோகியாகிறான். யோகியர் இயல்புகள் பற்றி திருமூலர் கூறும் கருத்து. "அணங்கற்றும் ஆதல் அருஞ்சனம் நீவல் வணங்குற்ற கல்விமா ஞானம் மிகுத்தல் சிணங்குற்ற வாயர் சித்திதாம் கேட்டல் நுணங்கற்று இருத்தல்கால் வேகத்து நுந்தலே." ஆசை இல்லாமல், அருமையான மனைவி மக்கள் முதலான சுற்றம் நீக்கி இருத்தல், கல்வி அறிவால் அடங்கி இருத்தல், ஞானத்தில் மிக்க விளங்குதல்,இறைவனது மகா மந்திரத்தை முணு முணுத்துக் கொண்டிருத்தல், யோக சித்திகளை பற்றி தம்மினும் ஆராச்சியுடையவர்களிடம் கேட்டல், உள்ளம் சலியாது ஒரே நிலையில் இருத்தல் ஆகிய குணங்கள் சுத்த யோகியின் குணங்கள் என்கிறார். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சாக்கிய நாயனார்


சாக்கிய நாயனார் "எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை ெபாருள் என்றே துன்னிய வேடந்தன்னைத் துறவாத தூயசிவம் தன்னைமிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார். பெரியபுராணம் / சாக்கிய நாயனார் வரலாறு எந்நிலையிலும் சிவபரம்பொருளை மறவாமல் வாழ்ந்து பிறவாமையை எய்தியவர் சாக்கிய நாயனார். சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் இந்த நாயனார். பிறப்பும் இறப்பும் வேண்டாம் எனக்கருதிய இவர் காஞ்சி மாநகர் வந்தடைந்தார். சாக்கிய மதம் சேர்ந்தார். அம்மத நூல்கள் எல்லாம் ஓதி உணர்ந்தார். மனதில் நிறைவு ஏற்பட வில்ைல. இறையருள் கூட்ட சைவ சமயம் சேர்ந்தார். சிவமே பரம்பொருள் எனத் தெளிவடைந்தார். சாக்கிய மதக் கோலத்திலேயே நின்று சிவபெருமானுடைய திருவடியை மறவாமல் வாழந்தார. புறக்கோலம் கொள்ளவில்லை. திருநீரும் உருத்திராட்சமும் அணிதல் வேண்டும். அக்காலச் சூழலில் இந்த நாயனார் அப்படி வாழ்ந்தார். சிவலிங்க வழிபாடே எல்லா வழிபாடுகளிலும் சிறந்தது எனக் கொண்டார். நாள்தோறும் சிவலிங்கத் திருமேனி கண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும் எனும் நியதியை மேற்கொண்டார். இவர் வாழ்ந்த இடத்திற்கு அருகில் வெட்ட வெளியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். என்ன செய்வது என்று அறியதவராய் அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது பூவால் எறிவது போல் எறிந்தாார். இதனை இறைவர் மிக இனிமையாக ஏற்றுக் கொண்டார் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள், குழந்தைகள் அன்பின் மிகுதியால் தாய் தந்தையரின் மேல் உபத்திர தொந்தரவுகள் கொடுப்பது போல் இறையனாரும் இதை ஒரு தந்தையாகவே கல்லால் அடியும் பெற்றுவந்தார். இதனையே பட்டிணத்தடிகளும், ஒரு வரியில் வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன் கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. ............. என்கிறார் அன்றாடம் உணவு உண்பதன் முன் கல்லெறிந்து விட்டு தான் உணவு உண்பார். ஒரு நாள் இதனை மறந்து உணவு உண்பதற்கு அமர்ந்தார். " கெட்டேன் பெருமான் காணாமல் இருந்தேன்." எனக் கூறி எழுந்தார். அளவிலா அன்புடன் மிக விரைந்து வந்தார். குறி தவறாமல் கல் எறியும் பொருட்டு உணவை விட்டு ஓடி வரும் நாயனார் முன் கண்ணுதற் கடவுள் விண்ணிடை உமாதேவியாருடன் தோன்றியருளினார். மூவரும் தேவரும் காணமுடியாத முழுமுதற் பொருளைக் கண்குளிரக் கண்ட சாக்கிய நாயனார் ஆறாத அன்புடன் பபன்முறை பணிந்தார். இறைவர் நாயனாருக்கு சிவலோகம் ெகாடுத்தருளினார். எந்நிலையிலும் ஒரு குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்ந்தார் நாயனார். அதிலேயே வெற்றியும் பெற்றார். சாக்கிய நாயனார் வழிப்ட்ட சிவாலயம் காஞ்சிபரத்தில் உள்ளது. திருச்சிற்றம்பலம். ஓம் நமசிவாய ஓம் நன்றி ; தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

வியாழன், 10 செப்டம்பர், 2015


"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா" அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தல சிறப்பு: பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. பொது தகவல்: இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர். குரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் "ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் "திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் தேதி பிறந்தவரா? ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது. பிரார்த்தனை குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம் வித்தியாசமான அமைப்பு: குருர் பிரஹ்மா; குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர; குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது. முருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் "திருப்படையூர்' எனப்பட்ட தலம் "திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார். எல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர். பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார். நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது. எலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் "பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர். பதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும். தல வரலாறு: பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், ""ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார். பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள். சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

புதன், 9 செப்டம்பர், 2015

SUTHASIVAM: அன்புடையீர் ,          ஒரு  பாத்திரத்தில் கலங்கி...

SUTHASIVAM: அன்புடையீர் ,

          ஒரு  பாத்திரத்தில் கலங்கி...
: அன்புடையீர் ,           ஒரு  பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை  எடுத்துக்கொண்டு  அதை ஆடாமல் அசையாமல்  ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்க...

வாழ்தல் என்றால் என்ன?


வாழ்தல் என்றால் என்ன? வாழ்தல் என்பது மூச்சுக்காற்றை விடுவது மட்டும் தான் என்பது பலரது எண்ணம். அது வல்ல வாழ்தல். " உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்" என்ற திருமூலரின் வாக்குப்படி அகத்தில் உள்ள கோவில் கொண்டுள்ள இறைவரை அகப்பூசை செய்வது சிறந்ததாகும். பூசலார் தன் மனத்தில் கட்டிய அகக் கோவிலில் தான் இறைவன் எழுந்தருளினார் எனவே இறைவன் வழிபட்டு வாழ அகப்பூசையே சிறந்தது. அனுபூதிமான்கள் தங்கள் அகத்தில் கண்ட அனுபூதி உண்மை முற்றிலும் அனுஸ்டானத்திற்கு உரியது. இது வெறும் மேடை பேச்சிற்கோ, உபன்யாசத்திற்கோ மட்டும் அல்ல. மனத்தில் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையில் செயல்படுத்துவதாகும். வாழ்தல் என்றால் மூச்சுக்காற்றை சுவாசிப்பது என்பதல்ல. பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றோடு மட்டும் தன்னை இணைத்துக் கொண்டு இருப்பதை அல்லது தக்க வைத்துக் கொள்வது பற்றி மட்டுமே உயிர் வாழ்தல் என்று எண்ணுவது தவறு. இதுவும், இதுமட்டுமல்லாமல் ஒலியுடன் உங்களை இணைத்துக் கொள்வது உயிர் வாழுவதும் வாழ்தல்தான். அத்துடன் ஒளியுடன் உங்களை இணைததுக் கொண்டு வாழ்வதும் இருக்கின்றது. அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுபவை அத்யாத்மிக வாழ்க்கையும் லெளகீக வாழ்க்கையும் ஆகும். இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இரணடும் இரண்டு துருவங்கள் என எண்ணுவது சமயத்தைச் சரியாக அனுபவிக்காதவர்களின் தவறான கூற்றாகும். அத்யாத்மிக வாழ்க்கை என்பது உள்வழிப் பயணம் அதாவது தியான வாழ்க்கை. லெளகீக வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை. இது வெளி வாழ்க்கை. சமயம் என்பது மனிதனைச் சமைத்து நெறிப்படுத்துவது. அதாவது, இவ்வுலகத்தில் வாழும் ஒருவன் இப்படித்தான் வாழ வேண்டும் என வழிகாட்டுவது. அகத்தில் இதனை அனுஷ்டிக்க அனஷ்டிக்க ஒருவருடைய புற வாழ்க்கை நெறிபடுகிறது. பிராக்டிக்கல் வாழ்க்கை என்ற நடைமுறை வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும், வெவ்வேறானவை அல்ல, உள்ளே எதுவாக உங்களை எண்ணிக் கொள்கிறீர்களோ வெளியில் நீங்கள் அதுவாகவே இருக்கின்றீர்கள். நம் புற வாழ்க்கை என்பது, நம்முடைய அக வாழ்க்கையின் வெளிப்பாடே. ஒரு நாள் முழுவதும் நாம் எதைப்பற்றி நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் ஆகிறோம். சமயவாதிகளும் தத்துவ வாதிகளும் உளவியல் அறிஞர்களின் கருத்துவும் இதுவே. நீ எதுவாக நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிறார் இறைமகன் யேசு தம் பைபிளில். உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்புத்தான் நீங்கள் காணும் இந்த உலகம். நீங்கள் புறத்தே பார்க்கின்றவை அனைத்துமே உங்கள் அகத்தில் உங்கள் மனதில் எண்ணத்தில் தோன்றிய பின்னர்தான் இந்த வடிவம் எடுத்து வந்துள்ளீர்கள். சூட்சுமம் என்பது அத்யாத்மிகம் என்ற உள்ளொளிப்பயணம், ஸ்தூலம் என்பது லெளகீகம் என்ற வெளிப்பொருள் சார்ந்த வாழ்க்கை. அதாவது குடும்ப வாழ்க்கை. அகத்தின் பிரதியே புறம் ஆகும். ஸ்தூலம் அதன் பிரதிபலிப்பே. உங்களால் நடைமுறையில் கடைபிடிக்க முடியாத ஒன்றை தவஞானிகள் - அனுபூதிமார்கள் - உங்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் வாழ்வில் கடைபிடித்த தங்களுடைய அனுபவங்களைத்தான் உங்களுக்கு விட்டு சென்றுள்ளார்கள். இந்த பாதை பழையதுதான், ஆனால் பயணம் புதியது பயணிக்கும் நாம் புதியவர்கள். இது பல்லாயிரக்கணக்கானவர்கள் பயணித்த பாதைதான். இதனை நமது வாழ்க்கைக்குள் எடுத்து செல்ல செல்ல நமது வாழ்க்கை உயர் தகுதியைப் பெறும். திருச்சிற்றம்பலம் நன்றி; ஆன்மிகம் அறிவோம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

சமயம்


சமயம் சமயம் என்ற சொல் " சமைத்தல்" என்ற சொல்லிருந்து தோன்றியது. சமைத்தல் என்றால் பக்குவப் படுத்துதல் என்று பொருள் படும். அதாவது அரிசியை நாம் உண்பதற்கு ஏற்ற வகையில் உலையில் வைத்து, சூடேற்றி உணவாகப் பக்குவப்படுத்துவது போல பல்வேறு எண்ணங்களின் பிறப்பிடமாக திகழும் மனத்தை திருத்தி அதனை இறைவழிக்கு திருப்புவதற்காகப் பக்குவப்படுத்துவதே " சமயம்" ஆகும். சமையல் என்ற சொல் சமையம் என்றாகி, பிறகு சமயம் என்று ஆனது. அனைத்துச் சமயங்களின் அடிப்படை நோக்கமே மக்களின் மனத்தை பக்குவப் படுத்தி அவர்களை நல்ல வழியில் வாழச் ெசய்வதுதான், எனவே சமயம் சிறந்த ஓன்றாகும். நம் நாடு ஆன்மீக நாடு. ஆன்மிகம் மட்டும் நம் நாட்டில் வேரூன்றி இருக்காவிட்டால், நம் நாடு என்றைக்கோ அழிந்து போயிருக்கும். இறையச்சமும், இறை பக்தியும்தான் மக்களைத் தவறான வழிகளுக்கு ச் செல்லாமல் தடுத்து ஆட் கொண்டுள்ளன. எனவே சமய உணர்வு, அனைவருக்கும் இருந்தே ஆக வேண்டிய ஒன்றாகும். முதலில் இறைவனை அறிதல், பிறகு தன்னை அறிந்து கொண்டு தானே இறை நிலைக்கு உயர்தல் என்பதே ஆன்மிகத்தின் உண்மையான படி, இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவன் நடிகனாவதற்கு முன் இரசிகனாக இருக்க வேண்டும் என்று கூறலாம். யார் ஒருவர் எந்த ஒன்றை முதலில் இரசிக்கிறாரோ பிறகு அதுவாக ஆகி விடுகிறார். முதலில் ஜீவத்தமா, பிறகு பரமாத்மா. எனவே ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாக உயர்வதற்கு சமயம் வழிகாட்டுகிறது. சமயங்கள் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவரே உலகை இயக்குகிறார் என்பதையும் , அவரவர் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ற பலன்கள் அவரவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்றும், ஆணித்தரமாக கூறுகின்றன. மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு என்றும் கூறுகின்றன. சமயங்களே மக்களின் வாழ்க்கை நெறியினை அமைத்து, அதன்படி நல்ல நெறியினை கடைபிடிக்க வழிகளை கூறி வந்துள்ளன. மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லெவ்விக வாழ்க்கைக்கும் வழிநெறிகளை அமைத்து அவர்களை இறைபக்குவம் அடைய வழி சொல்கின்றன. அறவழியில் மக்கள் வாழ சமயம் தான் என்றால் அது மிகையாகாது. திருச்சிற்றம்பலம். ( படித்ததில் பிடித்தது) ஆன்மீகம் அறிவோம் http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com