செவ்வாய், 18 நவம்பர், 2025

"அஞ்சேல் "என்று அருளுவான்


 "அஞ்சேல் "என்று அருளுவான்

 நாம் மானிடப்பிறப்பு எடுத்ததின் பலனே நம் வினைப்பயனை நீக்கி இறைவன் தாள் அடைவதுதான், அதன் பொருட்டே நாம் வினைகள் தீரும் வரை இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டே தான் இருக்கும். நல்வினையால் புண்ணியமும், இன்பமும், தீவினையால் பாவமும், துன்பமும் நம் வாழும் போது அனுபவிக்கிறோம், இந்நிலையில் நாம் வாழும் வாழ்வில் முதுமையில் படும் அவஸ்தை கொடிது கொடிது, அந்நிலையில் அதைத் தாங்கும் சக்தியும் நம்மிடம் இருக்காது, நம் பொருட்டு உதவும் ஜீவனும் இருக்காது, உற்றாரும் உறவினர்களும் இருக்கமாட்டார்கள். அதனால் தான் பட்டிணத்துஅடிகள் நம்முடன் கூட வருவது நாம் சேர்த்த செல்வமோ, உறவோ வருவதில்ைல நாம் செய்த புண்ணிய பாவங்கள் தான் நம்முடன் வரும் என்றார். எனவே தான் தனக்கு இன்னும் ஒர் கருப்பை ஊர் வராது ஆக்கு என்று வேண்டுவார். 

  நம் வினையின் பயனால் நாம் முதுமையில் படும் துயரத்தை அருளாளர்கள் யாவரும் எனக்கு மரண அவஸ்தை இன்றி உன் திருவடியை தா என்று வேண்டினார்கள், அத்துடன் அந்நிலையில் எனக்கு அஞ்சேல் என்று அருள் தர வேண்டிய தேவாரப்பாடல்கள் ஏராளம் உள்ளன, இதனை உணர்ந்து தன் இளம்பருவத்திலேயே ஞானசம்பந்த பெருமான் திருவையாற்று பதிகத்தில் ஒரு பாடலில்

புலனைந்தும்பொறிகலங்கி நெறி மயங்கி

அறிவழிந்திட்டு ஐம்ேமல்உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று 

அருள்ெசய்வான் அமரும் கோயில் 

என்று இந்த ஊன் உடம்பில் உள்ள பொறிகள் எல்லாம் செயல் இழந்த நிலையில் எனக்கு அஞ்ேசல் என்று அருள் தர வேண்டும் பாடலாக அமைந்துள்ளது.


  மேலும் மரண அவஸ்தை பற்றி ஐயடிகள் காடவர்கோன்

குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி

நாெந்து இருமி ஏங்கி நுரைதேறி வந்து உந்தி

ஐயாறு வாயாறு பாயா முன் ெநஞ்சே 

ஐயாறு வாயால் அழை     என்கிறார்

     ஐயாறப்பரை நீ அழைத்தால் உனக்கு அஞ்சேல் என்ற அருள் கிடைக்கும் என்கிறார்.

  மரண அவஸ்தையை உணர்த்த வள்ளல் பெருமான் அவர்கள்  

  "படமுடியாது அரசே இனித்துயரம் படமுடியாது அரசே 

    பட்டதெல்லாமம் போதும் ,,,,,,,,,, 

  என் உடல் பொருள் ஆவி எல்லாம் 

  நீ எடுத்துக்கொண்டு உன் உடல் ஆவியை 

   உவந்து எனக்கு அருள்"  என்று வேண்டுவார்.


  3ம் திருமுறை தேவாரப்பாடலில் சம்பந்த பெருமானார்

  .....பத்தியாற் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்ெசய்யும்  அந்தனார்  உறைவிடம் 

      என்று மழப்பாடி இறைவன் பெருமையை அருள் செய்யும் கோயிலாக காட்டுகிறார்.

  

 மாணிக்க வாசக பெருமான் அருள் செய்வாய் என்பது குறித்து ஒரு பதிகமே பாடியுள்ளார்.

   மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்றும் 

  அவரது அச்சோப் பதிகத்தில்  

" சித்தமலம் அறிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட

  அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே " என்கிறார் 

 திரு வேசறவு பதிகத்தில்

    தானே வந்து எனது உள்ளம் பகுந்து அடியேற்கு அருள் செய்தான் " என்கிறார்

 அருள் பத்து பதிகத்தில்

 ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்று அருளாயே " என்கிறார்

 தேவாரம் தந்த அப்பர் அடிகள் தனது திருவையாற்று பதிகத்தில்

    இரப்பவருக்கு ஈய வைத்தார் ஈபவருக்கு அருளும் வைத்தார்

   ----------

   அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயனையாறனாறே "  என்று  யார் யாருக்கு ஈசன் அருள் செய்தார் என்கிறார்

 எட்டாம் திருமுறை தந்த மாணிக்கவாசகர் அருள் பத்து என்று ஒரு பதிகம் பாடியுள்ளார், இறைவனது அருளை வேண்டும் பத்துப் பாடல்களின் தொகுதி அருட்பத்து. இதன் எட்டாம் திருப்பாடலில், `பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுப்பவன் இறைவன்`  இப்பதிக பாடல்களில் அருள் புரிய வேண்டி----,

    "அடியேனாகிய நான், உன்னை விரும்பி அழைத்தால், அதென்ன? என்று கேட்டு அருள் புரிவாயாக!.

என் அழைப்புக் காரணம் உடையதே எனக் கருதி எனக்கு அருள் செய்` 

தொண்ட னாகிய நான் அன்புடன் அழைத்தால், அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!.

அடியேனாகிய நான் அன்புடன் அழைத்தால் அஞ்சாதே என்று அருள் புரிவாயாக!.

அடியே னாகிய நான் அன்பொடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!. என்று தனது பத்துப்பாடல்களிலும் இறைவனின் பேருமையை கூறி  இதன் பொருட்டு எனக்கு அருளாமல் இருந்துவிடுவாயே  அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல்    விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.என்று கூறி தன்பொருட்டு அடியார்களுக்கும் அருள் செய்வேண்டி பாடியுள்ளார்

     மேலும் அடியனாகிய நான் உன்னை பேரன்பால் ஆதரி்த்து அழைத்தால்  அருளாமல் விடுவது ஞாயமோ என்று கேட்கிறார்.

திருச்சிற்றம்பலம்


ஞாயிறு, 2 நவம்பர், 2025

அன்னாபிஷேகம்

 

கோடி லிங்க தரிசனத்தை தரும் அன்னாபிஷேகம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அதே போல் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலமும் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு பௌர்ணமிக்கு ஒவ்வொரு விதமான விசேஷங்கள் இருந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு மிகவும் சிறப்பு மிகுந்த விசேஷம் இருக்கிறது. அன்றைய தினம் தான் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் என்பது நடைபெறும்.
அன்னாபிஷேகம் பூஜை வழிபாடு யார் ஒருவர் கோடி லிங்க தரிசனத்தை செய்கிறார்களோ அவர்களுக்கு மறுபிறவி அற்ற நிலை உண்டாகும் என்று சிவபெருமானே கூறியிருக்கிறார். அனைவராலும் சுலபத்தில் கோடி லிங்க தரிசனத்தை காண இயலாது அல்லவா? அதற்காக தான் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்தை யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் கோடி லிங்க தரிசனத்தை செய்த பலனை பெறுவார்கள். ஒவ்வொரு அரிசியும் சிவலிங்கமாக பாவிக்கப்பட்டு அன்றைய தினம் நாம் வழிபாடு செய்வதால் தான் கோடி லிங்க தரிசனத்தை நம்மால் அன்றைய தினம் செய்ய இயல்கிறது
ஐப்பசி மாத பௌர்ணமி திதி என்பது நவம்பர் மாதம் நான்காம் தேதி இரவு 9:42 மணிக்கு தொடங்கி நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை 7:27 வரை இருக்கிறது. அதனால் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் நவம்பர் மாதம் 5ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது காலை 9:15ல் இருந்து 10:15 மணிக்குள்ளோ அல்லது காலை 11:45 மணியிலிருந்து 12:45 மணிக்குள்ளோ அல்லது மாலை 5:30 மணியிலிருந்து இரவு 7 மணிக்குள்ளோ செய்ய வேண்டும். வீட்டில் சிவபெருமானின் படம், சிலை, லிங்க ஸ்வரூபம் என்று எது இருந்தாலும் அன்னாபிஷேக நாளில் கண்டிப்பான முறையில் பூஜை செய்ய வேண்டும்.
எந்த வடிவத்தில் சிவலிங்கம் இருந்தாலும் அந்த சிவலிங்கத்தை முதலில் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பசும்பாலால் அபிஷேகம் செய்து பிறகு பச்சரிசி சாதத்தை வடித்து ஆறவைத்து அதை வைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் சிவலிங்கம் இல்லை என்பவர்கள் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து பச்சரிசி சாதத்தை அதில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி வழிபாட்டை செய்யலாம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்து முடித்த பிறகு சிவபெருமானுக்கு முன்பாக 5 விளக்கில் நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பிறகு “ஓம் லிங்கேஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்து 2 மணி நேரம் கழித்த பிறகு தான் சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் பொழுது லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுக்காமல் ஆவுடையின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றி கலந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக சாப்பிட வேண்டும். லிங்கத்தின் மேல் இருக்கக்கூடிய அன்னத்தை எடுத்து ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது காக்கை குருவிகள் போன்றவற்றிற்கோ தானமாக தர வேண்டும். இப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அன்னதானத்தை பிறருக்கு செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அன்னாபிஷேக நாளில் அனைவரும் சிவ ஆலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கும் இந்த முறையில் வழிபாடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 31 அக்டோபர், 2025

திருமுறைகள் ஓதாய்………..

 திருமுறைகள் ஓதாய்...........


ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்.

                      ஸ்ரீ குருஞானசம்பந்தர்

இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்பது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது.

நோயும் மருந்தும்:

பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது.

எனவே "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பிறவிநோய் எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல் வேண்டும்.

ஆசை பாசம் சினம் அகல:

"அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும் வித்து", என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது என்பதை உணர்கிறோம்.


ஆசை எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும்.

ஆணவத்தை அகந்தைக் கிழங்கு என்கிறார் குமரகுருபரர், "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்பது அவர்தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத் தொண்டர் உள்ளத்தே இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும்.

ஆணவமாகிய பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச் சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து உருவேற்ற வேண்டும்.

இந்நிலை எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக் குற்றங்களும் அகலவேண்டும்.அப்போது தான் குருநாதரை அணுகி ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும்.

சினம் முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள் ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு துணையாய் உள்ளன.

அத்திருமுறைகளைப் பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால் தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார்.

ஒரு மனிதன் பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச் சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப் பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும், சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு அஞ்செழுத்தை உபதேசிப்பார், அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும் உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும்.

அச்சிவபூசையைப் பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து வந்தால் பாசம் அகலும். பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு கிட்டும். `அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ'

இதனையே ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் "அற்றவர்க் கற்ற சிவன்' என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக் கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து


..

வியாழன், 30 அக்டோபர், 2025

துன்பங்களும் துயரங்களும்

 

துன்பங்களும் துயரங்களும்


துன்பங்களும் துயரங்களும் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதிகள். அவை மன வருத்தம், இழப்பு போன்ற உணர்வுகளால் ஏற்படுகின்றன, ஆனால் அவற்றை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறுவதே வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும். துயரம் என்பது ஈடு செய்ய முடியாத இழப்பால் ஏற்படும் வலியைக் குறிக்கும், சோகம் என்பது ஈடு செய்யக்கூடிய இழப்பால் வருவது

நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல.


ஓரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லாத் துன்பங்களையும், சோதனைகளையும் பிரச்னைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றி காண்பதில் தான் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை (ஹெலன் கெல்லர்).


ஓரு கப்பலானது கடல் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும் வீசியடிக்கும் காற்றையும் எதிர்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஓருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் கூட அந்தக் கப்பலை கரை சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் விபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை.அதன் இலக்காகிய கரையை சென்றடைய வழி கண்டுபிடிக்கப்படுகிறது, கரையை சென்றடையவும் செய்கிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலைச் செய்யத் துவங்கும்போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகிறோம். அந்தச் செயலைச் செய்வதனால் பிறரால் நமக்கு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதவர்களாய் தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டு்ம்?


இன்னல்கள் வரும் போது இறக்க நினைத்தால் நாம் பிறந்ததில் அர்த்தம் இல்லை. இன்னல்கள் (துன்பம்) என்றதும் வேலையை பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. பிரச்சனை என்ற ஓன்று இருப்பின் தீர்வு என்ற ஓன்று நிச்சயம் இருக்கும். சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மனிதனின் அழகு.


துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் ஏதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.


வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.


உன் வாழ்க்கையின் எந்த ஓரு நாளில் நீ ஏந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல், நீ முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.

ஆம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?

சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

வருஷம் முழுவதும் பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப்பட்டதால் மனம் வெறுத்துப்போன விவசாயி கடவுளிடம் கேட்டான், ஏன் கடவுளே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? மழையை அளவா பெய்யவச்சாத்தான் என்ன? ஏன் இப்படி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களை எல்லாம் அழிக்கின்றாய்? அதே மாதிரி காற்று வீசினா பத்தாதா? புயலாத்தான் வீசணுமா? வெயில் அடிச்சா பரவாயில்ல… இப்படி ஓரேயடியா வறட்சியை வரவைக்கணுமா? பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு உனக்கு தெரியல்ல. எங்கிட்ட அந்த சக்தியை கொடு. உற்பத்தியை பெருக்கி நாட்டில் எப்படி வளர்ச்சியை உருவாக்குறேன்னு பாரு அப்டீன்று சவால் விட்டான். கடவுளும் சரி, இனி உன் இஷ்டம். இயற்கை உன் சொல்படி நடக்கும் அப்டீனு சொல் இயற்கையை கட்டுப்படுத்துற சக்தியை அந்த விவசாயிடம் கொடுத்தார். அன்றிருந்து விவசாயி போட்ட கட்டளைக்கு மழை, வெயில், ஆகாயம், வெப்பம், காற்று என இயற்கை அவனுக்கு கட்டுப்பட்டது. மழை அளவா பொழிஞ்சது. காற்று மிதமா வீசிச்சு, வெப்பம் போதுமான அளவோட இருந்தது. பயிர்கள் ஆமோகமாக விளைந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை அடக்க முடியாதவனாய் கடவுளைக் கூப்பிட்டு, பாத்தீங்களா கடவுளே! நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேனு, பெருமிதத்தை அடக்க முடியாதவனாய் கடவுளிடம் கூறினான். கடவுளும் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டே, சரி…

அறுவடைச் செய், என்றுக் கூறிவிட்டு அவன் அவன் அறுவடைச் செய்வதை வேடிக்கைப் பார்த்தார். விவசாயியும் ஆறுவடைச் செய்துவிட்டு முற்றிய நெற்கதிர்களை உதிர்த்துப்பார்த்தான். நெல் சிதறியது. ஆனால், அதில் அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தது. அவன் திகைத்துப்போய் கடவுளை ஏறிட்டுப்பார்த்தான். கடவுள் அவனிடம் மகனே, இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயல் வீசச் செய்யும் போது பயிர் தனது வேர்களை பலப்படுத்தும், மழையை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நீரிருந்து அழுகாமல் பாதுக்காக்கும், தன் வேர்க்கால்களை வலுவாக்கிக்கொள்ளும், வறட்சியை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நன்கு பரவவிட்டு வளரும். இப்படி அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கும் ஏற்றப்படி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும். இனால் நீ வளர்த்தப் பயிரைப் பார்த்தாயா? எல்லா வசதிகளும், தேவைப்பட்ட காலங்களில் கிடைத்தப்போதும் அவை சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.

ஆம், இது ஓர் கற்பனை கதையாக இருந்தாலும் சோதனைகளும், துன்பங்களும் நம் வாழ்வை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது இல்லயா?.

செவ்வாய், 28 அக்டோபர், 2025

சுநதரரின் தோழமை நெறி

 சுநதரரின் தோழமை நெறி 


சுந்தரரின்  வாழ்வில் இவருடன் தோழமை கொண்டோர் பற்றிய நாயன்மார்கள்

1, தம்பிரான் தோழராதல்:

 திருவாரூர்ப் பெருமான் `தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்` என்றருளினார். சுந்தரர் தம்பிரான் தோழரானார். இக் குறிப்புப் பல பதிகங்களில் காணப்படுகின்றது.

``தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை`` (தி.7 ப.68 பா.😎

``என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் 

துரிசுகளுக்கு உடனாகி`` (தி.7 ப.51 பா.1)

``என்றனை ஆள் தோழனை`` (தி.7 ப.84 பா.9)

 சிவனடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைத் தொழுது உள்ளே சென்று பூங்கோயிலமர்ந்த பெரு மானை வணங்கி இன்புற்றார். இன்னிசைப் பாமாலைகளாகிய தமிழ் மாலைகள் பாடினார்.

அப்பொழுது யாவரும் கேட்க வானிடையே ``நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந் நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக` என்ற அருள்வாக்குத் தோன்றிற்று. அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். தியாகேசர் திருமுன் சென்று வலம்செய்து வணங்கினார். 

 2,ஏயர்கோன் நட்பு:

நம்பியாரூரர் பெருமானைச் சிறிதும் மனம் நடுங்காது ஒரு பெண்ணிடத்து இரவில் தூதனுப்பி ஏவல் கொண்டார் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில் வாழும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் இச்செய்தி கேட்டு உளம் வருந்தினார். `இறைவனை அடியவர் ஏவல் கொள்வது தொண்டர்க்கு முறையன்று` என்று கருதியது அவர் உள்ளம். `இச்செய்தி கேட்டும் என்னுயிர் செல்லவில்லையே` என்றிரங்கினார். `அடியவரிடத்துள்ள கருணையால் இறைவன் இசைந்தாலும் அப்பெருமானை ஏவுதல் என்ன முறை? அரிவையரிடத்து வைத்த ஆசைக்கு இறைவனைத் தூது கொண்ட வன்றொண்டரைக் காணின் என்ன நேரும்` என்று சுந்தரர் மேல் சினம் கொண்டிருந்தார்.

ஏயர்கோன் தம்பால் சினங் கொண்டிருத்தலையறிந்த நம்பி யாரூரர் தாம் செய்தது பிழையென வுணர்ந்தார். கலிக்காமர் செற்றத்தைக் தணித்தற் பொருட்டு இறைவனைப் பலமுறை இறைஞ் சினார். இவ்விருவரையும் ஒன்றுபடுத்தத் திருவுளங்கொண்ட இறைவன் ஏயர் கோன் கலிக்காம நாயனார்க்குச் சூலை நோயை ஏவி னார். சூலை நோயால் தளர்ச்சியுற்று வாடிய கலிக்காமர் சிவபிரான் திரு வடிகளைச் சிந்தித்துப் போற்றினார். இறைவன் அவர் முன்னே தோன்றி `இச்சூலை நோய் வன்றொண்டன் வந்து தீர்த்தாலன்றித் தீராது` என்று கூறினார். கலிக்காமர், `இறைவனே! வழிவழியாக நும்மையே வழிபடும் தொண்டனுக்குற்ற நோயைப் புதியவனாகிய வன்றொண்டனோ தீர்த்தற்குரியன்; இந்நோய் தீர்க்கப்படுதல் வேண்டா` எனக் கூறினார். இறைவன் மறைந்தான். இருப்பினும் சுந்தரர் அவர் இல்லம் சென்று அவரை சந்தித்தார் அப்போது கலிக்காமர் தன் வாளால் தன் வயிற்றை கிழித்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை அறிந்த சுந்தரர் அவரும் அதே வாளால் தன்னை வெட்டிக்கொள்ள ஓங்கினார் உடனே இறைவர் அவரகள் முன் தோன்றி இருவரையும் தடுத்தாட்கொண்டார் இவர்களின் நட்பின் பெருமை கண்டு வியந்தனர்

3.சேரமான் நட்பு:

இவருடைய நட்பை அறிமுகம் செய்தவர் இறைவரே ஆவரர்.தினமும் இறைவழிபாடு செய்து முடிக்கும் போது இறைவனின் கால் சிலம்பு காதில் கேட்டால்தான் வழிபாட்டை முடிப்பார். ஒரு நாள் இச் சிலம்போலி கேட்க தாமதம் ஆனபடியால் அதற்கு இறைவர நான் சுந்தரரின் இசையில் மெய்மறந்தபடியால் இங்கு வர தாமதம் ஆகிவிட்டது என சேரமான் பெருமானாரிடம் இறைவர் கூற அவ்வளவு அன்பும் இசை ஈர்ப்பு கொண்ட சுந்தரரை நான் காண வேண்டுமென்று கூறி சேரமண்டலத்தையாண்ட சேரமான் பெருமாள் நாயனார் நம்பியாரூரரது பெருமையினைத் தில்லைக் கூத்தனுணர்த்தக்கேட்டு சுந்தரரைக் காண வேண்டு மென்னும் பேரார்வத்துடன் தில்லைச் சிற்றம்பலவரைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார்.நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார்.

 ஒருநாள் சேரர்கோன் திருமஞ்சனமாடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத்திறைவனை வழிபடச் சென்றார். திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரர் நெஞ்சம் நெகிழ்ந்துருகி நிலமிசை வீழ்ந்து `அடியேன் இவ்வுலக வாழ்வை வெறுத்தேன்; அடியேனை நின் திருவடியில் சேர்த்தல் வேண்டும்` என்னும் குறிப்புடன் `தலைக்குத் தலைமாலை` என்னும் திருப்பதிகத்தால் விண்ணப்பித்து வேண்டினர். பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து விசும்பிற் செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. இவ்வாறு இருவரும் திருக்கயிலை வந்தடைந்தனர் இவ்வாறு இருவரும் நட்பின் பெருமைக்கு இலக்கணம் கண்டவர்கள்

4,கோட்புலியார்

சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். கோட்புலியாரும் வரவேற்றுத்தம் திருமாளிகைக்கு அழைத்துச்சென்று திருவமுது செய்வித்தார். தம்மக்களாகிய சிங்கடி, வனப்பகை யென்னும் பெண்கள் இருவரையும அழைத்து வணங்கச்செய்து, தம்பிரான் தோழராகிய தாங்கள் என் பெண்கள் இருவரையும் அடிமையாக ஏற்றருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அவர்தம் அன்பின் திறமறிந்த சுந்தரர் `இவர்கள் என் குழந்தைகள்` என்று சொல்லி அன்போடு மடிமீதிருத்தி உச்சி மோந்து அவர்கள் வேண்டுவன அளித்து மகிழ்ந்தார். இங்ஙனம் கோட்புலியாரின் மகளிரைத் தம் மகள்களாக ஏற்றருளினார்

5, பெரும் மழலை குறும்ப நாயினார்

  குறும்ப நாயினார் சைவ ஆகம வேள்விகள் செய்து வாழ்வாதாரம் செய்து வந்தவர் சுந்தரரின் பெருமை யறிந்து அவரை தனது மானசீக குருவாகக் கொண்டு அவரை அனுதினமும் தன் நினைவில் நிறுத்தி அவர்தம் பெருமைகளையும் பரப்பு அவர் மேல் தீராத அன்பு கொண்டிருந்தார். இவர் தன் தவப்பயனாலும் ஞான சக்தியாலும் எதிர்கொள்ளும் வாழ்வை கணிப்பவர். இதனால் சுந்தரர் திருக்கயிலை செல்வதை ஞான ஒளியால் கண்டு தன் பிராணத்தை ஒடுக்கி அவருக்கு முன்பாகவே தானும் கைலாயம் அடைந்தார்.

6 சோமாசி நாயனார்

  மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனடியார் வழிபாடும் திருவைந்தெழுத் துபாசனையும் சுந்தரமூர்த்திநாயனார் பால் நண்புறவுங் கைவரப் பெற்றிருந்த சோமாசிமாறநாயனாரே, தாம் "ஈசன் மலர்க்கழல் பேணுதற்குச்" சிவவேள்வியே செவ்விய நெறியாகக் கொண்டிருந்ததார்.

  சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

7.விறன்மிண்ட நாயினார்

"தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. வழக்கம் போல் சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும்! இறைவனை வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும், அன்பும் இருத்தல் வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம் பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன் தான் என்று கடுமையாகச் சொன்னார்.திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம்

 இறைவனையே புறகு என்றதால் இறைவர் சுந்தரரை திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துக் கொடுத்து சுந்தரர் பாடி அடியார்களுக்கு பெருமை சேர்த்தார்.

 இவ்வாறு சுந்தரரின் வாழ்வில் இறைவருடன் இந்த ஏழு அடியார்கள் / நாயன்மார்கள் நட்புடன் வாழ்நது வந்து நட்பின் பெருமையை உலகறியச் செய்தனர்

திருச்சிற்றம்பலம்

செவ்வாய், 14 அக்டோபர், 2025

நமசிவய வாழ்க

 நமசிவய வாழ்க



“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பார் வள்ளல் இராமலிங்க அடிகள். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகத்தை அருளிய மாணிக்க வாசகர் திருவாசகத்தை, “நமசிவாய வாழ்க” என்றே தொடங்குகின்றார். திருவாசகத்தின் உட்பொருள் சிவபெருமானே என்று காட்டித் தில்லை மன்றுள் நடவரசர் திருவடியில் அமர்ந்த மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில், சிவபுராணத்தின் முதல் வரியாக அமைவது, நமசிவாய வாழ்க” எனும் வரியாகும். செந்தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையானச் சித்தாந்த சைவத்தில் பரம்பொருளைச் சிவம் என்பர். அச்சிவத்திற்கு மற்றொரு பெயர், ‘நமசிவய’ எனும் திருவைந்தெழுத்து என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.


பரம்பொருளான சிவத்திற்குப் பெயர் நமசிவய என்பதனை, “போற்றியோ நமசிவாய புயங்கனே மயங்கு கின்றேன், போற்றியோ நமசிவாய புகலிடம் பிரிதொன்றில்லை, போற்றியோ நமசிவாய புறமெனைப் போக்கல் கண்டாய், போற்றியோ நமசிவாய சயசய போற்றி போற்றி” என்று மணிவாசகர் குறிப்பிடுவார். இதில் நமசிவய எனும் பெயராய் நிற்பவனே, உன்னை நான் போற்றுகின்றேன். பாம்பினை அணிந்திருப்பவனே உலக விருப்பால் மயங்குகின்றேன், உன்னை அன்றி எனக்கு வேறு புகலிடம் இல்லை. என்னைக் கைவிடாமல் காத்து அருளல் வேண்டும் வெற்றியை உடையவனே என்று குறிப்பிடுகின்றார்.


பெருமானுக்கு நமசிவய என்பது மற்றொரு பெயர் என்பதனை, “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும், வஞ்சகம் அற்றஅடி வாழ்த்த வந்தகூற்று, அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே” என்று தன்னைத் தமிழ்ஞான சம்பந்தர் என்று குறிப்பிட்டத் திருஞானசம்பந்தர் பாடுவார். மார்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்தது நமசிவய என்ற திருவைந்து எழுத்தின் வடிவாக நிற்கின்ற பெருமான் என்பார்.


நமசிவய எனும் பெயரைக் கொண்ட பெருமானை வாழ்த்தினால் நாம் வாழலாம் என்பதற்காக ‘நமசிவாய வாழ்க’ என்பார் மாணிக்கவாசகர். தமிழ்ச் சைவர்களின் மரபிலும் தமிழ்த் திருமாலியத்தவர்களின் மரபிலும் இறைவனுக்குப் பல்லாண்டு பாடும் வழக்கம் உண்டு. தமிழ்ச் சைவர்களின் தமிழ் மந்திரமான திருமுறையில், ஒன்பதாம் திருமுறையில் சேந்தனாரின் திருப்பல்லாண்டு இறைவனை வாழ்த்துவதாக உள்ளது. அதே போன்று தமிழ்த் திருமாலியத்தவர்களின் தமிழ் மந்திரமான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் பெரியாழ்வார் திருமாலை வாழ்த்தும் திருப்பல்லாண்டு உண்டு. இவை நாம் வாழ்வதற்காக இறைவனை வாழ்த்துவது என்பதனை, “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்” என்று திருநாவுக்கரசு அடிகளும் மணிவாசகர் குறிப்பிடுவதனைக் குறிப்பிடுவார்.


சிவபுராணத்தில், ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்தினை முதன்மையாக மணிவாசகர் குறிப்பதற்குப் பல்வேறு கரணியங்களைக் குறிப்பிடலாம். பெருமானின் திருப்பெயராக நின்ற நமசிவய எனும் திருவைந்தெழுத்து, தமிழ்ச் சைவர்களின் அரிய தமிழ் மந்திரமாக உள்ளது என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். நிறைமொழி மாந்தர் எனும், உள்ளத்தில் குற்றம் அற்ற மாந்தர்களின் வாய்ச்சொல்லே மந்திரம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். அத்தகையவர் வாய்ச்சொல் ஆணையின்படி செயல் நிகழும் என்றும் குறிப்பிடுவார். அத்தகையோரின் மந்திரச் சொற்கள் அவர்களையும் பிறரையும் காக்கும் ஆற்றல் உடையவை என்பார். அவ்வகையில் நாயன்மார்களின் திருவாய்களில் இருந்து உதிர்ந்த மொழியாகவும் அவர்களையும் பிறரையும் காத்த மந்திரமாகவும் நமசிவய உள்ளது என்பதனை மணிவாசகர் உணர்த்துகின்றார். சமணர்கள் திருநாவுக்கரசு அடிகளைக் கல்லோடு பிணைத்துக் கடலில் போட்டப் போது, “கல்துணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நல்துணையாவது நமசிவாயவே” என்று நமசிவய மந்திரம் தன்னைக் காத்தமையையும் தமிழ் மந்திரத்திற்குக் கடலில் கல் மிதந்த அருள் நிகழ்ச்சியையும் குறிப்பிடுவார்.


மணிவாசகர் முதன்மைப்படுத்தும் ‘நமசிவய’ மந்திரம் நம் சிந்தையைக் காப்பது என்று திருமுறைகள் குறிப்பிடுகின்றன. “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்திஎழும் பழைய வல்வினை மூடாமுன், சிந்தை பராமறியா…” என்று சுந்தரர் அடிகள் பாடுவார். சிந்தையைத் தீயவற்றில் இருந்து காத்துச் செம்மைப் படுத்துவது திருவைந்து எழுத்து மந்திரம் என்று சுந்தரர் குறிப்பிடுவார். திருநாவுக்கரசரோ தன்னைச் சமணர்கள் வெப்பமான நீற்றறையில் போட்டுப் பூட்டிய போது, “மாசில் வீணையும் எனும் பதிகம் பாடி மீண்டார். அப்போது, “மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகம் பாடினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாடலில், “நமசிவாயவே ஞானமும் கல்வியும் நமசிவாயவே நானறி விச்சையும், நமசிவாயவே நாநவின்று ஏத்துமே, நமசிவாயவே நன்னெறி காட்டுமே” என்று அருளி இருக்கின்றார். இதில் நமசிவய மந்திரம் இறைவனாக நின்று உலகக் கல்வியையும் இறை அறிவையும் இறை அருளையும் நன்னெறியையும் காட்டுவதோடு நம்மைக் காக்கவும் செய்யும் என்று குறிப்பிடுகின்றார்.


பல்வேறு பிறமொழி மந்திரங்களை விளங்காமலும் வலிந்தும் கற்று ஓதும் செந்தமிழ்ச் சைவர்கள், எளிய, அரிய, மணிவாசகர் போன்ற நாயன்மார்கள் குறிப்பிட்டத் தமிழ் மொழியில் இருக்கின்ற நமசிவய மந்திரத்தை அறியாமல் இருப்பது அறியாமைக் கொடுமை எனலாம். நாயன்மார்களும் திருமுறை ஆசிரியர்களும் ஓதி உணர்ந்த, இறைவனின் திருவருள் பெற்ற, அவர்களைப் பேணிக் காத்த நமசிவய மந்திரம் தமிழ்ச் சைவர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாதது எவ்வளவு பெரிய அறியாமை!


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர்கள் அன்னைத் தமிழில் இறைவனின் திருமுன்பு குறிப்பிட்டு, இறைவனின் திருவருளைக் குறைவின்றிப் பெற்றமையை உணராது தமிழ்ச் சைவர்கள் பிறமொழி மந்திரங்களை உயர்வாகவும் அவையே இறைவன் பேசும் மொழி என்றும் குறிப்பிடுவதும் நம்புவதும் தமிழ்மொழி மந்திரமான நமசிவய மந்திரம் ஆற்றல் இல்லாத வெறும் மந்திரம் என்று எண்ணுவதும் எவ்வளவு பெரிய அறியாமை ஆகும்? “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே” என்று தமிழ் மந்திரம் ஓதியே சுந்தரர் அருள் பெற்றமையைத் செந்தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


“செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று வேதமும் சைவமும் நன்கு அறிந்த திருஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுவதனை உண்மையாகத் திருஞானசம்பந்தப் பெருமானைத் தங்களின் சைவ ஆசானாக வைத்துப் போற்றுகின்ற தமிழ்ச் சைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பெருமானிடத்தில் அன்பினைப் பெருக வைப்பது, அவ்வன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் மல்க வைப்பது, அம்மந்திரத்தை ஓதுகின்றவர்களை நல்ல நெறிக்கு ஆட்படுத்துவது, நான்கு வேதங்களின் முடிந்த கருத்தாய் அமைவது, பெருமானின் திருப்பெயராகவும் விளங்குவது நமசிவய திருமந்திரம் என்று சம்பந்தப் பெருமான் குறிப்பிடுவார்.


தமிழ்ச் சைவர்களின் சமய நூல்களான சிவ ஆகமங்களும் திருமுறைகளும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்களும் தமிழ்ச் சைவர்களுக்குத் தலையாய மந்திரமாகக் குறிப்பிடும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமிழ்ச் சைவர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும். உண்ணும் முன்னும் உறங்கும் முன்னும் உறங்கி எழும் போதும் சொல்லிப் பழக வேண்டும். இன்பம் ஏற்பட்ட போதும் துன்பம் ஏற்பட்ட போதும் நமசிவய மந்திரத்தை மறவாமல் தவறாமல் சொல்ல வேண்டும். உள்ளத்தில் அச்சம் ஏற்பட்ட போதும் பில்லி சூனியம், காத்துக் கருப்பு, நோய், ஏவல், நாள், கோள், நேரம், சகுனம் என்று எதுவாக இருப்பினும் திருவைந்து எழுத்தினைப் படைக்கலமாகக் கொண்டு துணிவு பெறல் வேண்டும். இதனையே, “படைக்கலமாக உன்நாமத்து எழுத்துஅஞ்சு என்நாவில் கொண்டேன், துடைக்கினும் போகேன்” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார்.


தமிழ்ச் சைவர்களின் புதுமனைப் புகு விழா, காதணி விழா, தமிழ்ப் பெயர் சூட்டு விழா, பூப்பெய்தல் விழா, வளைகாப்பு, திருமணம், குழந்தைப் பிறப்பு, மணிவிழா, இறப்பு என்று எதுவாக இருப்பினும் அதில் திருவைந்து எழுத்து ஓதுதலும் சொல்லுதலும் இடம்பெறல் வேண்டும். திருவைந்து எழுத்தினை ஓதி தமிழ்ச் சைவர்கள் திருநீறு அணிதலும் திருநீறு அணிவித்து வாழ்த்துதலும் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களின் திருக்கோயில்களில் நமசிவய திருவைந்தெழுத்து மந்திரம் பூசனையிலும் வழிபாட்டிலும் இடம்பெறுதலைச் செய்தல் வேண்டும். தமிழ்ச் சைவர்களுக்கு மந்திரம் என்றால் அது நமசிவய எனும் திருவைந்து எழுத்து மந்திரமும் திருமுறைகளும் என்பது புழக்கத்திலும் வழக்கத்திலும் இடம்பெறல் வேண்டும் என்பதே மணிவாசகர் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.


மிகச் சிறந்த சிவச் செறிவாளராகிய (சிவயோகி) திருமூலரும் திருவைந்து எழுத்து மந்திரத்தின் முதன்மையை உணர்த்துவார். சிவச்செறிவாளர்களின் உள்ளத்தில் இறையுணர்வை ஏற்றும் மந்திரம் என்று குறிப்பிடுவார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், …. ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” என்று குறிப்பிடுவார். “செம்பு பொன்னாகும் சிவாயநம என்னில்” என்று இன்னொரு பாடலில் திருமூலர் குறிப்பிடுவார். களிம்பு படிந்த செம்பு பொன்னாவது போல் ஆணவம் படிந்த உயிர், சிவயநம என்ற திருவைந்து எழுத்து மந்திரத்தை விடாமல் சொன்னால், பொன்னார் மேனியனாக இருக்கின்ற சிவபெருமானைப் போன்று மேம்பாடு அடையும் என்பார்.


திருவைந்து எழுத்தின் சுருங்கிய வடிவமான ‘சிவசிவ’ எனும் மந்திரத்தை மாந்தர் சொல்வதற்கு அறியாமல் இருக்கின்றனர். அவர்களின் தீவினைப் பயனே அவர்களை அவ்வாறு வைத்திருக்கின்றது. அத்தகையத் தீவினைப் பயனைப் போக்குவதற்குச் ‘சிவசிவ’ என்று சொல்வதே வழி என்பதனை அறியாமல் இருக்கின்றனர் என்பார். இதனைச், “சிவசிவ என்கிலர் தீவினை யாளர், சிவசிவ என்றிடத் தீவினை மாளும்” என்பார். மேலும் அவ்வாறு திருவைந்து எழுத்து மந்திரத்தைச் சொல்பவர்கள், வானவர்களாய் ஆவார்கள் என்றும் சிவகதி பெறுவார்கள் என்றும் குறிப்பிடுவார்.


சிவபுராணத்தின் முதற் சொல்லாக உள்ள ‘நமசிவய’ என்ற திருவைந்து எழுத்தே பெருமானுக்குத் திருவடிவாக, நடவரசர் திருவடிவில் இருக்கின்றது என்பதனை  உண்மை விளக்கம் எனும் சித்தாந்த சைவ மெய்கண்ட நூல் குறிப்பிடும். உடுக்கையை உடைய திருக்கரம் சிகாரம், நன்றாக வீசிய திருக்கரம் வகாரம், அஞ்ச வேண்டாம் என்று அமைந்த திருக்கரம் யகாரம், தீ ஏந்திய திருக்கரம் நகாரம், முயலகனைப் பொருந்தி இருக்கின்ற திருவடி மகாரம் என்று குறிப்பிடும். இதனை வேறு முறையில் குறிப்பிடுவதும் உண்டு.


மேலும் இத்திருவைந்து எழுத்தில் ‘ந’ நடப்பாற்றல், ‘ம’ மலம், ‘சி’ சிவம், ‘வ’ வனப்பாற்றல், ‘ய’ யாக்கை எனும் உயிர் என்ற மெய்ப்பொருள்களைக் உணர்த்துவதாகவும் அம்மெய்கண்ட நூல் குறிப்பிடும். இத்தகைய அரிய பொருளை நமக்கு உணர்த்தவே மணிவாசகர், “நமசிவாய வாழ்க” என்று எடுத்து ஓதினார். இவ்வரிய தமிழ் மந்திரத்தைச் செந்தமிழ்ச் சைவர்கள் தங்கள் திருகோயில்களிலும் இல்லங்களிலும் நடைபெறும் பூசனைகளிலும் வழிபாடுகளிலும் நடைமுறைப் படுத்துவார்களாக!

திருச்சிற்றம்பலம்

வெள்ளி, 10 அக்டோபர், 2025

அப்பர் ஒரு புரட்சியாளர்:

 திருச்சிற்றம்பலம்


அப்பர் ஒரு புரட்சியாளர்:

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னார்அவர் பாலைத் துறையரே.

-அப்பர் (தி. 5ப. 51பா.6)

அப்பர் ஒரு புரட்சியாளர்:

     புரட்சி என்பது சீர்கெட்டுப் போனதை - மீண்டும் சீர்மைபெறச்

செய்வதேயாகும். சுதந்திரமாக வாழ்ந்த இந்தியர்களை ஆங்கிலேயர் 150 ஆண்டுகட்கு மேலாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். சீர்கெட்டு நின்ற பாரத தேசந்தன்னை மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்கள் பெரும் புரட்சி செய்தனர். மீண்டும் சுதந்திரப்பாதையில் இந்தியர்களை நடையிடச் செய்தனர். இதுவே புரட்சி. சீர்கெட்ட தனிமனிதரை அல்லது சமுதாயத்தை, அல்லது நாட்டை, செப்பஞ்செய்ய எடுக்கும் நடவடிக்கைக்கே புரட்சி என்ற பெயர் பொருந்தும். மக்களிடையே குழப்பம் விளைவிப்பதெல்லாம் புரட்சியாகாது.

     இக்காலத்தில், புரட்சி செய்து தேசத்தைச் செம்மை செய்த மகாத்மா காந்தியடிகளைப் போல், அன்று கடமை செய்யத் தவறியோரைக் கடமை வழிச் செலுத்தி. செம்மை செய்த புரட்சியாளர் அப்பர் அடிகள்.

     பகவத் கீதையில் கண்ணபிரான் அருச்சுனற்குக் கடமையை உணர்த்தினார்.

      "கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மாபலேஷு   கதாசன"

 என்பது கீதாசாரியன் வாக்கு. 'அர்ச்சுனா, கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம். அஃதாவது உரிமை உண்டே தவிர பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரமில்லை. அஃதாவது உரிமை இல்லை' என்பது இதன்பொருள்.

     இது துவாபர யுகத்தில் நடந்தது. இப்போது நடப்பதோ கலியுகம். இதற்கு ஏற்ப அதே தர்மத்தைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்வது? அப்பர் அதே உரிமையைக் கடமை என்ற சொல்லால் புரட்சிகரமாகச் சொல்கிறார். அப்பாடல் காண்க.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்அடி யேனையும் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

-தி. 5ப. 19பா. 9


     'கடமையைச் செய்யத்தான் உனக்கு அதிகாரம். பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரம் இல்லை. என்கின்றது கீதை.


     ஆனால் கடமையைச் செய்பவனுக்கு அதற்குரிய பலனைப் பகவான் கொடுத்தே தீர்கிறார். அணு அளவுகூடக் குறைக்கமாட்டார். அக்கருத்து அர்ச்சுனற்குத் தெரியும்; உயர்ந்தோரானதால்; யுகமும் துவாபரயுகமானதால், இக்கருத்தைக் கலியுகத்தில் அப்பர் சுவாமிகள் புரட்சிகரமாகத் திருக்கடம்பூர்த் தேவாரத்தில் தெளிவாக விளக்குகிறார். கீதையில் கண்ணன் கர்மத்தைச் செய்யத்தான் அதிகாரம் என்று சொன்னார். அப்பர், உரிமை என்ற சொல்லையும் புரட்சிகரமாக மாற்றி, கடமை என்ற சொல்லாலேயே கடவுளின் கடமையையும், மக்களின் கடமையையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் கடமை மக்கட்கு உரிமையாய் விடுகிறது. மக்களின் கடமை கடவுளுக்கு உரிமையாகி விடுகிறது. உரிமைப் போராட்டத்திற்கே இடமில்லாமல் கடமை என்ற சொல்லாலேயே அவரவர்க்கு உள்ள உரிமையைக் கிடைக்கச் செய்துவிடுகிறார்

இதை எல்லோரிடத்தும் வைத்துத் தெளிவு பெறலாம். முதலாளி செய்யும் கடமை தொழிலாளிக்கு உரிமை. தொழிலாளி செய்யும் கடமை முதலாளிக்கு உரிமை. கணவன் செய்யும் கடமை மனைவிக்கு உரிமை. மனைவி செய்யும் கடமை கணவனுக்கு உரிமை. பெற்றோர் செய்யும் கடமை மக்களுக்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை பெற்றோர்க்கு உரிமை. ஆசிரியர் செய்யும் கடமை மாணாக்கர்கட்கு உரிமை. மாணாக்கர் செய்யும் கடமை ஆசிரியர்கட்கு உரிமை. அரசு செய்யும் கடமை மக்கட்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை அரசுக்கு உரிமை. இறைவன் செய்யும் கடமை உயிர்கட்கெல்லாம் உரிமை. உயிர்கள் செய்யும் கடமை இறைவனுக்கு உரிமை. கடவுள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார். சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.

திருச்சிற்றம்பலம்