வாழ்வில் ஏற்றத்தாழ்வு வரலாமா?
சைவ சித்தாந்தம் கூறும் கருத்து
நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.
‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு. உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.
முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும். வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.
பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான். ஒவ்வொரு ஆன்மாவின் வினைப்பயனே அவ்வான்மாவின் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாக அமையும்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக