வெள்ளி, 5 செப்டம்பர், 2025

வன்றொண்டப் பெருமானாரை ( சுந்தரர் ) முன்னைஆசிரியராவார் திருஞானசம்பந்தரும்,திருநாவுக்கரசரும்

 வன்றொண்டப் பெருமானாரை ( சுந்தரர் ) முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமொழி வழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது இறைவனாரே.அஃது எங்ஙனம் எனின், பித்தா பிறைசூடீ என்னும் தொடர், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப் பாடலிடத்து முன்பு தோன்றி விளங்குதலின் என்க. அத்தொடர் அமைந்த அவரது திருப்பாடல்: விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே (தி.1 ப.89 பா.3) வன்றொண்டப் பெருமானாரை இங்ஙனம் முன்னை ஆசிரியர் திருமொழிவழியே நின்று பாடுமாறு திருவருள் செய்தது, இவரை, முன்னை ஆசிரியர்களது பெருமையையும், அவர்களது திருமொழிப் பெருமையையும் இனிது விளக்கி அடியார்க்கு அடியாராம் வழிநிலை ஆசிரியராகுமாறு செய்யும் குறிப்பினைப் புலப்படுத்தவாறாம். முன்னை ஆசிரியராவார் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும். அதனை இவர், நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை (தி.7 ப.67 பா.5) என்று குறித்தருளுவார். அத் திருப்பாடலிற்றானே, தொண்ட னேன்அறி யாமை யறிந்து கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் கழலடி காட்டிஎன் களைகளை யறுக்கும் வல்லியல் வானவர் வணங்கநின் றானை என்று, தம்மை இறைவன் வழிநிலை ஆசிரியராக்கினமையையும் குறிப்பால் அருளிச்செய்வர். அங்ஙனம் இவர் அருளிச்செய்வதற்கு ஏற்ப, இவரைத் திருவாரூரில் இறைவன் தன் அடியார்க்கு அடியராகச் செய்து, திருத்தொண்டத் தொகை பாடுவித்தமையையும், அது பற்றிப் பின்னரும் இவர், நாவின்மிசை யரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன் யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன் (தி.7 ப.78 பா.10) எனத் தம்மைக் குறித்தருளினமையையுங் காண்க. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் ஆகிய அவ்விருவர்க்கு முன்னரும் ஆசிரியர் உளராயினும், ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று திருப்பதிகம் அருளிச்செய்து திருவருள் நெறியைப் பரப்பும் தொண்டினை அவ்விருவர் வாயிலாகவே நிகழச் செய்தமையால், பேராசிரியப் பெருந்தன்மையை அவ்விருவரிடத்தே இறைவன் வைத்தானாவன். அதனைத் திட்பமுற உணர்ந்தே சேக்கிழார் நாயனார், அவ் விருவரையே, பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக் கண் ணிரண்டு (தி.12 பெ.புரா.திருநாவு. 185) என வரையறுத்து அருளிச் செய்தார். அவ்வாசிரியர்வழி நிற்பிக்கப்பட்ட இச்சுவாமிகளை இறைவன் முதற்கண், மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றும், பின்னரும், இன்னும் பல்லாறுலகினில் நம்புகழ் பாடு என்றும், (தி.12 பெ. புரா. தடுத். 70,76) ஓரிடத்தில் நில்லாது பலவிடத்தும் சென்று பாடப் பணித்தமையால், ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பேராசிரியராயது எவ்வாறு என்பது இனிது விளங்கும். இனி, செல்லும் இடங்களில் எல்லாம் ஞானசம்பந்தரைச் சிவிகை, சின்னம் முதலியவைகளுடன் செல்லச் செய்தமையால், அவ்விருவருள்ளும் தலைமைத் தன்மையை இறைவன் ஞானசம்பந்தரிடத்து வைத்தமை புலனாகும். இவற்றானே, நால்வர் ஆசிரியருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் முதற்கண் வேறு வைத்து, மூவர் முதலிகள் என வழங்குமாறும் இனிது என்பது பெறப்பட்டது. இனி, பலவிடத்தன்றிச் சிலவிடத்துச் சென்று இறைவன் பொருள்சேர் புகழை மிகப்பாடிய அருளாசிரியர் திருவாதவூரடிகளே யாதலின், அவர் நான்காம் ஆசிரியர் ஆயினார் என்க. அன்றியும், மூவர் தமிழும் இசைத் தமிழாயும், அடிகள் தமிழ் இயற்றமிழாயும் இருத்தல் கருதத்தக்கது. உளங் குளிர்ந்த போதெலாம் உகந்துகந்து பாடி அன்பு மீதூர்ந்து இன்புறும் அன்புப் பாடல்களுக்கு இயற்றமிழினும், இசைத்தமிழே சிறந்து நிற்பது என்பது, கோழைமிட றாககவி கோளும்இல வாகஇசை கூடும்வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசன் (தி.3 ப.71 பா.1) எனவும், கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையால் உணர்ந்துரைக்க லாகுமே (தி.3 ப.52 பா.7) எனவும், அளப்பில கீதம்சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே (தி.4 ப.77 பா.3) எனவும் போந்த ஆசிரியத் திருமொழிகளால் பெறப்படும்.இதனால் சுந்தரரின் மானசீக குருவானர்கள் ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்பதாகும்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக