செவ்வாய், 2 ஜூன், 2026

துன்பம் நீங்கி இன்பம் பெற

 துன்பம் நீங்கி இன்பம் பெற


உலகிலே பிறந்த உயிர்கள் அனைத்தும் பலப்பல எண்ணங்களுடன் வாழ்கின்றன. ஒரு தாய்தந்தைக்கு இரு மக்கள் பிறந்தன, ஒன்று தாய் தந்தையருக்கு அடங்கி வாழ்கிறது. மற்றொன்று தாய்தந்தையரை அடக்கி வாழ்கின்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும் மாறுபட்ட குணங்கள் , உருவ அமைப்புக்கள், மாறுபட்ட முக பாவனைகள் மாறுபட்ட திறம் போன்ற வேறுபாடுகளுடன் இருக்கின்றன.

உதாரணமாக இலங்கை மன்னன் இராவணன் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் வேறுபட்ட குணங்களை கொண்ட வரலாற்றை நாம் காணலாம். இராவணன் மூர்க்கன் ,சிவ பக்தன், கும்பகர்ணன் நல்லவன், ஆனால் முரடன், விபீசனன் பரம சாது, சூர்ப்பணகை மிகவும் பாெல்லாதவள் இவ்வாறு ஒரு வயிற்றில் பிறந்தவர்கள் வேறுபட்ட குணங்களுடன் வாழ்ந்து வந்தனர்.

ஆதலால் உலக மக்களில் ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் அமையாது. ஆன்மாக்கள் வெவ்வேறு இயல்புகளுடன் இருக்கின்றன. ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது ஒன்றில் மட்டும் யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாத ஒன்று அது , ” துன்பம் இன்றி இன்பத்துடன் வாழ வேண்டும் என்று எண்ணுவது தான்

எந்த சமயத்தாவரானும், எந்த அரசியல் வாதியானாலும், ஆணோ அல்லது பெண்ணோ முதியவரோ அல்லது இளையவரோ முன்னால் இருந்து வாழ்ந்தவரோ அல்லது தற்போது வாழ்பவரோ இனி வாழப்போவாரோ யாராக இருந்தாலும் இதைத்தான் எண்ணுகிறார்கள் துன்பம் இன்றி இன்பத்துடன்வாழ வேண்டுமென்று இதில் எந்த வித மாற்றமும் இல்லை.

எள் வேண்டும் என்று கொள் விதைப்பது போலும், செல்ல வேண்டிய ஊருக்கு டிக்கட் எடுத்து விட்டு செல்லாத வாகனத்தில் ஏறுவது போல் இன்பம் வேண்டும் என்று எண்ணுகிற நாம் துன்ப விதை தூவுகிறோம் துன்ப விதை தூவினால்எப்படி இன்பம்விளையும்?

” கடவுளே நான் எப்போதும் உன்னையே நினைக்கிறேன் எனக்கு மட்டும்இத்தனை துன்பமா? உனக்கு கும்பாபிசேகம் செய்தேன் உன்பொருட்டு விரதம் இருந்து நடை பயணம் வந்து உன்னை வணங்கினேன். என் குழந்தைக்கு இப்படி தீராத நோயினை கொடுத்திருக்கிறாயே என்று இறைவன் மீது சலித்து கொள்கின்றனர். இது பேதமை தானே. ஒரு தாய் 4 பிள்ளைகளை பெற்றேடுத்து வளர்க்கும் போது ஒவ்வாெருவருக்கும் அவர்களின் உடல் வாகுக்கு தகுந்தவாறு உணவளிப்பதில்லையா? அவர்களுக்கு பருவத்திற்கேற்ப பணிவிடை செய்வதில்லையா? இது அந்த தாயின் கருணை அல்லவா?

பள்ளியில் ஆசிரியர் அங்கு பயிலும் மாணவரகள் எல்லாரும் ஒரே பாடம் எடுத்து படித்தாலும் அவர்கள் எழுதும் தேர்வில் பதில் அளிக்கும் மாணவனுக்கு ஏற்ப மதிப்பெண் கொடுப்பதி்ல்லையா? அவனவனுக்கு ஏற்ப தானே பயன்கள் கிடைக்கிறது.

இதுபோல ஆன்மாக்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப சுக துக்கங்களை இறைவன் தருகின்றான். ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவரகள் இறைவனை நோவலாமா? இறைவன் நடுநிலை வழுவாதவன். நாம் நுகர்கின்ற இன்ப துன்பத்ததிற்கு இறைவன் காரணம் அல்லன். நாம் முற்பிறவியில் செய்த வினைப்பயனே காரணமாகும். நாம் அனுபவிக்கின்ற துன்பத்திற்கு காரணம் நாம் செய்த தீவினையே காரணம் . நாம் செய்த பாவப்பலன்களை இப்போது நுகர்கிறோம் என்று கருதி சமாதானமாகி வினைப்பயனை அனுபவிக்க வேண்டும்.

ஒருவர் நமக்கு துன்பஞ் செய்பவராயின் அவர்கள் மீது சீற்றம் அடைதல் கூடாது. நாம் செய்த வினை பயனாக வருகிறது என்று எண்ணி மனம் சாந்தி அடைய வேண்டும்.

இதற்கு உதாரணமாக இராமாயண வரலாற்்றில் சீதை அனுமனிடம் கூறும் போது நான் அனுபவித்த துன்பத்திற்கு காரணம் அரக்கர்கள் அல்லர்,. என் வினைதான் காரணம் , தவ நெறியில் நின்ற என் கணவரை மான் பிடித்து வர அனுப்பினேன். என் அருகில் காவலானாக இருந்த இலக்குவனை நிந்தனை செய்து போகச் செய்தேன். என் பொருட்டு உணவு உறக்கம் இன்றி சுகத்தை மறந்து என்னை காத்து நின்ற பரம பக்தனாகிய இலக்குவனை நான் கொடுஞ் சொற்களால் மனத்தை நோக வைத்து அனுப்பினேன். அந்த வினைப்பயனால் இடர் வந்தது. செய்வான்/ செய்வினை/ வினைப்பயன்/ சேர்ப்பான் என்ற நான்கு தன்மைகளை உணர்த்துவதே உத்தம ஞானம். அரக்கியர்கள் இராவணனின் பணியாளர்கள் அவர்கள் அவர்களின் பணியினைத்தான் செய்தார்கள். அதற்கு அவர்கள் பொறுப்பில்லை. என் வினைப்பயன்தான் அவர்களை செய்ய வைத்தது. என்று விதியின் பயனை நொந்து அனுமனிடம்கூறியதை காணலாம்

ஆதலால் துன்பத்தை நுகர்கின்றவர்கள் கடவுளையோ மற்றவர்களையோ நோவக்கூடாது. இக்கருத்தில் தான் சம்பந்த பெருமான் மதுரை வந்திருந்த போது சமணர்களால் தானும் அடியார்களும் தங்கியிிருந்த மடம்தீ வைத்த போது சமணர்களை துன்புறுத்தா வண்ணம் அதற்கு காரணமாக இருந்த மன்னனுக்குதான் சூட்டு வலியை வரவழைத்தார். சமணர்கள் ஒருவனால் ஏவப்பட்டவர்கள் மூலகாரணம் அவர்கள் அல்லர்.

ஆதலால் நாம் துன்பமின்றி இன்பமாக வாழ வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு மனம் மொழி மெய்களால் துன்பம் செய்யக் கூடாது. நன்மையே செய்ய ேவண்டும். இதுதான் பண்பாடு,துன்பம் வினையினால் விளைகின்றது. விதையில்லாமல் செடி கொடி மரம் இல்லை. வேரின்றி மரம் இல்லை. பால் இன்றி நெய் இல்லை. வினையில்லையேல் துன்பம் இல்லை. துன்பங்களுக்கு காரணம் வினைதான் என்பதை தெளிவாக உணர வேண்டும்.

வினை மூன்று வகைப்படும். ஒன்று முன்செய்தவினை தொல் வினை என்ற சஞ்சித வினை, இதில் இப்பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் வினைப் பகுதி பிராப்த வினை அல்லது நுகர் வினை, இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களில் உண்டாகும் வினை ஆகாமிய வினை என்பதாகும். இந்த உடம்பு நுகர முடிந்து விடும் வினை பிராப்த வினையாகும். நாம் செய்யும் புண்ணிய செயல்களால் இவ்வினை குறையும். தொல்வினை என்பது ஞானத்தீயால் எரிந்து விடும். நம் குருநாதரின் அருளால் இவ்வினை நம்மிடம் இருந்து குறையும். இதனால் பிறப்பற்ற நிலை முத்தி கிடைக்கும். நாம் இறவாமல் இரு்க்க வேண்டும் என்றால் ஒரு வழி உண்டு. பிறவாமல் இருக்க வேண்டும். நாம் எங்கு சென்றாலும் நம் நிழல் நம் பின்னால் தொடரும் நம் நிழலை நிறுத்த நாம் இன்னாெரு நிழலுக்கு செல்ல வேண்டும். அப்பாேது நம்மை தொடர்ந்த நிழல் மறைந்து விடுகின்றதல்லவா? அதுபோல வினை யில்லையெனில் துன்பமே இருக்காது.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்கிறார் அப்பர்அடிகள். தொல்வினை என்ற சஞ்சித வினை இறைவனிடம்பக்தி செய்வதாலும், ஜபம் தவம் பாராயணம் முதலிய வழிபாட்டாலும் தொலையும் வினை அகன்றால் பிறவி கழியும் துன்பம்அகலும்.

மார்கழியில் கடும் பனி கொட்டுகிறது. அதனை விலக்க சருகுகளை குவித்து தீ மூட்டினால் பனி விலகுவது போல் பக்தி செய்வோர்க்கு இறையருள் வெளிபட்டால் வினை விலகும். ஆதலால் அன்பர்கள் துன்பந் தொலைந்து இன்பம் ஓங்க வேண்டும் என்று கருதுவீர்ளானால் வினை புரியாது, தினையளவேனும் இறைவனை மறவாது, அன்பு நெறி நின்று அருள் மயமாகி சிவசிந்தையுடன் வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம்.

திருசிற்றம்பலம்

நன்றி ; திருக்கோயில் மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக