வெள்ளி, 25 ஜூன், 2021

அரசனும் முனியும்

அரசனும் முனியும்



திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்த விஜயரங்க சொக்கலிங்கமென்னும் அரசன், தாயுமானவருக்கு, காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த விலையுயர்ந்த ஒரு சால்வையைப் பரிசளித்தான். தாயுமானவர் அதைப்பெற்று அரசனை ஆசீர்வதித்தார்.


ஒரு நாள் அவர் வீதி வழியே செல்லுகையில் பரஸ்திரீ ஒருத்தி கந்தைத் துணிகளைத் தரித்துக் கொண்டு குளிரினால் நடுங்கப்பெற்று வருந்தினாள். கண்ணுற்றதும் தாயுமானவர் மனம் அனலின்கண் மெழுகேபோல் உருகிற்று. தன்னிடமிருந்த சால்வையை அம்மாதுக்களிக்க, அப்பரத்தை அதை வாங்கிக் கொள்ள சிறிது அச்சமுற்றாள். ஆனால் தாயுமானவர் மிகவும் வணக்கமாய்ச் சால்வையைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.


இச்செய்தி அரசனுக்குத் தெரியவந்தது. மன்னன் கோபாக்கினியால் எரிக்கப்பட்டு “அளவற்ற விலை பெற்ற சால்வை யான் அளிக்க, அதைச் சிறிதும் அஞ்சாது தெருவின் கண் நின்ற ஒரு இழிய பரஸ்திரீக்குக் கொடுத்து என்னை மானபங்கம் செய்த காரணம் பற்றி தாயுமானவரை, கால்களையும், கரங்களையும் இறுகக்கட்டி என் முன் கொண்டு வருக” என ஆஞ்ஞாபித்தன்.


தாயுமானவர் தாம் எவ்வளவு மனக்களிப்புடன் சால்வையைக் கொடுத்தனரோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் அரசன் சமுகத்திற்கு வந்து நின்றார். உடனே மன்னன் கேட்டதாவது “உனக்குப் பரிசுகொடுத்த சால்வை எங்கே இப்பொழுது காணோமே” என்றான்.


தாயுமானவர் “நான் இவ்வண்டத்திற்கு மாதாவாகிய அகிலாண்டேஸ்வரிக்குச் சம்ர்ப்பித்தேன். அவளும் அதற்காகத் தங்களுக்கு க்ஷேமமே உண்டாகும்படி அநுக்கிரகித்தாள்.” என்றார். அரசன் உடனே தலை குனிந்து மானமடைந்து எதிரில் நின்ற முனியின் காலில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.


ஆதலால் யோகிகளுக்குக் கண்டனவெல்லாம் தெய்வமே. செய்யும் செய்கைகளெல்லாவற்றிலும் கடவுளையே காண்பார்கள்


குருவே தெய்வம்



நமக்கு வழிகாட்டுகின்ற நாம் வழிபடுகின்ற மதிப்பிற்குரியவராய் திகழ்பவர் குரு ஆவர், மானிடர் வாழ்வில் குருவின்படி நிலை மூன்று வகையாக பிரிக்கலாம். மானிடர் லௌவீக வாழ்வில் மானிடப்பிறப்பெடுத்த உயிருக்கு நல் வழிகாட்டியாக அமைவது ஒன்று தாய் தந்தையாகவோ, அல்லது மனைவியாகவோ அல்லது உடன்பிறந்தவர் களாகவோ இருக்கலாம். இவரும் இவ்வுயிருக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருவாகவே திகழ்வார்கள். அடுத்து கல்வி கற்பிக்கும் வித்தயா குரு என்ற ஆசான். இவரும் அவ்வுயிருக்கு குருவாகவே இருந்து அறிவுக்கலை வழங்கி குருவாக அமைவார்கள் ஆனாலும் அவர் ஞானத்தை பெறவிரும்பும் தருனத்தில் அக்குருவால் நமக்கு பயன்கிடைக்குமா? என்பது ஆதாரமற்றதே. நாம் ஞானம் அறிய விரும்பும் தருணத்தில் அமைவதே ஆத்மார்த்த தெய்வீக குரு. இவரே நாம் வழிபடும் குருவாக அமைவார். குரு என்னும் பதம் கு+ரு = குரு, கு என்றால் இருள், ரு என்றால் அருள், அதாவது கு என்னும் அசுத்தாவத்தையில் நின்ற உயிரினை "ரு " என்ற சுத்தாவித்தையில் நிலுத்துபவர் குரு. இதை செய்கிறவர் இறைவர், தெளிவினை கொடுத்து பிரகாசிக்கச் செய்பவர் எவரோ அவரே தெய்வீக குரு.

  குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவா, குரு மகேஸ்வரா என்று தட்சிணாமூர்த்தியை விழிப்பது குருவே சிவமாகும் என்பதாகும். அவரே மானிட உருவம் தாங்கி உயிரின் ஆணவ மலத்தை நீக்கி, உயிரை இறையோடு கூட்டிவிப்பவரும் குருவே. இறைவழிபாட்டில் குரு, லிங்க, சங்கம, வழிபாட்டில் குரு வழிபாடு முதன்மையாகவே கொள்ளப்படுகிறது. குரு என்பவர் ஒரு ஆன்மாவிற்கு வழிபாட்டும் குருவாகவும். வத்தியா (கல்வி) குருவாகவும், தீட்சா குருாகவும் இருந்து ஆன்மாவிற்கு வழிபாட்டுகிறார்.

  கந்தர் அனுபூதியில் " குருவாய் வருவாய், அருள்வாய், குகனே" என வேண்டுகிறார். பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும், குருவருள் இன்றேல் திருவருள் இல்லை  என்பது உறுதி, கேட்டுக் கல்லாத கல்வி சூட்டாலும் வராது என்பது முதுமொழி.

  பாலலினுள் வெண்ணெய் நெய், மோர் அடங்கி உள்ளன அவற்றை பாலிலிருந்து பெற வேண்டுமானால் உறை என்ற மோர் தேவை. பால் மனம்படைத்த சீடனுக்கு குரு மூர்த்தி  உறையாக இருக்கிறார். குரு ஆசியினால் சீடன் பாலில் தயிர் நெய், வெண்ணெய் பொங்கி வெளி வருவது போன்று அனைத்து ஞானங்களும் பெறுகிறான்.

  குருவை பின்பற்றி பரிபூரணமாய் சரணடைவதின் மூலம் சீடன் துன்பங்களின் அடிப்படை அகந்தையை நசுக்கி விடலாம் என்றுபகவான் ரமணர் கூறியுள்ளார்.

  குருவும், சீடனும்  பொருளால் வேறுபட்டு தத்துவத்தால் இருவரும் ஒன்றாகி குரு தன் சக்தியால் சீடனின்  " நான்" என்ற அகங்கார உணர்வை அழிக்க முனைகிறார். " "நான் " அழியத் தோன்றுவான் ஈசன்.

    தட்சணா மூர்த்தி முன் ஜனகாதி சீடர்கள் நால்வரும் அமர்ந்தனர். குரு தட்சண மூர்த்தி சின்முத்திரை காட்டி மௌனியாகவே இருந்தார். சீடர்கள் அதன் தெளிவை

 உணரப் பெற்றார்கள். தம்மை உணர்ந்ததை மானசரீதியாக  ஜீவாத்மா  பரமாத்மாவை கண்டு கொண்டது. 

   நம்மை நாமே உணர்ந்து கொண்டால் கடவுளை உணர்ந்தவர்களாவோம்.


 சிறியதில் பெரியது தோன்றல் / குருவே சீடனை குருவாக வணங்குதல்


  சீடன் மடியில் தலை வைத்து கண்ணயர்ந்தார் குரு. அவ்வேளை மானச ரீதியாக வழிபாட்டுக் கொண்டிருந்த சீடன் அவரது (குருவினது) தலையை மெதுவாக மடியில் இறக்கி திடீரென்று எழுந்து நின்று தன்உடையை சிவ சிவா என்று கசக்கி, விம்மி விம்மி அழுதார் பின் சரியாகி விட்டது என்று சொல்லி முன் போல் அமர்ந்தார்.  குரு திடீரென அதிர்ச்சி யுற்று நடந்ததை வினவ, சிதம்பரத்தில் ஆரூத்தர தரிசனம் நடக்கும்வேளை தீபத்தை சிதம்பரேசனின்  அன்மையில் வைத்து விட்டார் அர்ச்சகர். பெருமானின் ஆடையில் தீ பற்றிக் கொண்டதைக் கண்டேன் அதை என்கைகளால் கசக்கி தணிித்து விட்டேன் என்று சொல்லி குதூகலித்தார், குரு திகைப்புற்று இதன் உண்மையை அறிய ஒருவரை அனுப்பி நடந்தது உண்மைதான்என்பதை அறிந்தவுடன் குரு,  சீடன் பாதத்தில் விழுந்து வணங்கி நீர்தான் என்குரு என்றார். இதுவே சிறியது பெரியதாகிவிட்டது. சீடன் குருவானார்.

    உமாபதி சிவாச்சாரியார் குருவால் ஆட்கொள்ளப்படுமுன் ஆலயத்திலிருந்து பகலில் ஒருவர் தீப்பந்தம்ஏந்தி வர பல்லாக்கில் வந்தார். அதை கவனித்த மறைஞான சம்பந்தர்  " அதோ பட்ட கட்டையில்  பகல் குருடு போகிறது " என்று ஏழனமாய் கூறியது  உமாபதி சிவாச்சாரியார் ஞானத்தை தொட்டது. மறுகணமே பல்லாக்கிலிருந்து குதித்த உமாபதியார் மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்து  பணிந்து நீங்கள் என்குரு என்று கூறி குருவாய்ஏற்றார்.  இவரே கொடிக்கவி பாடி சிதம்பரத்தில் உற்சவ கொடி ஏறச் செய்தவர்.

  இறைவன் திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் எழுந்தருளி ,மாணிக்க வாசகருக்கு நயன தீட்சை கொடுத்து குரு அருளும், திரு அருளும் அருளினார். ஞானாசிரியர் வேடம் கொண்டு அடிகளாரை அடிமையாக்கவே இவ்வாறு மானிட உருவில் வந்தார்.

 இதுபோன்றே நரேந்திரரிின்  மலத்தை நீக்கி சுவாமி விவேகாந்தர் என்ற பெயருடன் இலங்கு குரு அருளும் திருவருளும் நல்கினார் இராமகிருஷ்ணர்.

   சீடர்களின் இன்னல்கள்,இடுக்கண்கள்,  நாேய்கள் , இவைகளை தாமே ஏற்று குணப்படுத்திய குரு நாதர் பலர் இப்புண்ணிய பூமியில் வாழ்ந்துள்ளார்கள். சித்த சுத்தியும், சுத்த புத்தியும், குரு காட்டிய வழியை பின்பற்ற வழிவகுக்கும்.

   அடியவர் வழிபாடும் அதன்வழி தோன்றலான குருவின் வழிபாடும் உண்மையில் பரம்பொருள் வழிபாடே.

  குருவே சிவனெக் கூறினான் நந்தி

 குருவே சிவனென்பது குறித் தோரார்

 குருவே சிவனுமாய் காேனுமாய் நிற்கும்   ....... திருமந்திரம்


எனவே இறைவனே குருவாக வந்து பதி, பசு , பாசம் இவைகளின் நிலையை க் காட்டி அதை நீீக்கி அருள் புரிவார்.


எல்லோருமே வீடுபேற்றை அடையலாம். அதற்கு குரு காட்டிய வழியில் செல்வது அவசியம். எல்லோரும் குருவாகி விடமுடியாது. சச்சிதானந்தமே குரு.


ஒருவனது தாய் உண்மையில் பிரம்மத்தின் வடிவம்தான். அவள் பிரம்ம மயமானவள். அவளே குரு.


ஒரே ஒருவர் தான் குரு.அவரே சச்சிதானந்தம்.


எல்லோருமே குருவாக இருக்க விரும்புகிறார்களே தவிர, சீடராக இருப்பதற்கு யார் விரும்புகிறார்கள்?


தூயமனம், தூயபக்தி, பிரார்த்தனை, குருவின் உபதேசம் முதலியவை பக்திக்கு மிகவும் அவசியமானவை.

சத்குரு ஒருவர் கிடைப்பாரானால் சீடனின் அகங்காரம் விரைவில் அடங்கிவிடும்.


பக்குவப்படாத குருவாக இருந்தால் குருவுக்கும் வேதனை; சீடனுக்கும் வேதனை.


பக்குவப்படாத குருவிடம் அகப்பட்டுக் கொண்டால் சீடன் முக்தனாக மாட்டான்.


குரு யாரோ அவரே இஷ்டதெய்வம். குருவே இஷ்ட தெய்வத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.


குரு சீடனின் கையைப் பிடித்து இறைவனைக் காணும் வழியில் சீடனை அழைத்து செல்கிறார்.

ஒருவனுக்கு குருவின் அருள் கிடைத்து விட்டால், அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

‘இந்தக்காரியங்களை செய். இவற்றை செய்யாதே’ என்று குரு உபதேசம் செய்கிறார். பிறகு அவரே பயன் கருதாமல் சில காரியங்களை செய்யும்படி உபதேசிக்கிறார்.


சீடன் சிறிதேனும் ஞானசாதனை பழகினால், குரு அவனுக்கு ஒவ்வொன்றையும் தானே விளக்குவார்.


குருவின் அருளால் மெய் ஞானம் பெற்ற பிறகும், ஒருவன் உலக வாழ்க்கையில் இருந்தபடியே ஜீவன்முக்தனாக வாழ முடியும்.


குரு, சாது, மகாத்மாக்கள் ஆகியவர்களைப் பார்க்க செல்லும் போது வெறும்கையோடு போகக்கூடாது என சாஸ்திரம் விதித்துள்ளது.


பலருக்கு குருஅவசியம். அதைவிட இன்றியமையாதது குருவின் வார்த்தையில் நம்பிக்கை.


குருவைக் கடவுளாகக் காண்பவன் வெற்றி அடைவான்.

எட்டு பந்தங்களான வெட்கம், வெறுப்பு, பயம், சாதிப்பெருமை, குலப்பெருமை, ஆணவம், துன்பம், இழிவுஆகியவற்றை குருவின் துணையில்லாமல் அவிழ்க்க இயலாது.


குருவின் உபதேசத்தைக் கேட்டதும் உண்மையான பக்தனின் மனம் சலனமின்றி ஒரே நிலையில் நிற்கும்.

உண்மையான பக்தன் குருவின் மொழியை நன்கு புரிந்து கொண்டு, அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஆற்றல் பெற்றிருப்பான்.


குருவிடம் இறைவனை அடையும் மார்க்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தீட்சை தரும் குருவை சாதாரண மனிதனாக நினைக்கக்கூடாது. அவரை ஈசுவரனாகவே, இறைவனின் பிரதிநிதியாகவே நினைக்க வேண்டும்.


மனமுருகி இறைவனை அழைக்க வேண்டும். ‘என்ன செய்தால் இறைவனை அடையலாம்’ என்று குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.


குரு பூரண ஞானியாக இருந்தால்தான் சீடனுக்கு வழிகாட்ட முடியும்.

– ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளிலிருந்து


திருச்சிற்றம்பலம் 


x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக