வெள்ளி, 10 அக்டோபர், 2025

அப்பர் ஒரு புரட்சியாளர்:

 திருச்சிற்றம்பலம்


அப்பர் ஒரு புரட்சியாளர்:

விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்

மண்ணி னார்மற வாதுசி வாயஎன்று

எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்

பண்ணி னார்அவர் பாலைத் துறையரே.

-அப்பர் (தி. 5ப. 51பா.6)

அப்பர் ஒரு புரட்சியாளர்:

     புரட்சி என்பது சீர்கெட்டுப் போனதை - மீண்டும் சீர்மைபெறச்

செய்வதேயாகும். சுதந்திரமாக வாழ்ந்த இந்தியர்களை ஆங்கிலேயர் 150 ஆண்டுகட்கு மேலாக அடிமைப்படுத்தி ஆண்டு வந்தனர். சீர்கெட்டு நின்ற பாரத தேசந்தன்னை மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் போன்ற தலைவர்கள் பெரும் புரட்சி செய்தனர். மீண்டும் சுதந்திரப்பாதையில் இந்தியர்களை நடையிடச் செய்தனர். இதுவே புரட்சி. சீர்கெட்ட தனிமனிதரை அல்லது சமுதாயத்தை, அல்லது நாட்டை, செப்பஞ்செய்ய எடுக்கும் நடவடிக்கைக்கே புரட்சி என்ற பெயர் பொருந்தும். மக்களிடையே குழப்பம் விளைவிப்பதெல்லாம் புரட்சியாகாது.

     இக்காலத்தில், புரட்சி செய்து தேசத்தைச் செம்மை செய்த மகாத்மா காந்தியடிகளைப் போல், அன்று கடமை செய்யத் தவறியோரைக் கடமை வழிச் செலுத்தி. செம்மை செய்த புரட்சியாளர் அப்பர் அடிகள்.

     பகவத் கீதையில் கண்ணபிரான் அருச்சுனற்குக் கடமையை உணர்த்தினார்.

      "கர்மண்யேவ அதிகாரஸ்த்தே மாபலேஷு   கதாசன"

 என்பது கீதாசாரியன் வாக்கு. 'அர்ச்சுனா, கர்மத்தைச் செய்வதற்குத்தான் உனக்கு அதிகாரம். அஃதாவது உரிமை உண்டே தவிர பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரமில்லை. அஃதாவது உரிமை இல்லை' என்பது இதன்பொருள்.

     இது துவாபர யுகத்தில் நடந்தது. இப்போது நடப்பதோ கலியுகம். இதற்கு ஏற்ப அதே தர்மத்தைச் சொல்லவேண்டும். எப்படிச் சொல்வது? அப்பர் அதே உரிமையைக் கடமை என்ற சொல்லால் புரட்சிகரமாகச் சொல்கிறார். அப்பாடல் காண்க.

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்அடி யேனையும் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

-தி. 5ப. 19பா. 9


     'கடமையைச் செய்யத்தான் உனக்கு அதிகாரம். பலனைப் பற்றிக் கேட்க உனக்கு அதிகாரம் இல்லை. என்கின்றது கீதை.


     ஆனால் கடமையைச் செய்பவனுக்கு அதற்குரிய பலனைப் பகவான் கொடுத்தே தீர்கிறார். அணு அளவுகூடக் குறைக்கமாட்டார். அக்கருத்து அர்ச்சுனற்குத் தெரியும்; உயர்ந்தோரானதால்; யுகமும் துவாபரயுகமானதால், இக்கருத்தைக் கலியுகத்தில் அப்பர் சுவாமிகள் புரட்சிகரமாகத் திருக்கடம்பூர்த் தேவாரத்தில் தெளிவாக விளக்குகிறார். கீதையில் கண்ணன் கர்மத்தைச் செய்யத்தான் அதிகாரம் என்று சொன்னார். அப்பர், உரிமை என்ற சொல்லையும் புரட்சிகரமாக மாற்றி, கடமை என்ற சொல்லாலேயே கடவுளின் கடமையையும், மக்களின் கடமையையும் குறிப்பிட்டுள்ளார். கடவுளின் கடமை மக்கட்கு உரிமையாய் விடுகிறது. மக்களின் கடமை கடவுளுக்கு உரிமையாகி விடுகிறது. உரிமைப் போராட்டத்திற்கே இடமில்லாமல் கடமை என்ற சொல்லாலேயே அவரவர்க்கு உள்ள உரிமையைக் கிடைக்கச் செய்துவிடுகிறார்

இதை எல்லோரிடத்தும் வைத்துத் தெளிவு பெறலாம். முதலாளி செய்யும் கடமை தொழிலாளிக்கு உரிமை. தொழிலாளி செய்யும் கடமை முதலாளிக்கு உரிமை. கணவன் செய்யும் கடமை மனைவிக்கு உரிமை. மனைவி செய்யும் கடமை கணவனுக்கு உரிமை. பெற்றோர் செய்யும் கடமை மக்களுக்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை பெற்றோர்க்கு உரிமை. ஆசிரியர் செய்யும் கடமை மாணாக்கர்கட்கு உரிமை. மாணாக்கர் செய்யும் கடமை ஆசிரியர்கட்கு உரிமை. அரசு செய்யும் கடமை மக்கட்கு உரிமை. மக்கள் செய்யும் கடமை அரசுக்கு உரிமை. இறைவன் செய்யும் கடமை உயிர்கட்கெல்லாம் உரிமை. உயிர்கள் செய்யும் கடமை இறைவனுக்கு உரிமை. கடவுள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார். சூரியன், சந்திரன்,

நட்சத்திரங்கள் காலத்தில் உதிப்பது கடவுளின் கடமை தவறாமையைக் காட்டுகிறது.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக