திங்கள், 26 டிசம்பர், 2016

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் / திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)



இறைவர் திருப்பெயர்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: பெரிய நாய்கி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை
தல மரம்: வன்னி
தீர்த்தம் : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்
வழிபட்டோர்: பிரமன், அகஸ்தியர், 1. சம்பந்தர் - 1. மத்தாவரை நிறுவிக்கடல், 2. தேவராயும் அசுரராயும், 3.

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும்.
தல வரலாறு

சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்றது. எனவே,முதுகுன்றம் எனப்படுகிறது.


சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.


இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும். 

சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.
ஆழத்து விநாயகர்
முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆகமக் கோயில்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
கோயில் சிறப்பு
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும்.
 இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு. காசியில் இறந்தால் முத்தி என்பது போல் இத்தலத்திற்கு இப்பெருமை உண்டு, 
முக்கிய திருவிழாக்கள் ,,மாசி மகம்,ஆருத்ரா தரிசனம்,பிரதோஷம்,சிவராத்திரி
ஆடிப்பூரம்

சிறப்புகள்

இத்தல விநாயகர் , பாதாள விநாயகர் மிக்க சிறப்புவாய்ந்தவர்.


சோழர்கள், காடவர், பாண்டியர், விஜய நகரத்தார் மற்றும் குறுநில மன்னர்கள் ஆகியோரது கல்வெட்டுகள் மொத்தம் 74 உள்ளது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, இன்று விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விழுப்புரம் - திருச்சி இரயில் பாதையில் உள்ள முக்கிய இரயில்நிலையமாகும். நிலையத்திலிருந்து 2-கி. மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 04143 - 230203

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக