அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே
திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம். ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும் நிலையையும் அனுபவத்தையும் அருளவல்ல அருள் நூல் திருவாசகம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து ஓதுவார்தம் உள்ளத்தைச் சிக்கெனப் பிடித்துத் தம்பால் ஆழ்த்தும் உயர்நூல் திருவாசகம். ஆசை அற வேண்டும், பிறவி விழ வேண்டும். வீடு பெற வேண்டும் என நினைப்போரை முத்திக் கரையில் கொண்டு சேர்க்கும் தெப்பம் திருவாசகம். உயிர்க்கு ஊதியம் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை விளக்குவதும், தில்லைக்கூத்தன் தம் கைப்பட எழுதிய பெருமையை உடையதுமான தேன்சுவையைப் பயப்பதும் திருவாசகமே. நிலையில்லா உலகியல் இன்பத்தையும் நிலைபெற்ற சிவாநுபவத்தையும் இணைத்துப் பாடும் இயற்றமிழ்ப் பனுவலான இத்திருவாசகத்தை எல்லோருக்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் தமிழ்ப்பரிதி டாக்டர் ப. சரவணன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக