புதன், 10 ஜூன், 2015

ஆதி சித்தர்கள்


ஆதி சித்தர்கள் பதினென் சித்தர்கள்வரலாற்றில் சித்தர்களுக்கெல்லாம் ஆதியாய், தீட்சை பெறாத சித்தர்களுக்கெல்லாம் மூலகாரணமாக காரணமானவர்கள் குரு தட்சணாமூர்த்தி, சுப்பிரமணிய சித்தர், நந்தி தேவர் ஆகிய மூவர்கள், இவர்கள் சித்தர் பரம்பரையனர் அல்லர், சித்தர்கள் தோன்றுவதற்கு மூல காரணமானவர்கள். இவர்கள் பதினென் சித்தர்கள் எண்ணிக்கையில் சேராதவர்கள். 1. குருதட்சணாமூர்த்தி : இவர் ஆதியும் அந்தமும் ,அருவமும், உருவமும், அருவுருவமும் அல்லாத ஞான மயமான மூலப்பொருளின் வெளிப்பாடே ஆவர், இவர் குரு தட்சணாமூர்த்தி வடிவத்தில் முதல் ஞானாசிரியராக வெளிப்பட்டு சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் மோன நிலையில் இருந்து சூன்ய மயமான சுத்த பரஞானத்தை சொல்லாமல் சொல்லி புரிய வைத்தே பிரபஞ்சத்தின் முதல் உபதேசமாகும். இவர் சித்தர் பரம்பரை தோன்றுவதற்கே முதல் வித்திட்டவர் ஆவார். சிவபரம்பொருளின் முதல் அவதாரமே குருதட்சணாமூர்த்தி, இவர் எட்டு சீடர்களுக்கு ஆன்மீக ஞானத்தை உபதேசம் செய்திருக்கிறார், நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரம பாதர், திருமூலர் என்று திருமந்திர பாடல் வாயிலாக நாம் அறிய திருமூலரே கூறியுள்ளார், பாடல் 68, நந்தி அருள் பெற்ற நாதரை நாடின் ............. என்னோடு எண்பருமே " 2, சுப்பிரமணிய சித்தர்: சிவனாரின் தவஞான நிலையில் ஆக்ஞை பீடமான அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப பொறிகளாக வெளிப்பட்ட ஞான ஒளி விளக்கே சுப்பிரமணிய சித்து. பஞ்ச முக சிவத்தின் ஆக்ஞை மையத்திலிருந்து பிரபஞ்ச ஆற்றலின் உன்னத நிலையான ஆறுமுக சிவமாக இந்த சித்து வெளிப்பட்டது. இந்த சித்து மனித இதயமான அகத்திற்கு உணர்த்திய உன்னத ஞானமே சுப்பிரமணியஞானம். ஒரு உண்மை குரு முகமாக இந்த ஞானத்தை ெபெறுபவர்கள் யாவருமே அகத்தியர்கள்தான். அகத்தியம் என்ற சொல் ஒரு காரணப் பெயர், அதை அகம் - தீ - அர் என பிரித்தால் அது ஞானத்தீயையே இதயமாக கொண்டவர் என்று பொருள் படும். இந்த அகத்தீயை தன்மயமாக கொண்டவர் சுப்பிரமணிய சித்து. இந்த காரணப் பெயர் சு - பிரம்ம - மணி - அர் என பிரிந்து " தூய பரவெளி முழுவதும் ஊடுருவி நிறைந்துள்ள இரத்தின மயமான ஞானப் பேரொளியாக உள்ளவர் என்று பொருள் படும். இவரது அகத்தீயை முழுவதுமாக உள்வாங்கி எங்கும் பிரதிபலித்து வரும் பண்பின் உருவமாக வெளிப்பாடே அகத்தியர். அகத்தியம் என்பது ஒவ்வொரு மனிதனின் உண்மையான ஆன்ம தரிசனமே ஆகும். இதுவே மகா நட்சித்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ஆகவே அகத்தியர் என்ற முனிவர் - சித்தர் சுப்பிரமணிய ஞானத்தை முழுமையாக தெரிய வைப்பதே இந்த அகத்தியர் வரலாறு என்பதையும் உணரலாம். 3, நந்தி தேவர் : சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்த வண்ணம் நந்தி தேவர் அமர்ந்திருப்பார். நந்தியின் அனுமதி பெற்றுத்தான் சிவதரிசனம் செய்யவேண்டும் என்பதும், நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் நந்திதேவனை மறைத்து நின்று சுவாமி தரிசனம் செய்யக் கூடாது என்பதும் சைவ மரபு. காரணம் நந்தி சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்பதே. இடைவிடாது வாசி ஓட்டம் (உள் சுவாசம், வெளிச் சுவாசம் ) நடைப் பெற்றுக் கொண்டுள்ளது. சிவமும் நந்தியும் பிரிக்க முடியாத ஒன்று என்று காண்க. ஆதிகுரு தட்சணாமூர்த்தியான பரம்பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர், அவர்களில் நந்திகள் நால்வர் என திருமூலர் குறிப்பிடுகிறார். அந்த நால்வர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்பவராவர். இந்த நந்திகள் நாலவரும் குருதட்சணாமூர்த்தியிடம் மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்லர் , என்பதை உணரவேண்டும். இவர் திருக்கயிலாய பரம்பரையை சேர்ந்தவர், சிவனாருக்கு வாயில் காப்பவராகவும், வாகனமாகவும் இருந்தவர் இந்த நந்தியம் பெருமான். தோற்றம்: தஞ்சையிலுள்ள திருவையாறு தலத்தில் சிலாத முனிவர் என்பவர் நந்தியம் பெருமானின் தந்தையாவார். அவருடைய மனைவி சாருட்சன என்ற சித்ரவதி என்ற அம்மையார் . இந்ந தம்பதியருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லை. இத்தருணத்தில் சப்தரிஷிகள் இவருடைய ஆசரமத்திற்கு உணவருந்த வந்தனர், அப்போது சிலாத முனிவருக்கு மகப்பேறு இல்லாததை அறிந்து குழந்தைச் செல்வம் இல்லாத ஆசரமத்தில நாங்கள் உணவருந்துவதில்லை என கூறி உணவருந்தாமலே திரும்பிவிட்டனர் இது கண்டு தம்பதியர் மிக மனம் வருந்தி தங்களுக்கு மகப்பேறு வேண்டி சிலாத முனிவர் கடும் தவம் மேற்கொண்டார், இவரின் தவத்தினை கண்டு மனம்இரங்கிய சிவனார் " முனிவரே உங்களுக்கு கருவில் இருந்து பிறவாத திருமகன் ஒருவன் கிடைப்பான் அவன் எனக்கு சமமானவன் மரணமில்லாதவன் என்னை வழிபடுகிறவர்கள் அவனையும் வழிபடுவார்கள் "என்று கூறி மறைந்தார். அதன்படி சிலாத முனிவர் ஒருநாள் பூமியை தோண்டும் போது ஒளிவடிமான பிரகாசிக்கும் பேழையில் நந்தி தேவர் கிடைத்தார், நந்தி தேவருக்கு எட்டு வயது ஆகும் போது மரணமில்லாத வாழ்வு பெற எட்டு கோடி ஜபம் செய்து அழிவில்லா வாழ்நாளை பெற்றதுடன் கயிலையில் சிவத்தொண்டு செய்யவும் காவலனாகவும் இறைவருக்கு வாகனமாகவும் இருக்கும் வாய்ப்பு பெற்றார், இவரே சிவனாரின் நேர் மெய் காவலனாகவும் இறைவரின் சம அந்தஸ்து பெற்று சிவனடியார்களுக்கு இன்றும் அருள்பாலித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் நன்றி : பதினென் சித்தர்கள் வரலாறு மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக