புதன், 24 ஜூன், 2015

பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள்


பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய் நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய். ஸ்ரீ குருஞானசம்பந்தர் இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி இன்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்பது யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது. நோயும் மருந்தும்: பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது. எனவே "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு இணங்கப் பிறவிநோய் எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல் வேண்டும். ஆசை பாசம் சினம் அகல: "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும் வித்து", என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது என்பதை உணர்கிறோம். ஆசை எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும். ஆணவத்தை அகந்தைக் கிழங்கு என்கிறார் குமரகுருபரர், "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்பது அவர்தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத் தொண்டர் உள்ளத்தே இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும். ஆணவமாகிய பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச் சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து உருவேற்ற வேண்டும். இந்நிலை எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக் குற்றங்களும் அகலவேண்டும்.அப்போது தான் குருநாதரை அணுகி ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும். சினம் முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள் ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு துணையாய் உள்ளன. அத்திருமுறைகளைப் பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால் தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார். ஒரு மனிதன் பிறவி நீங்க வேண்டுமானால் ஆசாரியரைச் சரணடைய வேண்டும். அவர் கற்பித்த வழிநின்று திருமுறைகளைப் பன்னாளும் பயின்று ஓதுதல் வேண்டும், ஓதினால், சினம் அகலும், சினம் அகன்றால் நல்ல குருநாதர் நமக்கு அஞ்செழுத்தை உபதேசிப்பார், அவ்வஞ்செழுத்தை, நின்றாலும் இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்றாலும் துயின்றாலும், விழித்தாலும் இமைத்தாலும், ஓதியும் உணர்ந்தும் உருவேற்றினால், சிவபூசைபுரியும் வாய்ப்பும் ஆசாரியனால் கிடைக்கும். அச்சிவபூசையைப் பன்னாளும் பயின்று முறையாகப் பூசித்து வந்தால் பாசம் அகலும். பாசம் அகன்றால் பிறவி அறும். வீடு பேறு கிட்டும். `அற்றது பற்றெனில் உற்றது வீடன்றோ' இதனையே ஞானசம்பந்தரும் தமது தேவாரத்தில் "அற்றவர்க் கற்ற சிவன்' என்று ஓதினார். பற்றற்ற பரம்பொருள் பற்றற்றவர்கட்குப் பற்றுக் கோடாயிருந்து அருள் புரியும் என்பது இதன் கருத்து. வீடும் ஞானமும்: குருஞானசம்பந்தர் பாடலில், "திருமுறைகள் ஓதாய்" என்று பிரித்துச் சொன்னால், திருமுறைகளை ஓதுவாயாக என்பது பொருளாகும். "திருமுறைகளோ தாய்" என்று பிரித்துச் சொன்னால் திருமுறைகளே நமக்கெல்லாம் தாயாயிருந்து அருள்புரிந்து வீடுபேறு நல்கும் என்பது பொருளாகும். திருமுறைகளை ஓதுவிப்பதற்கும் ஒரு ஆசான் வேண்டும். அதைத்தான் ஞானசம்பந்தர் திருவலஞ்சுழித் தேவாரத்தில் குறிப்பிடுகின்றார். வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் வேண்டுவீரானால் விரதங்களால் மட்டும் ஞானமும் வீடும் கிடைத்து விடாது. வலஞ்சுழியில் நமக்கெல்லாம் ஞானத் தந்தையாக எழுந்தருளியுள்ள ஈசனை நாடுவதும், ஞானசம்பந்தனுடைய செந்தமிழைக் கொண்டு இசை பாடும் ஞானம் வல்ல ஓதுவாரடி சேர்வதுமே உனக்கு வீடும், அதற்கு ஏதுவாகிய ஞானமும் கிடைத்தற்கு வாயில் என்கிறார் ஞானசம்பந்தர். எனவே, முதலில் திருமுறைகளை ஓதுவாரடி சேர்க, என்று உபதேசிக்கிறார். வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால், வாடின் ஞானம்என் னாவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே. (தி.2 ப.2 பா.11) இது ஞானசம்பந்தரின் இரண்டாவது திருமுறையில் இரண்டாவது பதிகத்தின் இறுதிப்பாடல் காட்டும் உபதேசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக