ஞாயிறு, 19 ஜனவரி, 2014


சிவலிங்கம் " ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றும், மாமழை போற்றுதும், " என் ஆரம்பிக்கிறது சிலப்பதிகாரம், இயற்கை வழிபாட்டை அது போற்றுகிறது. சூரியன், சந்திரன் மழை, மலை, என தனக்கும் மீறிய பொருட்களை வணங்கத் தொடங்கினான் ஆதிகாலத்திலேலே மனிதன் .இயற்கையாகப் பொருட்கள் தோன்றும் வடிவம் அனைத்தும் சிவலிங் வடிவம் தான் ஏன் மனித வடிவம் கூட சிவலிங்கமாக கூறுகிறார் திருமூலர். மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் என்றார். இயற்கையின் சுயவடிவமே சிவலிங் வடிவம்.அது இயற்கையாக தோன்றுவதே சுயம்பு என்கின்றனர். சுயம் என்றால் தன், தானாக என பொருள்படும். சிவலிங்க வழிபாடு ஒர் இயற்கை வழிபாடு. இதுவே காலத்தால் முந்திய வழிபாடு. இயற்கை உருவமான காலத்தே சிவலிங்க வடிவம் என கொள்ள வேண்டும். அவ் இயற்கையையும் தோற்றுவித்தவன் சிவன்தானே. நிலம் நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதப் பொருள்களை தொழிற்படுத்துபவன் இறைவன். அவை ஒன்றோடு ஒன்று கூட உண்டாவது இவ்வுலகம். உலகப் பொருட்கள் நம் உடல், இப்படி அவை கூடும் போது இயலபாகத் தோன்றுவதே சிவலிங்க வடிவம். ஆக இயற்கை என்னும் பேராற்றலையே, இயற்கையே வடிவ மான சிவலிங்க வடிவத்தில் நாம் வழிபடுகிறோம். தானாக செயல்பாடற்று " சிவனே " என்று என்றும் உள்ளதை சிவம் என்கிறோம். அதுவே நமக்கென இறங்கி வரும்போது அதன் ஆற்றலை சக்தி (Energy) என்கிறோம். அந்த ஒரே பரம் பொருள்தான் நமக்கு சிவனாகவும் சக்தியாகவும் இருபொருளாகக் காட்சி தருகிறது. நாம் வணங்கும் சிவலிங்கத்தின் கீழ்ப்பாகம் (ஆவுடை) பெண்பாகம், மேலுள்ள இலிங்ம் ஆண்பாகம் ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் அது சிவனையும் அவன் சக்தியையும் ஒருசேர வழிபட்டதாகும், சிவ உருவில் ஒருபாகம் சிவனாகவும், மறு பகுதி (இடப்பக்கம்) பராசக்தியின் உருவத்தையும் கொண்டுள்ளார் என்று ஆன்மீக வரலாறு கூறுவதை நாம் அறியலாம். சிவந்தவனை சிவப்பு நிறம் உடையவனைச் சிவன் என்கிறோம். செம்மை என்றால் சிவப்பு முழுமை செம்மை உடையவன் சிவன். " சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் " என்கிறார் அப்பர். லிங்கம் என்ற சொல்லில் "லிங்" என்பது ஒடுக்கத்தையும் "கம்" என்பது தோற்றத்தையும் குறிக்கும் அதாவது அனைத்தையும் தோற்றுவித்துக் காத்து ஒடுக்குபவன் அவன் என்பதை இச்சொல் உணர்த்துகிறது. நாம் அனைத்தையும் சிவமாகவே காண்பதால் " சிவமயம்" எனத் எழுதித் தொடங்குகிறோம். நம் எண்ணம் செயல்பாடு அனைத்தும் அவனை நோக்கியதாக உள்ளன என்பதையே இது காட்டுகிறது. எனவே இவ்வுலகில் நமக்கு அருள வேண்டி அவன் எடுத்த திருமேனியே சிவலிங்க திருமேனி ( இயற்கை என்கிற திருமேனி) அதுவே நமக்கு அனைத்து வளங்களையும் அளிக்கிறது. " பொன்னும் மெய்பொருளும் தருவானை " என்கிறார் சுந்தரர். பொன்னும் அவனே கொடுப்பவன் ( அது அழியக்கூடியது) அழியாத மெய்பொருள் என்னும் வீடுபேற்றையும் அவனே தருவான். மேலும் " வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் " என்று அப்பரும் " வேண்டத்தக்கது அறியாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ " என மாணிக்க வாசகரின் கூற்றும் இதனை முன்னிருத்தி பாடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவில் மண்ணுலகில் வேண்டுவார்க்கு வேண்டுவன அருள்வான் ஈசன் என்கிறார்கள், இம்மண்ணில் நமக்கு அருள் தருவதற்கென்றே அவன் தன் ஆற்றலோடு எடுத்தது சிவலிங்க உருவம் அது ஓர் இயற்கையான திருஉருவம். திருச் சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக