திங்கள், 11 ஜூலை, 2022

வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்

 வேண்டுதல் வேண்டாமை இலான் நம் இறைவன்


வெறுப்பு விருப்பு இல்லாதவன் சிவபெருமான். எல்லா உயிர்களிடத்தும்நீக்கமற நிறைந்து நிற்கும் பரமான்ம சொரூபியாய் இருப்பவன். உயிர்க்குள்ள இயல்பு ஏதும் இல்லாத இறைவன் சச்சிதானந்த சொரூபியாய் , தான் நினைத்த வடிவத்தைத் தானே அமைத்து நிறுத்திக் கொள்பவன், அவன்உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப அருளுதல் பொருட்டு வடிவம் கொள்வதாலும், அவ்வாறு அவன் வடிவம்கொள்ளாவிடில் உயிர்கள் அவனை வழிபட்டு உய்யும் வழியை அறியா, ஆதலாலும் அவ்வாறு வடிவம் கொள்ளுதல் அவனுக்கு எந்த வித பயனும் இல்லாததாலும் , அதனால் அவனுக்கு எந்த குறையும் நேராது என்பதால் அவன் விருப்பு வெறுப்பு அற்ற எதையும் தன் பொருட்டு வேண்டாதவனாகையால் வள்ளவர் பெருமான் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறார. அவர் உயிர்களை உய்விக்கும் பொருட்டே தனது வடித்தை அமைத்து அருள்பாலிிக்கிறான்.

  நின்மலன் ஆகிய சிவபெருமான் நிலைபேறு உடடைய மேலான சிவசக்தி தனது வெவ்வேறு செயல்பாட்டினால் இச்சா, கிரியா, ஞான சக்தி என்னும் மூன்று ஆற்றல்களாக கொண்ட இச்சக்திகளை பொருந்தி, போறறுவதற்கு உரிய சிவபெருமான் அந்த ஆற்றல்களோடு திருவருளே திருமேனியாககொண்டு நிற்பன். உயிர்களுக்கு அருளுதல் பொருட்டு பொது வகையால் அறிவித்தும் அறிந்தும் நிற்பதாகிய ஞானம் ஒன்றே சிவசக்தியின் சொரூபம்ஆகும். அதுவே பராசக்தி எனப்படும். உயிர்களுக்கு மலபரிபாகம் வருதல் பொருட்டு அந்த பராசக்தி ஐந்தாெழில் ஆற்றுகின்றது. அந்நிலையில் அது ஆதிசக்தி அல்லது திரோதான சக்தி எனப் பெறுகிறது. அந்த வகையில் செயல்படும் போது அது இச்சா ஞான கிரியா சக்திகளாக மூவைப்பட்டு நிற்கிறது. இந்த சக்திகளை சிவ பெருமான் பொருந்துி நிற்கும் நிலையில் சக்தி காரியமான அருள் திருமேனி உண்டாகும். 

  அச்சக்திகளுள் ஞான சக்தியை சிவன் பொருந்திய போது நிட்கள திருமேனி ஆகிய அருவம் உண்டாகிறது. அந்நிலையில் சிவம் என்னும் பெயர் பெறுகிறது. 

  சிவபெருமான் ஞானசக்தியையும், கிரியா சக்தியையும் சமமாகப் பொருந்திய நிலையில் அவன் சதாசிவன் எனப்பெயர் பெறுகிறான். 

  ஞானசக்தி குறைந்தும் கிரியா சக்தி மிகுந்தும்இருக்கும் நிலை யில் அவன் மகேசுவரன் என்னும்பெயர் பெறுகிறான்.

 சிவம், சதாசிவம், மகேசுவரம் ஆகிய இந்த மூன்று மூர்த்தங்களுக்கும் தம்முன் பேதமாே, ஏற்றத்தாழ்வே இல்லை. சக்திகளின் தொழில் வேறுபாட்டினால் இப்பேதகங்கள் உண்டு. உயிர்களின் அறிவு நிலை வேறுபாட்டிற்கு ஏற்ப, சக்திகளின் தொழில்  வேறுபாடுகள் நிகழ்கின்றன.

  சிவதத்துவங்கள் தோன்றுதல்

  சுத்த மாயையை ஞான சக்தி பொருந்துவதால் நாத தத்துவமும், கிரியா சக்தி பொருந்துவதால் விந்து தத்துவமும் , ஞானமும் கிரயையும் சமமாக பொருந்துவதால் சதாசிவ தத்துவமும், கிரியா சக்தி கூடி, ஞான சக்தி குறைந்து பொருந்துவதால் ஈஸ்வர  தத்துவமும் , ஞானசக்தி கூடி கிரயா சக்தி குறைந்தும் பொருந்துவதால் வித்தை என்னும் தத்துவமும்தோன்றும். 

  இறைவன் அடைந்த இந்த மூன்று திருமேனிகளும் சிவபெருமானின் தடத்த திருமேனியாகும். 

 விருப்பு வெறுப்பு காரணமாக உயிர்களுக்கு நிகழும் சுகதுக்க மோகங்கள் இல்லாதவன் இறைவன்.எனவே ஒப்பற்ற ஒருதனிப்பொருளாய் இருப்பவன், எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து பரமான்ம சொரூபமாய் இருப்பவன் அவனுக்கென்று எந்த வித வேண்டுதல் , வேண்டாமை இல்லாதவன் நம் சிவபெருமான்,

திருச்சிற்றம்பலம்

தகவல் சிவப்பிரகாசம் பாடல் 14, 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக