செவ்வாய், 17 ஜனவரி, 2023

சைவ சித்தாந்தம் அத்துவிதம்

 சிவஞான போதம் – இரண்டாம் நூற்பா

இரண்டாம் நூற்பா
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே” (சிவஞானபோதம் – நூற்பா-2)
பெண் ஒருத்தி பருவம் அடைந்து உரிய காலத்தில் நல்ல கணவனைத் திருமணம் செய்கிறாள். கருவுற்றுப் பத்து மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை வளர்ந்தபின் பள்ளிக்குச் செல்கின்றது. கருவுற்ற காலத்தில் குழந்தையும் தாயும் ஒன்றாக இருந்தனர். பிறந்த குழந்தை சில காலம் தாயாருடன் இருந்தது. வளர்ந்த பின் தாயை விட்டுப் பிரிந்து வேறாகப் பள்ளிக்குச் செல்கின்றது. ஒன்றாக, உடனாக, வேறாக இருக்கும் நிலையைக் கண்கூடாகக் காண்கிறோம். அதுபோல இறைவன் ஞான நிலையில் அருவநிலையில் உலகத் தொகுதியுடன் ஒன்றாகவும், உடனாகவும், வேறாகவும் இருப்பான். தத்துவ உலகில் அவ்வாறு இருத்தல் அத்துவிதம் என வழங்கப் பெறுகிறது.
உலகத்துக்கு முதல்வனாக உள்ள இறைவன் உயிர்களுக்காக உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கின்றான். உடம்பு இருந்து செயல்படுவதற்கு உயிர் அந்த உடம்புடன் கலந்து அவ்வுடம்பாகவே நிற்கும். அதுபோல உயிர்கள் நிலைபெற்றுச் செயல்படுவதற்கு அவ்வுயிர்களிடத்து இறைவன் கலந்து அவ்வுயிராகவே இருப்பான். இவ்வாறு இருத்தல் ஒன்றாய் நிற்றல் என வழங்கப் பெறும்.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி”
என்று திருவாசகத்தில் வருவது இத்தகைய ஒன்றாய் நிற்றல் ஆகும்.
கண்கள் காண்பதற்குத் துணையாக ஒளியைத் தருவது சூரியன் ஆகும். சூரியன் கண்களிலிருந்து வேறாதல் போல உயிர்களிடத்தில் அறிதலைச் செய்வதற்குத் துணையாக நிற்கும் இறைவன் அவ்வுயிர்களின் வேறாக நிற்பான்.
“மண் அல்லை, விண் அல்லை, வலயம் அல்லை
மலை அல்லை, கடல் அல்லை, வாயு அல்லை”
என்று தேவாரத்தில் வருவது வேறாக நிற்றல் ஆகும்.
கண் ஒளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவு உடன் நின்று காண வேண்டும். சில சமயங்களில் வேறு சிந்தனையுடன் நடந்து கொண்டிருப்போம். கண்கள் விழிந்திருந்தாலும் எதிரில் வரும் நண்பரைக் காண்பதில்லை, பார்க்காமலேயே நடந்து கொண்டிருப்போம். உயிரறிவு கண்களுடன் பொருந்தி உடன்நின்று காணாததால் அந்நிலை ஏற்படுகின்றது. அதுபோல இறைவன் உடனிருந்து அறிவிக்கவில்லை என்றால், உயிர்கள் அறிய மாட்டா. உயிர்கள் பொருள்களை அறிந்து அனுபவித்தலுக்கு இறைவன் உடனாய் நிற்றல் வேண்டும்.
“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துவிசுகளுக்கு உடனாகி”
என்று சுந்தரர் பாடியது இறைவன் உடனாய் நிற்றலை உணர்த்தும்.
இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இரண்டறக் கலந்து நிற்றலைச் சைவ சித்தாந்தம் அத்துவிதம் என்று கூறுகின்றது. இறைவன் உயிர்களுடன் செயல்படும் நிலைக்கு மூன்றுவிதமான கருத்துக்கள் தத்துவ உலகில் கூறப் பெறுகின்றன.
1) பொன்னே ஆபரணமாவதைப் போல பிரம்மமே உயிராயிற்று என்று ஏகான்மவாதிகள் கூறுவர்.
2) இருளும் ஒளியும் போல இறைவனும் உயிரும் வேறு வேறு என்று மத்துவர் கூறுவர்.
3) சொல்லும் பொருளும் போல இறைவனும் உயிரும் ஒருவிதத்தில் ஒன்றாயும் வேறு விதத்தில் வேறாயும் இருக்கும் என்று வைணவர் கூறுவர்.
ஆனால் இம்மூன்று கொள்கையும் சைவ சித்தாந்தத்தில் மறுக்கப் பெறும்.
உயிர்கள் மனத்தால் நினைத்தலையும், வாயால் சொல்லுதலையும், உடம்பால் செய்தலையும் மேற்கொள்கின்றன. இவை வினை என வழங்கப் பெறும். வினையின் பயன் விளையும்போது இன்பமாயின் நல்வினை என்றும் தீமையாயின் தீவினை என்றும் பெயர் பெறும். வினைகள் அறிவில்லாத சடமாகலான் தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா. வினையும் வினைப்பயன்களையும் உயிர்களுக்குக் கூட்டுபவன் இறைவன் ஆவான்.
வினைப் பயன்களையும், பயன்களை அனுபவிப்பதற்குரிய உடல் கருவிகளையும் இறைவன் தன் ஆணையாகிய திருவருட் சக்தியால் தோற்றுவிப்பான். இறைவன் எண்ணத்தையே தனக்கு ஆணையாகக் கொண்டு திருவருட் சக்தி இயங்குவதால் அதனையே ஆணை என்றனர். ஆணையாகிய திருவருட் சக்தி வினைப் பயன்களை நுகர்தற்கேற்ப உடல் கருவிகள் முதலியவற்றை கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டும் போது பிறப்பும், நீக்கும்போது இறப்பும் உண்டாகின்றன.
எனவே இறைவன் உயிர்களுடன் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நின்று தன்னுடைய ஆணை எனப் பெறும் திருவருட் சக்தியினால் செலுத்தப் பெற்று வரும் இரு வினைகளால் உயிரின்ங்கள் பிறப்பு இறப்புகளை மேற்கொள்கின்றன என்பது தெரிய வருகின்றது. செந்தாமரைப் பூவின் செம்மையை பூவிலிருந்து பிரிக்க முடியாமல் ஒன்றியிருப்பதைப் போல ஆணையாகிய திருவருட்சக்தி இறைவனை விட்டு நீங்காமல் ஒன்றி இருக்கும்.
“அவையே தானேயாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கமின்றி நிற்கும் அன்றே” (சிவஞானபோதம் – நூற்பா-2)
அவையே யாய் நிற்கும் – இறைவன் உயிர்களுடன் கலந்து ஒன்றாய் நிற்பான். தானேயாய் நிற்கும் – பொருள் தன்மையினால் உயிர்களின் வேறாய் நிற்பான். அவையே தானேயாய் நிற்கும் – அவையும் (உயிர்களும்) தானுமாய் உடனாய் நிற்பான். ஆணையின் இரு வினையின் – தன்னுடைய திருவருட் சக்தியினால் வருகின்ற இரு வினைகளுக்கு ஏற்ப. போக்குவரவு புரிய – உயிர்கள் பிறந்தும் இறந்தும் வருமாறு செய்து. ஆணையின் நீக்கமின்றி நிற்கும் – அத்திருவருட் சக்தியின் நின்றும் தான் வேறாதல் இல்லாமல் கலந்து நிற்பான். 1) இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் அத்துவித நிலை.
2) உயிகளுக்கும் உண்டாகும் – உயிர்கள் செய்யும் இரு வினைகள்.
3) இருவினைகள் காரணமாக வரும் பிறப்பு இறப்புகள்.
4) வினைகளைச் செயல்படுத்தும் திருவருட் சக்தி.
ஆகிய நான்கு பற்றிய செய்திகளே இரண்டாம் நூற்பாவில் விரிவாக விளக்கப் பெறுகின்றன. மெய்கண்டார் பத்து வெண்பாக்களில் அவற்றை விளக்கியுள்ளார். அவர் மாணக்கர் அருள்நந்திசிவம் சிவஞான சித்தியாரில் அறுபத்தாறு பாடல்களில் அவற்றை விளக்கமாகப் பாடியுள்ளார். சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவின் செய்திகளை ஏறக்குறைய 170 பக்கங்கள் மிக விரிவாக விளக்கு எழுதியுள்ளார். படிப்போர் புரிந்துகொள்ளும் முறையில் சில செய்திகள் சுருக்கமாகத் தரப் பெறுகின்றன.
நாடி, நரம்பு முதலியவற்றால் கட்டப்பெற்ற உடம்பினையும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளையும் பற்றி நிற்கும் உயிரானது – உடம்பிற்கு வைத்த பெயர் கொண்டு முருகா! கந்தா! என்று பிறர் அழைத்த போது, ஏன்? என்று கேட்கும்.
இருவர் ஒன்றாகச் செல்லும் போது அவ்வாறு பெயரைச் சொல்லி அழைத்தால் அப்பெயருக்கு உரியவன் ஏன்? என்று கேட்பான். உடம்புக்கு வைத்த பெயர் கொண்டு அழைத்தபோது உயிர், ஏன்? என்று கேட்டதற்குக் காரணம் உயிரானது உடம்பு என்றும் தான் என்றும் வேற்றுமை காணாமல் ஒன்றாக நிற்பதே காரணமாகும். அதுபோல இறைவன் உயிர்களிடத்தில் வேறுபடாது நன்றாக இயைந்து நிற்பதே கலப்பினால் ஒன்றாக நிற்றல் எனப்படும்.
உயிரும் மெய்யுமாக உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் ‘அ’கரம் முதலானாற் போல உயிர்களும், உடம்புகளுமாக உள்ள உலகத்திற்கு இறைவன் முதல்வன் ஆவான்.
“அகர முகர எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ”
என்று திருவள்ளுவரும் அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறியுள்ளார். அகரம் தானும் இயங்கிப் பிற எழுத்துகளையும் இயக்கும். ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்’ என்பது தொல்காப்பியம். அகரம் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் உடையது. அதுபோல இறைவன் பிறவற்றை இயக்கும்போது வேறாக இருப்பான்.
பண்ணும் அதனின் வேறாகாத இசையும் போலவும், பழமும் அதனின் வேறாகாத சுவையும் போலவும் இறைவன் உயிர்களிடத்தில் வேற்றுமையின்றி உடனாய் நிற்பான். உருக்கிய அரக்குடன் கலந்த கற்பொடியானது அந்த அரக்கினுடன் சேர்ந்து ஒருங்கு இயைந்து நீக்கமின்றிச் சாணைக் கல்லாய் நின்றதைப் போல, இறைவன் உயிர்களிடத்தில் ஒருங்கு சேர்ந்து நீக்கமின்றி உடனாதலால் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்பான்.
இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும்போது இரு வினை நிகழும்.
‘இவ்வான்மாக்கட்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும்’ என்பது சிவஞானபோத மேற்கோள்.
இன்றைய உலகில் செல்வத்துடன் வீடு, ஊர்தி, நிலம், தொழில் முதலியவற்றால் சிலர் சிறப்பாக வாழ்கின்றனர். சிலர் வறுமையுற்று, வீடு முதலியன இல்லாமல் துன்பப்படுகின்றனர். எல்லாவற்றையும் நடத்துபவன் இறைவன் என்றால் இத்தகைய ஏற்றத்தாழ்வு வரலாமா? என்று தடை எழுப்புவர் உள்ளனர்.
நாட்டையும் நகரத்தையும் ஆட்சி செய்யும் மன்னன் மக்களுக்கு இடையூறு வாராமல் காக்கும் கடமை உடையவன். அரசாட்சி நெறிமுறைக்கேற்ப வாழ்வோர்க்கு நல்லன செய்வான். நெறியில் இல்லாமல் குற்றம் செய்வோர்க்குத் தண்டனை கொடுப்பான். தண்டனையை மன்னன் நேரே கொடுப்பதில்லை. அங்குள்ள நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் செயல்படுத்துவான். இறைவ உயர்ந்தோர் மூலம் அற நூல்களையும் அருள் நூல்களையும் வழங்கி அறநெறிப்படி வாழ வழிவகுத்துள்ளான். நன்னெறியில் ஒழுகியவர்க்கு அவர் செய்த வினைக்கேற்ப நன்மைகளைத் தருகின்றான். தீய வழியில் நடந்தவர்க்குத் தீமைகளைத் தருகின்றான். தீமை போலத் தோன்றினாலும் உயிர்களைத் திருத்திப் பக்குவப்படுத்தி நன்னிலைப்படுத்துவதற்கே ஆகும்.
‘திருத்தித் திருத்தி வந்தென் சிந்தையிடங் கொள்கயிலாயா’ என்பது சுந்தரர் வாக்கு. உயிர்களுக்கு நன்மை புரிதலும் தண்டித்தலும் இறைவன் ஆணையாகிய திருவருட்சக்தியின் மூலமே நடைபெறும்.
முற்பிறப்புக்களில் செய்யப்பெற்ற வினைத் தொகுதிக்குப் பழவினை, தொல்வினை, சஞ்சிதம் எனப் பெயர்கள் வழங்கப் பெறும். அத்தொகுயிலிருந்து இப்பிறப்பில் அனுபவிப்பதற்கென்று எடுத்துக் கொண்ட வினை நுகர்வினை, ஊழ்வினை, பிராரத்தம் என்று வழங்கப் பெறும். வினையை நுகரும்போது மனம், மொழி, மெய்களால் செய்யப் பெறும் புது வினை எதிர்வினை, ஆகாமியம் எனப் பெயர் பெறும். வினைக் கோட்பாட்டில் 1) செய்வான், 2) செய்வினை, 3) வினைப்பயன், 4) பயனைக் கொடுப்போன் என்ற நான்கு அடிப்படை சைவ சித்தாந்தத்தில் கூறப் பெறும்.
பழவினையே உயிர் அனுபவிப்பதற்குரிய இன்ப துன்பங்களையும் அவற்றிற்கு இடமான உடம்பையும் தோற்றுவிக்க உயிர் அவ்வுடம்பைப் பொருந்திப் பயன்களை நுகரும். ஊழ்வினையை நுகரும்போது தோன்றும் புதிய வினை அடுத்த பிறவிக்கு வித்தாக அமையும். உழவர் செய்யும் உழவுத் தொழில் நேரே பயன் கொடுப்பதில்லை. விளைநிலம் உழவுத் தொழிலை ஏற்று நின்று அதற்குரிய பயனை உழவர்க்குக் கொடுக்கும். அதுபோல உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களை இறைவனே ஏற்றுநின்று உயிர்களுக்குப் பயன்களைக் கொடுப்பான்.
ஒருவன் இரும்பை எடுத்துக் காந்தத்தின் நேரே பிடிக்கும்போது காந்தம் அவ்விரும்பை இழுத்துக் கொள்ளும். அதுபோல் இறைவன் உயிர்களுக்கு வினைப் பயன்களை நுகர்விக்கும்போது உயிர்கள் தமக்கு இடமாக உள்ள உடம்பிலே இருந்து வினைப் பயன்களை அனுபவிக்கும்.
நெல்லிடத்தில் உமியும், செம்பிடத்தில் களிம்பும் புதியனவாக வந்தன அல்ல. தொன்றுதொட்டே உள்ளனவாகும். அதுபோல மாயா மலம், ஆணவ மலம், கன்ம மலம் ஆகிய மூன்றும் தொன்றுதொட்டே உள்ளனவாகும். சூரியன் ஒளியால் தாமரை மலர் மலர்தலும் வாடுதலும் நடைபெறுவதைப் போல மூன்று மலங்களும் இறைவனின் திருவருட் சக்தியால் தொழிற்படும்.
மாயை சடப்பொருள் உலகத் தோற்றத்திற்கு முதற்காரணமாக இருக்கும். இறைவனுக்கு வைப்பு ஆற்றல் (பரிக்கிரக சத்தி) எனப்படும். ஊர்தி, எழுதுகோல், கருவிகள் முதலியவற்றை வேண்டும் போது பயன்படுத்துகிறோம். அப்போது அவற்றின் ஆற்றல்கள் வெளிப்படும். வேண்டாதபோது உரிய இடத்தில் வைத்து விடுகிறோம். அதுபோலவே இறைவன் படைக்கும் காலத்தில் மாயையைப் பயன்படுத்துவான். தன்னிடத்தில் அடங்கிய மாயையை உடல், கருவி, உலகம், நுகர்பொருளாக விரியச் செய்வான்.
திருவருட்சத்தி சிற்சத்தி (அறிவாற்றல்) எனப்படும். சிற்சத்தி இறைவனைப் பிரியாமல் நீக்கமின்றி நிற்கும். அதனால் தாதான்மியசத்தி என அழைக்கப் பெறும்.
நம்முடைய உடல், கை, கால், கண், செவி முதலிய உறுப்புகள் மாயையே ஆகும். இவ்வுடல் பருவுடல் (தூல சரீரம்) எனப்படும். பருவுடலை விட்டு உயிர் பிரிவது இறத்தல் எனப்படும். “சென்ற உயிரின் நின்ற யாக்கை’ என்பார் தொல்காப்பியர். பிரிந்த உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டினால் ஆகிய நுண்ணுடம்பு (சூக்கும சரீரம்) என்ற அழியாததைத் துணையாகக் கொண்டு உயிர் மேலே செல்லும். எட்டினால் ஆனதால் புரியட்ட சரீரம் என்றும் வழங்கப் பெறும்.
எல்லாப் பிறப்புகளிலும் நுண்ணுடம்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். முத்தியடைதல் அல்லது முற்றழிவுண்டாகும் பேரூழிக் காலத்தில் மட்டுமே நுண்ணுடம்பு அழியும். நுண்ணுடம்புடன் செல்லும் உயிர் முன்பு தீவினையை நரகத்தில் சென்று அனுபவிக்க வன்மையான யாதனா சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும். முன்பு செய்த நல்வினையைச் சுவர்க்கத்தில் சென்று அனுபவிக்க மென்மையான பூதசார சரீரத்தைப் பெற்று அனுபவிக்கும். இவ்வாறு துன்ப இன்பங்களை அனுபவித்து வரும்போது நனவில் கண்டவற்றைக் கனவு காணும்போது மறந்து அறிவு வேறுபட்டதைப் போலப் பருவுடல், நுண்ணுடல், யாதனா சரீரம் ஆகியவற்றில் அறிவு வேறுபட்டு, அனுபவித்தவற்றை மறந்து, புண்ணிய பாவங்களுக்கேற்ப மனம் செலுத்து முறையில் நுண்ணுடம்பாய்ச் சென்று ஒரு கருவினில் சென்று பிறக்கும்.

saiva sinthanai thuligal






 

வியாழன், 12 ஜனவரி, 2023

தத்துவ சிந்தனைகள்

 தத்துவ சிந்தனைகள்

ஆன்மா விளக்கம்
ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்.
"பால்"பயனுள்ளதுதான்...
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும்....
கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது...
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....
அதை உருக்க வேண்டும்...
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......
கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்...
அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு
இந்த பஞ்ச பூத உலகத்தில்,ஆன்மா என்னும் அணுவானது 84,லட்சம் யோனி பேதங்களிலும் பிறப்பு எடுத்து வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறப்பு கொடுக்கப் படுகின்றது,.மனிதப் பிறப்பை நீக்கி மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்றால்,உண்மைக் கடவுளான அன்பால்,தயவால்,கருணையால்,ஆன்மாவில் உள்ள அருளைப் பெற்று,அசுத்த பூத காரிய தேகத்தை,சுத்த பூத காரிய தேகமாக மாற்றி,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று,ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இந்த உலகத்தை விட்டு தன்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல முடியும்
உடம்போடவோ,மரணம் வந்தோ இறைவனிடம் செல்ல முடியாது...ஆன்மா என்னும் அணு தன்னை உணர்ந்து ஆன்ம தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி செல்ல முடியும்.
மேலே கண்ட ஆன்ம அணுக்கள் இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து ஒரு அணுக்கள் கூட வெளியே செல்ல முடியாமல்,வழி தெரியாமல் தவித்துக் கொண்டு உள்ளது ...
இந்த உண்மையை ஆன்மாக்களுக்குத் தெரியப்படுத்தவே சைவ சித்தாந்தம் தெளிவு படுத்துகிறது.
திருச்சிற்றம்பலம்

சைவ சித்தாந்தம் கூறும் சிறு விளக்கம்

1. உடலுக்கு வேறாக உயிர் என ஒரு பொருள் உண்டு.
2. அந்த உயிக்கு உள்ளாக இறைவன் என்னும் மற்றொரு பொருள் உண்டு.
3. உயிர் பொருள்,உளளிருக்கும் இறைவன் உணர்த்துதல் வழியாகத்தான் தனது உடற் கருவிகளை இயக்கிக் கொண்டு இவ்வுலகில் வாழ்கிறது.
4. உயிரினை உலகியல் வாழ்வுக்கு உடந்தையாக ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்கள் உள்ளன.
5. திருவருளால் இவற்றை ( மும் மலங்களை )சார்ந்து உயிர் வாழும் கட்டம் அவ்வளவும் பந்த நிலை, அல்லது பெத்த நிலை
6.திருவருளால் இவற்றின் ெதாடர்பு நீங்கிச் சூட்சும உணர்வாகிய ஞான உணர்வினால் கடவுளை அடைந்து அனுபவிக்கும் நிலை மோட்ச நிலை (அல்லது ) சுந்த நிலை
7. இந்த சுத்த நிலை பேறு ஒவ்வாெரு உயிர்க்கும் உரியது. ஆனால் அதன் அதன் பக்குவ காலத்தில் மட்டும் அதற்தற்கு வாய்ப்பது
8. இவ்வகையில் சம்பந்தப்படும் பொருட்கள் மூன்று , அவை பதி,பசு, பாசம்
9. உண்மை அறிவியற் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் இம் முப்பொருள் இயல்புகளை உரிய முறையில் கற்று கேட்டுத் தெரிபவர்கள் மெய்ஞானம் பெறுவர். அவர்களே மேல் கதிக்கும் வீடு பேற்றுக்கு உரியவர்.
10.வீடு பேறு என்பது உயிர் தன் சீவத் தன்னை கழிந்து, சிவத்தோடு ஏகமாய்நின்று அநுபவிக்கும் ஆராத ஓரு பேரின்ப நிலை.
திருச்சிற்றம்பலம்
May be an illustration of dog
Like
Comment
Share

0 comments

உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

 உயிர் (ஆன்மா) உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மை:

மனிதனாகப் பிறந்தால் பிறந்தது முதல் இறுதி வரை யாரேனும் ஒருவரையோ பலரையோ சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் தாயின் அரவணைப்பும், பாலகனானது முதல் கல்வி கற்கும் வரை தந்தையின் கண்காணிப்பும் கல்வியைப் போதிக்கும் குருவின் கருணையும் , மணம் செய்து கொண்டபின்னர் மனைவியின் துணையுடன் செய்யும் அறமும், முதுமைக் காலத்தில் மக்களும் மனைவியும் ஆற்றும் சேவையும், உடலை நீத்தபின்னரும், உறவினர்கள் முறைப்படி இறுதிக் கடன்களை ஆற்றுவதும் போன்ற சேவைகளைப் பலரும் செய்யும்படியாக வாழ்கிறோம்.
இன்பதுன்பங்கள் இல்லாதவன் ஈசன் ஒருவனே. “ இன்பமும் துன்பமும் இல்லானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இன்பதுன்பங்களை சமமாகப் பாவிப்பது எல்லோருக்கும் எளிய செயல் அல்ல. இன்பம் வந்தால் ஆகாயம் அளாவக் குதிப்பதும் துன்பம் வந்தால் துவண்டு போவதும் மட்டுமே நம்மால் இயலும். அப்படியானால் உலகில் நீடு வாழவும் துன்பம் நீங்கி என்றும் இன்பம் துய்க்கவும் வழி இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவனது மலரடிகளை நம்பி அடைக்கலமாக வாழ்பவர் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் திருவள்ளுவர். இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கும் அவ்வுலகம் பெற்றுப் பிறவாத நிலை பெறுவதற்கும் இறைவனது அருள் வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.
இறைவன் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? அவனது உருவம் தான் என்ன? அவனை வழிபட்டால் ஈடேற முடியுமா? உலகில் இத்தனை மதங்களும் பல்வேறு கடவுள்களும் இருப்பதன் நோக்கம் என்ன? இறைவனைக் கண்டவர்கள் உண்டா ? பிறப்பும் இறப்பும் எதனால் ஏற்படுகிறது? எல்லோரும் ஒருபோல வாழாததன் காரணம் என்ன? பிணியும் முதுமையும் ஏற்படுவது எதனால்? அவற்றை வெல்ல முடியுமா? நல்லவர்களும் துயரங்களை எதற்காக அனுபவிக்கிறார்கள்? தீயவர்கள் பலர் சுகவாசிகளாகத் திரிகிறார்களே! தீயவர்களில் பலர் தண்டிக்கப்படாதபோது தெய்வம் இருக்கிறதா என்ற எண்ணம் ஏற்படாதா? இதுபோன்ற கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுவது இயற்கை.
மேற்கண்ட கேள்விகளுக்கு அனுபவத்தால் விடை காண்பது சிறந்தது. அந்த அனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது என்றால் குருமூலமாகவும் அறவழி நூல்களாலும், அவ்வழியைக் கடைப் பிடிப்பதாலும் ஆலய தரிசனங்களாலும் கைகூடுவது சாத்தியம். ஆனால் எல்லோருக்கும் ஒரேவிதமான அனுபவம் ஏற்படுவதில்லை. பலருக்கு முதுமைக் காலம் வரை அவ்வித எண்ணமே ஏற்படுவதில்லை. சிலருக்குப் பிணி வந்தபோது முதிர்ச்சி ஏற்படும். “ நோயுளார் வாய் உளான்” என்பார் சம்பந்தர். இன்னும் சிலருக்கு வாழ்நாள் முழுவதுமே தெய்வ சிந்தனையோ அல்லது தன்னை இறைவனருள் பெறுவதற்கு உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை.
தன்னைத் தயாராக (முக்தி) ஆக்கிக் கொள்வதே வாழ்வின் நோக்கம் என்று எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுதே விருப்பு வெறுப்பு மெதுவாக நீங்க ஆரம்பிக்கிறது. உடலைப் பற்றிய கவலை நீங்குகிறது. பிணிகள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆத்ம ஞானம் பிறக்கிறது. இவ்வாறு வேதாந்த ஞானம் ஏற்பட்டால் முக்தி வரம் வேண்டும் இயல்பு வந்து விடுகிறது. இறைவன் தனக்குள் இருப்பதை மெல்ல அறியும் நிலையும் கிட்டி விடுகிறது.
திருவோட்டையும் செம்போன்னையும் எவ்வாறு சமமாகப் பாவிக்க முடியும் என்பதே வினா. அதற்கான ஒரே வழி நம்மை நாம் ஆயத்தப் படுத்திக் கொள்வதேயாகும். தகுதி ஏற்பட்டால் ஒழிய பாசம் களைவது இயலாததொன்று. பாசத்தைப் பிறர் துணை இன்றி நாமே களைந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது என்கின்றன சித்தாந்த நூல்கள். இறைவனது கருணையாகிய பற்றுக்கோடு இல்லாமல் உயிர்கள் ஞானம் பெற சாத்தியமே இல்லை என்று அந்நூல்கள் கூறுகின்றன. “ பாசமான களைவார்” என்று அதனை இறைவனது தனிப் பெருங் கருணையாகப் புகழ்வார் ஞானசம்பந்தர். நம்மைத் தயார் படுத்திக் கொள்ளும் வழிகளைத் தெளிவாகத் திருவாவடுதுறை என்ற தலத்தின் மீது அவர் பாடியருளிய பதிகத்தால் (3 பதிக) அறியலாம். தன் நெஞ்சுக்குச் சொல்வது போல் நமக்காக இரங்கி உபதேசம் செய்வதை அப்பதிகம் முழுதும் காணலாம். அவரது நிகரற்ற பக்தியின் வெளிப்பாட்டை அப்பதிகத்தில் நாம் காண முடிகிறது. “நற் கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன்” என்று அவரை சுந்தரர் சிறப்பித்து அருளிச் செய்துள்ள திருத்தொண்டத்தொகை வரிகளும் இக்கருத்துக்கு அணி செய்கின்றன.
“ இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”
“ வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”
“ நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்”
“ தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா “
“கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”
“ வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் எத்தாதென் நா”
“ வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாதென் நா “
“பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும் சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”
“ உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர்க்கழலலால் உரையாதென் நா”
“பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாதென் நா”
என்ற வரிகள், நமக்கு எவ்விதத் துயரத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் கொடுக்க வல்லன. நாள் தோறும் இதனைப் பாராயணம் செய்யச் செய்ய அந்நிலை அடைவதற்காக அடி எடுத்து வைக்கிறோம் என்பதை நமது அனுபவத்தால் அறிய முடிகிறது. இந்த ஞான முதிர்ச்சி ஒன்றே நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவித்துப் பேரின்பமாகிய சிவானந்தம் பெற ஆற்றுப் படுத்தும். உலகியலைச் சாராது இறைவனைச் சார்வதன் உண்மையும் வெளிப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்
May be an image of 2 people

சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

 சைவ சி்த்தாந்தம் கூறும் அத்துவிதம்

உடல் உயிர், கண் அருக்கண்; அறிவு ஒளி போல் பிறிவரும் அத்துவிதம் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை.இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள சம்பந்தம் எத்தகையது எனில் இறைவன் உயிர்களுடன் எப்போதும் 1) ஒன்றாயும், 2) வேறாயும், 3) உடனாயும் நிற்கும் சம்பந்தமாகும்.
இம்மூன்றினுள் ஒன்றாதல் என்பதை பற்றி சைவ சித்தாந்தம் உணர்த்துவது, இறைவனும் உயிர்களம் வேறு வேறு பொருள்கள்; ஆனால் இறைவன் உயிர்களோடு கலப்பினால் எப்போதும் ஒன்றாக இருக்கிறான்; எதுபோல எனில் உடலும் உயிரும் போல என்பதாகும். இறைவனும் உயிர்களும் வெவ்வேறு பாெருள்களாக உள்ளன, அப்படி இருந்தும் அவை கலப்பினால் ஒன்று பாேலத் தோன்றுவது போல. அது பற்றி அவை ஒன்று எனக் கூறப்படுவதன்றி அவை இரண்டும்ஒரே பாெருள் அல்ல.
வேறாதல் என்பது உடலும் உயிரும் போலக் கலப்பினால் ஒன்ற என்று கூறப்படும் இறைவனும், உயிரும் பாெருளால் வேறு வேறு தாம் அதாவது இறைவன் உயிர் அல்ல; உயிர் இறைவன் அல்ல, இதற்க சைவ சித்தந்தாம் கூறும் உவமை கண்ணும் சூரியனும் போல என்பதாகும்.
கண் ஒளி உடையது; சூரியனும் ஒளி உடையது, சூரியன் ஒளி கண் ஒளியோடு சேர்ந்தால் மட்டுமே கண் காணும். இல்லையென்றால்காண முடியாது, கண் ஒளி காண்பதற்கு சூரியன் ஒளி அதனுடன் சேர்ந்திருக்க வேண்டும், பொருளைக் காணும் பொழுது கண்ஒளியும், சூரிிய ஒளியும் பிரித்தறிய முடியாதபடி கலந்திருக்கின்றன, ஆனாலும்
கண் ஒளி காண்பது;
சூரியன் ஒளி காட்டுவது; எனவே கலப்பினால் இவை ஒன்றாக இருந்தாலும், பாெருளால் இவை வேறு வேறு தானே.
அதுபோல உயிர் அறிவுடையது, இறைவனும் அறிவுடையவன், ஆனால் இறைவன் அறிவு அறிவித்தால் அன்றி உயிர் அறிவு தானாக எதையும்அறிய முடியாது, இறைவனும் உயிரும் கலப்பினால் ஒன்றாக இருந்தாலும்,
இறைவன் அறிவிப்பவன் ( சூரியன் ஒளி காட்டுவது போல)
உயிர் (இறைவன்) அறிவிப்பதை அறிவது ( சூரியன் காட்டியதை கண் பார்ப்பது போல)
எனவே கலப்பினால் உயிரும் இறைவனும்ஒன்றாக இருந்தாலும் பாெருளால் இறைவன் உயிரிலிருந்து வேறானவன் தானே,
உடனாதல் என்பது இறைவன் உயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாகவும் விளங்கும் அதே வேளையில் உயிர்களோடு உடனாயும் உள்ளான். அது எவ்வாறு எனில்;
கண் ஒரு பொருளைக் காணும் போது உயிரின அறிவும் அக்கண் ஒளியோடு உடனாக சென்று அறிந்தால்தான் உயிர்கள் அப்பொருளை அறியவும், அநுபவிக்கவம் முடியும், பொருள் கண்ணில் படுகின்றபோது , உயிரறிவு கண் ஒளியை செலுத்தி அறியாவிடில் உயிர் அப்பொருளை அறியாது. நம் அறிவு வேறாரு சிந்தனையில் ஆழந்திருக்கும் போது, எதிிரில் வருபவரை நாம் கவனிக்காமல் போவது நம்அன்றாட வாழ்வில் நிகழும்அநுபவம் தானே,
அது போல உயிர் ஒரு பொருளை அறிய வேண்டும் என்றால், உயிர் அறிவோடு இறைவன் அறிவும் (திருவருளும்) உடனாக இருந்து இயக்கினால் மட்டுமேஉயிர் அப்பொருளை அறிய முடியும், இறைவன் உயிரின் வேறாக இருந்து அறிவிப்பது மட்டுமன்றி, உயிருடன் உடனாக இருந்து இயக்கி அது பொருள்களை அறியும்படி செய்கிறான்,
ஆக இறைவன் உயிர்களுடன் 1) கலப்பினால் உடலும், உயிரும் பாேல ஒன்றாயும்,
2), பொருளால் கண்ணும், சூரியனும் போல வேறாயும்,
3), உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண் ஒளியும், உயிர் அறிவும் போல் உடனாயும் பிரிப்பின்றி நிற்கும் உறவே சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் ஆகும். அத்துவிதம் என்ற சொல்லுக்கு வேறின்மை என்று சைவ சித்தாந்தம் பொருள் கொள்ளும். இதனை இருமையின் ஒருமை என்றும் கூறுவர். இரண்டு பாெருள்களாயிருப்பதால் ஒன்று என்று சொல்லமுடியாமல் கலப்பினால் ஒன்றாக தோன்றுவதால் இரண்டு என்று சொல்ல முடியாத நிலையாகும்.
நன்றி ° சிவப்பிரகாசம்
திருச்சிற்றம்பலம்