சனி, 30 டிசம்பர், 2023

திருவாரூர்–பிறக்க முக்தி

திருவாரூர்–பிறக்க முக்தி

தியாகராஜர்(வன்மீகநாதர்) & கமலாம்பிகை



திருவாரூர் தியாகராஜர் கோவில்-பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம்

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்

மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேர்

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை-ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

எமபயம் போக்கும் திருத்தலம் .

சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்து சென்று பெண் கேட்ட திருத்தலம்.

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது.

காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் “மீளா அடிமை“ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.

நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 15 தீர்த்த கிணறுகள், என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.

365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம்.

இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன.

ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர்.

வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியது- இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.

தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் தரிசனம் செய்யலாம்.

உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார்.

சுந்தரர், அடியார்களின் “திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, பெருமை இப்பதிக்கேயுரியது

சுந்தரர் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):

சுந்தரர் திருமுதுகுன்றம் சென்று பொன் வேண்ட, இறைவன் பன்னீராயிரம் பொன் அருளினார். சுந்தரர், மேலும் பல தலங்களைத் தரிசிக்க எண்ணி இருந்ததால், பொன் கட்டிகளை திருவாரூரில் தான் பெறுமாறுச் செய்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் அசரீரியாய் ‘இவற்றை மணிமுத்தா நதியில் இட்டுப் பின் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்’ என அருளிச் செய்தார்.

சுந்தரர் பொன்னை மணிமுத்தா நதியில் இட்டார்.

பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருவாரூர் வந்து சேர்ந்தார்.

பரவையாரிடம் கமலாலயக் குளத்தில் பொன்னை வருவித்துத் தருவேன் எனக் கூறி, திருக்குளம் சென்றார். குளத்தில் பொன் கட்டிகளை தேடத் துவங்கினார்.

பொன் தந்த பொன்னார் மேனியன்: இறைவன் சுந்தரரின் தேவாரம் கேட்கும் பெரும் விருப்பத்தால் பொன்னைத் தருவித்துத் தராமல் இருந்தருளினார். பரவையார் புன்சிரிப்புடன் ‘ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறீரோ’ என உரைத்தார்.

சுந்தரர் ‘பொன்செய்த மேனியினீர்’ என்னும் பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறைவன் மிக மகிழ்ந்து பொன்னை வருவித்து அருளினார்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக