திங்கள், 4 டிசம்பர், 2023

திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்

 திருவிளக்கு வழிபாட்டு தீபாராதணையும் சைவ சித்தாந்தமும்









இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.இறைவன் முருகனை அருணகிரிநாதர், “தீப மங்கள ஜோதி நமோ நம”என்று போற்றுகிறார்.


மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை “ஒளி வளர் விளக்கே”என்றும்; “சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே” என்றும் பலவாறு போற்றியுள்ளார். ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே தீபாராதனை என வழங்கப்படுகிறது.


   விளக்கு வழிபாடு தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வழிபாடு நடைபெற்றிருக்கின்றது. பெருங்கற்சின்னம், முதுமக்கள் தாழி முதலிய அகழ்வாய்வுப் பொருள்களில் பலவகையான விளக்குகள் கிடைத்துள்ளன. எனவே, அக்காலத்தில் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டுக் குரியனவாக இருந்துள்ளன.


திருமுறைகளில் விளக்கு வைத்து வழிபாடு செய்தல் விரிவாகப் பேசப் பெறுகின்றன. திருஞானசம்பந்தர் காலத்திலேயே கார்த்திகை மாத விளக்கு வழிபாடு தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ‘தொல் கார்த்திகை நாள்… தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்பது அவர் வாக்கு.


1. வீடுகளில் விளக்கு வழிபாடு 2. பொது இடங்களான மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் முதலிய இடங்களில் பலர் கூடி விளக்கேற்றி வழிபடுதல், 3. கோவில்களில் விளக்கு இடுதல், 4. பூசை நேரங்களில் பலவகையான அலங்கார தீபங்கள் காட்டுதல்-என்று விளக்கு வழிபாட்டை வகைப்படுத்திக் கொள்ளலாம்.


1. வீடுகளில் மாலைநேரம், சிறப்பு நாட்கள் முதலிய காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தல் நல்லது. வீட்டுக்கு மங்கலம், எட்டுத் திருமகளிரும் (அஷ்ட லக்ஷ்மிகள்) அருள் செய்வர்.


2. கூட்டு வழிபாட்டைப் பலரும் ஒரே தன்மையான விளக்குகளை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து குங்குமம் அல்லது மலர்களால் அருச்சனை செய்து வழிபடலாம். ‘விளக்குப் போற்றி’ என்று நூல்கள் வந்துள்ளன. ஒருவர் போற்றி சொல்ல மற்றவர் பிந்தொடர்ந்து சொல்லி நிறைவின் போது படையலிட்டுக் கற்பூரங்காட்டி வழிபடலாம். பலரும் ஒன்று சேர்வது சமுதாய ஒற்றுமைக்குக் காரணமாக அமையும். ஐந்து திரியிட்டுச் சுடரேற்றி வழிபடும் விளக்கில் மலைமகள், கலைமகள், அலைமகள் மூவரும் அமர்ந்து அருள் செய்வர்.


3. திருக்கோவில்களில் விளக்கு வைப்பது புண்ணியமாக முன்பு கருதப்பட்டது. திருமறைக்காட்டில் எலி ஒன்று கோவிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் நெய் உண்ணப் புகுந்த்து. சுடர் மூக்கைச் சுடர் திரியை எலி தூண்டியது. அணையும் விளக்கு நன்றாக எரியத் தொடங்கிற்று. இந்தப் புண்ணியத்தால் எலி அடுத்த பிறப்பில் மூன்று உலகங்களையும் ஆளுகின்ற மாவலிச்சக்கரவர்த்தியாக ஆயிற்று.


     “நிறை மறைக்காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்

      கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

      நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்

      குறைவறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீரட்டனாரே”

                                           என்பது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் ஆகும்.

              நாயன்மார்களில் கலியநாயனார் நமிநந்தியடிகள், கணம்புல்ல நாயனார் ஆகியோர்கள் கோவிலில் விளக்கு எரித்து இறைவன் திருவருள் பெற்றவர்கள் ஆவர். கோவில்களில் வைக்கப்பெறும் விளக்கினை நந்தியா தீபம், சந்தியா தீபம் எனக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அணையாமல் எரியும் தீபம் நந்தியா தீபம், நந்தா தீபம், நுந்தா தீபம் எனப் பலவாறாக வழங்கப்பெறும். பூசை வேளைகளான காலை, நண்பகல், மாலை, இரவு முதலிய சந்திகளில் வைக்கப் பெறும் தீபம் சந்தியா தீபம் ஆகும்.


பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் பலவித அலங்கார தீபங்கள் காட்டப்பெறுகின்றன. அவை அனைத்தும் ஆழமான பொருள் உடையன. தத்துவம் உடையன. கோவில் கருவறையில் வழிபாட்டுக்கு உரிய திருவுருவங்கள் அமைந்திருக்கும். கருவறையின் முன் உள்ள மண்டபம் ஒன்றில் வாகனம் அமைந்திருக்கும். வாகனம் மூலமூர்த்தியை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும். வாகனத்திற்குப் பின் பலிபீடம் இருக்கும். சிவன் கோவிலாக இருந்தால் மூலமூர்த்தியாகிய சிவலிங்கம் பதி, வாகனமாகிய எருது பசு, பலிபீடம் பாசம்,


     “ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்

      ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்

      ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்

      ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே”

                    என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.


பிறகோவில்களிலும் இவ்வாறே மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், பலிபீட்த்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

           பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அருச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். அதுவும் நன்றாக காணமுடியாது. அருச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். அருச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.


உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். கோவிலில் திரை நீங்குதலும் அருச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.


“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்க, ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;


     “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்

      விளக்கினின் முன்னை வேதனை மாறும்

      விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்

      விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”


என்று திருமூலர் பாடியுள்ளார். ‘விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.


பதினாறு வகை உபசாரங்களில் ஒன்று தீபாராதனை. பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.


நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.


ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.


ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.


1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.


கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.



தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.


தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.


     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட

      சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?”

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.


     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்

      பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 

      ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை

      நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ ?”         (தாயுமானவர்). 

–திருச்சிற்றம்பலம்–

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக