செவ்வாய், 18 மே, 2021

திருமுறைகளில் திருவேடச்சிறப்பு

 திருமுறைகளில் திருவேடச்சிறப்பு






திருநீறு, உத்திராட்சம், சடைமுடி, துவர் ஆடைமுதலியன சிவச்சின்னங்களாகும். இவற்றை அணிவதுடன் அணிந்து கொண்டுள்ள அன்பர்களை வணங்குவதும் வேண்டியன வாகும்,

சலைவத்தொழிலாளியின் உடம்பு உவர் மண்ணால் வெண்மை நிறமாக தெரிந்தது. சேரமான் பெருமான் நாயனார் கீழே விழுந்து வணங்கினார். காரணம் திருவேடம் நினைவிற்கு வந்தது.

 மெய்பொருள் நாயனாரும், ஏனாதிநாயனாரும், புகழ்சோழ நாயனாரும் திருவேடத்திற்காக உயிரை விட்டார்கள் என்பதை பெரியபுராணம் கூறுகிறது.

 " வேடம் பரவித் திரியுந் தொண்டர்

   ஏதப் படாவண்ணம் நின்றார் போலும் ..... நாவுக்கரசர் திருமுறை6


திருநீறு உத்திராட்சம் சடைமுடி, துவர் ஆடை முதலியனவற்றை அணிந்தவர்களை காணும் பொழுதெல்லாம் சிவபெருமானை நினைந்து வழிபடும்அன்பர்கள் துன்பப்படா வண்ணம் பெருமான் அருளுவார் என்கிறார் அப்பர் சுவாமிகள்

கூறுஞ் செனனக் குடில் நெடு

நாள் நுழை கூன் முழுவதும்

மாறும் படிக்கு மருந்துளதோ

சண்பை வாணர் கொண்ட

நீறும் திருவெழுந்தெழுத் தோரைந்தும்

 கண்டியும் நித்தம் நித்தம்

தேறும் பொருள் என்றுணராத

மாயச் செருக்கினர்க்கே.   ....... தி,மு. 11

 திருநீறும் உத்ததிராட்சமும், திருஐந்தெழுத்தும் நாம் உய்வடைவதற்கு உதவுவன என்று உணராத மாயச் செருக்கினர் பிறவா நெறியை அடைவது இல்லை. மீண்டும் மீண்டும் பிறந்த துன்பப்படுவார்கள். எனவே, திருவேடத்தை கண்ட அளவில் மனதில் சிவபெருமான் நினைவு தோன்ற வேண்டும்.

 மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

 புரிந்த கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

 திருந்து தேவன்குடித் தேவர் தேவெய்தி

 அருந்தவத் தோர் தொழும் அடிகள் வேடங்களே   சம்பந்தர் தேவாரம் 3/25/1

1. சிிவபெருமானுடைய திருவேடமே பிறவி நோய்க்கு மருந்தாகும்

2. திருவேடமே மந்திரமாக நின்றுதவும்

3. திருவேடத்தை மனதால் நினைப்பதே மேலான சிவ புண்ணியமாகும். அருந்தவத்தோர்கள் எல்லாம் திருவேடத்தைக் தொழுவாரகள் என்கிறார் திருஞான சம்பந்தர்.

 மானம்ஆக்குவன மாசு நீ குவ்வன

 வானை உள்கச் செலும் வழிகள் காட்டுவன

தேனும் வண்டும் இசை பாடும்ேதவன்குடி

ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே  தி,மு. 3 பதி 25.பா. 3


1. மன்னுயிருக்கு பெருமை அளிப்பது

2.தீவினை எல்லாம் போக்குவது

3. வீட்டுலகை அளிப்பது

  மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே எனும் சிவஞானபோதச் செய்யுளும் இவ்விடத்தில் நினைவில் கொள்ளத் தக்கதாகும்


 திருவேடச் சிறப்புக்கூறும் கன்றாப்பூர் பதிகம்

எவரேனும் தாமாக விலாத்திட்ட

திருநீறும் சாதனமுங் கண்டால் உள்கி

உவராதே யவரவரைக் கண்டபோதே

உகந்தடிமைத்திறம்  நினைந்தங் குவந்து நோக்கி

இவர்  தேவர் அவர் தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக் 

கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுத்தறியைக் காணலாமே   திமு. 6/61/ 3


திருநீறும் உத்திராட்சமும் அணிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வெறுக்காமலும் இவர் அவர் என்று வேறுபடுத்தாமலும் அவர்களை கண்ட பொழுதே உளம் மகிழ வேண்டும். அவர்களைச் சிவமாகளவே எண்ணி மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அப்படித் தொழும் அடியார்கள் நெஞ்சினுள்ளே நடுதறிப்பர் இனிதே விளங்குவார் என்கிறார் அப்பர் அடிகள்

சிவச் சின்னங்களை அணிவதாலும், சின்னங்கள் அணிந்தவர்களை வணங்குவதாலும் சிவபெருமான் மீது மனம் நீங்காது நிற்கும்.அவ்வாறு இரவும் பகலும்  நினைப்பவர் மனங்களையே கோயிலாகக் கொள்பவர் சிவபெருமான்,

 திருவேடத்தினை வணங்குவோம். வளம் பெறுவோம்

திருச்சிற்றம்பலம்


அடியார் பெருமை


 


அடியார் பெருமை அளவிடற்கரியது. சிவனடியார்களின் கழுத்தினில் உருத்திராட்சமும், உடலில் திருநீறும், உள்ளத்தில் சிவமந்திரமும் நீங்காது நிறைந்திருக்கும். இதன் காரணமாக உடலாலும், உள்ளத்தாலும் புண்ணியர்களாகச் சிவனடியார்கள் விளங்குகின்றனர். கூடும் அன்பினில் கும்பிடுதலே சிவனடியார்களின் இயல்பு. அவர்கள் செய்வதனைத்தும் சிவத்தொண்டுகள். அவர்கள் நடப்பதெல்லாம் சிவபூமி. அவர்கள் ஊர்தோறும் சென்றுச் சிவனை வணங்கும் கடப்பாடு உடையவர்கள். அவர்கள் தங்க சிற்சில ஊர்களில் மடங்கள் இருக்கலாம். பல ஊர்களில் இவ்வசதி இருப்பதில்லை. இச்சூழலில் ஊர்வலம் வரும் சிவனடியார்களைப் பாதுகாக்க ஊர் மக்களே முன்வரவேண்டி இருக்கிறது. அவ்வாறு சிவனடியாரைக் காப்பவரெல்லாம் சிவனடியார்கள். வருபவர்கள் சிவனடியார்கள். பாதுகாப்பவர்கள் சிவனடியார்கள். இவ்வாறே ஊரில் உள்ள எல்லாரும் நாட்டில் உள்ள எல்லாரும் உலகத்தில் உள்ள எல்லாரும் சிவனடியார்களாகின்றனர்.

சிவபெருமான் ஆலயங்கள் இல்லாத ஊரே ஊர் இல்லை என்ற நிலையில் ஒவ்வொரு ஊரிலும் சிவனை வணங்குவோர் இருப்பர். அவர்கள் அவ்வூர்ச் சிவனடியார்கள். அவர்கள் ஊர்வலமாக வரும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாத்து உணவளித்துச் செய்யும் தொண்டு சிவத்தொண்டாகின்றது. மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் முன்வரும்போது இத்தொண்டின் பெருமையை முன் வைத்துப் பாடுகிறார் சேக்கிழார்.

மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்(டு) ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன உரைப்பார்
(பெரியபுராணம் 1087)

என்பது சேக்கிழாரின் திருவாக்கு.

பூம்பாவையை எழுப்ப முன்வந்த சம்பந்தர் எவ்விடத்திலும் செய்யாத ஒன்றை மயிலாப்பூரில் செய்கின்றார். மற்ற உயிர்ப்பிக்கும் இடங்களிலெல்லாம் நடக்காத ஒன்று இத்திருவிளையாட்டில் நடைபெறுகிறது. சம்பந்தர் சில சத்திய மொழிகளை உரைத்து அவை உண்மையானால் பூம்பாவை எழட்டும் என்று சிவபெருமானிடம் வேண்டுகோளை வைக்கின்றார்.

“சிவத்தொண்டு என்பது சிவனடியார்க்கு உணவளிப்பது, சிவ விழாக்கள் கொண்டாடுவது என்ற இரண்டும் முன்னிற்பது உண்மையானால் இறந்த பூம்பாவை உயிருடன் எழவேண்டும்”, என்று சம்பந்தர் பாடுவதாக அமைக்கிறார் சேக்கிழார். அதன்படியே சிவ கருணை மேலெழுந்து ஒடுங்கிய இடத்தில் இருந்துப் பூம்பாவை சிவனருளால் பிறந்து, வளர்ந்து வருகிறாள். இதன் காரணமாகச் சிவனடியார்க்கு உணவளித்தல் என்ற தொண்டின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சிவனடியார்களை இல்லத்திற்கு அழைத்து உணவு தரும் நிலைக்கென்று மரபும் முறைமையும் உண்டு. பெரியபுராணத்தில் இதற்கான முறைமை விரவிக்கிடக்கின்றது. அடியார்களை
1. எழுந்தருளுவித்தல்,
2. பீடம் இட்டு அமரச்செய்தல்,
3.நறுநீர் கொண்டு திருவடிகளை விளக்குதல்,
4. விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்தல்,
5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல்,
6. பின் அவர்களுக்குப் பூசனை செய்தல்,
7. இதன்பிறகு அவர்களுக்குத் திருவமுது படைத்தல் அவற்றோடு நிதி, ஆடை, உணவுப் பாத்திரம் ஆகியன தருதல்,
ஆகிய நடைமுறைகளை உடையதாகச் சிவனடியார்களை வரவேற்று உணவளிக்கும்முறை அமைகின்றது.

இதனை முறையே…
1. ஆவாகனம்,
2. தாபனம்,
3.பாத்தியம்,
4. அருக்கியம்,
5. ஆசமனம்,
6. அருச்சனை,
7. நிவேதனம் ஆகியனவாக வடமொழியிலும் குறிக்கலாம். இம்முறைமைகளைக் குறைவறச் செய்து சிவத்தொண்டு ஆற்றியவர்கள் நாயன்மார்கள். அவர்கள் வழியில் நாமும் சிவனடியார்களைத் தொழுதல் செய்யவேண்டும்.

1. எழுந்தருளுதல் (ஆவாகனம்):
சிவனடியார்கள் ஊருக்குள் நுழையும்போதே கோவிலைக் கண்டு இன்புற்று அங்குள்ள இறைவனைக் காண ஏங்கி வருவர். முதல் வேலையாக எம்பிரானைக் கண்டபின்னே அந்த ஊரில் உணவு, தங்கல் போன்றனவற்றைப் பற்றிச் சிந்திப்பர். இந்நேரத்தில் அவ்வூர் அன்பர்கள் சிவனடியார்களைக் கண்டு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல முன்வரவேண்டும்.

ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்திமுன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
ஈர மென்மதுரப் பதம்பரிவு எய்த முன்னுரை செய்தபின் (442)

என்ற பாடல் இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் இடம்பெறுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “நேர வந்தவர் யாவர் ஆயினும்” என்பது சிறப்பு மிக்கத் தொடராகும். சிவனாரின் அடியார் என்ற நிலையில் அடியவர் யார் வந்தாலும் சாதி, இனம், மொழி எப்பாகுபாடும் பாராமல் அவர்களின் முன் சென்று கைகள் குவித்து, அவர்களின் செவிகளில் மதுர மொழிகளால் இனியன கூறி இல்லத்திற்கு அழைக்கவேண்டும் என்பது முறைமையாகின்றது. அடியார்களிடம் பேசும் நன்மொழிகளைக் கூடச் சேக்கிழார் தன் காப்பியத்தில் தந்துவிடுகிறார்.
“நன்று உமது நல்வரவு, நங்கள் தவம்” (பாடல். 180) என்று சொல்லலாம்.
“எந்தைபிரான் புரிதவத்தோர்; இவ்விடத்தே எழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்” (896) என்றும் கூறலாம்.
“முந்தை எம் பெரும் தவத்தினால் என்கோ? முனிவர் இங்கு எழுந்தருளியது” (408) என்று குறிப்பிடலாம்.
“முடிவில் தவம் செய்தேன் கொல்! முன்பொழியும் கருணை புரி வடிவு உடையீர். என்மனையில் வந்து அருளிற்று என்?” (1797) என்றும் பாராட்டலாம்.
இவ்வாறு பலபட பாராட்டிச் சிவனடியாரை இல்லம் அழைத்துவருவது என்பது முதல் நிலை.

2. பீடம் இட்டு அமரவைத்தல் (தாபனம்):
வரவேற்று இல்லம் அழைத்து வந்த அடியார் இப்போது வீட்டு வாசலில் நிற்கிறார். யார் வந்தாலும் வீட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு இருக்கை தந்து உபசரிப்பது தமிழர் மரபு. வந்திருப்பவர் அடியார். வரவேற்பவர் அடியார். வந்தவரை வணங்கி வீட்டிற்குள் அழைத்து உரிய இருக்கையில் அமரவைப்பது என்பது அடுத்தபடிநிலையாகும்.

அடியவர் அமரும் பீடம் வீட்டாரின் வசதிக்கு ஏற்றது என்றாலும், வீட்டிலே இருக்கும் உயர்ந்த ஆசனம் அதுவாக இருக்கவேண்டும். சந்தமலர் மாலைகள், முத்துமாலைகள் ஆகியன சூட்டப்பெற்ற ஆசனமாக அது இருப்பது நலமாகும். பொன் ஆசனம் என்றாலும் அதுவும் தகும். நம்வீட்டில் இருக்கும் ஆசனம் அடியவர் உட்காருவதன் காரணமாக பொன் ஆசனமாக மிளிர்கின்றது. “மண்டு காதலின் ஆதனத்து இடை வைத்தார்” இளையான்குடி மாற நாயனார்.

3. நறுநீர் கொண்டு திருவடி விளக்குதல் (பாத்தியம்):
வீடும் வேண்டா விறலினரான அடியவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பெரியார் தற்போது ஆசனத்தில் அடிமைப் பாங்குடன் ஒதுங்கி அமர்கிறார். இச்சிறியவனுக்கு இச்செய்கை பொருந்துமா என்ற வெட்கம் அவரிடத்தில் எழ அவர் ஒதுங்கி அமர்கிறார். அவ்வாறு அமர்ந்திருக்கும் அவரின் திருப்பாதங்களை நறுநீர் கொண்டு விளக்குதல் அடுத்தமுறைமை ஆகும்.
கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் விளக்கினார் இளையான்குடிமாற நாயனார்.
கமழ்நீர்க்கரகம் எடுத்து மனைவியார் ஏந்த, தூயநீரால் சோதியார் தம் கழல் வளிக்கினார் சிறுத்தொண்டர் (3735).
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்தார் காரைக்கால் அம்மையார். (1739)
இப்பாடலில் சிறுகுறிப்பு காணத்தக்கது. அடியவர் வந்துவிட்டார். கணவர் வீட்டில் இல்லை. இந்நிலையில் பெண்கள் அடியவரை வரவேற்பது சரியா. சிறுத்தொண்டர் புராணத்தில் அடியார் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறார் அடியவர். இங்கு உள் நுழைகிறார் அடியவர். வரும் அடியவரைப் பொறுத்தது உள் வருவதும், வராததும். சிறுத்தொண்டர் புராணத்தில் அடியவரை வரவேற்கச் சிறுத்தொண்டரின் மனைவி தயாராக இருந்தும் அடியவரே நான் பெண்கள் தனித்திருக்கும் இடத்தல் வரமாட்டேன் என மறுத்துரைக்கிறார்.
காரைக்கால் அம்மையார் புராணத்தில் கடையில் கணவன் இருக்க, வீட்டில் அடியவர் நுழைய, மறுக்காது வரவேற்கிறார் அம்மையார். அவருக்குக் கால்களை விளக்கத் தான் முனையாது நீர் முன் அளிப்பதாகச் சேக்கிழார் பாடுகிறார்.

இதே நிலை ஏயர்கோன் கலிக்காமர் புராணத்திலும் வருகிறது. ஏயர்கோன் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். சுந்தரர் அந்நேரம் வருகிறார். அப்போது ஏயர்கோன் கலிக்காமர் மனைவி
“தூயமணிப் பொன்தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால் சேயமலர்ச் சேவடி விளக்கி” (3193)
என்று தானே விளக்குகிறார். இங்கு கணவன் வீட்டில் இருக்கிறார். அவர் நினைவின்றி மயங்குகிறார். அவர் நினைவில் இருக்கையில் சிவனடியாரை வரவேற்பதில் ஏதும் குற்றம் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் ஏயர்கோன் கலிக்காமர் மனைவி கணவன் உடன் இருந்து செய்யும் பாதம் விளக்கலை அம்முறைப்படிச் செய்கிறார். இவ்வாறு வந்த அடியார் தன் கால்களை முன்னும் பின்னும் இழுத்து இப்பெருமை எனக்கானது அல்ல, சிவனுக்கானது என்று ஏற்கிறார்.

4. விளக்கிய நீரை தம் மீதும், வீடெங்கும் தெளித்தல் (அருக்கியம்):
அடியார் ஏற்றுக்கொண்ட பாதம் விளக்கலைச் செய்து முடித்த நிம்மதி இப்போது வரவேற்ற அடியாருக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இது போதாது என்று அவர் மனம் எண்ணுகிறது. அடியார் அடிகளை விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்து தன் வீட்டைப் புதுப்பிக்கிறார் அடியவர். இதுவே அடுத்த முறைமையாகும்.
“முனைவரை உள் எழுந்தருளு வித்து அவர்தாள் முன்விளக்கும், புனைமலர் நீர் தங்கள்மேல் தெளித்து”( 1807) என்று அப்பூதி அடிகள் அடியார்க்குப் பெருமை சேர்க்கிறார்.
ஏயர்கோன் கலிக்காமர் மனைவி “தூநீரால் சேயமலர் சேவடி விளக்கித் தெளித்துக்கொண்டார். செழும்புனலால் மேயசுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களித்தார்” (3193) அவர் தெளித்த நீர் ஏயர்கோன் உயிரையும் நீட்டித்திருக்க வேண்டும்.
சிறுத்தொண்டர் “ஆய புனிதப்புனல் தங்கள் தலைமேல் ஆரத்தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி”(3735) பெருமை கொண்டார்.
அடியவர் அடிகள் நீரை அவரறிந்தும் அறியாமலும் வீடெல்லாம் தெளித்துப் பெருமை கொண்டனர் அடியார் இல்லத்தார்.

5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல் (ஆசமனம்):
இல்லமெல்லாம் தெளித்து இல்லத்தைப் புதுமை செய்தபின் இன்னும் கொஞ்சம் அப்புனிதநீர் இருப்பதனால் தன் உள்ளுக்குப் பருகுகின்றனர் இல்லத்தார். அப்பூதியார் உள்ளும் பூரித்த நிலை (1807) பாடலால் தெரியவருகிறது.

6. பூசனை (அருச்சனை):
அடியவர் ஆசனத்தில் இனிது அமர்ந்துள்ளார். அவருக்குப் பாதபூசை செய்யப்பெற்றது. அதன்பின் அவருக்கு அர்ச்சனைகள் செய்யவேண்டுவது முறையாகும். அருச்சனை செய்தபின் (443), ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து (1808), உளம்களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் (3193), ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் (3735) என்று அடியவரை ஆண்டவனாகவே எண்ணிப் பூசை செய்த நாயன்மார்தம் செய்கையைப் பெரியபுராணத்தில் காட்டுவார் சேக்கிழார். மலர்கள், சந்தனம், தீபம், தூபம் கொண்டு அடியவருக்குப் பூசனை நிகழ்த்தப்படுகிறது. அடியவரின் உடலுக்கும், உள்ளத்திற்கும், நினைவிற்கும், செயலிற்கும் நடத்தும் இப்பூசனை சிவபூசனையைவிடச் சிறந்தது. ஏனெனில் இப்பூசனை மெய்க்கு மெய்யாக நடத்தப்படும் பூசனையாகும். இறைவனுக்கும் மனத்தாலே, செய்கையாலே பூசனை செய்யலாம். அதனை இறைவன் ஏற்றானா என்பது சந்தேகம்தான். ஆனால் மெய்க்கு மெய்யாக இங்கு அடியவர் பூசனை நிகழ்த்தப்படுகிறது.

7. திருவமுது படைத்தல் (நிவேதனம்):
பூசனை முடிந்தபின் திருவமுது படைப்பது என்பது நியதி. இத்திருவமுது காலம் கடத்தாமல் நன்பகல் தாண்டாமல் படைக்கப்படவேண்டும். காய்கறி உணவு ஏதும் ஆயத்தமாகவில்லை என்றாலும் திருவமுது (சோறு) மட்டும் தயிருடன் தரப்படலாம். அப்படித் தந்தவர் காரைக்கால் அம்மையார்.
“நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு வல்விரைந்து வந்தணைந்து படைத்து மனமகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார்தமை அமுது செய்வித்தார்” (1741) என்று திருவமுது படைத்தார் காரைக்கால் அம்மையார்.
பசி போக்கும் இனிய தொண்டு சிவத்தொண்டு ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் நிலையில் பசி கடக்கா வண்ணம் உணவிடுவது முக்கியம். உணவின் தரம், வகை ஆகியவற்றில் விடுதல் இருந்தாலும் உணவிடுவது காலத்திற்கு நடக்கவேண்டும் என்பது முறைமையாகும்.
“உண்டி நாலுவித்தில் ஆறுசுவைத்திறனில் ஒப்பிலா அண்டர் நாயகன் தொண்டர் இச்சையில் அமுது செய அளித்துள்ளார்” (443) இளையான்குடி மாற நாயனார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளின் வீட்டில் அமுது உண்கிறார். திருவமுதை இல்லமாதர் எடுத்து நல்க கொத்து அவிற் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் அருந்தமிழ் ஆளியார் அங்கு அவர் அமுது செய்கின்றனார். அப்பூதியடிகள் வீட்டில் ஒரே ஒரு அடியவர் அதாவது திருநாவுக்கரசர் மட்டுமே உணவு உண்ண வந்திருக்க அடியாருடன் உண்டதாகச் சேக்கிழார் குறிக்கிறார். அடியார் உண்ணும் உணவு அதனை உண்ணும் அத்தனை பேரும் அடியாராக மாறும் திறம் இதுவேயாகும்.

வந்திருக்கும் அடியவர் முன் அவர் மனம் கோணாதபடி உணவுகளைப் பரிமாறுகின்றனர் சிறுத்தொண்டரின் இல்லத்தார். “புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதையரும், கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப்படைக்க” (3736) என்கிறார். இப்பாடலடியின்படி கற்பில் சிறந்த பெருமாட்டியும், பெருமை குன்றாமல் வாழ்ந்து வரும் சிறுத்தொண்டரும் விருந்துக்கான உணவுப்பொருட்களைப் பரிமாறிய நிகழ்வை அறிந்து கொள்ளமுடிகின்றது.

சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரருக்கு உணவு படைக்கிறார். இருவரும் தோழர் என்றாலும் அங்கும் அடியார்தமை வணங்கும் முறைமை பின்பற்றப்படுகிறது.

“பெருமான் வேண்ட எதிர் மறுக்க
மாட்டார் அன்பின் பெருந்தகையார்
திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
செய்த எல்லாம் கண்டிருந்தார்
அருமானங்கொள் பூசனைகள்
அடைவே எல்லாம் அளித்ததன்பின்
ஒருமாமதி வெண்குடை வேந்தர்
உடனே அமுது செய்து உவந்தார்” (3904)

என்று அடியாரை உபசரித்தலைப் பூசனை என்ற ஒரு சொல்லால் இங்குக் குறிக்கிறார் சேக்கிழார். இச்சொல்லுக்குள் முன் சொன்ன படிநிலைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. வரவேற்றல் முதல் பூசனை வரை அனைத்தும் நிகழ அடுத்து உணவு உண்ணும் நிலை வந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

இவ்வாறு அடியார்களை அழைத்துச் சிவ உணவைத் தந்து மகிழச் சேக்கிழார் ஒரு செயல்திட்டம் வரைந்து அளித்துள்ளார். இதன்பின் அடைக்காய், வெற்றிலை, பசுங்கர்ப்பூரம் போன்றன நல்கி இப்படையலைச் செழுமைப்படுத்தவேண்டும். உண்ட அடியவர் மனம் மகிழ்ந்து தன் உணவைச் சிவ உணவாகச் சிவனுக்கு ஆக்குகிறார். அடியவர் வழியாக உண்ணும் முறைமையே ஆண்டவனின் உண்ணும் முற்றாகின்றது.

“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் பூமிசை
என்னம் பாலிக்கும் மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவி” (அப்பர் தேவாரம்)

என்ற பாடலின்வழி அன்னம் பாலித்த அடியார்கள் தில்லைச் சிற்றம்பலத்தின் தொடர்பு பெற்றவர்கள் ஆகின்றார்கள். இதன்பின் அடியவருக்கு ஆடை, அணி, மணி, மலர்கள், திரு ஆபரண வர்க்கங்கள் எனப்பல தந்து இந்தச் சிவபூசையை நிறைவேற்றவேண்டும் என்பது சேக்கிழார் காட்டும் அடியார் வணக்க நடைமுறையாகும்.

இந்நடைமுறையில் நின்று நாளும் நம் இல்ல விருந்தைச் சிவ விருந்தாக மாற்றுவோம். சிவத்திற்கு எல்லாம் அளிக்கும் நன்முறையே சிவநடைமுறை

புதன், 12 மே, 2021

வழிபாடு வல்வினை தீர்க்கும்

 


வழிபாடு வல்வினை தீர்க்கும்:


வினை என்பது செயல். கைவினைப்பொருள் - கையால் செய்யப்பட்ட பொருள் என்பதால் இதனை நன்கறியலாம், எனவே நல்வினை செய்தால் இன்பம் பெறலாம். தீவினை செய்தால் துன்பம் பெறலாம். தீவினையாளர்களும் இறைவனை வழிபட்டால் தீவினையைக் குனைத்து மெலிவடையச் செயயலாம் என்கிறது தேவாரம்.

வினை மூவகைப்படும். முன்னாள் சேர்த்துவைத்துள்ள வினை, சஞ்சித வினை எனப்படும். அம்முதலில் சிறிது எடுத்துக்கொண்டு வந்திருப்பதுதான் இப்பிறவி. இப்போது அதனை அநுபவித்தே தீர்க்க வேண்டும். இதுதான் பிராரத்தவினை எனப்படுவது. அநுபவிக்கும்போதே மேலும் சில வினைகளைச் செய்கிறோம். அதுதான் எதிர்காலத்திற்குச் சேமிக்கப்படும் வினை. இதனை ஆகாமியம் என்பர்.

பிராரத்த வினையை அநுபவித்தே ஆகவேண்டும் என்னும் போது அதனை வழிபாட்டினால் நீக்கிவிடலாம் என்பது சரியாகுமா? என்பது கேள்வி. இதற்குத் தேவாரப் பாடல்களைச் சிந்தித்தால் தெளிவான விடை கிடைக்கும்.

ஒருவனைக் கொலை செய்தவன் என்று நிருபித்துவிட்டால் அவனுக்குத் தூக்கு தண்டனைதான் விதிக்கவேண்டும். கொலை செய்தவன் குற்றத்தை உணர்ந்து திருந்துவான் எனத்தோன்றினால் அவன் இதுவரை அநுபவித்த இன்னல்களை வைத்தே அவனுக்குத் தூக்கு தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

ஒருவன் கடன் வாங்குகிறான். திரும்பக் கொடுக்க இயல வில்லை. அவனுக்குத் தண்டனையாகக் கடன் கொடுத்தவருக்குக் கடன் வாங்கியவன் சில மாதங்கள் அல்லது வருடங்கள் வேலை செய்து கடனைக் கழித்துவிடுகிறான். பணமாகக் கொடுக்கவில்லை என்றாலும் உழைப்பால் கடனைக் கொடுத்து விடுகிறான். கடன் தீர்ந்துவிட்டதால் தண்டனை இல்லை. உழைப்பே அநுபவமாகி விடுகிறது.

இதுபோல் அனைத்துலகிற்கும் முதல்வனாகிய கடவுளை நாளும் வழிபட்டால் வழிபாடே வினையைத் தீர்க்கும் பணியாக, உழைப்பாக, நின்று நாம் செய்த பாவத்தை நீக்கிவிடுகிறது. வினையினின்றும் நீங்கியவனின் எண்ணங்களும், பேச்சுக்களும் செயல்களும் முன்னிலும் உயர்ந்ததாய் விளங்குகின்றன. இதனை உணர்ந்தே நமது சமயாசாரியர்கள் இறைவழிபாட்டால் வினையை வீட்டலாம் என்றனர். இக்கருத்தை ஞானசம்பந்தர்,

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர், பரிவிலார்பால்

கரவினர், கனலன உருவினர்.......... (தி.3 .ப.99.பா.3)


என அறிவிக்கிறார்.

பரவினர்க்குப் படுதுயர் கெடுப்பவர் என்றவர், பரிவிலார்பால் பரமன் மறைந்து விடுகிறான் என்கிறார். அவருக்கு வழிபடும் எண்ணம் தோன்றவில்லை. தோன்றும் அளவும் மறைந்திருந்துதோன்றியபோது, அவர் தீவினையையும் அகற்றி விடுவார். இதே கருத்தைத் தென்குரங்காடுதுறைத் தேவாரத்தில் இரண்டாம் திருமுறையில் அருள்வதும் காண்க.

பரவக் கெடும் வல்வினை பாரிடம் சூழ

இரவிற் புறங் காட்டிடை நின்றெரி ஆடி

அரவச் சடை அந்தணன் மேய அழகார்

குரவப் பொழில் சூழ்குரங் காடு துறையே ( தி.2 ப.35 பா.1)

"திருச்சிற்றம்பலம்"

ஆத்தடி விநாயகர் கோயில் கைலாசநாதர் ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசை பூசை ...

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

பரம்பொருள் ஒன்றே

 பரம்பொருள் ஒன்றே



மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்”  என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.


பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே”  என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.


இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.


ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.


மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.


சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

சனி, 3 ஏப்ரல், 2021

திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்

 திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்



சைவத்தின் பொது நூல் வேதம், சிறப்பு நூல் ஆகமம் என்படும். முழுமுதற் கடவுள் சிவபெருமானார். திருமுறைகள் தமிழ் வேதம்என போற்றப்படுகின்றன. சிவனாரின் திருவருளை முழுமையாகப் பெற்ற திருவருட் செல்வர்களால்  சிவபெருமான் உள்நின்று உணர்த்தி பாடப்பெற்ற தெய்வத்திருநூல்களேதிருமுறைகளாக வகுக்கப் பட்டன, திருமுறைகள்  தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பிரபஞ்சம் , திருத்தொண்டத்தொகை என பனிரெண்டாகும்.

  ஆலயங்களிலும் வீடுகளிலும், சைவ திருச்சபைகளிலும் கடவுள் வழிபாட்டின் போது

பாடப்படுவது இத்திருமுறைப் பாடல்களே. இத்தோத்திரப்பாடல்கள் பிரணவமயமானவை இவற்றுடன்வேறு பாடல்களை சேர்த்து பாடக்கூடாது. அவ்வாறு சேர்த்து பாடினால் சிவநிந்தனையாகும். அவ் அருட்பாக்கள்மட்டுமே கடவுள் சன்னதியில் ஓதத் தகுந்தவையாகும்.இத்திருமுறைபாடல்கள்  பாடத் தொடங்கும் முன்னும் பாடி முடிந்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓத வேண்டும்.

  தேவாரம்,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் முறையாகும்.

  இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து, மனமுருகி, மனம் மொழி மெய்யால் கண்ணீர் மல்க கசிந்து ஓதுவார் நன்னெறக்கு இட்டுச் செல்லப்படுவார் என்பது  அருளாளர்களின் முடிபு.

  பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு பற்றி போற்றுதல் செய்பவன வாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும், பக்தியையும், தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், மந்திரம், மருந்து, தந்திரம் எனமூன்றுமாய் விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மையனவாகும் இத்திருமுறை பாடல்கள்

  இறைவன் ஒருவனே அவனே சிவன் , அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றுமில்லை. அப்பெருமான் திருஅருள் சக்தியுடன்இணைந்து ஒரு பொருளாகவே  உள்ளான். உயிர்களிடத்தும் அளப்பெரும் கருணை கொண்டவன், உயிர்கள் ஈடேற்றின் பொருட்டுஐந்தொழிகள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி ( மந்திரம் ) திருவைந்தெழுத்தாகும். சிவ சின்னங்கள், திருநீறு, உத்திராட்சம், அப்பெருமானிடம்சேர்ப்பிக்கும் நால்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம் ஞானம்என்பனவாகும். இதனை தெளிவாக உணர்த்துவன திருமுறைகளே.

  இறைவன் அங்கெங்கெனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஆலயத்திலும், குருவினத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிரில் நெய்போல வெளிப் பட்டு காணப்படுகிறான்.

  பக்தி இயக்கமானது ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து, மனித பிறவி எடுத்ததன்  சீரிய நோக்கமாகிய 

கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.பக்தி இயக்கத்தை வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.

  திருமுறைகளை பாராயணம் செய்தல் நம் அன்றாட வாழ்க்கை பழக்கமாக கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக.

 திருசிற்றம்பலம்



வெள்ளி, 2 ஏப்ரல், 2021

இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்

 இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்



அன்பே சிவம் என்பது பலரும் அறிந்த ஒன்று. அன்புறு சிந்தையராகி அடியவர்கள் இறைவனுக்கு நண்புறுவர் என்பார் திருஞானசம்பந்தர். சீர்மிகு செந்தமிழர் இறைக்கொள்கையான  சித்தாந்த சைவம் விதிமுறைகளை வகுத்து வைத்துக் கொண்டுப் பெருமானை வழிபடுவதனைக் காட்டிலும் அன்பு வழி நின்று வழிபடுவதையே சிறந்தது என்று குறிப்பிடுகின்றது. ஒரே நேரத்தில் ஒரே வகையில் வழிபடும் ஒரு செயல்முறை என்று அல்லாமல் அவர் அவர் விரும்பும் அவர் அவருக்கு முடிந்த எளிய, சைவ சமயத்திற்கு ஏற்ற முறையில், இறைவனை வழிபடலாம் என்ற சுதந்திரத்தினைச் சித்தாந்த சைவம் சைவர்கட்கு வழங்கியுள்ளது. இறைவழிபாடு என்பது உயிர் இறைவனிடத்தில் ஓர் உறவினை ஏற்படுத்திக்கொள்ளச் செய்துகொள்கின்ற முயற்சி என்பதனைச் சித்தாந்த சைவம் தெளிவுறுத்துகின்றது. எனவே உயிர்களின் அகப்புற ஆற்றலுக்கு ஏற்ப தத்தம் வழிபாடுகளை அமைத்துக் கொள்வதனைச் சித்தாந்த சைவம் தடுப்பதில்லை. இப்பூவுலகில் அன்பு நெறியில் வாழ்ந்து, இறைவனை இவ்வுலகிலேயே கண்டு அவன் திருவடிக்கு ஆளான அருளாளர்களின் வாழ்வியல் நெறிகளை பரிந்துரையாகப் பின்பற்றுதற்குச் சித்தாந்த சைவம் முன் வைக்கின்றது. சைவ சமயத்தில் உள்ள நடைமுறை உண்மையை உணராதவர்களே சைவ சமயத்தில் ஒழுங்கு இல்லையென்றும் வழிபாடுகள் ஒருமுகப் படுத்தப்படவில்லை என்றும் அறியாமல் குறிப்பிடுவர்.


இறைவனின் திருவருளைப் பெற்ற, அன்பு நெறியான சிவநெறி என்னும் செந்நெறியில் வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்வியல் முறைமையைச் சித்தாந்த சைவம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்று வகுத்துத் தெளிவுறுத்துகிறது. அடியார்கள் வாழ்ந்து காட்டிய இந்நான்கு நெறிகளில் எது நமக்குப் பின்பற்றுவதற்கு முடியுமோ அதனைத் தெரிவு செய்து கொண்டு இறைவனை வழிபட்டு அன்பு பாராட்டலாம் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. திருநாளைப் போவார் என்பார் திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் திருக்குளத்தில் தங்களைத் தூய்மை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருவுள்ளத்தோடு திருக்குளம் வெட்டுவதையும் பெருமானுக்குப் பூசனையின் போது இசைக்கருவிகள் முழக்கத்திற்குத் தோற்கருவிகளைச் செய்து கொடுப்பதையும் தமது வழிபாடாகக் கொண்டார். அவர் சார்ந்திருந்த குமுகாயம் அவரைக் குலத்தில் தாழ்ந்தவர் என்று விலக்கி வைத்திருப்பினும் மேற்குலத்தார் என்போர் நலமுற அன்புவழியில் நின்று தமக்குத் தெரிந்த தொழிலையே வழிபாடாகக் கொண்டு சிவப் பணிகள் செய்தார். பெருமானின் திருவருளுக்கு ஆளானார். முருக நாயனார் என்பார் தாம் அறிந்த, தன்னால் இயன்ற, பெருமானுக்கு வழிபாட்டிற்கு மலர்பறித்துக் கொடுத்தல் எனும் திருச்செயலையே வழிபாடாகக் கொண்டு பெருமானிடத்தில் அன்பினை வளர்த்துப் பெருவாழ்வு பெற்றார்.


துணி வெளுக்கும் தொழிலைச் செய்த திருக்குறிப்புத் தொண்டர் என்பார் நடமாடும் இறைவனாகக் கருதிய அடியார்களுக்கு அன்போடு துணி வெளுத்துக் கொடுப்பதனைத் தன் சிவப்பணியாக எண்ணினார். அவரால் இயன்ற, தனக்கு நன்கு தெரிந்த அச்செயலையே தமது வழிபாடாக, தமது உயிர்க்கொள்கையாக எல்லா சூழலிலும் செய்து வந்தார். தம்முடைய அத்தொண்டிற்குத் தடை ஏற்பட்டபோது தமது உயிரையும் விடத்துணிந்தார். அவருக்குப் பெருமான் அவர் துணி வெளுக்கும் பாறையிலேயே வெளிபட்டு அருளினான்.


தங்களுக்குத் தெரிந்த, தங்களால் இயன்ற, அடியாருக்கு உடை, உணவு அளித்தல், திருக்கோயில் கூட்டுதல், கழுவுதல், திருமுறைகள் ஓதுதல், உழவாரப் பணி செய்தல், பெருமானின் திருமஞ்சனத்திற்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்தல், ஆலயத்தில் விளக்கேற்றுதல், குங்கிலியம் புகைத்தல், திருக்குளத்தில் தூர்வாறுதல், தீவத்தி ஏந்துதல், பல்லக்குச் சுமத்தல், உறைபாகச் சமய சின்னங்களை அணிதல், திருவைந்து எழுத்தினை மறவாது கூறுதல் போன்ற செயல்களைச் செய்து இறைவனின் அன்பிற்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டார்கள். சீலம் எனும் தொண்டு நெறிக்கு உட்பட்ட மேற்கூறிய செயல்களைத் தெரிவு செய்து கொண்டு அதிலே உறைப்பாய் நின்று இறைவனை அடைந்தார்கள்.


இறைவனுக்குரிய பூசனை முறைகளைக் கற்றுணர்ந்த திருநீலநக்கர் எனும் அடியார் இறைவனை அழகு செய்து பூசனை செய்து வழிபட்டார். இறைவனுக்குத் திருமஞ்சனம், திருவமுது திருமுறைப்பாடல்கள் தூபதீபம் என்று தமக்குத் தெரிந்த பூசனை முறையால் இறைவனுக்கு வழிபாடு இயற்றி அவ்விறைவனை அகத்தில் இருத்தியும் மகிழ்ந்தார். கண்ணப்பர் எனும் வேடர் தமக்குத் தெரிந்த முறையில் இறைவனுக்குத் திருமஞ்சனமும் திருவமுதும் மலரும் இட்டுத் தமது அன்பின் பெருக்கால் தமது கண்ணையும் பிடுங்கி அப்பி, நோன்பு எனும் நெறியால் பெருமானின் வலப்பக்கத்தில் நிற்கும் பேற்றினைப் பெற்றார். செறிவு முயற்சிகளில் சிறந்து விளங்கிய பெருமிழலைக் குறும்பர் என்பாரும் பூசலார் என்பாரும் அன்றாட வாழ்வில் விட வேண்டுவனவற்றை விடுத்தும் செய்ய வேண்டுவனவற்றைத் தவறாது செய்தும் ஒழுக்கச் சீலராகளாக ஐம்புலன்களையும் மனத்தையும் மூச்சுப் பயிற்சிகளின் வழியும் ஆசனங்கள் வழியும் அடக்கிப் பெருமானை உள்ளத்தில் கண்டும் உள்ளத்தில் கோயில் எழுப்பியும் தங்களால் இயன்ற செறிவு நெறியின் வழி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்கள்.


கற்றல், கேட்டல், சிந்தித்தல், தெளிவுற்று அதில் அழுந்தி இருத்தல் என்பதில் கைத்தேர்ந்த கணநாதர் என்பார் திருமுறைகளை ஓதியும் பிறருக்கு ஓதுவித்தும் அதை உணர்ந்தும் பெருமானின் திருவருளில் அறிவு நெறி வழி திளைத்திருந்தார். அவர் அவர், அடியார் பெருமக்கள் நமக்குக் காட்டிய, நம்மால் இயன்ற ஒரு வழியைத் தெரிவு செய்து கொண்டு முயன்றால் அம்முறை வழியே இறைவன் வந்து அருளுவான் என்பதனை, “அப்பனை நந்தியை ஆரா அமுதினை, ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை, எப்பரிசாயினும் ஏத்துமின் ஏத்தினால், அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே” என்று திருமூலர் குறிப்பிடுவார்.


அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய நந்தி எனும் சிவபெருமானை, இறவா வாழ்வினை அளிக்கும் அமுதினைப் போன்றவனை, ஒப்பிலாத பிழைபொறுத்து அருளும் வள்ளலை, உலகம் அழிந்து ஒடுங்கும் காலத்து அழிவின்றி நின்று மீண்டும் உலகினைத் தோற்றுவிக்கும் முதல்வனை, அவன்பால் அன்புமேலிடச் செய்யும் நான்கு நெறிகளில் எந்நெறியினால் ஆயினும் தொழுங்கள். தொழுதால் அந்த வழியின் வகையாலேயே அச்சிவபெருமானும் வந்து அருள்புரிவான் என்கின்றார் திருமூல நாயனார்.


அவர் அதைச் செய்கிறார், இவர் இதைச் செய்கிறார் என்று எண்ணி மயங்கி வெறுமனே காலத்தைக் கழிக்காமல், நம்மால் இயன்ற, செயல்படுத்த முடிந்த, சைவ சித்தாந்த கொள்கைக்கு மாறுபடாத, எளிய முறைகளைத் தெரிவு செய்து கொண்டு அந்நெறியிலேயே உறைபாய் நின்று வழிபடுவோமாக! பெருமானின் திருவருளைப் பெறுவோமாக!


இன்பமே எந்நாளும் துன்பமில்லை!