திங்கள், 29 மே, 2017

இறை வழி்பாட்டின் படிநிலைகள்

இறை வழி்பாட்டின் படிநிலைகள்- Stages in spiritual life


பொதுவாக இறைவனை அடைய நான்கு படிநிலைகளை கடக்க வேண்டும். இவற்றையே நான்கு படிநிலைகள் இருப்பதாக சித்தாந்தம் கூறுகிறது. அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்ப்படும்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ சைவ நாற்பாதங்கள் என்றும் இவற்றை கூறுவர்.

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன அறியப்படுகின்றன.

சரியை
கிரியை
யோகம்
ஞானம்


சரியை ;
புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல்,திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக்கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார்என்பது நன்கறியப்பட்டது.


நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
               நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
               சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்
               ஆரூரா என்றென்றே அலறா நில்லே.  
(தி. 6 ப. 31. பா. 3)
எவரேனும் தாமாக இலாடத் திட்ட
               திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
               உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
               இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
               கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
(தி. 6 ப. 61. பா. 3)
என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள்ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும் சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை.

அடுத்த பதிவில் கிரயைக் காணலாம்
திருச்சிற்றம்பலம்
நன்றி ;சைவ சித்தாந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக