திங்கள், 12 ஜூன், 2017

கருவிலே திருவுடையவர்கள்

கருவிலே திருவுடையவர்கள்


கருவிலே திருவுடையவர்கள்’ என்று சொல்வார்கள். கருவிலே திருவுடையர்கள் என்றால் யார்? நம் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா? அல்லது வரவாவது வருமா? திருமூலரிடம் செல்லலாம்.
அவர் பதில் சொல்வார். கூடவே அப்பர் சுவாமிகளும் மாணிக்கவாசகரும்,
கை கோக்க வருவார்கள்.

கை விட்டிலேன் கருவாகிய காலத்தும்
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரி சடையான் அடி
நெய் விட்டிடாத இடிஞ்சிலும் ஆமே
(திருமந்திரம் - 495)

கருத்து: கருவில் இருந்தபோதுகூட, நான் சிவபெருமானின் திருவடியை மறக்கவில்லை. பிறந்து வாழ்கின்ற இப்போதும் அதனை நான் மெய்யன்போடு தேடுகிறேன். அதனால் அத்திருவடி, நெய்விட்டு ஏற்றாமல் இயல்பாகவே ஔிவிடும் விளக்காக இருக்கிறது எனக்கு. தாயின் வயிற்றிலிருந்தபோதும், சிவபெருமான் திருவடியைக் கைவிடவில்லையாம்; பிறந்த பிற்பாடும் அப்படியே இருந்தாராம்.

எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா இந்தப் பேறு என்ற சந்தேகம் எழுந்தாலும், அதில் பாதி வாய்க்கப் பெற்றவர்கள் நாம். ஆமாம், பிறக்கும்வரை நாமும் இறை சிந்தனையுடன்தான் இருக்கிறோம். தாயின் வயிற்றில் குழந்தையிருக்கக்கூடிய சில படங்களை (மருத்துவ நூல்களில்) பார்க்கும்போதே தெரியும் - குழந்தை வளைந்து கும்பிட்ட நிலையில்தான் இருக்கும்!

ஏன் அப்படியிருக்க வேண்டும்? மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். ஓர் அற்புதமான ‘ஸ்கேனிங்’ பாடல் இது!

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித்தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

(திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் - 13-26 வரிகள்)

தாயின் வயிற்றில் புழுக்களுடன் நிகழ்த்தும் கிருமிப் போரில் அழியாமல் தப்பிப் பிழைத்து, முதலாம் மாதம் தான்றிக்காயின் அளவிலே உருவான கரு தப்பிப் பிழைத்து, இரண்டாம் மாதம் மற்ற புழுக்களும் கருப்பையில் புகுந்து செய்யும் இடையூறுகளில் தப்பிப் பிழைத்து, மூன்றாம் மாதம் பெருகும் மதநீரினால் அழியாமல் தப்பிப் பிழைத்து, நான்காம் மாதம் கருப்பை அடைப்பு, வெடிப்பு முதலானவற்றால் அழியாமல் தப்பிப் பிழைத்து, ஐந்தாம் மாதம் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, ஆறாம் மாதம் கருப்பையின் நெருக்குதலில் தப்பிப் பிழைத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் கரு சிதையாமல் இடையூறுகளில் இருந்து தப்பிப் பிழைத்து...

‘யப்பாடா! பொறக்கறத்துக்குள்ள இவ்...வளவு இருக்கா?’ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட வேண்டாம்; இன்னும் பிறக்கவில்லை. அதைக் கடைசி இரு வரிகள் விவரிக்கின்றன: பத்தாவது மாதம் நாம் பிறக்கும்போது, தாயாருக்கும் பிரசவ வேதனை, நமக்கும் தாய் வயிற்றிலிருந்து வெளிப்படும் வேதனை! இவ்வளவுத் துயரங்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துப் பிறக்கிறோம்.

அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதைப் போலக் கைகளைக் கூப்பியபடி கருவறையில் கிடக்கிறோம், பிறக்கிறோம். இது எங்கே நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று எண்ணியே, தாயின் வயிற்றிலிருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார் என பாகவதம் விவரிக்கிறது.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, ‘ஆண்டவா! செய்த வினைகளின் காரணமாக வந்துவிட்டேனே!’ என்று இறை சிந்தனை இருக்கும். ஆனால் பிறந்து வெளிப்பட்ட பிறகு, வெளிக் காற்றுத் தாக்கியவுடன்... போச்சு! இறை சிந்தனை இல்லாமல் போய்விடும். அப்புறம் என்ன? பிறந்தவுடன் பசியின் காரணமாகப் பாலுக்கு அழத் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றுக்காகவும் அழுது, அடுத்தவர்களையும் அழவைத்து... இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

இவற்றின் நடுவில் தெய்வ சிந்தனைக்கு இடம் ஏது? ஆனால், திருமூலர் இப்படிக் கருதவில்லை. கருவிலே கங்காதரன் நினைவோடு இருந்தவர், பிறந்த பிறகு தானும் அழாமல் அடுத்தவரையும் அழவைக்காமல் இருந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால், ஐந்தறிவு படைத்த மாடுகளின் துயர் தீர்ப்பதற்காக,  மூலனின் உடம்பில் கூடு விட்டுக்கூடு பாய்ந்தவர். அதன்பிறகும் கூட, சிவ சிந்தனையிலேயே இருந்து தவம் செய்து, நமக்காகத் தன் அனுபவங்களைத் திருமந்திரப் பாடல்களாகத் தந்தவர்.

‘நெய் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இயல்பாகவே ஒளி வீசக்கூடிய ஜோதிவடிவாக சிவபெருமான், என்னுள்ளே ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்,’ என்று கூறிப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். பிறந்த பிறகும் இறை சிந்தனை மாறாமல் இருப்பவர்களே, கருவிலே திருவுடையவர்கள் என்பது திருமூலர் வாழ்விலிருந்தும், அவரது பாடல்களிலிருந்தும் புலனாகின்றது. இப்பாடலில் திருமூலர் சொன்ன இதே கருத்து, அப்பர் சுவாமிகளின் பாடலிலும் வெளிப்படுகிறது:

கருவாய்க் கிடந்து உன் கழலே
நினைக்கும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம்
பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலிய சிவாய நம
என்று திருநீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்
புலியூர் அரனே

திருமூலரின் வாக்கும் அப்பர் சுவாமிகளின் வாக்கும் ஒன்றுபோல் இருப்பதில் வியப்பில்லை. உத்தமர்களின் உள்ளம் ஒன்றேபோல்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களெல்லாம் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் இந்நிலை வாய்ப்பதில்லை. அது கிடைக்க வேண்டுமென்றால், நல்ல குரு அமையவேண்டும்; நல்வழி காட்டும் அந்த சத்குரு வழியிலேயே நடக்கவேண்டும். சத்குரு கிடைப்பது அல்லது அமைவது குதிரைக் கொம்பாக இருக்கிறதே என்றால், அங்குதான் பிரச்னையே முளைக்கிறது. சரி, திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்.

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
நெய்ப்பட்ட பால் இளநீர் தயிர் தான் நிற்கக் கைப்பட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே  (திருமந்திரம் - 526)

கருத்து: கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை வீசி எறிந்துவிட்டு, வெயிலில் கொதித்துக் கிடக்கும் பருக்கைக் கல்லைச் சுமப்பவன் போலும், நெய்யுள்ள பால், இளநீர், தயிர் ஆகியவையிருக்க, கசந்து வழிந்து தீங்கு விளைவிக்கும் எட்டிப் பழத்தை உண்பவன் போலும், ஞானகுரு இருக்கையில் அவரை விடுத்து அஞ்ஞானியைக் குருவாகக் கொள்பவனின் செயல் இருக்கிறது.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாதே - அழகுள்ள இடத்தில் ஆபத்து இருக்கும். Where beauty lies There danger lies என்றெல்லாம் நமது முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் பாடல் இது. மனித இயல்பை மிகவும் அழகாகச் சொல்லித் துவங்குகிறது பாடல். எவ்வளவுதான் உயர்ந்ததான ஒன்று நம்மிடம் இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தத்தான் செய்வோம். உயர்ந்ததான அதை அலட்சியப்படுத்துவதுடன், உதவாக்கரையைத் தேடியும் போவோம்; அதைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்.

அதைச் சொல்லும் திருமூலரின் இந்த வாக்கு, ‘மாணிக்கத்தை வீசிவிட்டு, மண்ணாங்கட்டியைத் தூக்கிச் சுமப்பதைப்போல’ என, முன்னோர்கள் சொல்வார்கள். சரி, வெளியில்தான் இப்படியிருக்கிறோம் என்றால், நம் உள்ளே போவது எப்படி இருக்கிறது? அதையும் சொல்கிறார் திருமூலர். தூய்மையான பால், இளநீர், தயிர் என ஆரோக்கியத்தைத் தரும் எவ்வளவோ நல்ல உணவுப் பொருட்கள் இருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டு எட்டிப் பழத்தை நாடி, உண்போம். காரணம்?

எட்டிப் பழம் பெரியதாகக்கூட இருக்காது; சுவையோ, கசந்து வழியும். இருந்தாலும், வண்ணம் நிறைந்த அதன் அழகு நம்மைக் கவர்கிறது; போய் விழுகிறோம். அந்தக் கவர்ச்சியில் மயங்கி, ஏமாந்து அதனை உட்கொள்ளும் போது அதன் கசப்பைத் தாங்காமல் தவிக்கிறோம். இதைச் சொல்லி, நம்மை வழி நடத்த முயற்சிக்கிறார் திருமூலர்.

அதாவது, பால், இளநீர், தயிர் என பல இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வண்ணக் கவர்ச்சியில் மயங்கி, எட்டிப் பழத்தின் கசப்பை அனுபவிப்பதுபோல, நல்லதை ஒதுக்கிவிட்டு கெட்டதை அனுபவிக்கிறார்களே என்கிறார் திருமூலர். அழுத்தமாகச் சொல்லவேண்டுமானால், உள்ளும் புறமும் நல்லவற்றை ஒதுக்கிவிட்டுக் கெட்டதைத்தான் ஏற்கிறோம். நல்வழி காட்டக்கூடியவர்கள் இருந்தாலும், அவர்களை ஒதுக்கிவிட்டு, தீயவழி காட்டுபவர்களை நம் குருநாதர்களாக, வழிகாட்டிகளாகக் கொள்கிறோம்.

இதை, ‘கன்மி ஞானிக்கு ஒப்பே’ எனும் சொற்கள்  விளக்கும். இவ்வாறு சொன்ன திருமூலர், விதி என்ற சொல்லையும் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். விதிக்கப்பட்டவற்றை விலக்கி, விதிக்கப்படாதவற்றை நாடி அல்லல் வலையில் அகப்படுகிறோம். உண்மை உணர்ந்து துயரங்களில் இருந்து விடுபட, நல்ல குருநாதரை அடைய வேண்டும் என்கிறார் திருமூலர். அவர் தம் அடுத்த பாடலில், தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயல்புகளை சற்று விரிவாகக் கூறுகிறார்.

தளியறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறிவாளர் தம் சிந்தையுளானே
(திருமந்திரம் - 502)

கருத்து: தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிர்க்கும் அடியார்களுக்கு, குளிர்ச்சி உடையவராய் விளங்குவார். யோக நெறியில் மூச்சையடக்கித் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவேளை விளங்கலாம். ஆனால் ஞானம், அன்பு, யோகம் எனும் ஏதுமின்றித் தீர்த்தத்திலே மட்டும் நீராடுபவர்களுக்கு, அந்தச்சிவபெருமான் அடைதற்கு அரியவர்.

ஞானம் என்றாலே, தெளிவு என்பதுதான் பொருள். அப்படியிருக்கத் திருமூலர் ஏன் இவ்வாறு சொல்லவேண்டும்? ஞானிகள் பலர் தவம் செய்து தெளிவு பெற்ற பிறகும் மனங்கலங்கித் தவநிலையிலிருந்து தவறியிருக்கிறார்கள். தவறி விழுந்ததும் அதன்பின் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? அதுபோல, தவநிலையில் தவறிய ஞானிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்; தெளிவு அவர்களுக்குள் நிலை பெற்றுவிடும். அதன்பின் அவர்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படித் தெளிவு பெற்ற ஞானியர் உள்ளத்தில் தெய்வம் வீற்றிருக்கும்.

அடுத்து, அன்பினால் ஊற்றெழும் கண்ணீர் ஆறாகப் பெருக வழிபடும் அடியார்க்கு, குளிர்ச்சியாய் இருக்கும் தெய்வம். அதாவது அன்புள்ளம் கொண்டவர்க்கு, தெய்வம் அருள் மழை பொழியும் என்பது கருத்து. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எனத் திருஞானசம்பந்தரும்; ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என மாணி்க்கவாசகரும்; ‘மழுமான் கரத்தனை விழியால் புனல் சிந்தி விம்மிவிம்மி அழு நன்மைவேண்டும் என்றே’ எனப் பட்டினத்தாரும் கூறியது, இக்கருத்தைத்தான்.

மேற்கூறிய இரு வழிகளையும் விடுத்து, தீர்த்த யாத்திரை செய்வதில் பலனில்லை என்கிறார் திருமூலர். உள்ளத்தில் அன்போ, சீலமோ இல்லாமல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதில் பலனில்லை என்பது அவரது கருத்து. அனைவரிடமும் அன்பைச் செலுத்துவோம்! ஆண்டவன் அருளைப் பெறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக