சனி, 10 ஜூன், 2017

இறை வழி்பாட்டின் படிநிலைகள்

இறை வழி்பாட்டின் படிநிலைகள்- Stages in spiritual life


பொதுவாக இறைவனை அடைய நான்கு படிநிலைகளை கடக்க வேண்டும். இவற்றையே நான்கு படிநிலைகள் இருப்பதாக சித்தாந்தம் கூறுகிறது. அவை முறையே “சரியை”, “கிரியை”, “யோகம்”, “ஞானம்” என்ப்படும்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ சைவ நாற்பாதங்கள் என்றும் இவற்றை கூறுவர்.

சைவ நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு கடைபிடிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள் என்பன அறியப்படுகின்றன. 

சரியை
கிரியை
யோகம்
ஞானம்

சரியை;

புறத்தொழில் மாத்திரையானே சிவபிரானது உருவத் திரு மேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, திருக்கோயிலுள் இருக்கும் திருமேனிகளையே சிவபெருமானாகக் கண்டு, அக் கோயிலில் திருவலகிடுதல்,திருமெழுக்குச் சாத்தல், திருவிளக்கிடுதல், திருநந்த வனம் வைத்தல், பூக் கொய்து கொடுத்தல், பூமாலை கட்டித் தருதல், திருவுருவங்களை வணங்கிச் சிவபிரானது புகழ்ப் பாடலைப் பாடுதல், ஆடுதல், சிவனடியார்களைக்கண்டால், அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? எனக் கேட்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்தல் முதலிய பலவகைப் புறத்தொண்டாகும். ஆதலின், அதனைத் திருநா வுக்கரசரே பெரிதும் எடுத்தோதியுள்ளார்என்பது நன்கறியப்பட்டது.


நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா 
               நித்தலும்எம் பிரானுடைய கோயில்புக்குப் 
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் 
               பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் 
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் 
               சங்கரா சயபோற்றி போற்றி என்றும் 
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும் 
               ஆரூரா என்றென்றே அலறா நில்லே.   
(தி. 6 ப. 31. பா. 3)
எவரேனும் தாமாக இலாடத் திட்ட 
               திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி 
உவராதே அவரவரைக் கண்ட போதே 
               உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி 
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி 
               இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் 
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே 
               கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
(தி. 6 ப. 61. பா. 3)
என்னும் திருத்தாண்டகங்கள், சரியைத் தொண்டினை இனிதெடுத்து விளக்குவனவாம். இவைகள்ஆங்காங்குப் பல இடங்களில் குறிக்கப் படுவதையும் நாம் நாவரசர் திருமுறையில் காணுதல் கூடும் சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும். இந்நெறியில் நிற்போர் சிவனை ஆண்டானாகவும் தம்மை அடிமையாகவும் கொள்ளும் தாச மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாவர். தாச மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது. 
எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.(திருமந்திரம்)
இந்நெறி நிற்போர் சாலோக முத்தியையும், சிவனின் உலகை அடைதலாகிய சிவலோகத்தையும் பெறுவர்.

சரியைத் தொண்டுகள்
சிவாலயத்தை அலகிடுதல், மெழுகுதல், கழுவுதல், பூஞ்சோலை அமைத்தல், பூப்பறித்துக் கொடுத்தல், பூமாலை கட்டுதல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், விளக்கிடல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல் முதலியன சரியைத் தொண்டுகளாகும்.

நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன், கோவில்களுக்கு சென்று இறைவனைப் பணிந்து அங்கே மலர் கொய்து மாலை தொடுத்தல் போன்ற ஆலயத் தொண்டுகளை செய்வதன் மூலம் கிடைக்கப் பெறுவதாகும்.இதுவே சரியை வழி எனப்படுகிறது. இத்தகைய நெறி தவறாத வாழ்வின் மூலம் கிடைக்கப் பெறும் முக்தி நிலை சாலோக முக்தி எனப்படும்.

சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. 


கிரியை - Kriyai

இனி, புறத்தொழில், அகத்தொழில் என்னும் இரண்டானும் சிவபிரானது அருஉருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாவது, பூவும் நீரும் ஆனைந்தும் புகையும் ஒளியும் திரு வமுதும் முதலிய பொருள்களைச்சேர்த்துக் கொண்டு ஐவகைச் சுத்திகளைச் செய்து, இலிங்கத்தில் அகத்தும் புறத்தும் மந்திரங்களால் ஆசனம் முதலியவைகளைக் கண்டு, சிவபிரானை வருவித்தல் (ஆவாகனம்) முதலியவைகளைச் செய்து, நீராட்டுதல்,ஒற்றாடை சாத்துதல் முதலாகத் திருமேனியைத் தீண்டிச் செய்யும் பணிவிடைகளாகிய அணுக்கத் தொண்டாகும். இதனை,

"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்"    (தி. 4. ப. 3. பா. 1)
"போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர்பின் புகுவேன்"
(தி.4 ப.3 பா.1)
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி 
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து 
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக் 
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்டனாரே.       
(தி. 4. ப. 31. பா. 4)
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி 
முகமெலாங் கண்ணீர் வார முன்பணிந் தேத்துந் தொண்டர் 
அகமலால்கோயிலில்லை ஐயன்ஐ யாற னார்க்கே           
(தி. 4. ப. 40. பா. 8)
நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த 
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா 
என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையும் எல்லம் 
அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே (தி. 4. ப. 92. பா. 10)

என்பன முதலிய திருப்பாடல்கள் விளக்கும்.

காயமே கோயி லாகக் கடிமனம் அடிமையாக 
வாய்மையே துய்மை யாக மனமணி இலிங்க மாக 
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டிப் 
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே.         
(தி. 4. ப. 76. பா. 4)

என்னும் திருப்பாடல், அகப் பூசையைச் சிறப்பாக விளக்குவது. அகப் பூசை புறப்பூசைகளில் அட்ட புட்பம் (எட்டுப் பூக்கள்) சாத்துதல் என்பது சிறப்பாகச் சொல்லப்படுவது. அதனை ஒரு திருப்பதிகம் முழுவதும் அப்பர்பெருமானார் அருளியுள்ளார்.

"எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி 
 மட்ட லரிடு வார்வினை மாயுமால்"                 (தி. 5 ப. 54 பா. 1)

எனத் தொடங்குவது அத்திருப்பதிகம். ஆனைந்து (பஞ்ச கௌவியம்) ஆடுவதில் சிவபிரான் மிக்க விருப்பம் உடையவன் என்பதை நாயனார் பல இடங்களில் எடுத்தோதி அருளுவார்.

"ஆவினுக் கருங்கலம் அரன்அஞ் சாடுதல்" (தி. 4 ப. 11. பா. 2) 
"பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே"
   (தி. 4. ப. 63. பா. 9)
"பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் 
 ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் 
 மேவ ராய்மிக வும்மகிழ்ந்துள்குமின்"
   (தி. 5 ப. 99. பா. 1)
"ஆட்டான தஞ்சும் அமர்ந்தாய் போற்றி"   (தி. 6 ப. 57. பா. 1) 
என்பவற்றை எடுத்துக்காட்டாகக் காணலாம்.  இன்னும்,
"நெய்யினொடு பால்இளநீர் ஆடி னான்காண்"    
(தி. 6 ப. 52. பா. 5)
"நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல 
               நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் 
 சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில் 
               திருமூலட் டானத்தெம் செல்வன் தானே"          
(தி. 6 ப. 30. பா. 5)

என்றற் றொடக்கத்துத் திருப்பாடல்கள், கிரியையாகிய வழிபாட்டினை நன்கு வலியுறுத்துவனவாம்.

இங்ஙனம் பூவும் நீரும் பிறவுங் கொண்டு சிவபெருமானைப் பூசிக்குங்கால், இன்றியமையாது வேண்டப்படுவது, உள்ளத்துள் இருக்கும் அன்பே என்பதையும், `அவ்வன்பு இல்லாது புறத்தோற்றத் திற்கு மாத்திரம்பூசிப்பவரது பூசையைச் சிவபிரான் எள்ளி நகையாடி, ஆங்கு வருவதற்கு அருவருப்புக் கொண்டு அப்பாலே ஒதுங்கி நிற்கின்றான்' என்பதையும் நாயனார் அருளிச் செய்திருத்தல் பெரிதும் போற்றி உணர்தற்குரியது.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே 
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு 
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.        (தி. 5 ப. 90.பா. 9)
என்னும் திருக்குறுந்தொகைப் பாடலைக் காண்க.

`சரியையில் நின்று வழிபடுவோர்க்கச் சிவபெருமான் இலிங்கத் தில் மறைத்து நின்று அருள் செய்கின்றான்' எனவும், `கிரியையில் நின்று வழிபடுவார்க்கு, விறகில் மறைந்து நிற்கின்ற நெருப்பும், பாலில் மறைந்துநிற்கின்ற நெய்யும் அவைகளைக் கடையுங்காலத்து வெளிப்படுதல் போல, மந்திர நியாசங்களைச் செய்யுங்கால் அவற்றில் வெளிப்பட்டு நின்று அருளுவன்' எனவும் சாத்திரம் கூறும். அதனை,

விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் 
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் 
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.    (தி. 5 ப. 90. பா. 10)
என்னும் திருக்குறுந்தொகை பாடலே நமக்கு அருளுகின்றது.

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விசேட, நிர்வாண தீக்கைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)

ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச் சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும்.இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப் படும்.

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம்.


Yogam - யோகம்:


"உயிரா வணம்இருந் துற்று நோக்கி 
               உள்ளக் கிழியின் உருவெழுதி 
 உயிர்ஆ வணம்செய்திட் டுன்கைத் தந்தால் 
               உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி"  
 (தி. 6 ப. 25. பா. 1)

என்னும் திருத்தாண்டகம், ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, மனத்தை ஓடாது நிறுத்தி, உள்ளமாகிய கிழியில் சிவபிரான் உருவத்தை எழுதி, அதிலே ஒன்றியிருக்கும் அகத்தொழிலாகிய யோகமுறையை அறி வுறுத்துகின்றது.

"ஞானி நாலினுக்கும் உரியன்" (சிவஞானசித்தி. சூ. 12.5) என்பதனால், சரியை முதலிய மூன்றும் சிவப்பேற்றை அடைய விரும்புவார்க்கு அதனை அடையும் சாதனமாய் மட்டும் இல்லாமல், ஞானத்தாற்சிவனைப்பெற்றார்க்கும், அதனை இழக்காதிருத்தற்கும் சாதனமாம். ஆகையால், மேற்காட்டியவை எல்லாம் ஒவ்வொரு சாரார்க்கு மட்டும் இன்றி, எல்லோருக்குமேயாம் என்க.

வழிபாடு

சரியை முதலியவற்றில் நிற்பவர்கள் சமய தீக்கை முதலியன பெற்றுக் காலை நண்பகல் மாலைகளில் வழிபாடு செய் யுங்கால், அவ்வவழிபாட்டை சிவபிரான் சந்தித்தெய்வமாய் நின்று ஏற்றுஅவர்களக்கு அருள்புரிதலை,

புரிகாலே நேசம் செய்ய இருந்தபுண் டரீகத் தாரும் 
எரிகாலே மூன்று மாகி இமையவர் தொழநின் றாரும் 
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று 
திரிகாலங் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி யாரே 
(தி. 4. ப. 29. பா. 7)
என்று, செல்வேந்தர் குறித்தருளுகின்றார்.

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல்,மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப் படும்.


Gnanam - ஞானம்:


இனி, சரியை முதலிய நான்குமே ஒருவகையில் ஞானமாயினும், சிவப்பேற்றை நேரே அடைவிப்பதாய், `ஞானம்' எனச் சிறந்தெடுத்துப் பேசப்படுவது, `பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருளின் இயல்புகளைஉள்ளவாறு உணர்தலேயாகும். இதுவே, `தத்துவஞானம்,' `ஆத்தும ஞானம்' என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படுவது. இதனையே நாம் சாத்திரங்களில் விரிவாகக் காண்கின்றோம்.

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுகிறது.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே.

குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள். ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை 'சீவன் முத்தி்' எனப்படும். 'சீவன்முத்தர்' உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக