செவ்வாய், 13 ஜூன், 2017

சீதேவி(ஸ்ரீதேவி)யும் , மூதேவியும்

ஒருமுறை திருமகளுக்கும் அவள் அக்கா மூதேவிக்கும் சச்சரவு எழுந்தது. யார் அதிக அழகு என்பதே பிரச்னை. அதில் தீர்ப்பு வேண்டிப் பலரிடமும் சென்றார்கள் அவர்கள். யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. காரணம் திருமகள்தான் அழகு என்றால் 'உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என மூதேவி, தீர்ப்புச் சொன்னவர் இல்லத்தில் வந்து குடிபுகக் கூடும். இல்லை மூதேவி தான் அழகு என்றால் 'எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லையே’ என லட்சுமி தேவி கோபம் கொண்டு வீட்டை விட்டுப் போய்விட்டாலும் ஆபத்து. நமக்கெதற்கு வம்பு எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். யாரிடம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என எண்ணியபோது அந்த சகோதரிகளின் எதிரே எதிர்ப்பட்டார் நாரத மகரிஷி. அவரிடம் தங்களில் யார் அழகு என்று கேட்டார்கள் கலைவாணியும் அவள் தமக்கை மூதேவியும்.

நாரதர் சற்று நேரம் யோசித்தார். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் தீர்ப்பை அனைவரும் ஏற்கவும் வேண்டும். அவருக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவும் கூடாது. யோசித்த நாரதர் ஒரு முடிவு செய்தார். 'நீங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தான் இருக்கிறீர்கள். எனவே தோற்றத்தை வைத்து இந்தப் பிரச்னையில் முடிவு காண இயலாது. இருவரும் சற்றுதூரம் நடந்துசென்று திரும்பி வாருங்கள். உங்களில் யார் அழகு என்பது அப்போது தெரிந்துவிடும்!’ என்றார். சொன்னபடியே இருவரும் சிறிதுதூரம் ஒயிலாக நடந்து திரும்பி வந்தார்கள். சிரித்தவாறே நாரதர் தன் தீர்ப்பைச் சொன்னார்: 'லட்சுமிதேவி வரும்போது அழகு.

மூதேவி போகும்போது போது அழகு!’லட்சுமிதேவி நம்மை நோக்கி வரவேண்டுமானால், மூதேவி நம்மை விட்டுப் போக வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் எனத் திருக்குறள் சொல்கிறது என்பதை இப்படிப் பட்டியலிடலாம்: விருந்தினர்களை நல்ல முறையில் உபசரித்து விருந்தோம்ப வேண்டும்.
பொறாமையில்லாமல் வாழ வேண்டும். சோம்பல் இல்லாது உழைக்க வேண்டும். பொது மகளிர் தொடர்பு, கள், சூதாட்டம் இவற்றைக் கண்டிப்பாய் விலக்க வேண்டும். வள்ளுவர் சொல்லும் வழியில் நடந்து லட்சுமி கடாட்சம் பெறலாமே?

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை,பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக