வெள்ளி, 9 ஜூன், 2017

சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் நேர்ந்த விபரீதம் என்ன?


சிவவாக்கியர் கூறிய ஆட்கொல்லியால் 

 நேர்ந்த விபரீதம் என்ன?


தினெண் சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியர்  சிவபெருமானின் மீது தீராத பக்தி கொண்டவர். சிவபெருமானைத் துதித்து ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். ஒருநாள் சிவவாக்கியர்  திருமணம் செய்துகொள்ளலாம் என்று  முடிவெடுத்தார். ஆனால் தன் தவத்துக்கு இடையூறு செய்யாத பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் நினைத்தார். அதற்காகத் தன் குருநாதரிடம் சென்று யோசனை கேட்டார். குருநாதரோ "பேய்ச்சுரைக்காயையும், மணலையும் எந்தப் பெண் எந்தவித மறுப்பும் இல்லாமல் நீ கொடுத்ததும் உனக்குச்  சமைத்துத் தருகிறாளோ அவளே உனக்கானவள். அவளையே நீ திருமணம் செய்து கொள் " என்று சொல்லி அனுப்பி வைத்தார். 
சிவவாக்கியர்
ஒருநாள் ஒரு கிராமத்தின் வழியாக சிவவாக்கியர் நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. போகும் வழியில் தென்பட்ட ஒரு வீட்டுக்குச் சென்றார்.  அங்கே ஒர் இளம் பெண்ணைத்தவிர வேறு எவரும் இல்லை.
அவளிடம் சென்ற சிவவாக்கியர் "வீட்டில் பெரியவர்கள் இல்லையா அம்மா", என்றார்
அந்தப்பெண்ணோ " இல்லை ஐயா, என் பெற்றோர்கள் கூடை முடைவதற்கு மூங்கில் வெட்டிவரச் சென்றிருக்கிறார்கள்" என்றாள்.
உடனே சிவவாக்கியரோ " சரி அம்மா எனக்கு மிகுந்த பசியாய் இருக்கிறது. என்னிடம் பேய்ச்சுரைக்காயும், மணலும் இருக்கின்றது. இதனைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா" என்று கேட்டார்.
உடனே அந்தப்பெண் எந்தவித தயக்கமும் இன்றி பேய்ச்சுரைக்காயையும், மணலையும் அழகாகச் சமைத்து உணவு பரிமாறினாள். 
சிவவாக்கியரோ, குருநாதர் அடையாளம் காட்டிய பெண் நமக்கு கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பினார்கள். சிவவாக்கியர் அவர்களிடம் " உங்கள் பெண் நான் கொடுத்த பொருளை வைத்து அருமையாக உணவு தயாரித்து பரிமாறினாள். என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் தவத்துக்கு இவளால் எந்த இடையூறும் இருக்காது என்று நான் நம்புகிறேன், எனவே  எனக்கு இவளைத் திருமணம் செய்துதர முடியுமா" என்று கேட்டார்.
அப்பெண்ணின் பெற்றோரும் “ உங்களைப் பார்த்தால் சித்தரைப் போன்று இருக்கிறது. உங்களுக்கு எங்கள் பெண்ணைத் திருமணம் செய்துதருவது நாங்கள் செய்த புண்ணியம் சாமி"  என்று  கூறித் திருமணத்துக்குச் சம்மதித்தனர். இருந்தபோதும் "எங்கள் குல வழக்கப்படி திருமணத்துக்குப் பின்னரும் எங்களுடனே  நீங்கள் தங்கியிருக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டனர். சிவவாக்கியர்  அதற்கு ஒப்புக்கொள்ளவே திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாலும் இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவராகத்தான் இருந்தார் சிவவாக்கியர்.  பாசி, பவளமணி சேகரிப்பது, மூங்கில் வெட்டி முறம் செய்வது போன்ற வேலைகளை அவர்களோடு இணைந்து செய்து வந்தார்.
ஒருநாள் வழக்கம்போல் மூங்கில் வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்றார் சிவவாக்கியர். அப்படி வெட்டிக் கொண்டிருக்கும்போது தங்கத் துகள்கள் பொடிப்பொடியாக உதிர்வதைக் கண்டார். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார் .
சிவபெருமான்
'ஆடுகாட்டி வேங்கையாய் அகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ'
'கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே'.
'சிவபெருமானே  ஆட்டைக் காட்டி, புலியைப் புடிப்பது போல் இந்த ஆட்கொல்லியைக் காட்டி என்னை மதிமயக்கப் பார்க்கிறாயா. 
நான் உன்னிடம் வேண்டுவது முக்திதானே தவிர ஆட்கொல்லி இல்லை என்று சொல்லி மரத்தை விட்டுத் தூரமாகச் சென்றார்.
இதனை நான்கு இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்
"என்ன ஐயா எதைக்கண்டு இவ்வளவு பயத்துடன் ஓடி வருகிறீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்குச் சிவவாக்கியர் " நான் ஒரு மூங்கில் மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, உள்ளிருந்து ஆட்கொல்லி வந்தது, அதனால்தான் பயந்து ஓடிவந்தேன்"  என்றார். தங்கம்தான் கொட்டியது என்பதையறிந்த நால்வரும் சிவவாக்கியரை பைத்தியம் என்றெண்ணி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். மேழும் சிவவாக்கியரிடம் "ஆமாம் ஐயா, இது ஆட்கொல்லிதான். நீங்கள் உடனடியாக வீட்டுக்குச் சென்றுவிடுங்கள்" என்று சொல்லி அனுப்பிவைத்தனர்.
சிவவாக்கியர் சென்றதும் நால்வரும் சேர்ந்து  தங்கத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். இப்போது ஊருக்குள் சென்றால் மாட்டிக் கொள்வோம். இருட்டியதும் செல்லலாம் என்றும் முடிவெடுத்தனர். நால்வரில் இருவர் பக்கத்து ஊருக்குச் சென்று உணவு வாங்கி வரவும், மீதமிருவர் தங்க மூட்டையை  பார்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
உணவு வாங்கச் சென்றவர்கள் இருவரும் வாங்கி வரும் உணவில் விஷத்தைக் கலந்து காட்டில் இருக்கும் இருவரையும் கொன்றுவிட்டு, தங்கத்தைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். காட்டில் இருப்பவர்களோ உணவு வாங்கச் சென்றவர்கள்  இருவரையும் அடித்துக் கொன்றுவிட்டு தங்கத்தைத் தாங்கள் இருவரும் அபகரிக்க முடிவு செய்தனர். அதற்காக ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்தும் கொண்டனர்.
தங்கள் திட்டமிட்டபடியே அவர்கள் காட்டுக்குள் வந்ததும், இருவரையும் அடித்தே கொன்றனர். பின்பு அதிகமாக பசி எடுக்கவே அவர்கள் வாங்கி வந்த உணவை உட்கொண்டனர். விஷம் கலந்த உணவு ஆதலால் இவ்விருவரும் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக