வியாழன், 23 ஏப்ரல், 2015

திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்;


திருமுறைகள் கூறும் இக்காலத்திற்கான அறவுரைகள்; தாய் தந்தையரை தெய்வாகப் போற்றுதல்: கடவுள் நிலை அறிந்து அம்மயமான மூவர் பெருமக்கள் அருளிய பாடல்களைத் தேவாரம் எனத் தொகுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக தொகுத்துள்ளார்கள். இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட திருமுறைப்பாடல்களை அருளிய அருளாளர்கள் மனித உணர்வு (சீவபோதம்) அகன்ற, இறை உணர்வில் ( சிவபோதத்தில் ) மூழ்கிய நிலையில் பிறந்தவை இப்பாடல்கள். சாதாரண அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல. இறைவருடைய அருளால் பாடப்பட்டவை திருமுறைப்பாடல்கள். " வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" - திருஞான சம்பந்தர் இப்படிப்பட்ட அருளாளர்கள் மூலம் இறைவர் அருளிய திருமுறைப்பாடல்களில் தற்கால முறைக்கு ஏற்ப பலப்பல அறவுரைகள் சிலவற்றை இங்கே காண்போம். தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வமாக போற்றப் பட வேண்டும். பத்து மாதங்களாகத் தாய் - தந்தையின் மூலம் கிடைத்த அணுவின் கருவை சுமக்கிறாள். தாய் கருவுற்றருக்கும் காலங்களில் படும் துன்பங்கட்கு எதனையும் ஈடாக சொல்ல முடியாது. பிள்ளைப் பேறு என்பது மறு பிறப்பு எனலாம். பிள்ளை பெற்ற பிறகு தாயின் பங்கு குழந்தை வளர்ப்பில் மிக கவனமும் அதிகமாகும். குழந்தைகளுக்கு உடல் நலமில்லை என்றால் தாய் மருந்து உண்டு , தான் தரும் தாய்ப் பால் மூலம் குழந்தைக்கு மருந்தளிக்கிறாள். பிள்ளைகட்கு வேண்டியனவற்றை செய்வதில் தந்தையின் பங்கும் அதிகமாகும். பிள்ளைகளை நல்வர்களாக வளர்க்க தாய்தந்தை படும் பாடு செல்லில் அடங்கா. பன்னிரு திருமுறைகளில் தாயும் தந்தையும் முதல் தெய்வங்கள் என போற்றப்படுகின்றன.தாய் தந்தையர்களை அப்பன் ஈஸ்வரான நினைத்தாலும் சரி, அண்ணல் ஈஸ்வரனை தாய் தந்தையர்களாக நினைத்தாலும் சரி , எது எப்படியாயினும் " அப்பன் நீ அம்மை நீ" - என்கிறார் நாவுக்கரசர் "தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே" என்கிறார் ஞானசம்பந்தர் "எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே" - சம்பந்தர் "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" என்கிறார் மாணிக்க வாசகர் ஒருமுறை பெற்றோரை வணங்கினால் நூறு முறை கங்கையில் நீராடியதற்கு சமமாகும். சான்றோர்களை போற்றுதல் வேண்டும் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்ற ஆலங்காடு தலத்தை தம் கால்களால் மிதிக்க அஞ்சினார், திருஞான சம்பந்தர் திரு ஆலங்காட்டிற்கு அருகில் உள்ள பழையனூர் என்னும் ஊரில் தங்கினார், இரவில் ஆலங்காட்டு இறைவர் திருஞான சம்பந்தர் கனவில் காட்சி அளித்து தம்மை பாட ஆலயத்திற்கு வரும்படி கூறியருளினார். தமக்கு முன்னோடியாக தமிழ் பதிகம் பாடி முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரைப் போற்றிய காரணத்தால் இறைவருடைய காட்சி கிடைக்கப் பெற்றார் சம்பந்தர் சுவாமிகள். இவருக்கு பிறகு அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள், இவர் திருஞான சம்பந்தர் காட்டிய வழியைப் பற்றி நடந்தவர். இப் பெருமானார், திருநாவுக்கரசர் சுவாமிகள் கைகளால் உழவாரப்பணி செய்த திருவதிகை வீரட்டாணத்தை வழிபடுவதற்கு வந்தார். ஆனால் அப்பதியை தம் கால்களால் மிதிக்க அஞ்சி வீரட்டாணத்திற்கு அருகில் உள்ள சித்தவடம் என்னுமிடத்தில் இரவு தங்கினார், அன்றிரவு இறைவர் தமது திருவடியை சுந்தரர் தலைமீது சூட்டிக் கருணை புரிந்தார். திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த தலமாகிய சீர்காழியை மிதிக்க அஞ்சி ஊரின் வெளிப்புறத்தே நின்று பதிகம் பாடி வழிபட்டார் சுந்தரர். சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பர் சுந்தரருக்கு இருந்த இடத்திலேயே காட்சி கொடுத்தருளினார். சான்றோர்களைப் போற்றிவதால் நாம் அடையும் நலன்களை அளவிட முடியாது. இப்பண்பு இளைஞர்களிடையே பரவ வேண்டும், இவர்கள் நலம் பல பெற்று வாழ்வார்கள். கூர்த்த அறிவு பெற ஐந்தெழுத்தை ஓத வேண்டும்; திருமால், பிரம்மன், தேவேந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் நஞ்சினை கண்டு பயந்து ஓடினார்கள், இப்படிப்பட்ட நஞ்சினை திருவைந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி அருந்தி நலமுடன் திகழ்ந்தார் திருநாவுக்கரசர். ஐந்தெழுத்தை சொல்லி கல்லையும் கடலில் மிதக்க செய்தவர் இவர். இவர் அருளியுள்ள அறவுரையினைக் காண்போம். "பூரியா வரும் புண்ணியம் பொய்கெடும் கூரிதாய அறிவு கைகூடிடும் சீரியார் பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன் தன் நாமம் நவிலவே" ( 5-77-1) "கூரிதாய அறிவு கைகூடிடும்" என்னும் திருவாக்கினை மனத்தில் கொள்ள வேண்டும். காலை, மாலை, இரவு வேளையில் 108 முறை "சிவாயநம" என்னும் ஆதி மந்திரத்தை சொல்லுவார்களானால் யாவரும் நன்மதிப்பு பெற்று உயர்வர் என்பது திண்ணம். தீயன செய்யாதிருத்தல்: "..... செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே" (7-35-4) நாம் செய்யும் நன்மை தீமைகள் மறுமையில் வரும் என்பதே பெரும்பாலோர் கூறும் உண்மை. ஆனால்இம்மையில் செய்த தீமைகள் இம்மையிலேயே நம்மை வந்தடையும் என்ற உண்மையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறியுள்ளார்கள் இளமையில் எந்த உயிருக்கும் தீமை செய்யக் கூடாது என்னும் பண்பினை வளர்த்து கொள்ள வேண்டும்.இதுவே முதுமை வரை தொடரும். தீமை செய்யா வினையை வளர்த்துக் கொள்ளும். எனவே எப்பிறப்பிலும் தீமை வரா என்பது திண்ணம். யாவரையும் வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். "தலையே நீ வணங்காய்" என்றார் திருநாவுக்கரசர் இளமையிலேயே கடவுள், பெற்றோர், ஆசிரியர், மற்றும் சான்றோர் ஆகியவர்களை வணங்க கற்றுக் கொள்ள வேண்டும். வணங்க தலைப்படும் பொழுதே வளர்ச்சி நம் பக்கம் திரும்பும், வளைந்து கொடுக்கும் நாணல் வளர்கிறது. நிமிர்ந்து நிற்கும் மரம் வேருடன் தண்ணீரால் சாய்க்கப்படுகிறது. என்பதை உணர வேண்டும். வாயினால் வாழ்த்தல் வேண்டும் " வாயே வாழ்த்து கண்டாய்" - நாவுக்கரசர் முதலில் நம்மைக் காக்கும் கடவுளை வாயினால் வாழ்த்தப்பாட பழகிக் கொள்ள வேண்டும். வாயில் அபத்தமான சொற்கள் இளமையில் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலம் இனிமையாக அமையும், வாழ்த்துவதன் மூலம் நாம் நலமாக வாழலாம். இது மறுக்க முடியாத உண்மை. நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்: " பரவுமின் பணிமின் பணிவாரோடே விரவுமின் விரவாரை விடுமினே" (5-43-5) " உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர் உறவு கலவாமை வேண்டும்" ராமலிங்க அடிகள் நல்ல சிவபக்தி உடையவர்களுடன் மட்டுமே நட்புக் கொள்ள வேண்டும். இவர்கள் தீயவென்பன கனவிலும், நினைவிலா சிந்தைத்தூய மாந்தர் ஆவர். நல்ல உள்ளம் கொண்டவர்களுடன் நட்புக் கொண்டால் நாமும் நல்லவர்களாகவே வளர்வோம், தீயவர்களின் நட்பு வேண்டவேண்டாம் என்கிறார் திருநாவுக்கரசர். " சேரிடம் அறிந்து சேர்" என்னும் பழமொழியை மனத்தில் கொள்ள வேண்டும். புறங்கூறுதல் வேண்டவே வேண்டாம் " அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்வியனாகிப் பிறர் பொருள் வல்வன்மின்" திருமுறை 10 மனிதராகப் பிறந்த நாம் பொறாமையின் காரணமாக மற்றவர்களை பற்றி புறங்கூறுதல் பெரும் பாவமாகும். இதனால் நமது புண்ணியம் குறையும். அத்துடன் யாரைப் பற்றி புறங்கூறினோமோ அவர் செய்த பாவத்தின் ஒரு பகுதி நம்மை வந்தடையும். நலம் பெற நன்மைகள் மட்டுமே செய்தல் வேண்டும் " இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையினாலே முடிந்தது" - திருமுறை 10. இப்பிறவியில் நமக்கு அமைந்துள்ள வாழ்க்கை நாம் ஏற்கனவே செய்துள்ள நல்வினை தீவினைகளின் பலனே ஆகும் என்கிறார் திருமூலர் "தீங்கு வந்து அடையுமாறு நன்மைதான் சேருமாறும் தாங்கள் செய்வினையினாலே தத்தமக்கு ஆயஅல்லால் ஆங்கவை பிறரால் வாரா அமுதம் நஞ்சு இரண்டினுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினோர் சிலரும் உண்டோ" முள் விதையை விதைத்தால் அறுவடை முள்ளாகத்தான் இருக்கும். கனியாக இராது. வினை விைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழியை ஞாபகம் கொளல் வேண்டும். இருப்பதைக் கொடுக்கப் பழக வேண்டும் இல்லாதவர்கட்கு கொடுத்தால் இறைவர் நமக்கு தவறாமல் வாரி வழங்குவார் என்கிறார் நாவுக்கரசர் "இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கெல்லாம் கடும்நரகங்கள் வைத்தார்" திருமுறை 4 செல்வம் இருந்தால் இல்லாதவர்கட்கு கொடுத்துப் பழக வேண்டும். இளமையில் பழகுவது பசுமரத்தில ஆனி அடித்தது போல வந்துவிடும். பொய் நீக்கி உண்மையைக் கொள்ள வேண்டும் " பொய்யஞ்சி வாய்மைகள் பேசி புகழ்புரிந்தார்க்கு அருள் செய்யும் ஐயஞ்சின்அப்புறத்தானும் ஆருர் அமர்ந்த அம்மானே" நாவுககரசர் சிறுவயது முதலே பொய் பேசாமல் உண்மையைப் பேசி பழகிக் கொள்ள வேண்டும். இதுவே சான்றோராக்கும். உண்மை தான் கடவுள் , பொய்தான் சாத்தான். உண்மைதான் உயர்வினைத் தரும். இனியனவே நினைக்க வேண்டும் நல்லன நினைத்தால் நல்லன நடக்கும் என்பது முதியோர் வாக்கு. "இனிய நினையாதார்க்கு இன்னாதானை" திருமுறை 6 நம்முடைய நினைவு அல்லது எண்ணங்கள் விதைகள், செயல்கள் எண்ணங்களின் கனிகள். சிறுவயதிலேயே நல்லனவற்றை நினைக்கப் பழகிக்கொண்டால் வாழ்வின் சூழலே இனியதாய் அமையும். வெறுப்பு, கவலை, பேராசை, பயம், பகைமை, பொறாமை போன்ற கீழான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி விடுங்கள். கொடுக்கும் குணம், ஈகை, அன்பு,, நேர்மை, இரக்கம், உண்மை முதலிய உணர்வுகளை மனதில் ஏற்றுங்கள் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப செயல்கள் அமைகின்றன. செயல்களே உம்முடைய விதியை வருங்கால வாழ்வை நிர்ணயிக்கின்றன. நீங்கள் எதைப்பற்றி சிந்திக்கின்றீர்களோ அதுவாகிறீர்கள். வாழ்வில் நன்மை பெற விரும்பும் நீங்கள் இனியவற்றையே சிந்திப்பீர்களானால் உங்கள் வாழ்வில் உயர்வு கட்டாயம் உண்டு. எந்த எண்ணமும் அதற்கு ஒத்த எண்ணங்ளளை தன்பால் ஈர்க்கிறது, இதுதான் நியதி, வாழ்வும் வளத்துடன் அமையும், நாடுமு வலிமையுடன் நிகழும். திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவய ஓம் நன்றி: தமிழ்வேதம் மேலும் ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக