செவ்வாய், 3 மே, 2016

கல்லானாலும் ............ புல்லானாலும்..........

கல்லானாலும் ............ புல்லானாலும்..........


ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.

ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில்தான் அதிகம்.

இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள்.

குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்துமதம்.

கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது.

அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளரவேண்டு மென்பதற்கு, இந்துமதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.

`பிற புருஷனை அவள் மனத்தால் நினைத்தாலும் கற்புஇழந்து விடுகிறாள்’ என்று இந்துமதம் அச்சுறுத்துகிறது.

பெண் `தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று, இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத் தான்.

அழகான ஆடவன் முகத்தை அவள் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைக்கு மீண்டால்கூடக் `களங்கம்’ என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.

`காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும், வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்கும்கூட!

பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் `ஆணுக்கும் அது வேண்டும்’ என்கிறது இந்து மதம்.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் `மெட்டி’ போடுகிறார்கள். இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்து வரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். `அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரியவேண்டும்; `அவன் திருமணமானவன்’ எனத் தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

ஒரு பெண்ணும், காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒரு பெண்ணுக்கு பிரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்ட முடியாது.

தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் `தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

திருமணத்தின் போது `அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?

அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் `அக்கினி’ சாட்சியாகிறான்.

அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.

அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் `கற்புக்கனல்’ என்கிறார்கள்.

அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?

எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, `என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’ என்று சத்தியம் செய்வதே.

`படி தாண்டாத பத்தினி’ என்பது வழக்கு.

`படியைத் தாண்டமாட்டேன்’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.

அருந்ததியைப் பார்ப்பது ஏன்?

`அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’ என்று ஆணையிடுவதே.

`பால் பழம்’ சாப்பிடுவது ஏன்?

அது `பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்’ என்று கூறுவதே.

பூ மணம் இடுவது ஏன்?

`பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்’ என்றே!

மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ளவைப்பதே.

ஆம்; பெண்ணிற்குத் `தற்காப்பு’ வேண்டும்; தாய் தந்தை `காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் `காப்பு’ வேண்டும்.

இந்தக் காப்புகளுக்காகவே கையில் `காப்பு’ அணியப்படுகிறது.

`அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் `காப்பு’க் கட்டப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒரு பெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!

`கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.

`கற்புடைய பெண் விரும்பினால் சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.

`கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.

அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.

இவையெல்லாம் பொய்க்கதைகள் என்று வாதிக்கலாம். ஆனால் `அவர்களைப் போல’த் தன் மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்
கதைகளே!

கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரை நகர் வலம் வந்து, `செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?’ என்று நியாயம் கேட்டுத் துர்க்கை கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.

`அவள் இடது பக்கத்து மார்பைத் திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.

`மார்பைத் திருகி எறிந்தால் மதுரை எரியுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

`இடது பக்கத்து மார்பை’ என்று இளங்கோ சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது; அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.

`அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.

`கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது இந்துக்கள் பழமொழி.

`கல்லும் புல்லும் கணவனாகுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

வெறும் ஜடப் பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை.

`உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்குக் கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே’ என்பது அதன் பொருள்.

பெண்ணைத் தெய்வமாக்கிக் கணவனைப் பக்தனாக்கி வாழ்க்கையை சந்தோஷமாக்க, இந்துமதம் எடுத்துக் கொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.

அந்நியப் புருஷன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரி செய்துகொள்ளும் பெண்கள் இந்துமதத்தின் சிருஷ்டிகள்.

கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்காரமாக, வேறுவழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப் பரிகாரமென்ன?

இங்கே நிகழ்ச்சியொன்று பழைய தத்துவத்தை வலியுறுத்துகிறது.

1947-48ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.

`அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் கெடவில்லை. அவர்களை இந்து இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தியடிகள் வாதாடினார்.

எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.

ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராமபிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச் சாட்சியம் உண்டு.

அது அகலிகையின் கதை. அகலிகையை முனிவன் மணந்தான்.

ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது போலக் கூவினான். உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.

இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருங்கினான்.

திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.

ராமபிரானின் காலடி பட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.

ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகை மீண்டும் உயிர் பெற்றாள்.

முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் `பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.

அதற்கு ராமபிரான் சொன்னார்:

`கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப் புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால்தான் கெட்டாள்; ஆகவே ஏற்றுக்கொள்வது உன்
கடமை.’

முனிவன் அவளை ஏற்றுக்கொண்டுவிட்டான்.

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராமபிரான் வாதத்தின் எதிரொலியே!

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்பட வேண்டியவையே!

அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!

`அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!

கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்களைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய `ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’

திருசிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
***************************************************


நல்ல மனைவி 



மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’

என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை

வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும்,

யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,

அழகில் லட்சுமியைப் போலவும்,

மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,

அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,

மஞ்சத்தில் கணிகையைப் போலவும்

நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.

(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.


அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்.

`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப்பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.

`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்

முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

`தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.

“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி

முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்

அவசரத்தில் கல்யாணம்

என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)

குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,

ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

“விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்

ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே

வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்

தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்

கூறா மற் சந்நியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்

போல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே

- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்

பின்வந்(து)

உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்

தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு

ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக