வெள்ளி, 1 மார்ச், 2019

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல் - விளக்கமும் பயன்களும்

ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றுவதால் விளையும் நற்பயன்களை புராணங்கள் வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றன. விளக்கின் ஒளி புற இருளைப் போக்க வல்லது. திருக்கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல் அக இருளாகிய அறியாமையைப் போக்கி, ஞானத்தையும் வழங்க வல்லது.

'விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும்' என்று தன் தெய்வ வாக்கால் (தேவாரத்தில்) குறிக்கிறார் திருநாவுக்கரசர்.
சோழ நாட்டில் அமைந்துள்ள தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்). தேவாரப் பாடல் பெற்ற இத்தல ஆலயத்தில் திருவிளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருக்க, அவ்விளக்கில் உள்ள நெய்யை உண்ணும் பொருட்டு வந்த எலி ஒன்றினால் திரியானது நன்கு தூண்டப் பெற்று, பிரகாசித்து ஒளிவிடத் தொடங்கியது.
அப்புண்ணியத்தால் அந்த எலியானது அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாய் பிறப்பெடுத்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அபுத்தி பூர்வமாய் ஏற்றிய விளக்கிற்கே இத்தகு சிறப்பு எனில், அதன் ஏற்றம் அறிந்து திருவிளக்கு ஏற்றுவோர் பெறும் பலனை சொல்லவும் வேண்டுமோ!

திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம்:-
திருமறைக் காடு தன்னில் நீண்டெறி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிட கணன்று தூண்ட
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் -உலகமெல்லாம்
குறைவரக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

இனி ஒவ்வொரு முறை திருக்கோயிலுக்கு செல்லும் பொழுதும் (எவ்வேளை ஆயினும்), மறவாது திருவிளக்கில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவோம். அறியாமை இருள் நீங்கப் பெற்று, உள்ளொளியாகிய ஞானம் பிரகாசிக்கப் பெறுவோம்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக