சனி, 2 மார்ச், 2019

நித்திய வழிபாட்டு முறை

நித்திய வழிபாட்டு முறை

ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

1. நீராடுதல்

நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

திருச்சிற்றம்பலம்

களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

2. பிள்ளையார் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

-திருமூலர்
ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

[இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
திருச்சிற்றம்பலம்
3. சற்குரு வணக்கம்

சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
5. நீரைச்சுத்தி செய்தல்

தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே
-திருமூலர்

திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
7. [ஆ] திருநீறு அணிதல்

திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

அவை வருமாறு

1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
திருச்சிற்றம்பலம்.

8. உறுப்புகளைத் தொடுதல்

“வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

உறுப்புகளைத் தொடும் முறை

வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
கண்களால் காண்மின் களோ.

3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்.

7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித் தொழீர்.

8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
ஆக்கையாற் பயன் என்.

9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

10. இறை : உற்றார் யார் உளரோ!
உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
நமக்கு உற்றார் யாருளரோ?

11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
கொண்டேன் -[4. அப்பர்]

திருச்சிற்றம்பலம்



9. மந்திரசுத்தி
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
– [5.அப்பர்]
10. பிராணாயாமம்

வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

11. பஞ்ச புராணம் துதித்தல்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

தேவாரம்

அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

திருவாசகம்

ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

திருவிசைப்பா

இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
[9. கருவூர்த்தேவர்]

திருப்பல்லாண்டு

ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
[9. சேந்தனார்]
பெரிய புராணம்

உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
“உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
[10. சேக்கிழார்]

வாழ்த்துப்பா

ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
[3. சம்பந்தர்]
12. ஜபம்

மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

13. தியானம்

இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக