புதன், 27 மார்ச், 2019

ஞானதீபம் ஏற்றுங்கள்

சிவபெருமானாருடைய திரு கழலடி அடைய ஞானதீபம் ஏற்றுங்கள்
என்று திருநாவுக்கரசர் பெருமான் கூறும் வழியை காண்போம்  உடம்பென்னும் வீட்டினுள் மனம்என்கிற அகல் விளக்கு வைத்து சிவ உணர்வை நெய்யாக ஊற்றி உயிர் என்னும்திரியை இட்டு, சிவஞானம் என்கிற ஒளியை ஏற்றி அசைவற்ற தியானத்திலிருந்தால் சிவபெருமானாருடைய கழலடி காணலாம்
பாடல் திருமுறை 4.75.4

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
 

உடம்பே வீடு. உள்ளமே தகளி ( அகல் ), உணர்வே நெய். உயிரே திரி. ஞானமே தீ. உடலான வீட்டில், சிவமானபொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது. விளக்கேற்றிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக் கொள்ள, அச் சிவஞானப்பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான பொருளைக்காணலாம்.

திருநாவுக்கரசர் அருளியுள்ள மெய்யே விளக்கு என்பது கருணை அல்லது அருள் என்பதாகும். மனித மனங்களில் அருள் கருணை குடிகொள்ள வேண்டும்


பாடல் எண் : 9
மெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே  4.54,9 திருமு.

 இந்த கருணை உள்ளத்ததில் வளர்ந்து கொண்டே வரவேண்டும். மனம் என்கிற அறைக்கு ஐம்பொறிகள் / மெய்,வாய்,கண்,மூக்கு, காது என்ற ஐந்து சன்னல்கள் உண்டு. இந்த பண்பு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வர வேண்டும். இதனைத்தான் வேண்டளவு உயரத்துண்டுதல் என்கிறார்
 ஆசை அல்லது சுயநலம் என்கிற காற்ற (உணர்வு) ஐந்து சன்னல்களின் வழியாக (ஐம்பொறிகளின் வாயிலாக) மனத்தினுள் நுழைந்து விடுமானால் கருணை என்கிற தீபம் நிலைத்து நிற்காது. ஆதலால் ஐந்து பொறிப் புலன்களையும் மடைமாற்றம் செய்து விட்டால் அவற்றின் சேட்டைகள் நம்மிடம் செல்லாமல் போய்விடும்.
  உலக சுகபோகங்களில் நம் மனததை இழுத்துச் செல்லும்ஐந்து பொறி புலன்கட்கும் மாற்று வேலையை கொடுத்து பழக வேண்டும்.
இப்படி செய்தால் அவை நம்மனத்தில் ஏற்றி வைத்துள்ள கருணை என்கிற தீபத்தை (கருணை உணர்வை) மேன்மேலும் பிரகாசிக்க செய்யும், மனத்தில் கருணை என்கிற உணர்வு நிலைத்து நிற்குமானால் கருணையே வடிவமான சிவபெருமான் திருவடியை காணலாம் / அடையலாம்
மனம் மடைமாற்றத்திற்கு சேரமான் பெருமான் நாயானார் கூறும் பாடல்
சிந்தனை செய்ய மனமமைத்
    தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
    தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
    தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
    கிவையான் விதித்தனவே

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.
  நம்முடைய மனம் எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அம்மனத்தை எப்பொழுதும் சிவபெருமானாரை நினைக்கும்படி செய்ய வேண்டும்.  வாயால் வேண்டாதவற்றை தீயனவற்றை பேசுகிறோம். அந்த வாய் இறைவனின் புகழை பேசவேண்டும்.
யார் யாரையோ தலையும் கையும் வணங்கி வந்தன. இனி அவை எம்பெருமான் சிவனையே வணங்கும் படி செய்ய வேண்டும்
நிலையில்லா பொருள்களின் மேல் செலுத்தும் அன்பை இறைவன் பால் செலுத்த செய்ய வேண்டும்
 இப்படி செய்து உடலுடன் கயிலாயம் சென்றவர் சேரமான் பெருமான் நாயனார் இவர் கூறுவதை நாம் காெள்ள வேண்டும் கடவுளை வைத்து வியாபாரம் செய்யும் கடவுள் வியாபாரிகளின் சொற்களை தள்ள வேண்டும்
 அழகிய செந்தமிழ் பாடல்களால் இறைவழிபாடு செய்ய வேண்டும்
 தாய்மொழியில் இறைவழிபாடு செய்வது தாய்பால் போலவாகும்
தீந்தமிழ் பாடல்கள் பாடும் போது மனம் இறைமையில் ஒன்றும். நம்மை இறைமையுடன் இணைக்கும் பாலம் செந்தமிழ் பாடல்கள் என்பதை மறக்கக் கூடாது. ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்
 கடவுளைக் கண்டுணர்ந்து அம்மயமான அருளாளர்கள் கூறியுள்ள உரிய வழிகளை விட்டுவிடுகிறோம். பரிகாரம் என்ற பெயரில் எள்ளுப் பொட்டலம் போடுவது,சனிக்கிரக வழிபாடு,ராகு கேது கிரக வழிபாடு, இரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து படைப்பது போன்ற வேண்டாததும், பயனற்றதுமான சடங்குகளையே நம்பி அப்பாவி மக்கள்  மோசம் போகிறார்கள்.
 வாழ்க்கையில் பிற்பகுதி முதுமை பருவத்தில் கழிந்து விடுகின்றது. (இயலாமையால் கழிந்து விடுகின்றது) இடையில் எஞ்சும் சில ஆண்டுகளில் அச்சம், ஆசை, வெகுளி அழுக்காறு என கழிந்து விடுகிறது.
 எனவே புல்லிய சடையையும் மூன்று கண்களையும் உடைய சிவபெருமான் மேல் இனியும் தாமதம் செய்யாமல் விரைந்து சரண்  அடைய வேண்டும். இனியும் இறை வழிபாட்டிற்கு காலம் இருக்கின்றது பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது பாெருளை நாடி பொருளை ஈட்டுவதிலேயும் மரணம் நெருங்கி வந்து விடும் காலம் வந்து நம்மால் எதுவும் செய்ய முடியாத காலம் உதயம் ஆகும் முன் இனியும் காலம்தாழ்த்தாது  இறைவன் பான் நேரத்தை செலுத்தி அவன் அன்பு கருணை பெற மெய் தீபம் ஏற்றி அவன் கருணை பெறுவோம்
திருச்சிற்றம்பலம்
நன்றி தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக