சைவ சமயத்தின் தொன்மை

சைவ சமயத்தின் தொன்மை

பெரிய புராணத்தின் மூலக்கூறு° குரு, லிங்க, சங்கம பக்தி
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமானால் திருப்பெருந்துறை என்று போற்றப்படும் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. திருப்பெருந்துறை என்றால் இறைவனை (திருவை) அடையக்கூடிய (பெரும்), இறைவனுடன் பயணிக்கக்கூடிய இடம் (துறை) என்று பொருளாகும்.
குருவாக தோன்றி தனக்கு உபதேசம் செய்து, பின் மாயமாய் மறைந்த சிவபெருமானின் (தட்சிணாமூர்த்தி) நினைவாக, மாணிக்கவாசகர் பெருமான் ஆத்மநாதர் திருக்கோயிலை அங்கு அமைத்தார். அந்த கோயில் முழுவதுமாக ஆகம விதிகளுக்குள் அடங்காமல் அமைக்கப்பட்டுள்ளது, மூலவர் சிலை, கொடிமரம் கூடக் கிடையாது என்பது அதன் சிறப்பு.
அந்த சிறிய கோயிலுக்கு அருகே மாணிக்கவாசகர் தனது ஆத்ம குருவான தட்சிணாமூர்த்தியை கண்ட குருந்த மரம் என்று நம்பப்படும் இடமும் அமைந்துள்ளது. அந்த குருந்த மரத்தின் வழித்தோன்றல் என்று நம்பப்படும் மரம் இன்றும் அங்கே உள்ளது. பிற்காலத்தில் ஆண்ட மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்த கோயிலைச் சுற்றி பல வசதிகளை உருவாக்கி கோயிலை விரிவாக்கம் செய்து மதில் சுவரையும் எழுப்பியுள்ளார்கள்.
அந்த கோயிலின் நுழைவாயிலில் மேற்கூரையில் குரங்கு மற்றும் உடும்பின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களுக்கு என்ன பொருள் என்று விளங்காததால் மனிதர்களின் தாவிக்கொண்டே இருக்கும் மனதையும், பிடிவாத குணத்தையும் குறிக்கும் சிற்பங்கள் என்றுதான் முதலில் நினைத்தேன் பின்புதான் அந்த சிற்பங்களின் பொருள் விளங்கின.
சைவ சமயத்தில் மனிதர்கள் இறைவனின் மீது செலுத்த வேண்டிய பக்தியை இரு பெரும் வகைகளாக விளக்க அந்த குரங்கு மற்றும் உடும்பின் உருவங்களை வடித்துள்ளார்கள். முதலாவதாக முழுமையாக இறைவனிடம் சரணாகதி அடைதல், இரண்டாவதாக மாணிக்கவாசகர் கூறுவதைப் போன்று “சிக்கெனப் பிடித்தல்”.
பெரியபுராணத்தில் வருகின்ற நாயன்மார்களின் பக்தியைப் போன்று என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறவாமல், இறைவனை விட்டு விலகாமல், சந்தேகம் கொள்ளாமல் முழுமையாக உடல், மனம் மற்றும் உயிரை ஒப்படைத்தல்.
“என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன்” என்று பட்டினத்தார் பாடியதைப் போன்று உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக இறைவனிடத்திலே ஒப்படைத்து எனக்கு என்ன நேர்ந்தாலும் அது உன் சித்தம் என்று மனமார ஏற்றுக் கொள்வதை குரங்கு சின்னம் குறிக்கிறது.
“கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே” என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடியதைப் போன்று உயிர் பிரியும் நிலையிலும் இறைவனைச் சார்ந்து இருப்பதை உடும்பு சின்னம் குறிக்கிறது.
தன் குட்டியை சுமந்துள்ள தாய் குரங்கு என்ன செய்தாலும், எத்தனை மரத்துக்குத் தாவினாலும் குட்டிக் குரங்கு அமைதியாக தைரியமாக இருக்கும். காரணம், என் தாய் எந்த சூழ்நிலையிலும் என்னைக் கைவிட மாட்டாள் என்று நம்பி குட்டி குரங்கு தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைக்கிறது.
தாய் குரங்கை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்த குரங்கின் குட்டியைப் போன்று இறைவன் மீதுள்ள நம்பிக்கையினால் உடல், மனம் மற்றும் உயிரை முழுமையாக ஒப்படைத்தல் சரணாகதியாகும். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும் இறைவனை விட்டு விலகாமல், இறைவனை மட்டுமே சார்ந்திருப்பதை உடும்பு குறிக்கிறது.
உறுதிக்கும், பிடிவாதத்திற்கும், உடும்புப் பிடி என்று பெயர் பெறும் அளவுக்கு உடும்பின் பிடி உறுதியானது. உடும்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டால் எதற்காகவும் விடாது. ஒரு சிறு துன்பமோ கவலையோ சோதனையோ தோன்றியவுடன் கடவுளே உனக்கு கண்ணில்லையா? மூக்கில்லையா? என்று கதறாமல் இறைவன் எனக்கு எதைக் கொடுத்தாலும் அதன் பின் நிச்சயமாக ஒரு காரணமும் நன்மையும் இருக்கும் என்று முழுமையாக நம்பி, வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெற்றியோ, மகிழ்ச்சியோ உண்டான உடன் இது என் திறமை என் உழைப்பு என்று கர்வம் கொள்ளாமல் இவை அனைத்தும் இறைவன் இட்ட பிச்சை என்று தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அவநம்பிக்கையோ, கர்வமோ மனதில் குடி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் உடும்பைப் போன்று பக்தியால் இறைவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உடும்பு சின்னமும். குரங்குக் குட்டியைப் போன்ற முழு மனதாக சரணாகதி அடைய வேண்டும் என்பதற்காக குரங்கு சின்னமும் ஆத்மநாதர் திருக்கோயிலின் நுழைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளன
இறைவனோடு இணைக்கும் 9 விதமான பக்தி
கல்வி அறிவோடு, ஆன்மிக அறிவையும் வளர்த்து வந்தார், பிரகலாதன். பிரகலாதன் சொன்ன 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே பார்ப்போம்.
பிரகலாதன் 9 விதமான பக்தியைப் பற்றி இங்கே காண்போம்
1. சிரவணம்:- இறைவனின் பெருமைகளைக் காதால் இடைவிடாமல் கேட்பது 'சிரவணம்' என்னும் பக்தி முறையாகும். சொற்பொழிவு போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
2. கீர்த்தனம்:- நம் வாயால் இடைவிடாமல் இறைவனின் புகழைப் பாடுவதையே, 'கீர்த்தனம்' என்கிறோம். இது பாடலால் இறைவனை அடையும் பக்தி முறை.
3. ஸ்மரணம்:- நாவால் சத்தமாக இறை வனின் நாமத்தை உச்சரிப்பது, 'ஸ்மரணம்' என்னும் பக்தி வழிபாடாகும். இதனை தன் வாழ்நாளில் சிறப்பாகச் செய்து, இறைவனின் அருளைப் பெற்றவர், பிரகலாதன்
4. பாதசேவை:- எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் குறையாத பக்தியோடு இறைவனின் பாதங்களுக்குச் செய்யும் சேவையே, 'பாதசேவை' என்னும் பக்தி முறை. இந்த மகத்தான இறை வழிபாட்டை முறையாக, எப்போதும் செய்யும் பெரும் பேறுப் பெற்றவர், லட்சுமிதேவி.
5. அர்ச்சனை:- மனதில் எந்த களங்கமும் இல்லாமல், மலர்களைக் கொண்டு இறைவனுக்கு செய்யப்படும் பூைஜயே 'அர்ச்சனை' என்னும் பக்தி முறை. இறைவனுக்கு அர்ச்சனை செய்து அதன் வாயிலாக பெரும் பேறுபெற்றவர்கள் ஏராளம்
6. வந்தனம்:- எட்டு அங்கங்களும் நன்றாக நிலத்தில் படும்படி, இறைவனை வணங்குவது 'வந்தனம்' ஆகும்.
7. தாஸ்யம்:- இறைவனுக்கு பணியாளனாக இருந்து நேசத்துடன் தொண்டு செய்வது 'தாஸ்யம்' என்னும் பக்தி முறை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற ரீதியில் இறைவன் மீது பக்தி செலுத்தும் சிறப்பான வழிபாட்டு முறை இது.
8. சக்யம்:- இறைவனை தன்னுடைய பக்தனாக நினைத்து அவருடன் நட்பு கொள்வது 'சக்யம்' என்னும் பக்தி முறை. தன்னுடன் இருப்பது இறைவன் என்று அறிந்திருந்தாலும், அவரைத் தன்னுடைய நண்பனாக பாவித்து, அனைத்து நல்லது கெட்டதுகளையும் பக்தி கொண்டு பாசம் காட்டும் ஒரு வழிபாட்டு முறை. இதனை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவன், அர்ச்சுனன். மற்றும் சுந்தரர்
9. ஆத்மநிவேதனம்:- தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் எந்தவித தயக்கமும் இன்றி, இறைவனுக்கு அர்ப்பணிப்பதே 'ஆத்மநிவேதனம்' என்னும் பக்தி முறை. இதனை 'சரணாகதி' வழிபாடு என்றும் கூட சொல்லலாம்.
இவ்வழி முறைகளில் யாதேனும் ஒன்றையாவது முறையாக பயன்படுத்தி அன்பு செய்தால் இறைவனின் திருவடியை நிச்சயம் அடையலாம்.
திருச்சிற்றம்பலம்
இறை வழிபாடு பற்றிய சிந்தனை
*ஓம்*
*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*
*சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய*
இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்
இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்
இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பொரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும் பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்
இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,
இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்
இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.
இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.
இறை வழிபாடு என்பது ஏழைகளுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்
இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.
இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,
இறைவழிபாடு என்பது எல்லாம் செயல்களும் இறைவன் அருளால் அவன் செயலால் நடக்கிறது என்பதை உணர்த்துவது
இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.
இறை வழிபாட்டின் இரண்டு கண்கள் நேர்மையும், உண்மையும் ஆகும்.
விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.
நன்றி : தமிழ் வேதம்
பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு
பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.
பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும் குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.
முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.
பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.
இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.
இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.
பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.இதனை அவர் பாடிய பாடல்
இதனைத்தான் அப்பர் அடிகள்
" நிலைபெறுமாறு எண்ணுதியே நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு
பூமாலை புணர்ந்தேத்தி புகழ்ந்து பாடி
தலையார கும்பிட்டு கூத்தும்ஆடி
சங்கரா செய செய போற்றி "
என்று பாடி உழவாரப்பணியில் அவன் தொண்டு பற்றி கூறியுள்ளார்
இறைவனை அவன் கோயில் சென்று சென்று வழிபடுங்கள் தங்கத்தை மெருகு கூட்டத்தான் மிளிரும், எனவே அவன் அருளை பெற அவன் தாள் வணங்கினால் தான் இறை அருள் மிளிரும். புதையுண்ட தங்கம் மிளிராது. அவனை சென்று சென்று வணங்கினால் தான் அவன் அருள் வெளிப்படும்.
அபிசேகப்பொருட்கள் தருவோர் பூமாலை கொடுப்போர் இறைப்பணி செய்வோர் அருச்சனை செய்வோர் என அடியார்கள் கூடி செய்யும் கூட்டு வழிபாடு அடியாரகள் யாரும் கலந்து அருள் பெற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நெறி.
கூட்டு வழிபாடு மிக அவசியமானஒன்றாகும், ஒரு நூல் தேரினைஇழுத்துவிட முடியாது,அந்நூல்பல சேர்ந்து ஒரு பெரிய கயிறாகுமானால் தேரினை மிகச் சுலபமாக இழுத்து விடும். ஒரு மரம் தோப்பாவதில்லை அது போல ஒரு கை ஓசை கேட்பதில்லை, எங்கும் பரவி இருக்கும் இறைவனின் கருணை வெள்ளத்தை கூட்டு வழிபாட்டின் மூலம் ஈர்த்து விடலாம் எனவே தான் கூட்டு வழிபாடு செய்ய அழைக்கிறார் அப்பர் பெருமானார்
" பரவுமின் பணிமின் பணிவா ரொடே
விரவுமின் விரவாரை விடுமினே " திருமு,5 பதி, 43. பாடல் 5
சிவபெருமானாரை அன்புடன் பணிகின்றவர்களுடன் கூடுங்கள் அவரை சிவனாகவே எண்ணி அன்பு காட்டுங்கள் அவ்வாறு இல்லாதவரைக் காணின் அவரை விட்டு விலகிவிடுங்கள். தொ ண்டரோடு கூடுங்கள் உங்களின் வல்வினைகள் யாவும் அழிந்தொழியும், திருஞான சம்பந்தர் பெருமானின் திருமணத்திற்கு வந்தவர்ள் அனைவரும் அவன் அருளால் தானே முக்தி பேறு பெற்றார்கள் எனவே நல்லாரோடு சேர்ந்தால் நாமும் அவர்களுடன் பயன் பெறுவோம். அடியோர்களுடன் கூடி வாழ்வதால் அவர்கள்மத்தியில் இறைவன்இருப்பான் என்பது மணிவாசகர் வாக்கு
பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்
திருச்சிற்றம்பலம்