புதன், 22 மார்ச், 2023

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு

 

பிறவித்துன்பம் நீங்க சிவத்தொண்டு


பிறவி என்பது பெருங்கடலை நீந்துவது போன்று துன்பமானது என்று அருளாளர் பெருமக்கள் குறிப்பிடுவர். “பிறவி அலை ஆற்றினில் புகுதாதே, பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே” என்று அருணகிரிப்பெருமான் பிறவி வேண்டாம் என்று கந்தவேளை வேண்டிப்பாடுவார். துன்பமான பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டுமானால் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதனைப், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவன் அடி சேராதார்” என்று வள்ளுவப் பேரசான் குறிப்பிடுவார்.

பற்பல இன்ப துன்ப நுகர்வுகளைப் பல்வேறு செயல்கள் செய்வதன் மூலம் நுகர வேண்டி இருப்பதனாலும் மூப்பு, பிணி, பசி, இறப்பு என்ற துன்பங்களுக்கு ஆளாவதனாலும்தான் பிறவியைப் பெருங்கடல் எனவும், துன்பமானது எனவும்  குறிப்பிடுவர். ஆகவே, பிறந்து இறந்து – பிறந்து இறந்து துன்பப்படும் இச்சுழற்சியிலிருந்து விடுபடுவதே உயிர் வாழ்க்கையின் இலக்கு என்பது பைந்தமிழர் சமயமான சைவ சமயத்தின் துணிபு.


முடிவில்லாத இன்பம் தரக்கூடிய பெருமானின் திருவடியில் நிலையான இன்பம் துய்த்துக் கொண்டிருத்தலையே உயிர்களின் முடிந்த நிலையாகச் சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இதனாலேயே, இறைவன் காரைக்கால் அம்மை முன் வெளிப்பட்டுத் தோன்றி, “எம்மைப் பேணும் அம்மையே உமக்கு வேண்டுவனக் கேள்” என்ற போது அவ்வம்மையார், “இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார், பிறவாமை வேண்டும்” என்று கேட்டமையாய்த் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். எனவே பிறவாமையும் பெருமானிடத்து உள்ள நிலைத்த இன்பமுமே உயிர்கள் பெருமானிடத்தில் வேண்டிப்பெற வேண்டியது என்பது தெளிவாகிறது.

பிறவித் துன்பம் நீங்குவதற்குத் தாண்டக வேந்தர் என போற்றப் பெறும் திருநாவுக்கரசு அடிகள் எளிய வழியினைக் குறிப்பிடுகின்றார். “அன்னம் பாலிக்கும்” என்று தொடங்கும் ஐந்தாம் திருமுறைப் பாடலில், “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே” என்று தெளிவுபடுத்துகின்றார். பிறவி வராமல் இருப்பதற்குத் தாம் ஒரு வழியைக் கண்டு பிடித்து விட்டதாகவும் அதனால் இனி தமக்குப் பிறவி வராது என்றும் உறுதியாகக் கூறுகின்றார். அவர் உள்ளத்திலே அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினைக் கண்டு கொண்டுவிட்டமையால் இனி தமக்குப் பிறவி வாய்க்காது என்று திண்ணமாகக் கூறுகின்றார்.

இறைவன் திருவடியை அடைய வேண்டும், பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்று பல்வேறு கிரியைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுச் செயல்படும் நமக்கு எளிய வழிபாட்டினைத் திருநாவுக்கரசு பெருமான் காட்டுகின்றார். அதாவது பெருமானிடத்திலும், பெருமான் உள்ளிருந்து செலுத்துகின்ற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டுவதே இறைவனை அடைதற்கும் பிறவி அறுவதற்குமான வழி என்கின்றார். இதனையே, “அன்பே சிவம்” என்பார் திருமூலர்.


இறைவனிடத்திலே எப்படி அன்பு காட்டுவது என்பதற்கு எளிய பதிலை மற்றொரு பாடலிலும் திருநாவுக்கரசுப்பெருமான் அருளுகின்றார். பற்றி நின்ற பாவங்களை அழிக்க வேண்டுமாயின், பரகதிக்குச் செல்ல ஒரு வழி வேண்டுமாயின், நம்மை சுற்றி இருக்கின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டுமாயின், “எனக்கு உற்றாரும் உற்ற துணையும் நீயே என்றும் உன்னையல்லால் வேறு ஒரு தெய்வத்தை வழிபடமாட்டேன்” என்றும் தெளிவும் உறுதியும் கொள்ளவேண்டும் என்று திருவாரூர் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

  

பிறவித் துயர் தீர்வதற்குப் பெருமானின் தொண்டன் ஆகி சிவத் தொண்டுகள் செய்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகும் என்கின்றார். எத்தகைய சிவத்தொண்டு செய்வது என்பதனை அவரே விளக்குகின்றார். ஒவ்வொரு நாளும் தவறாது இல்லத்திலேயோ ஆலயத்திலேயோ இறைவனை நன்றியினால் வழிபாடு செய்தல் வேண்டும் என்கின்றார். அப்பெருமானின் பூசனை அறையையோ, திருக்கோயிலையோ தினமும் தவறாது கூட்டி, மெழுகி சுத்தம் செய்தல் வேண்டும் என்கின்றார். பின்பு கடமையாக எண்ணாது அன்போடு மாலை தொடுத்து அதனைப் பெருமானுக்கு அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்கின்றார்.இதனை அவர் பாடிய பாடல்

இதனைத்தான் அப்பர் அடிகள்

" நிலைபெறுமாறு எண்ணுதியே நெஞ்சே நீவா

நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு

புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டு

பூமாலை புணர்ந்தேத்தி புகழ்ந்து பாடி

தலையார கும்பிட்டு கூத்தும்ஆடி

சங்கரா செய செய போற்றி  "

  என்று பாடி உழவாரப்பணியில் அவன் தொண்டு பற்றி கூறியுள்ளார்

 இறைவனை அவன் கோயில் சென்று சென்று வழிபடுங்கள் தங்கத்தை மெருகு கூட்டத்தான் மிளிரும், எனவே அவன் அருளை பெற அவன் தாள் வணங்கினால் தான் இறை அருள் மிளிரும். புதையுண்ட தங்கம் மிளிராது. அவனை சென்று சென்று வணங்கினால் தான் அவன் அருள் வெளிப்படும். 

அபிசேகப்பொருட்கள் தருவோர் பூமாலை கொடுப்போர் இறைப்பணி செய்வோர் அருச்சனை செய்வோர் என அடியார்கள் கூடி செய்யும் கூட்டு வழிபாடு அடியாரகள் யாரும் கலந்து அருள் பெற வேண்டும் என்பதே இதன் அடிப்படை நெறி.

 கூட்டு வழிபாடு மிக அவசியமானஒன்றாகும், ஒரு நூல் தேரினைஇழுத்துவிட முடியாது,அந்நூல்பல சேர்ந்து ஒரு பெரிய கயிறாகுமானால் தேரினை மிகச் சுலபமாக இழுத்து விடும். ஒரு மரம் தோப்பாவதில்லை அது போல ஒரு கை ஓசை கேட்பதில்லை,  எங்கும் பரவி இருக்கும் இறைவனின் கருணை வெள்ளத்தை  கூட்டு வழிபாட்டின் மூலம் ஈர்த்து விடலாம் எனவே தான் கூட்டு வழிபாடு செய்ய அழைக்கிறார் அப்பர் பெருமானார்


 " பரவுமின் பணிமின் பணிவா ரொடே 

  விரவுமின் விரவாரை விடுமினே "  திருமு,5 பதி, 43. பாடல் 5


சிவபெருமானாரை அன்புடன் பணிகின்றவர்களுடன் கூடுங்கள் அவரை சிவனாகவே எண்ணி அன்பு காட்டுங்கள் அவ்வாறு இல்லாதவரைக் காணின் அவரை விட்டு விலகிவிடுங்கள். தொ ண்டரோடு கூடுங்கள் உங்களின் வல்வினைகள் யாவும் அழிந்தொழியும், திருஞான சம்பந்தர் பெருமானின் திருமணத்திற்கு வந்தவர்ள் அனைவரும் அவன் அருளால் தானே முக்தி பேறு பெற்றார்கள் எனவே நல்லாரோடு சேர்ந்தால் நாமும் அவர்களுடன் பயன் பெறுவோம். அடியோர்களுடன் கூடி வாழ்வதால்  அவர்கள்மத்தியில் இறைவன்இருப்பான் என்பது மணிவாசகர் வாக்கு 

          பெருமானிடத்தில் அன்பு ஏற்பட நாளும் அவனைத் திருக்கோவிலிலோ இல்லத்திலோ பொருள் விளங்கும் திருமுறைகளால் போற்றி உருகிப் பாட வேண்டும் என்கின்றார். பின்பு நம் தலைக் கணம் குறையுமாறு பல முறையும் தலையாலும் கைகளாலும் வணங்கி மகிழ வேண்டும் என்கின்றார். “பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” என்று மணிவாசகர் குறிப்பிடுவதனைப் போன்று எதைச் செய்தாலும் உண்பதற்கு முன்னும் உறங்குவற்கு முன்னும் எதையும் செய்வதற்கு முன்னும் அப்பெருமானின் அரிய பெயரான “நமசிவய” மந்திரத்தையோ “சிவசிவ” என்ற அதன் சுருக்கத்தினையோ சொல்லியே செய்தல் வேண்டும் என்கின்றார். நாளும் “சிவயநம” என திருநீறு அணிந்து மேற் கூறியவற்றைச் செய்து வந்தால் பெருமானிடத்தில் அன்பு பெருகி நம் பிறவியினை அறுக்க வழி பிறக்கும் என்பது திருநாவுக்கரசு பெருமான் வாழ்ந்து காட்டிய வழியாகும்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக