திங்கள், 30 மே, 2016

அருள்மிகு முப்பிடாரியம்மன் பற்றி ஒரு பார்வை

இன்று(31.05.2016 செவ்வாய் இரவு) சுந்தரபாண்டியம் சாலியர் சமூகத்தாரால் கொண்டப்படும் அருள்மிகு முப்பிடாரியம்மன் பொங்கல் திருவிழா.

அருள்மிகு முப்பிடாரியம்மன் பற்றி ஒரு பார்வை

கிராமங்களில் கொண்டாடப்படும் அம்மன் திருவிழாக்களில் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், மீனாட்சியம்மன்  போன்று முப்பிடாரியம்மன் திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா தென்மாவட்டங்களில் தான் அதிகம் இந்த முப்பிடாரியம்மன் கொண்டப்படுகிறது. முப்பிடாரி என்பது மூன்று சக்தி தெய்வங்களைக் குறிக்கும், மாரியம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் என்றும் கூறப்படுகிறது, மூன்று சக்தியான இச்சாக சக்தி,கிரயாசக்தி, ஞானசக்தி என்றும், முப்பெரும் தேவியர்களான, பராசக்தி,இலட்சு, சரஸ்வதி என்றும் பலவாறு கூறப்படுகிறது, எப்படியோ மூன்று சக்திகளை கொண்ட ஆதிபராசக்தியாக அன்னை முப்பிடாரியம்மன் ஒருநாள் மட்டும் (24 மணி) கொண்டப்படும் பண்டிகையாக செவ்வாய் தோன்றி புதன் இரவில் மறையும்
அன்னையாக வணங்கப்படும், இந்த பராசக்தியுடன் வலம் வரும் சக்தியின் காவல் தெய்வமாக உள்ள பைரவர் ( வைரவர் என்று சொல்வழக்காக உள்ளது) கடவுளும் சிறப்பு பூசையாக முதல் பூசைசெய்து, அம்மன் எழுந்தருளச் செய்யப்படும். பைரவர் உடன் வர ஆதிபாராசக்தி யாகிய முப்பிடாரியம்மன் ஊர்வலம் சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய குடியிருப்பு தெருக்களில் வலம் வந்து அம்மன் அருள்காட்சியம் வழங்கி நம்மையெல்லாம் அம்மன் காட்சி தருகிறார்.அம்மனுடன் வீதிவலம் வரும் பைரவர் வரலாறும் ஆதிபராசக்திக்கு பைரவர் எவ்வாறு காவல் தெய்வமானார் என்பது ஆன்மீக அன்பர்கள் யாவரும் அறிந்திருப்பீர்களென எண்ணுகிறேன், இருப்பினும் பைரவர் வரலாறும் அம்மனுக்கு காவல் தெய்வமானது பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு

பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.


இவ்வாறு உருப்பெற்ற பைரவர் ஆதிபராசக்தியாகிய சக்தி இருக்கும் ஆலயங்கள் தோறும் சக்திக்கு துணையாக பாதுகாப்பு தெய்வமாக இருக்க ஆணையிட்டார், இதன்படிதான் எங்கெஙகு சக்தி ஆலயங்கள் இருக்கும் இடமெல்லாம் அங்கு பைரவருக்கும் கோவில் உண்டு, இதன் அடிப்படையில் தான் நம் முப்பிடாரியம்மனுக்கும் பைரவர் துணையாக வந்து  அம்பாளுடன் நமக்கும் அருள்ஆசி வழங்குகிறார்

என்ற மேற்கண்ட வரலாற்று அடிப்படையில் தான் ஆதிபராசக்தியாகிய நம் முப்பிடாரியம்மனுக்கு பைரவர் கடவுளும் உடன் வலம் வந்து நம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,
  அன்னை ஆதிபராசக்தியாகிய முப்பிடாரியம்மனின் அருளும், பைரவர் கடவுளின் ஆசியும் பெற்று நலம் பெறுவோம், 
அம்மன் திருவிழா சிறக்க நல் வாழ்த்துக்கள்
அன்புடன் . வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
திருச்சிற்றம்பலம்  / ஓம் நமசியவாய



   

1 கருத்து: