புதன், 1 மார்ச், 2017

அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்!

அன்றாட வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்!

புதுவிதமான வாழ்க்கைமுறை, புலம் பெயர்ந்த வாழ்க்கை முறை எனத் தற்போது வீடுகளில் நமது ஆன்மிக நெறிமுறைகள் பல நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டன. இருந்தாலும், இன்னமும் இதில் ஆர்வமுள்ள பலர், அத்தகைய நெறிமுறைகள் தெரியாமல் இருக்கிறார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்களுக்காக, வீடுகளில் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள் பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ணன் கூறும் சின்னச்சின்ன நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக, நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம், தற்போது பலரிடம் இல்லையென்றாலும், அதிலுள்ள பயன்கள் மிகுதியானவை. ஆண்கள், புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் பெண்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களிலும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் நீராடுவது நல்லது.

* செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  நகம் வெட்டக்கூடாது. மற்ற நாட்களில் நகம் வெட்டினாலும், வெட்டிய நகத்துணுக்குகளை வீட்டுக்குள் போடக்கூடாது. தலை வாரும்போது உதிரும் தலைமுடிகளை பேப்பரில் மடித்து குப்பையில் போட வேண்டும்.

 இரவில் துணி துவைப்பது, மரத்தின் அடியில் படுத்து உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது. இரவு உணவில், கீரை, தயிர் போன்றவற்றைச் சேர்க்கக்கூடாது.

* இரவில் விளக்கு வைத்த பிறகு, பெண்கள் தலை வாருவது, பேன் பார்ப்பது, காய்கறிகளை நறுக்குவது, குப்பைகளைப் பெருக்கி வெளியில் கொட்டுவது கூடாது.

ஆண்கள் விளக்கை ஏற்றவும்கூடாது, விளக்கை அணைக்கவும் கூடாது. ஆலயங்களில் ஆண்கள் விளக்கேற்றலாம். பெண்கள், தேங்காய், பூசணி முதலியவற்றை திருஷ்டி பரிகாரமாகத் தெருவில் உடைக்கக் கூடாது.

* மனைவி கருவுற்றிருக்கும்போது, கணவன் புதுமனை புகுதல், பழைய வீட்டை இடித்தல், பிரேதத்தைச் சுமந்துசெல்லுதல் கூடாது. 

* எலுமிச்சை விளக்குகளை வீட்டில் ஏற்றக்கூடாது. சனீஸ்வர பகவானுக்கு எள் விளக்கை வீட்டில் ஏற்றக்கூடாது.

* காலையில் தூங்கி எழுந்ததும் கோயில், கோபுரங்கள், சுவாமிப் படங்கள், கடல், சூரியன், விளக்கு, தங்கம், வலது உள்ளங்கை ஆகியவற்றைப் பார்ப்பது நல்லது. கழுதை, எருமை, துடைப்பம் போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.

அதிகாலையில் எழுந்து, சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு, அன்றாட பணிகளைத் தொடங்கினால், சிறப்பாகவும் நல்ல விதமாகவும் முடியும். அன்றைய நாளில் செய்யவேண்டிய வேலைகளை முறையாகத் திட்டமிட்டு, அதற்கேற்ப செயல்படுவது நல்ல பலனை அளிக்கும்.

* பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களிலும் பிறந்தநாள், திருமணநாள், போன்ற நாள்களிலும் தாய் தந்தையைச் சந்தித்து ஆசிபெறுவது, கோயில்களுக்குச் சென்று இறைவனுக்கு நன்றிசெலுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது நல்ல உற்சாகத்தையும் தெளிவான மனநிலையையும் தரும்.  

* விரத நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், இறைசிந்தனையுடனும் தூய்மையான மனதுடனும் பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்லது.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ;ஆன்மீக மலர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக