வியாழன், 24 செப்டம்பர், 2015

பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு


பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் ! அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த கால், கூன்,குரடு, செவிடு, நொண்டி என உடல் ஒச்சமின்றி பிறத்தல்அரிது. இவ்வாறு கிடைத்த / அளித்த எம்பெருமான் அவர்களின் அருளால் கிடைத்த /இம்மானிட பிறப்பின் அங்கங்களை அவனை வணங்க பயன்படுத்தாது வீணே வளர்த்து என்ன பயன் எனவே நாம் பிறந்த பிறப்பின் முழுப் பயனை பெறவும், இன்னும் பிறவாத நிலை பெறவும், நம் உடல் அங்கங்களை அவனை தொழுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று திருவருட் செல்வர் திரு நாவுக்கரசர் பெருமான் தனது பதிகம் நான்கில் அங்கமாலை என்ற பதியத்தின் வாய்லாக நமக்கு அற்புதமாக தெரிவித்துள்ளார், தலை ; தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய் தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக. தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது. இறைவன் பலிதேர்வது உயிர்கள் உய்யும் பொருட்டு. பிறர் பலி தேர உதவுங் கருவி, அவர் வறுமை நிலைக்கேற்ற (பிச்சைப்) பாத்திரம். சிவபிரானுக்கோ பிரமகபாலம் பிச்சைப் பாத்திரம் ஆதலின், அவனது தலைமை புலனாகும். அது மட்டுமோ? தலையில் அணிந்த மாலை, நூறு கோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணலெண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. `தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே` (தி.7 ப.4 பா.1). இத் தலைமை சிவனடியார்க்கன்றி, `செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்திசெய் மனப் பாறைகட்கு ஏறுமோ?` ஏறின், அவர்க்கு மாதேவன் அலால் தேவர் மற்று இல்லையே. அத்தலைவனுக்கே வணக்கம் உரியது. அதனால், தலையே நீ வணங்கு. அவனை நேரே வணங்காமல், வேறு எங்கு வணங்கினும், அங்குத் தாபரமோ சங்கமமோ அவனது உருவாய் நிற்கும். அத் தாபர சங்கமங்கள் என்ற இரண்டு உருவில் நின்று நீ செய்யும் வணக்கத்தை (பூசையை)க் கொண்டு அருளை வைப்பவன் மாபரனே. கண்கள்; கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள் காட்சியின் பயன், காணும் வினைமுதல்வனுக்குத் தீர்த்தற்கு அரியதொரு துயரின் நீக்கம். உயிர்கள் அடிமைகள். அவை உடையவனைக் காண்டலின் பயன் தம் பிறவி நீக்கம். அப்பெருந் துன்பம் போக்கவல்லான் பிறவியில்லாதவனாதல் வேண்டும். `பிறவா யாக்கைப் பெரியோன்` இறவாமை திண்ணம். அது நஞ்சுண்டும் சாவாமையால் உறுதியாயிற்று. ஆகவே, "கண்காள் கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னைக் காண்மின்கள்` என்றருளினார். உயிர்களுடைய பிறப்பிறப் பாட்டம் ஒழிய உடையவனது அருளாட்டத்தை என்றும் மறவாது காண்டல் வேண்டுதலின், `எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்கள்` என்றருளினார். `குனித்த புருவம் முதலிய ஐந்தும் திருவாய் பவளத் திருமேனி இரண்டும் ஆகிய ஏழும் காணப்பெற்றவர்க்குப் பிறப்பில்லை என்பதுறுதியாதலின், மன்றாடற் காட்சி அன்றாடம் பெற்று உவக்க, நீங்கும் பிறவியும் நீங்காதிருக்க வேண்டும் என்று வெளியிட்டருளினார். `சிற்றம்பலத் தரன் ஆடல் கண்டாற் பீழையுடைக் கண்களால் பின்னைப்பேய்த் தொண்டர் காண்பதென்னே` (தி.4 ப.80 பா.1) ஆடல் அன்றிக் கண்கொண்டு காண்பது யாதும் இல்லை. செவி ; செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ செவிகளே! சிவபெருமானாகிய எங்கள் தலைவனாய், செம்பவளமும் தீயும் போன்ற திருமேனியனாகிய பெருமானுடைய பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள். செவிகாள்! சிவனும், எம் இறையும், செம்பவளமும் எரியும் போன்ற மேனிப் பிரானும் ஆகிய முழுமுதல்வன் திறத்தை எப்போதும் கேண்மின்கள். குறைவிலா மங்கல குணத்தன் திறம் கேட்டலே முழுப்பயன் ஆகிய துன்ப நீக்கமும் இன்பப் பேறும் விளைக்கும் என்பார் சிவன் என்றும் இவ்வடிமையின் செவிகள் ஆண்டவன் திறமே கேட்கற்பாலன என்பார் `எம் இறை` என்றும், கண்ணுக்குப் பிடிக்காதவர் திறத்தைக் காது கேளாது; கண் களிக்கக் காணத்திகழ்வார் திறத்தையே காதுகள் கேட்க விரும்பும் ஆதலின், `செம்பவளம்போல், எரிபோல் மேனி` என்றும், உயிர்க்குயிராய் நின்று என்றும் பிரியாதவனது திறத்தைக்கேட்டலே உயிர்க்கு உய்தி தருமென்பார், எப்போதும்` என்றும், கற்றலிற் கேட்டலே நன்று என்பார் (முன்னும், பின்னும்) கேண்மின்கள்! என்றும் பணித்தருளினார். ஆளாகாதும், ஆளானாரை அடைந்துய்யாதும், மீளா ஆட்செய்து மெய்மையுள் நில்லாதும் வாளா மாய்ந்து மண்ணாகிக் கழியும் தொழும்பர் செவி தோளாத சுரை (தி.5 ப.90 பா.3). `இளையகாலம் எல்லாம் எம்மானை அடைகிலாத் துளையிலாச் செவி(த் தொண்டர்)` (தி.5 ப.66 பா.3) எனப் பழிக்கப்படாமை வேண்டி, செவிகாள் பிரான் திறம் எப்போதும் கேண்மின்கள் என்றருளினார். மூக்கு ; மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை மூக்கே நீமுரலாய் மூக்கே! சுடுகாட்டில் தங்குகின்ற முக்கண்ணனாய்ச் சொல் வடிவமாய் இருக்கும் பார்வதி கேள்வனை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக. மூக்கின்றொழில். உயிர்ப்புக்கால் (பிராணவாயு) மூக்கின் வழி வெளிப்படுவது. அதனியக்கம் இன்றேல், உடலின் நீங்கும் உயிர். உடல் முதுகாட்டிற் கிடத்தியெரிக்கப்படும். அங்கு உறையும் முக்கண்ணனை உடலோடிருக்கும்போதே முரன்று கொண்டிருப்பின், அவனருளால், இறவாது வீடு பெற்று இன்புறலாம் என்பார் `முதுகாடுறை முக்கண்ணனை மூக்கே நீ முரலாய்` என்றார். மூக்குவழி யியங்கும் மூச்சு, உலகில் இரவியும் திங்களும் எரியும் இன்றேல் நின்றொழியும். அம் மூன்றனையும் இயக்கியும் உருவெனவும் கண்ணெனவும் கொண்டும் உயிர்கட்கருளும் இறைவனை முரல்வாய் என்பார் `முக்கணனை` என்றார். இறைவனைக் குறித்த தாகலின், வாக்கால் உரைத்தபடி விளங்கிக் கொள்ளும் நிலைமை மூக்கால் முரன்றாலும் அவனுக்கு இனிது விளங்குவது இயல்பும் எளிமையும் ஆம் என்பார், `வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய்` என்றார். சொல்லும் பொருளும் ஆனான் அம்மை யப்பனே எனலும் அதனால் விளக்கலாயிற்று. `சிவ சிவ` என்னும் வாக்கே அவன் ஆன்மாக்களிடத்திலிருந்து நோக்கியிருக்கின்றான். அவன் அத்திருவைந்தெழுத்து நினைவோடு, வாயால் உரையாது மூக்கால் முரல்கினும், அவனது நோக்கம் அதுவாதலின், மங்கை மணாளனாம் தனது மங்கலகுண நிறைவாகிய சிவாநந்தாநுபவத்தை வழங்குவதில் ஒருபோதும் தவறான் என்பார், `மங்கைமணாளனை முரலாய்` என்றார். மணாளன் நோக்குவது வாக்கின் பொருளையுடைய மூக்கின் முரற்சி. மங்கை நோக்குவது அம்முரற்சியாயமைந்த வாக்கு என்பாராய் `மூக்குவாய் செவிகண்ணுடலாகி.....காக்கும் நாயகன் கச்சியேகம்பனே` என்புழி மூக்கினை முற்கூறினார். அதன் கருத்துணர்க. வாக்கே நோக்கிய மங்கைமணாளன், உயிர்ப்பாய்ப் புறம் போந்தும் அகம்புக்கும் உயிரினுள்ளே நிற்பான். அவ்வீசனுக்கு அவ்வுயிர்ப்பியங்கும் வாசலாதல் தோன்ற `மூக்கே` என்றார். `மூக்கினால் முரன்றோதி அக்குண்டிகை தூக்கினார் குலம்` (தி.5 ப.58 பா.2). `ஞமணஞாஞண ஞாண ஞோணமென் றோதி` (தி.7 ப.33 பா.9) வீண்காலம் போக்குமவர் போலாது முக்கணனை முரல்வாய் என்றார். நோக்கம் பிறிதொன்றன்கண் இன்றி வாக்கின்கண்ணதேயாதலின், மூக்கின் முரற்சியும் வாக்கின் வரும் விளக்கத்தை விளைவிக்கும் என்பார் மூக்கே நீ முரலாய் என்றார் எனலுமாம். வாய் ; வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய் வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த` அத் தலைவனையே (தி.5 ப.90 பா.7). `வாழ்த்த வாயினை வைத்தார்` (தி.4 ப.30 பா.3) என்றுணர்ந்து வாழ்த்திப் பயின்ற தமது பெருமை தோன்ற `வாயே` என விளித்தார். இருந்தமிழே படித்தும் இறைவனுக்கு ஆளாகும் பேற்றினை உறாத ஆயிரம் சமணர் வாய் அவர்களை அழித்தற்குப் பயன்பட்டன. (தி.5 ப.58 பா.9) அவ்வெவ்வாய் போல்வது அன்று தம் செவ்வாய் என்பது தோன்ற விளித்ததுமாம். வாழ்த்துவதன் பயன் தமக்கு வாழ்ச்சி யெய்துதல். வாழ்த்தப் பெறுவோனால் வாழ்த்துவோற்கு வாழ்ச்சியுறாதேல் அவ் வாழ்த்துப் பயனிலாததாம்.`வாயே வாழ்த்து` என்று விளித்து ஏவியருளினார். `நாக்கொண்டு பரவும் அடியார்வினைபோக்கவல்ல புரிசடைப்புண்ணியன்` `நாக்கைக்கொண்டு அரன்நாமம் நவில்கிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் வாயே வாழ்த்து என்றார். நெஞ்சு ; நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய் நெஞ்சே! மேல் நோக்கிய செஞ்சடையை உடைய புனிதனாய், மேகங்கள் அசையும் இமயமலை மகளாகிய பார்வதி கேள்வனை எப்பொழுதும் நினைப்பாயாக. பிஞ்ஞகன் பேர் மறப்பன்கொலோ என்று கிடந்து மறுகிடும் உள்ளம் என்பார் `நெஞ்சே?` என்று விளித்து `நீ நினையாய்` என வினாக்குறிப்புணரக் கூறினும், `விச்சையும் வேட்கையும் நிச்சல் நீறணிவாரை நினைப்பதே` (தி.5 ப.92 பா.8) `வந்தவரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார்` (தி.6 ப.16 பா.9) அவரை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்` `கவலைக்கடல் வெள்ளத் தேனுக்கு விளைந்த தெள்ளத்தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத் தேறல்` (தி.5 ப.91 பா.9) `உள்ளமே தகழி` (தி.4 ப.75 பா.4) `நெஞ்சத்துள் விளக்கு` (தி.4 ப.29 பா.2) `சிந்தையுட் சிவம் ` (தி.4 ப.29 பா.4) (தி.5 ப.48 பா.5) `நினைப்பவர் மனம் கேயிலாக் கொண்டவர்` (தி.5 ப.2 பா.1) `என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த சிறையான்` (தி.6 ப.66 பா.7) கை தொழுவார் மனம் ஆலயம் (தி.4 ப.17 பா.8) நெஞ்சினால் நினைந்தேன் நினைவெய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின (தி.5 ப.44 பா.4) `துன்பமெலாம் அறநீங்கிச் சுபத்தராய்....ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆம் அவர்க்கு அன்பர்` என்ற அநுபவஞான சொரூபராதலின், தம் நெஞ்சம் செய்த மாதவத்தைத் தாமே வியந்து `நெஞ்சமே எந்த மாதவம் செய்தனை` (தி.5 ப.7 பா.2) `என்னை மாதவம் செய்தனை` (தி.5 ப.77 பா.2) எனப் போற்றும் பெருமை தோன்றவும் `நெஞசே?` என்று விளித்தார். வேறு எப்பொருளை நினைப்பினும் வெப்பமே மேவும்; தட்பம் சாராது; அம்மையப்பனையே நினைத்தாற்றான் பிறவிக் கோடையையும் தீர்க்கும்; பேரின்பக் குளிர்ச்சியையு முண்டாக்கும் என்பார் `மஞ்சாடும் மலைமங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்` என்றார். மலைமங்கை தன் நினைப்பால் தனது தாட்சாயணி என்ற பெயர் நீங்கினாற்போல், நின் நினைப்பால் நினது சீவன் என்ற பெயர் நீங்குவாய்; அவள் அவனை அடைந்தவாறு அடைந்தும் இடையறா தின்புறுவாய் என்பார் `(மலைமங்கை மணாளனை) நீ நினையாய்` என்றருளினார். நினைக்க முயலும் முன்னரே பத்திவெள்ளம் பரந்தது (தி.5 ப.44 பா.6) என்பார் `நினையாய்` என விரைவித்தார். `சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி உயக்கொளும் காண்` (தி.5 ப.71 பா.9) என்பார், விரைவுக் குறிப்புணர, `நெஞ்சே நீ நினையாய்` என்று அருளினார். கைகள் ; கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர் கைகளே! மணங்கமழும் சிறந்த மலர்களைச் சமர்ப்பித்துப் படம் எடுக்கும் வாயை உடைய பாம்பினை இடையில் இறுகக் கட்டிய மேம்பட்ட பெருமானைக் கூப்பித் தொழுவீராக. `தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரைக் கீழ்க்கணக்கில் எழுதும் (தி.5 ப.21 பா.8) மெய்மையை அறிந்து, சலம் பூவொடு தூபம் மறந்தறியாராய் வழிபட்டு வந்து, நகமெலாம்தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி, முகமெலாம் கண்ணீர்வார முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலாற் கோயில் இல்லை (தி.4 ப.40 பா.8) அம்போது எனக்கொள்ளும் (தி.4 ப.12 பா.10) எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் என்று உணர்ந்து தெளிந்த நம் கைகளுக்குத் தாம் கூப்புவித்தல் வேண்டாதே அவையே கூம்பும் என்பார் அப் பயிற்சி மிகுதி தோன்றக், `கைகாள்` என்றார். குவிதலும் தொழுகையும் தம் கைகளுக்குச் சிவபிரான்கண்ணவேயன்றிப் பிறாண்டில்லை என்பார் `கூப்பித் தொழீர்` என்றார். ஐம்பொறிகளையும் அடக்காதவனாதலின், பாம்பணை மேல் தூங்கும வனானான் மாலோன்; அவற்றை அடக்கும் ஆற்றலை, உடலிற் பாம்பினை அணிந்தும் தலைமேல் ஐந்தலைப் பாம்பு ஏந்தியும் தோற்றினான் நீற்றினை நிறையப்பூசிய நின்மல சிவன்; நீர் கைகூப்பித் தொழலால் அவனுக்கு ஒரு பயனும் இல்லை; அவன் `கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைதெழுவாரையும் வாடலன்` நும்குவித்தலும் தொழலும் நுமக்கே பயன் விளைவிப்பன என்பார் `கைகாள் கூப்பித்தொழீர்` என்று மீண்டும் தூண்டினார். ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை மனத்தே வைத்து `நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும்` (தி.5 ப.82 பா.6) `புரமூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீரும்` `ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை` (தி.5:- ப.82 பா.5, ப.83 பா.9). `பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார் காக்கைக்கே இரையாகிக் கழிவர்` என்பார் `தூவிநின்று கூப்பித் தொழீர்` என்றார். `கழலடியே கைதொழுது காணினல்லால் மற்றோர் களைகண் இல்லீர்` என்பார் `தொழீர்` என்றார். ஆக்கை (உடம்பு); ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ் ஆக்கை யாற்பயனென் எம் பெருமானுடைய கோயிலை வலமாகச் சுற்றி வந்து பூக்களைக் கையால் சமர்ப்பித்து அவனுக்கு வணக்கம் செய்யாத உடம்பினால் யாது பயன்? தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம்தமக்கு வாய்த்த உடம்பின் பயன்? `கொடுமாநுடமேனும் இறைவன் கழலேத்தியிருக்கில் ஒரு குறைவும் இல்லோம்` (தி.5 ப.39 பா. 5) குனித்தபுருவம் முதலியவற்றைக் காணப்பெறாத மனித்தவுடல் அநித்தவுடலே, உடையானிடத்தில் நிலாவாத நெஞ்சத்தை யுடைய புலாலுடம்பு நிற்பது ஒத்து நிலையிலாதது. இந் நிலையிலா ஆக்கை நிற்கும்போதே இதனால் ஆகும் பயனை விரைந்து பெற்றுக் கொள்வதே அறிவுடைமைக்கு உகந்தது. அங்ஙனம் பெறாதார்க்கு ஒரு பயனும் இல்லை என்பார், `ஆக்கையால் பயன் என்` என்றார். ஊனாலும் உயிராலும் உள்ள பயன்கொளநினைந்து வானாறு பொதி சடையார் மலரடி வணங்குந் தமக்குத் துணையாய் நின்றமை தோன்ற `ஆக்கை` என்றருளினார். ஆக்கை பெற்றது மீண்டும் அதனை ஆக்கை ஒழித்தற்கே. அது நிகழ, உயிரைச் சாரும் கட்டினை ஒழித்து வீடுநல்குவது முழுமுதற் பொருளே என்பார் `அரன்` என்றார். எடுத்த உடலாய், `ஒருகாலும் திருக்கோயில் சூழா`தேல், அவ்யாக்கை பெயர்த்தும் போக்குவரவு புரியும் உயிர்க்குச் சுமை என்பார் `வலம் வந்து போற்றி என்னாத இவ்வாக்கை` என்றார். `பூக் கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்` `உண்பதன்முன் அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணார்` `நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்` நெஞ்சம் தன்னுள் (- அடைந்தார்க்கு இன்பங்கள் தரும் தன்னுள்) நிலாவாததும் நிற்பது ஒத்து நிலையிலாததுமாகிய புலாலுடம்பிலும் புகுந்து நின்ற அக்கற்பகத்தைத் தலையாரக் கையாரக் கும்பிட்டு வாயார நாவாரப்பாடிச் சித்தமாரநினைந்து போற்றி அலறாநிற்றலைச் செய்யாதார் யாவர்க்கும், அவ்வுடம்பால் ஒரு பயனும் இல்லை என்பார் 'பூக் கையாலட்டிப் போற்றியென்னாத இவ்வாக்கையாற் பயன் என்' என்றார். வழிபாடில்லையேற் பயனிலாத யாக்கை யென்பது கண்கூடாம் என்பார். கால்கள் ; கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென் . நீலகண்டனான எம்பெருமான் தங்கியிருக்கும் கோயிலாகிய, அழகான கோபுரத்தை உடைய கோகரணம் என்ற தலத்தை வலம் வாராத கால்களால் யாது பயன்? இவ்வுடம்பின் கால்கள், திருக்கோயில் சூழாக் கால்களாய் அவ்வாய்க்கால்களிலும் இழிந்தன என்பார்' கால்களாற் பயன் என்' என்றார். ஒரு காலும் தீவண்ணர் திருக்கோயில் சூழாவாகில் அளியற்றவராய்ப் பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கும்கால் என்பார் `கறைக்கண்டன் உறைகோயில் கோலக் கோகரணம் சூழாக் கால்களாற் பயன் என்என்று வினவினார். திருக்கோயில் வலம் வரும் மெய்யன்பரை நஞ்சு தீண்டாப் பேறு தோன்றக், `கறைக் கண்டன் கோயில்' என்றார். `ஓட்டை மாடத்தின் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம், கழலடி நாட்டி நாண்மலர்தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும்' என்பார் அங்ஙனம் கூறினார் எனினும் பொருந்தும். ஆக்கையின் பிரிவாய தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கை எல்லாம் முற்கூறிவிட்டமையால் எஞ்சிய கால்களை ஈண்டுக் கூறினார். பிற்கூறற்பாலதாய ஆக்கையை முற்கூறியதென்னை எனின், கால்கள் ஆக்கையின் ஒரு பிரிவேயாயினும், அவ்வுறுப்பால் ஏனைய உறுப்புக்கள் (ஆக்கை) தாங்கப்படுதலின், முற்கூறினார். அக் கால்களிலிருந்தும் கூற்றால் உயிர் நீங்கும் போது உய்ந்து போக்கில்லை, என்பார் `கால்களாற் பயன் என்' என்று அடுத்துள்ளதன் தொடர்பு தோற்றினார். கூற்றுவன் நம் உயிரைக் கைப்பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்? எனவே எடுத்த பிறப்பின் பயன் பெற நம் யாக்கையில் உள்ள அங்கங்கள் அனைத்தும் எம்பெருமானு்க்கே பயன்படுத்துவோம் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com/ http://www.vpoompalani05.weebly.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக