ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்கள்


அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்கள்

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துவேதன்குடித் தேவர் தேவெய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே, 3-25-1

திருந்து தேவன்குடியில் (நண்டாங்கோயில்) எழுந்தருளியுள்ள தேவர்கட்கெல்லாம் தலைவராய் விளங்கும் சிவபெருமானார் அருந்தவத்தோர்களால் தொழுப்படுபவர்
1. இப்பெருமானாருடைய திருவேடங்கள் ( திருவெண்ணீறு, உத்திராட்சம், சடைமுடி) மருந்து வேண்டுவோருக்கு மருந்தாகும்.
2, மந்திரங்கள் வேண்டுவோருக்கு மந்திரமாகும்
3,சிவபுண்ணியங்களை அளிப்பனவாகவும் அமையும்

மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செலும் வழிகள் காட்வ்வன
தேனும் வண்டும் இசைபாடும் தேவன்குடி
ஆனஞ்சாடும் முடி அடிகள் வேடங்களே, 3-25-3

4, நமக்க பெருமையை அளிப்பன
5, அறியாமையால் மனத்தில் ஏற்படும் தீய எண்ணங்களை அகற்றுவன
6, முத்திக்குரியவழிகளைக் காட்டுவன

இதே கருத்தினை திருநாவுக்கரசர் சுவாமிகள் கூறியுள்ளதைக் காண்போம்

வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும் 6-89-6



சிவ வேடங்ளான திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி, துவர் ஆடை, ஆகியவற்றை கண்ட சிவபெருமானாரை நினைந்து வணங்கும் தொண்டர் துன்பப்படாவண்ணம் காத்து நிற்பவர் சிவனார். என்பது நாவுகரசர் சுவாமிகளுடைய அனுபவ வாக்கு ஆகும். 

மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதி நாத நாயனாரும் தம்மைக் கொல்ல வந்தவர் திருவெண்ணீறு அணிந்திருந்ததைக் கண்ட உடன் சிவபெருமானாரையே நினைந்தார்கள்.
புகழ் சோழர்தமது படைத்தலைவர் ஒரு சடைமுடியுடைய தலையைக் கொண்டு வந்ததைக் கண்டவுடன் தீயில் முழ்கி இறைவனடி சேர்ந்தார்,

சலவைத் தொழிலாளி உடம்பு உவர் மண்ணினால் வெண்மை நிறமாகத் தெரிந்தது. பேரரசராகிய சேரமான் பெருமான் நாயனார் இவரைக் கண்டவுடன் மண்ணில் வீழ்ந்து வணங்கினார். காரணம் திருவேடத்தைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமானாருடையநினைவு வந்தது. 

வரகுண பாண்டிய மன்னர்திருடன் நெற்றியில் திருநீறு கண்டவுடன் சிவபெருமானாரைக்கண்டதாக நினைவு பெற்றார், ஆதலால் அத்திருடனை தண்டிக்காமல் அனுப்பி வைத்தார்.

திருவேடக் சிறப்பினைக் கூறும் அப்பர் அடிகள் பாடல்

எவரேனும் தாமாக இலாடத்திட்ட
திருநீறுஞ் சாதனுமும் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிநது ஈசன்திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. 6-வது திருமறை

திருநீறுயம் உரத்திராட்சமும் அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெறுக்காமல் இவர் அவர் என்று வேறுபாடு கருதாமலும், அவர்களை கண்ட பொழுதே உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அவர்களை சிவமாகவே எண்ணி, மனம் ஒன்றுபட்டு வணங்க வேண்டும். அவ்வாறு தொழும் அடியார் நெஞ்சினுள்ளே சிவபெருமான் எழுந்தருளுவார்
சிவசின்னங்களை அணிவதாலும், அணிந்தவர்களை காணும் பொழுதே வணங்குவதாலும், சிவபொருமானாருடைய மனங்களளையே இறைவர் கோயிலாக கொள்வார். முத்தி நிச்சியமாகும்.

சிவ நினைவால் மற்ற அவ நினைவுகள் மனதில் தோன்றுவதில்லை. அதனால் மனம் அலைவதில்லை. மனம் அலைய வில்லையானால் சக்திகள் பல உண்டாகும் இதனால் வாழ்வு நீண்ட வாழ்நாள் முடிவில் பிறாவா நெறி ( முத்திப் பேறு) பெறலாம்,

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக