ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

பொன்வண்ணத்தந்தாதி பாடிய கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமான்

பொன்வண்ணத்தந்தாதி பாடிய 
        கழறிற்றறிவாராகிய  சேரமான் பெருமான்

சேரமான்பெருமாணாயனார், ஒருநாள் முன்போலப் பூஜாந்தத்திலே சபாநாயகருடைய திருச்சிலம்பொலி தமக்குக் கேளாதொழிய, மனமயங்கி, 'அடியேன் யாது பிழை செய்தேனோ" என்று பொருமி "இனி இந்தத் தேகத்தினால் அடையும் பேரின்பம் யாது" என்று உடைவாளை உருவித் தமது மார்பிலே நாட்ட, சபாநாயகர் விரைந்து திருச்சிலம்பொலியைக் கேட்பித்தார். உடனே நாயனார் உடைவாளை அகற்றி நமஸ்காரம் பண்ணித் தோத்திரஞ்செய்து, "எம்பெருமானே! அத்திருவருளை முன் செய்யாதொழிந்தது என்னை" என்றார். அப்பொழுது சபாநாயகர் சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நினைப்பிக்கும் பொருட்டு, எதிர் நின்றருளாது, "வன்றொண்டனாகிய சுந்தரன் கனகசபையின் கண்ணே நமது ஆனந்த நிருத்தத்தை வந்து வணங்கிப் பதிகம் பாடுதலால், நாம் நின்று அதனைக் கேட்டு வரத்தாழ்த்தோம்" என்னுந்திருவாக்கை அருளிச் செய்தார். சேரமான்பெருமாணாயனார் "அடியார்களுக்கு இவர் அருளுங்கருணை இருந்தவாறு என்னை" என்று வியந்து கனகசபையை வணங்கி வன்றொண்டரையும் தரிசித்தல் வேண்டும் என்று விரும்பி, சுபதினத்திலே திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் கடவுளை வணங்கிக் கொண்டு, சேனைகளோடு புறப்பட்டுப்போய்ச் சிதம்பரத்தை அடைந்து, கனகசபையிலே திருநிருத்தஞ்செய்தருளும் சபாநாயகரை வணங்கி, சிவானந்தக்கடலுள் அமிழ்த்தி, பொன்வண்ணத்தந்தாதி பாடியருளினார். சபாநாயகர் அதற்குப் பரிசிலாகத் தமது குஞ்சிதபாதத்தினது திருச்சிலம்பின் ஓசையை எதிரே கேட்பித்தார். சேரமான்பெருமாணாயனார் காலந்தோறும் சபாநாயகரைத் தரிசனஞ் செய்து கொண்டு அத்திருப்பதியில் இருந்தார்.

பாடல் எண் : 1
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
    ஆகிய ஈசனுக்கே 

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே

பாடல் எண் : 2
ஈசனைக் காணப் பலிகொடு 
    செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ 
    லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் 
    தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை 
    விண்டன வாட்கண்களே

(``பிச்சை`` என்று கேட்டு வாயிலில் வந்தவன் சிவ பிரான் - என்று தெரிந்துயான்) `அவனைக் காண வேண்டும்` என்னும் ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செல்வதற்கு முன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய் (செவிலி) `பிறர் செல்லலாகாத இவள் மிக விரைந்து புறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்த இந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப் பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள் போலும்` என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய் என்னை, `ஏடி, உள்ளே வா` என்று பற்றி ஈர்க்க, எனக்கு உதவுவார் யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு, பிச்சைக்கு வந்த, நீண்ட சடையையுடைய அவன், `நீ என்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத் தடுத்து என்ன பயன்.
(நீ என்னைக் காதலித்துவிட்ட பொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே,) நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா` என்று அழைத்தான்.
அவனது பொருளை அறிய, என்னுடைய வாள் போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்க மாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன.

பாடல் எண் : 3
கண்களங் கஞ்செய்யக் கைவளை 
    சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் 
    கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும் 
    என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின் 
    றாடும் பரமனையே 

பொழிப்புரை:

இச்சிறுமியை, அழகிய கண்டத்தையுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலை போலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்டவளாயினாள்.
இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.


திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக