ஞாயிறு, 27 மார்ச், 2016

பிறவி நோய் நீங்கும் வழி

பிறவி நோய் நீங்கும் வழி


கல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே


இந்து சைவ மதத்தின் சின்னங்களான விபூதி, ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள  வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், " வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது.    " உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா  நமச்சிவாயவே" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட   உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா?

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை செய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று இன்னும் பிறவாமை என்ற  நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட செய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப் பார்ப்போம்.
யாக்கை ஆகிய நம் உடம்பு இறைவன் நிமித்தம் பயன்பாட்டுத்தன்மை எத்தகையது என்பதை திருமுறைகள் காட்டும் நெறி
 தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர்
" சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... "  சிவபுராணம்
கண்கள் ;  கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................"   அப்பர் அடிகள்
செவி ; "செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை"
வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை
மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை
நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை
கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல் 
கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல்

 அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர்  திருமுறை பாடல் 
இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் பெற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெற்று இனி பிறவாத தன்மை வந்து ஏய்தல் வேண்டும்.

சுந்தரரர் இதனையே " ..... பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் ............. " என்னிறார்.


பெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா? அவனை வாழ்த்துவதற்காகவே  மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம்? இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும்  உறங்குவதும்  தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று  மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் (தீவினைகள் ) செய்வதில்லையே! எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன  தவறு?          

 " பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் " என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா!

தினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று  அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்? எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.

நாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, "பயிர் காட்டும் புயலாக " விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.
நமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம்  மன அமைதி இழந்து தவிக்கிறோம்.

மொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:

"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்
 தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்                              
ஒருகாலும் திருக் கோயில் சூழாராகில்
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
 அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்          
பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும்
செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே. "



பிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக