செவ்வாய், 26 ஜனவரி, 2016

தினம் ஒரு தேவாரம்
அப்பர் பிரான் பாடியது  / தில்லையில் பதி.5. பாடல் 1

அந்நாட்களிலே திருநாவுக்கரசுநாயனார் சிவஸ்தலங்கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாட விரும்பி, அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப்பதிகம் பாடிக்கொண்டு, பெண்ணாகடத்திற்சென்று திருத்தூங்கானை மாடமென்னும் ஆலயத்திற்பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "சுவாமி! அடியேன் இழிவினையுடைய சமணசமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடியேன் தரிக்கும் பொருட்டுத் தேவருடைய இலச்சினையாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்" என்னுங் கருத்தால் "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்" என்னுந் திருப்பதிகம். பாடினார், உடனே பரமசிவனுடைய திருவருளினால் ஒரு சிவபூதம் மற்றொருவருக்குந் தெரியாதபடி அவ்வாகீசருடைய திருத் தோளிலே சூலக்குறியையும் இடபக் குறியையும் பொறித்தது. நாயனார் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலச்சினைகளைக் கண்டு மனமகிழ்ந்து, திருவருளை நினைந்து கண்ணீர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்தஸ்தலத்தில் இருக்கின்ற நாளிலே, திருவரத் துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய் சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்கரையின் வழியாக நடந்து, சிதம்பரத்திலே சென்று, கனகசபையிலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்ற சபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு கைகளும் சிரசின்மேலேறிக்குவிய, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய, அக்கினியிற்பட்ட வெண்ணெய்போல மனங்கசிந்துருக, "என்று வந்தாய்" என்னுந் திருக்குறிப்போடு நிருத்தஞ்செய்கின்ற சுவாமியுடைய திருநயனத் தினின்றும் பொழிகின்ற திருவருளாலாகிய ஆனந்தமேலீட்டினாலே "கருநட்ட கண்டனை" என்னுந் திருவிருத்தமும், "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்னுந் திருநேரிசையும் பாடினார். அவர் சுவாமி தரிசனம் பண்ணி, திருக்கோயிற்றிரு முற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப்பணிசெய்து கொண்டு சிலநாள் அங்கே எழுந்தருளியிருந்தார். அப்பொழுது "அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்" என்னுந் திருக்குறுந்தொகை பாடினார். பின் திருவேட்களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, திருக்கழிப்பாலையை அடைந்து சுவாமிதரிசனஞ்செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள் அங்கே இருந்தார்.

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
                                                                                                                     
பொழிப்புரை:

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு வை.பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக