வியாழன், 7 ஜனவரி, 2016

நயன்மார்கள், சாக்கியர் - Saakiyar


நயன்மார்கள், சாக்கியர் - Saakiyar சாக்கியர் - Saakiyar நயன்மார்கள், சாக்கியர் - Saakiyar குரு பூசை மார்கழி - பூராடம் நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்திய வேளாளர். சாக்கியர் திருச்சங்கமங்கையிலே, வேளாளர் குலத்திலே உதித்த ஒருவர் சனனமரணத் துன்பங்களை நினைந்து நினைந்து கவலை கொண்டு அவைகளினின்று நீங்கு நெறி யாது என்று ஆராய்வாராயினார். அந்நாளிலே காஞ்சீபுரத்தை அடைந்து, பெளத்தர்களை அணுகி, அவர்கள் அநுட்டிக்கும் பெளத்த சமயத்திலே பிரவேசித்து, அச்சமய நூல்களை ஓதி, அவற்றின் பொருள்களை ஆராய்ந்தார். ஆராய்ந்தபொழுது, அச்சமயம் சற்சமயன்றென்பது அவருக்குத் தெள்ளிதிற் புலப்பட்டது அதுபோல மற்றைச் சமயநூல்களையும் ஆராய்ந்து அவைகளும் மெய்யல்லவெனத் தெளிந்து, பரமசிவனது திருவருள்கூடுதலால், அறிவிக்க அறியும்சித்தாகிய ஆன்மாக்களும் அவ்வான்மாக்களினாலே செய்யப்படுஞ்சடமாகிய புண்ணியம் பாவம் என்னும் கர்மங்களும் அக்கர்மங்களாலே பெறப்படுஞ் சுகம் துக்கம் என்னும் பலங்களும் அப்பலங்களைக் கொடுக்கின்ற தானே அறியுஞ் சித்தாகிய பதியும் எனப் பொருள்கள் நான்கு என்றும், அவைகளைப் பூர்வோத்தர விரோதமின்றி யதார்த்தமாக உணர்ந்தும் நூல் சைவ சமய நூலே என்றும், அந்நூல் உணர்த்தும் பதி பரமசிவனே என்றும் அறிந்துகொண்டார். எந்த நிலையிலே நின்றாலும் எந்த வேஷத்தை எடுத்தாலும் பரமசிவனுடைய திருவடிகளை மறவாமையே பொருள் என்று கருதி, தாம் எடுத்த பெளத்த வேஷத்தை துறவாமல், பரமசிவனை மிகுந்த அன்பினோடு இடைவிடாது தியானஞ்செய்வாராயினார். சிவசாதாக்கியம், அமுர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கர்மசாதாக்கியம், என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து, தினந்தோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து கொண்டே போசனம்பண்ணல் வேண்டும் என்று விரும்பி, சமீபத்தில் ஓர் வெள்ளிடையிலிருக்கின்ற சிவலிங்கத்தைத் தரிசித்து, பேரானந்தம் உள்ளவராகி, தாஞ்செய்யுஞ் செயல் இதுவென அறியாது, அருகிலே கிடந்த ஒரு செங்கல்லைக் கண்டு, அதைப் பதைப்பினுடனே எடுத்து, அச்சிவலிங்கத்தின்மேல் எறிந்தார். சிறுபிள்ளைகள் செய்யும் இகழ்வாகிய செய்கைகளும் தந்தையர்களுக்குப் பிரீதியாமாறுபோல, அந்தச்சாக்ய நாயனாருடைய செய்கையும் பரமசிவனுக்குப் பிரீதியாயிற்று. அந்நாயனார் அன்று போய் மற்றை நாள் அந்நியமத்தை, முடித்தற்கு அணைந்த பொழுது, முதனாளிலே தாஞ்சிவலிங்கத்தின்மேற் கல்லெறிந்த குறிப்பை நின்று ஆலோசித்து, "நேற்று எனக்கு இவ்வெண்ணம் வந்தது பரமசிவனது திருவருளே" என்று துணிந்து, அதனையே திருத்தொண்டாக நினைத்து, எப்பொழுதும் அப்படியே செய்யக்கருதினார். எல்லாச் செயல்களும் சிவன் செயல் என்றே தெளிந்தமையால் அந்நியதியைத் தினந்தோறும் வழுவாமல் அன்பினுடன் செய்ய; அது ஆன்மாக்கடோறும் வியாபித்திருந்து எல்லாவற்றையும் உணருஞ் சிவபெருமானுக்கு மிகச் சிறந்த திருத்தொண்டாகி முடிந்தது. ஒருநாள் அந்நாயனார் திருவருளினாலே மறந்து போசனஞ்செய்யப் புகும்பொழுது, இன்றைக்கு எம்பெருமானை அறியாமல் மறந்துவிட்டேன்" என்று எழுந்து, அத்தியந்த ஆசையுடன் மிகவிரைந்து புறப்பட்டு, சிவலிங்கத்தை அணைந்து, ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிய; பத்திவலையிற்படுவாராகிய பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றி, அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார். சாக்கியநாயனார் காட்சி சிவமே மெய்ப்பொருளெனெ அருளால் உணர்ந்து சிவ உபாசனையிலேயே லயித்திருந்த சாக்கிய நாயனார்க்குச் சிவம் தன் அருட்குறியாகிய இலிங்கத்திருமேனியை அவரகத்திற் பதித்தமையால் அதன்சார்பில் மேற்கண்டவாறான சிவலிங்க உண்மை மகிமைகளைத் தம்மிற் றாமே உணரலானார். உணருந்தோறும் தம்மகமெல்லாம் பூரித்தினிமை செய்யும் அதனைத் தம் புறக்கண்ணாற் கண்டும் மகிழவேண்டும் ஆர்வம் மேலிடவே தினமும் உண்பதன்முன் சிவலிங்க தரிசனஞ் செய்யும் நியமந் தலைக்கொள்ளலானார். அது, அவர் புராணத்தில், "காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாஞ் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச் சேணாருந் தழற்பிழம்பாய் நின்றநிலை தெளிந்தாராய்" - "நாடோறுஞ் சிவலிங்கங்கண்டுண்ணு மதுநயந்து மாடோர் வெள்ளிடை மன்னுஞ் சிவலிங்கங் கண்டுமனம் நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கற் கண்டதனைப் பதைப்போடு மெடுத்தெறிந்தார்" எனவரும். புறத்தில் நிகழும் சிவலிங்க தரிசனமும் பூசை வழிபாடும் இனிது நிறைவுற்று உரிய பலன் விளைத்தற்கு அகத்தில் நிகழுஞ் சிவலிங்கக் காட்சியும் அகப்பூசையும் முன்னோடி நியமமாதல், "தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாகப் பூஅழியா மற்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே உடல்" என்னுந் திருக்களிற்றுப்படியார்ச் செய்யுள் தருங் குறிப்பினாலும் "நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லாற் கனைகழல் ஈசனைக் காண வரிதாங் கனைகழல் ஈசனைக்காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல்லாரே" - "வெள்ளக்கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்குவார் சுமைபூக்கொண்டு கள்ளக்கடல் விட்டுக் கைதொழ மாட்டாதார் அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே" எனுந் திருமந்திர விளக்கத்தினாலும் "ஐந்து சுத்திசெய் தகம்புற மிறைஞ்சி அங்கியின் கடன்கழித் தருள்வழி நின்றிந்த நற்பெருங்கிரியை இயற்ற வல்லவரெம்மருங்கிருப்பார்" எனும் திருவாதவூரடிகள் புராணச் செய்யுட் கருத்தானும் புலனாம். திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக