ஞாயிறு, 16 அக்டோபர், 2016

திரு ஐந்தெழுத்தின் ஆற்றல்


திரு ஐந்தெழுத்தின் ஆற்றல்

" நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே " -- திருஞான சம்பந்தர் தமிழ் திருமுறை -1

நல்லவர், தீயவர் என்பது இன்றி அன்புடன் விரும்பி திருஐந்தெழுத்தைச் செபிப்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு சிவமுத்தியை ( பிறவாமையை ) அளிக்கும் ஆற்றலுடையன - சிவாயநம என்ற திருஐந்தெழுத்து

எமதூதர்கள் உயிரைக் கொண்டு செல்லும் மரணத்தறுவாயில் உண்டாகும் துன்பத்தைப் போக்குவனவும் திருஐந்தெழுத்தே ஆகும்.

" ஆதிமந்திரம் ஐந்தெழுத்து " என்பார் சேக்கிழார் சுவாமிகள். எல்லா மந்திரங்கட்கும் மூலமாய மந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும். இம் மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் உலகில் வேறு இல்லை. இதைச் செபித்தால் மற்ற எல்லா மந்திரங்களையும் செபித்தது போலவாகும்.

புண்ணிவான்கள், பாவிகள் யாவரும் இம் மந்திரத்தைச் செபிக்கலாம் என்பது திருஞானசம்பந்தப் பெருமானது திருவுள்ளமாகும். தீயவரையும் புண்ணியவான்களாக மாற்றும் அரும்பெரும் ஆற்றல் இம்மகாமந்திரத்திற்கு உண்டு என்பதை அவரவர் அனுபவத்தால் உணராலாம்.

மரணத்தின் பொழுது ஏற்படும் துன்பத்தையும் இல்லாமல் செய்யும் வலிமை உடையன திருஐந்தெழுத்தாகும். நண்பகல், மாலை, உறங்குவதற்கு முன் ஆகிய காலங்களில் 108 முறை செபித்து பலன் பெறலாம்.

திருஐந்தெழுத்தின் வலிமையை அப்பர் பெருமான் அடிகளும்,
" திருநாமம் ஐந்தெழுத்தை செப்பாராகில்
தீவண்ணர் திறம் ஒருகாலும் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோவில் சூழாராகில்
உண்பதன்முன் மலர் பறித்து உண்ணாராகில்
அருநோய்கள் கெட வெண்ணீர் அணியாராகில்
........... பெருநோய்கள் மிகநலிய வந்து பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே! -- என்கிறார்

திருஐந்தெழுத்தை அனுதினமும் கூறாவிடில் தினம் தினம் பிறந்து இறப்பதற்கு சமம் என்கிறார், மேலும் பிறாவாமை என்ற முத்தி நிலைக்கு திரு ஐந்தெழத்தே சிறந்த உபாயமாகும் என்கிறார்.

திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக