வெள்ளி, 21 அக்டோபர், 2016

பாடல் பெற்ற திருத்தலங்கள் கோயில் (சிதம்பரம், தில்லை

பாடல் பெற்ற திருத்தலங்கள்

கோயில் (சிதம்பரம், தில்லை) தலவரலாறு

இறைவர் திருப்பெயர் : நடராசர், அம்பலகூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர், 
  திருமூலட்டானேசுவரர், (கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்).
இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி.
தல மரம் : தில்லை, ஆல்
தீர்த்தம் : சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், (திருப்புலீச்சரம்) 
  பிரமதீர்த்தம், அனந்த தீர்த்தம் முதலியன.
வழிபட்டோர் : சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், 
  பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், 
  கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற பதி.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. கற்றாங் கெரியோம்பிக், 
2. ஆடினாய்நறு நெய்யொடு.

  2. அப்பர் - 1. செஞ்சடைக் கற்றை, 
2. பத்தனாய்ப் பாட மாட்டேன்.
3. பாளையு டைக்கமு, 
4. கருநட்ட கண்டனை.
5. அன்னம் பாலிக்குந், 
6. பனைக்கை மும்மத.
7. அரியானை அந்தணர்தஞ், 
8. மங்குல் மதிதவழும்.

  3. சுந்தரர் - 1. மடித்தாடும் அடிமைக்கண்.

  4. மாணிக்கவாசகர் - 1. கீர்த்தித் திருஅகவல்.
2. திருவண்டப் பகுதி.
3. போற்றித் திருஅகவல்.
4. திருப்பொற்சுண்ணம்.
5. திருக்கோத்தும்பி.
6. திருத்தெள்ளேணம்.
7. திருச்சாழல்.
8. திருப்பூவல்லி.
9. திருஉந்தியார்.
10. திருதோணோக்கம்.
11. திருப்பொன்னூசல்.
12. அன்னைப்பத்து.
13. குயில்பத்து.
14. திருத்தசாங்கம்.
15. திருப்பள்ளியெழுச்சி.
16. கோயில்மூத்ததிருப்பதிகம்.
17. கோயில்திருப்பதிகம்.
18. கண்டபத்து.
19. அச்சப்பத்து.
20. குலாப்பத்து.
21. எண்ணப்பத்து.
22. யாத்திரைப்பத்து.
23. திருப்படையெழுச்சி.
24. திருப்படையாட்சி.
25. ஆனந்தமாலை.
26. அச்சோப்பதிகம்.
chitambaram temple
தல வரலாறு




'கோயில்' என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கம். ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை; ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப்படுகின்றன.)

இக்கோயிலுள் 'திருமூலட்டானம்' என்னும் தனிக்கோயில் ஒன்றுள்ளது. அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோயில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.

சிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் - பஞ்சாக்கரப்படிகள் உள்ளன; இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராசப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் 'திருக்களிற்றுப்டியார்' என்ற பெயர் பெற்றது.

சிறப்புகள்

இறைவன் - விராட்புருஷனின் வடிவத்தில் திருவாரூர் மூலாதாரமாகவும், திருவானைக்கா 'உந்தி 'யாகவும், திருவண்ணாமலை 'மணிபூரக'மாகவும், திருக்காளத்தி 'கழுத்தாகவும்', காசி 'புருவமத்தி'யாகவும், சிதம்பரம் 'இருதயஸ்தான'மாகவும், சொல்லப்படும்.

பஞ்சபூத தலங்களுள் இது 'ஆகாயத் ' தலம்.

பஞ்சசபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.

இக்கோயிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.

"சிற்றம்பலம்" நடராசப்பெருமான் திருநடனம்புரிந்தருளும் இடம் - 'தப்ரசபா' எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் 'லெய்டன்' நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன. இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோயிற்புராணம் தெரிவிக்கின்றது.

"பொன்னம்பலம் (கனகசபை)" நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டிலிருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது.

"பேரம்பலம்" இது தேவசபை எனப்படும். மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலதில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று தில்லைக்கோயில் பாடலால் அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஆவான்.

"நிருத்த சபை" ஊர்த்தவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.

"இராச சபை" இஃது ஆயிரக்கால் மண்டபமாகும். சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தன.

வியாக்ரபாதர் (புலிக்கால்முனிவர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலின் பெரும்பற்றப்புலியூர் என்றும்; சித்+ அம்பரம் (அறிவு - வெட்டவெளி) = சிதம்பரம் ஞானகாசம் என்றும்; பூலோக கயிலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் எனவும் இதற்குப் பலபெயர்களுண்டு.

வைணவத்திலும் 'திருச்சித்திரக்கூடம்' என்று புகழ்ந்தோதப்படும் திருப் பதி.

சந்தானாசாரியர்கள் முத்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.

மாணிக்கவாசகர் புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி.

திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான்.

திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபபதி.

அவதாரத் தலம் : தில்லை (சிதம்பரம்).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம்  : திருப்புல்லீச்சரம் (தில்லை - சிதம்பரத்தில் உள்ள ஒரு தலம்).
குருபூசை நாள்  : தை - விசாகம்.
உமாபதிசிவம் 'கொடிக்கவி' பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.

திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.

இராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்விகத் தலம்.

சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றச் செய்யப்பட்ட அருமையான தலம்.

நடராச சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

சிற்றம்பலம் - சிற்சபை நடராசப் பெருமானுக்குப் பக்கத்தில் 'சிதம்பர ரகசியம் ' உள்ளது.

அமைவிடம்
அ/மி. நடராசர் திருக்கோயில்,
சிதம்பரம் & அஞ்சல் - 608 001.
கடலூர் மாவட்டம்.

தொலைபேசி : 04144 - 231166, 094439 86996.
மாநிலம் : தமிழ் நாடு 
சென்னை - திருச்சி மெயின்லைன் இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம். தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

நன்றி ; சைவம் டாட் காம்
தொகுப்பு , வை,பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக