திங்கள், 31 அக்டோபர், 2016

எதற்காக தீபாவளி

எதற்காக தீபாவளி ?

 
 எதற்காக தீபாவளி ?

தீபாவளி : வாரியார் அவர்களின் விளக்கம்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் = விளக்கு
ஆவளி = வரிசை

தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள், தீபாவளி எனவுணர்க. தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் 
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.

சிவ விரதம் எட்டு எனக் கந்தபுராணத்தின் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டம் புகல்கிறது.
அவையாவன:

சோமவார விரதம்
உமாமகேச்சுர விரதம்(கார்த்திகை மாதம் பெளர்ணமி)
திருவாதிரை விரதம் (மார்கழியில்)
சிவராத்திரி விரதம் (மாசியில்)
கல்யாண விரதம் (பங்குனி உத்திரம்)
பாசுபத விரதம் (தைப்பூசம்)
அஷ்டமி விரதம் (வைகாசி பூர்வபட்ச அஷ்டமியில்)
கேதார மாவிரதம்(இதுதான் தீபாவளி)
தொல்லைவல் வினைகழித்துத் தருஞ்சோமவாரமா திரை நோன்பன்றிப்
புல்லியவு மாமகேச் சுரஞ்சிவராத் திரிமுறையில் பொருத்த நோற்கப்
பல்வினையுந் தொலைந்திடுகே தாரமணவிரதமிவை பரமநோன்பு
கொள்ளூறு சூற் படைவிரத மெனுமெட்டுஞ் சிவ விரதங் குணிக்குங்காலே

இந்த விரதம் நோற்கும் முறை
புரட்டாசி மாதம் பூர்வ பட்சம் அஷ்டமியில் தொடங்குதல் வேண்டும். நிறைகுடம் வைத்து, அதில் சிவபெருமானை ஆவாகனஞ்செய்து, இருபத்தொரு இழையுடைய நூலைக் கையில் புனைந்து, அருச்சனை செய்து, தூப தீப நிவேதனம் புரிந்து வழிபட வேண்டும்.

ஐப்பசிமாத அமாவாசைக்கு முந்தினநாள் சதுர்த்தசியினுன்று, அதிகாலையிலெழுந்து நீராடி, தூய ஆடையுடுத்து, நெல்லின்மீது நிறைகுடம் வைத்து, அதில் சிவமூர்த்தியை நிறுவி, சிவமாகவே பாவனை புரிந்து, பக்தி பரவசமாக அருச்சித்துப் பாராயணம் புரிந்து, தூப தீப நிவேதனங்கள் செய்து வழிபட வேண்டும்.

மறுநாள் அமாவாசையன்று காப்பை யவிழ்த்து விட்டு உணவருந்த வேண்டும். இந்த விரதம் கேதார விரதம் எனப்படும்.

"கேதாரம்" என்னும் இமயமலைச்சாரலில் சக்திதேவி  "கௌரி" என்னும் அவதாரமெடுத்து சிவனின் இடப்பாகத்தை பெற்றதால இதுக்கு "கேதார கௌரி விரதம்"ன்னு பேரு...

இந்த விரதமிருந்தா கணவன், மனைவி பிரிஞ்சிருந்தா ஒண்ணு சேர்வாங்க. அவங்களுக்குள் அன்பு பலப்படும்.. குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு ஐதீகம்.

சக்தி தேவி ஏன் இந்த விதமிருந்தாங்கன்னு அதுக்கொரு கதையிருக்கு...

தீவிர சிவபக்தரான பிருகு முனிவர், சிவனையல்லாது எத்தெய்வத்தையும்   வணங்கமாட்டார்.  இதனால் , நாரதர் கலகத்தால்... முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார்.  இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்... தன்னை பிருகு முனிவரும், சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி கோவத்துடன்  பூலோகம் வந்தார்.

சிவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி... அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..

கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும்.

பிருங்கி முனிவர் சக்தியை விலக்கிச் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபட்ட காரணத்தினால், உமாதேவியார் வெகுண்டு, இடப்பாகம் பெறும் பொருட்டு, திருக்கயிலாய மலையினின்றும் நீங்கி, கெளதம முனிவருடைய வனத்தையடைந்தனர். அவ்வனம் அம்பிகையின் வரவினால் மிகவுஞ் செழிப்புற்றது. பாம்பும், தவளையும், அரவும் கீரியும், உரகமுங் கருடனும் உறவாடின.

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.

இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார் என ஐதீகம்.

இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அளிப்பார்

தீபாவளியன்று மது மாமிசங்களையுண்டு களியாட்டம் களிக்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவார். இனியேனும் அந்தத் தீயநெறியைக் கைவிட்டுத் தூய நெறி நின்று நலம் பெறுவார்களாக.

[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

திருச்சிற்றம்பலம் 
தொகுப்பு வை. பூமாலை சுந்தரபாண்டியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக