சனி, 8 அக்டோபர், 2016

நவராத்திரி நவ தகவல்கள்..!

நவராத்திரி நவ தகவல்கள்..!

1) நவராத்திரி நாட்களில், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு ஏற்ற காலமாகும்.  நவராத்திரி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களிலும் பெண்கள் ‘கன்யா பூஜை’ செய்வதால், சகல செல்வங்களையும் பெறலாம்.

2) கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்வது நலம்.

3) ‘சர்வமும் சக்தி மயம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சங்களுடன் அந்த வீட்டில் எழுந்தருளிவிட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

4) நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று பூஜை செய்து வழிபட்டால், ஶ்ரீஹயக்ரீவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்றைய நாளில் ஶ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தை  சொல்லி வழிபாடு செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

5) நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால்,  அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.



6) நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை அன்று கடலை, சுண்டல் மற்றும் பழங்கள் கொடுக்கலாம்.  நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

7) அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் பக்திப் பாடலகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். நவராத்திரி  ஒன்பது நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால், முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி  நாட்களும், வாசலில் தினம் தினம் புதிய புதிய மாவிலைத் தோரணங்கள் கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்.

8) விஜய தசமி தினத்தன்று ஶ்ரீஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும். விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து, அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து, பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால், கிரக தோஷங்கள் விலகி ஓடிவிடும்.

9) நவராத்திரி பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு மனநிறைவு தரும் வகையில் மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்ற பலவிதமான மங்கலப் பொருட்களைப் பரிசளிக்கலாம். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடையை பரிசாக அளிக்கலாம். ஏழைகளுக்கு உடைகள், உணவு வகைகள் முதலியவற்றை தானமாக அளிப்பது சிறப்பான பலன்களைத் தரும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜையை நிறைவுசெய்ய உதவுகின்றன. எல்லோர் மனத்திலும் அன்பை விதைத்து, அகிலம் சிறக்கச்செய்திடுவோம்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக