ஞாயிறு, 11 அக்டோபர், 2015

புனல் வாத திருப்பதிகம் (ஏடு வையாற்றில் எதிர்த்து வந்தது ) திரு ஞானசம்பந்தர் பாடியது


புனல் வாத திருப்பதிகம் (ஏடு வையாற்றில் எதிர்த்து வந்தது ) திரு ஞானசம்பந்தர் பாடியது சமணர்கள், பாண்டியர் நகை உட்கொண்டு சொல்லிய சொற்பொருளை அறியாராகி, திரித்துணர்ந்து. "முன்னே இரண்டு தரம் வாது செய்தோம். இன்னும் ஒருதரம் செய்ய வேண்டும். மூன்றுதரத்தில் ஒருதரமாயினும் வெற்றி பெறுவோம்" என்றார்கள். பாண்டியர் "இது என்னவார்த்தை" என்று மறுத்த பின்னும். பிள்ளையார் சமணர்களை நோக்கி "இனி என்ன வாது செய்வோம்" என வினாவியருள; சமணர்கள் "நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை ஓடுகின்ற வைகையாற்றிலே இடுவோம் எதிர்த்துச் செல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது" என்றார்கள். பிள்ளையாரும் "அப்படியே செய்வோம்" என்று அருளிச்செய்தார். அப்பொழுது குலச்சிறைநாயனார் சமீபத்தில் வந்து, "இனிச் செய்யப்படும் இவ்வாதிலே தோற்றவர்கள் செய்வது யாது" என்றார். அதைக் கேட்ட சமணர்கள் அவர் மேற் கோபங்கொண்டு, பொறாமை காரணமாக, தங்கள் வாய் சோர்ந்து "நாங்கள் வாதிலே தோற்றோமாயின், எங்களை இவ்வரசர் கழுவில் ஏற்றக்கடவர்" என்றார்கள். இதைக் கேட்ட அரசர் "வைகையாற்றிலே ஏடு இடும்பொருட்டுப் புறப்படுங்கள்" என்று சொல்ல; முன்னே பிள்ளையார் இரத்தினாசனத்தினின்றும் இறங்கிப் போய், முத்துச்சிவிகைமேற் கொண்டு சென்றார். அவர்பின்னே பாண்டியர் குதிரைமேற்கொண்டு சென்றார். சமணர்கள் மயக்கமேற்கொண்டு சென்றார்கள். சமுத்திரத்தை நோக்கித் திரையெறிந்து அதிவேகத்துடன் பாய்கின்ற வைகையாற்றின் கரையை அடைந்தவுடனே பாண்டியர் "இருபக்ஷத்தாரும் தங்கள் தங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை இடக் கடவர்கள்" என்றார். அரிசியாகிய உள்ளீடில்லாத நெற்பதர்போல "அறிவாகிய உள்ளீடு இல்லாத மக்கட்பதராகிய சமணர்கள் "அத்திநாத்தி" என்று எழுதிய ஏட்டை நதி அதிவேகத்துடன் பாய்தலைக் கண்டும், அவா மேலீட்டினாலே இடுதலும்; அது விரைந்து கொண்டு கடலை நோக்கி ஓடிற்று. சமணர்கள் ஆறுகொண்டோடும் ஏட்டைத் தொடர்ந்து எதிரே அனைப்பவர் போலக் கரைமேல் ஓடிப்போனார்கள். அவ்வேடு நூறுவிற்கிடைக்கும் அப்பாற் சென்றமையால், அதைக் காணுதற்கும் கூடாதவர்களாகி, வேறொருசெயலுமின்றி, தங்களுக்கு நாசகாலம் வந்தது என்று அஞ்சி நடுநடுங்கி, அரசருக்கு எதிரே வந்து தங்கள் நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார்போல பிள்ளையாரை நோக்கி "நீரும் உம்முடைய ஏட்டை இட்டால் அறியலாம்" என்றார்கள். பாண்டியராஜா அவர்களை விட்டு பிள்ளையாருடைய திருக்குறிப்பை நோக்க; தம்மை அடைந்த அன்பர்களுடைய சனனமரணங்களுக்கு ஏதுவாய் இருக்கின்ற மலமாயாகர்மங்களை நீக்கியருளுந்தேசிகோத்தமராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், பாண்டியராஜர் தம்முடைய அருமைத் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி பூசப் பெற்று மல பரிபாகமும் இருவினையொப்பும் உற்று நிற்றலால், அவருக்கும் அவர் போலப் பக்குவப்படும் சர்வான் மாக்களுக்கும் சைவ சமயத்துண்மைப் பொருளை விளக்கும் உபதேசமொழியாகிய "வாழ்கவந்தணர்" என்னும் திருப்பாசுரத்தைப் பாடி, ஏட்டில் எழுதி அத்திருவேட்டைத் தமது திருக்கரத்தினாலே வைகை நதியில் இட்டருளினார். அத்திருவேடு நதியிலே எதிர்ந்து ஜலத்தைக் கிழித்துக்கொண்டு சர்வான்மாக்களுக்கும் இதுவே மெய்ப்பொருள் என்று காட்டிக் கொண்டு சென்றது. பரமசிவனே எல்லாப்பொருளும் என்று எழுதிய திருவேட்டிலே "வேந்தனு மோங்குக" என்று பாடியருளியபடியால் பாண்டியராஜருடைய கூன் நிமிர்ந்தது. ஏடு எதிகொண்டு செல்லும்பொழுது, தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பெய்தார்கள் பாண்டியர் அற்புதங்கொண்டு நின்றார். சமணர்களெல்லாரும் அஞ்சிப்பதைபதைத்துத் தலைகுனிந்து நின்றார்கள். குலச்சிறைநாயனார் அத்திருவேட்டைத் தொடர்ந்து எடுத்தற்கு விரும்பி, காற்றைப்போல அதிவேகத்தோடு செல்கின்ற குதிரைமேல் ஏறிக்கொண்டு, பின் சென்றார். பிள்ளையார் அவ்வேடு தங்கும் பொருட்டு, "வன்னியுமத்தமும்" என்னுந் திருப்பதிகம் பாட; குலச்சிறைநாயனார் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நீர் நடுவிலே புகுந்து, அங்கே தங்கிய ஏட்டை எடுத்துச் சிரமேற் கொண்டு பெருமகிழ்ச்சி பொங்க, கரையில் ஏறி, திருவேடகத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளை வணங்கித் துதித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சந்நிதியில் வந்து அவருடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, பாண்டியர் முதலாயினோ ரெல்லாருக்குங் காட்ட; அடியார்கள் எல்லாரும் அத்தியந்த ஆனந்தத்துடனே "ஹரஹர" என்று ஆரவாரித்தார்கள். பாடல் எண் : 1 வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. பொழிப்புரை : உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக பாடல் எண் : 2 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. பொழிப்புரை : பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ? பாடல் எண் : 3 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. பொழிப்புரை : இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது பாடல் எண் : 4 ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். பொழிப்புரை : இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை . பாடல் எண் : 5 ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே. பொழிப்புரை : இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் . பாடல் எண் : 6 ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. பொழிப்புரை : இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் . பாடல் எண் : 7 கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே. பொழிப்புரை : சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ? பாடல் எண் : 8 வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. பொழிப்புரை : வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் பாடல் எண் : 9 பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. பொழிப்புரை : கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ? பாடல் எண் : 10 மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும் பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. பொழிப்புரை : திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் பாடல் எண் : 11 அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. பொழிப்புரை : சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் . திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக