சனி, 6 ஆகஸ்ட், 2016

பெருமிழலைக் குறும்ப நாயனார்

பெருமிழலைக் குறும்ப நாயனார் 


சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
குருபூசை நாள் : ஆடி - சித்திரை நட்சத்திரம் 
8/8/2016  .. திங்கட்கிழமை

மிழலைநாட்டிலே பெருமிழலை என்னும் ஊரிலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்த பெருமிழலைக்குறும்ப நாயனார் . அவர் சிவனடியார்களைக் காணுந் தோறும் விரைந்து எதிர்கொண்டு வணங்கி, அவர்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்பவர். அவர்களை நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். அதனால் அவர் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமகாசித்திகளையும் அடைந்தார். அடைந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்து வந்தார்.

இப்படி நிகழுங்காலத்திலே, திருவஞ்சைக்களத்திற் சென்று திருப்பதிகம் பாடுஞ் சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவனுடைய திருவருளினாலே உத்தரகைலாசத்தை அடையும் வாழ்வு கிடைப்பதைத் தம்முடைய ஊரிலிருந்து கொண்டே யோகப் பிரத்தியக்ஷத்தால் அறிந்து; "சுந்தரமூர்த்திநாயனார் உத்தர கைலாசத்தை நாளைக்கு அடைய நான் பிரிந்து இங்கே வாழ மாட்டேன்" என்று நினைந்து, "இன்றைக்கு யோகத்தினாலே சிவபிரானுடைய திருவடியை அடைவேன்" என்று துணிந்து, யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் தன் ஆத்மா உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தில் வீற்றிருக்கின்ற சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.

இப்பெருமிழலைக் குறும்பநாயனார் உலகம் உய்யும் பொருட்டுத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை நியமமாகச் சிரத்தையோடு சிந்தித்துத் துதித்து வணங்கினமையாலன்றோ, அணிமா முதலிய அட்டசித்திகளையும் பெற்று, ஸ்ரீ பஞ்சாக்ஷரமே தமக்குச் சுற்றமும் பொருளும் உணர்வும் எனக் கொண்டார். இவரது குருபத்தி முதிர்ச்சி, சுந்தரமூர்த்தி நாயனார் உத்தர கைலாசத்தை அடைவதை முன்னுணர்ந்து, தாம் அவரைப் பிரிதலாற்றாமையால் முதனாள் யோக முயற்சியினாலே பிரமரந்திர வழியால் உடலினின்றும் பிரிந்து, திருக்கைலாசத்தை அடைந்தமையாலே செவ்விதிற்றெளியப்படும்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக